நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday 27 December 2013

சிலப்பதிகாரம்19. ஊர் சூழ் வரி

19. ஊர் சூழ் வரி

கதிவரனது சொல்லைக் கேட்ட கண்ணகி, எஞ்சிய ஒற்றைச் சிலம்பை ஏந்தி,
நகரினுள் புக்கு, நகர மாந்தரை நோக்கி முறையிட்டு, அழுதல்

என்றனன் வேய்யோன்: இலங்கு ஈர் வளைத் தோளி
நின்றிலள்- நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி;
‘முறை இல் அரசன்-தன் ஊர் இருந்து வாழும்
பிறை உடைப் பத்தினிப் பெண்டிர்காள்! ஈது ஒன்று;
பட்டேன், படாத துயரம், படுகாலை;                                                5

உற்றேன், உறாதது; உறுவனே? ஈது ஒன்று;
கள்வனோ அல்லன் கணவன்; என் கால் சிலம்பு
கொள்ளும் விலைப்பொருட்டால் கொன்றாரே! ஈது ஒன்று;
மாதர்த் தகைய மடவார்கள் முன்னரே,
காதல் கணவனைக் காண்பனே, ஈது ஒன்று;                                        10
காதல் கணவனைக் கண்டால், அவன் வாயில்
தீது அறு நல் உரை கேட்பனே; ஈது ஒன்று;
தீது அறு நல் உரை கேளாதொழிவனேல்,
நோதக்க செய்தாள் என்று எள்ளல்; இது ஒன்று’ - என்று
அல்லல் உற்று, ஆற்றாது, அழுவாளைக் கண்டு, ஏங்கி,                                15
மல்லல் மதுரையார் எல்லாரும் தாம் மயங்கி-

மதுரை மக்கள் கண்ணகியின் அவ நிலைக்கு இரங்கிக் கூறுதல்

‘களையாத துன்பம் இக் காரிகைக்குக் காட்டி,
வளையாத செங்கோல் வளைந்தது! இது என்கொல்?
மன்னவர் மன்னன் மதிக் குடை வாள் வேந்தன்
தென்னவன் கொற்றம் சிதைந்தது! இது என்கொல்?                                20

மண் குளிரச் செய்யும் மற வேல் நெடுந்தகை
தண் குடை வெம்மை விளைத்தது! இது என்கொல்?

செம் பொன் சிலம்பு ஒன்று கை ஏந்தி, நம்பொருட்டால்,
வம்பப் பெரும் தெய்வம் வந்தது! இது  என்கொல்?

ஐ அரி உண் கண் அழுது, ஏங்கி, அரற்றுவாள்                                    25
தெய்வம் உற்றாள் போலும் தகையள்! இது என்கொல்?’-

என்பன சொல்லி, இனைந்து, ஏங்கி, ஆற்றவும்
வன் பழி தூற்றும் குடியதே மா மதுரை-






கம்பலை மாக்கள் கோவலன் இறந்து கிடந்த இடத்தைக் காட்ட, மாலைப் பொழுதில்
கண்ணகி தன் கணவனைக் காணுதல்

கம்பலை மாக்கள் கணவனைத் தாம் காட்ட,
செம் பொன் கொடி அனையாள் கண்டாளைத் தான் காணான்.                        30

மல்லல் மா ஞாலம் இருள் ஊட்டி, மா மலைமேல்,
செவ்வென கதிர் சுருங்கி, செங் கதிரோன் சென்று ஒளிப்ப,
புல்லென் மருள் மாலைப் பூங் கொடியாள் பூசலிட,
ஒவ்லென் ஒலி படைத்தது ஊர்.

கண்ணகி சோகமுற்று அரற்றி அழுதல்

வண்டு ஆர் இருங் குஞ்சி மாலை தன் வார் குழல்மேல்                                35
கொண்டாள், தழீஇ, கொழுநன்பால், காலைவாய்;
புண் தாழ் குருதி புறம் சோர, மாலைவாய்,
கண்டாள். அவன் தன்னைக் காணாக் கடுந் துயரம்!

‘என் உறு துயர் கண்டும், """"இடர் உறும் இவள்"""" என்னீர்!
பொன் உறு நறு மேனி பொடி ஆடிக் கிடப்பதோ?                                    40
முன் உறு துயர் செய்த மறவினை அறியாதேற்கு,
""""என் உறு வினை காண்;  ஆ! இது"""" என உரையாரோ?

யாரும் இல் மருள் மாலை, இடர் உறு தமியேன் முன்,
தார் மலி மணி மார்பம் தலை மூழ்கிக் கிடப்பதோ?
பார் மிகு பழி தூற்ற, பாண்டியன் தவறு இழைப்ப,                                    45
""""ஈர்வது ஓர் வினை காண்;  ஆ! இது"""" என உரையாரோ?

கண் பொழி புனல் சோரும் கடு வினை உடையேன்முன்,
புண் பொழி குருதியிராய்ப் பொடி ஆடிக் கிடப்பதோ?
மன்பதை பழி தூற்ற, மன்னவன் தவறு இழைப்ப,
""""உண்பதோர் வினை காண்;  ஆ! இது"""" என உரையாரோ?                            50

பெண்டிரும் உண்டுகொல்? பெண்டிரும் உண்டுகொல்?
கொண்ட கொழுநர் உறு குறை தாங்குறுhஉம்
பெண்டிரும் உண்டுகொல்? பெண்டிரும் உண்டுகொல்?

சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்?
ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறுhஉம்                                            55
சுhன்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்?

தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்?
வை வாளின் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்?’-




கண்ணகி கோவலனைத் தழுவுதலும், அவன் உயிர்பெற்று எழுந்து பேசுதலும்

என்று இவை சொல்லி அழுவாள் கணவன்-தன்                                    60
பொன் துஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக்கொள்ள,
நின்றான், எழுந்து; """"நிறை மதி வாள் முகம்
கன்றியது!"""" என்று, அவள் கண்ணீர் கையான் மாற்ற-

தன் பாதத்தைக் கண்ணகி பற்ற, கோவலன் வானுலகு செல்லுதல்

அழுது ஏங்கி, நிலத்தின் வீழ்ந்து, ஆய் இழையான் தன் கணவன்
தொழுதகைய திருந்து அடியைத் துணை வளைக் கையான் பற்ற,                        65
பழுது ஒழிந்து எழுந்திருந்தான் பல் அமரர் குழாத்து உளான்,
‘எழுது எழில் மலர் உண் கண்! இருந்தைக்க’ எனப் போனான்.

கண்ணகியின் சிந்தனை

‘மாயம் கொல்? மற்று என்கொல்? மருட்டியதோர் தெய்வம்கொல்?
போய் எங்கு நாடுகேன்? பொருள் உரையோ இது அன்று;
காய் சினம் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன்;                                70
தீ வேந்தன் - தனைக் கண்டு, இத் திறம் கேட்பல் யான்’ என்றாள்-

கண்ணகி சினத்துடன் பாண்டியனது கோயிலின் முன் செல்லுதல்

என்றாள் எழுந்தாள்; இடர் உற்ற தீக் கனா
நின்றாள் நினைந்தாள், நெடுங் கயல் கண் நீர் சோர;
நின்றாள் நினைந்தாள் நெடுங் கயல் கண் நீர் துடையாச்
சென்றாள், அரசன் செழுங் கோயில் வாயில் முன்.                                    75

20. வழக்கு உரை காதை

பாண்டியன் பெருந்தேவி தான் கண்ட கனவைத் தோழிக்கு உரைத்தல்

ஆங்கு,
‘குடையொடு கோல் வீழ நின்று நடுங்கும்
கடை மணியின் குரல் காண்பென் - காண், எல்லா!’
திசை இரு - நான்கும் அதிர்ந்திடும்; அன்றி,
கதிரை இருள் விழுங்கக் காண்பென் - காண், எல்லா!                                5
விடும் கொடி வில் இர; வெம் பகல் வீழும்
கடுங் கதிர் மீன்; இவை காண்பென் - காண், எல்லா!’

கருப்பம்

‘செங்கோலும், வெண்குடையும்,
செறி நிலத்து மறிந்து வீழ்தரும்;
நம் கோன் - தன் கொற்ற வாயில்                                                10
மணி நடுங்க, நடுங்கும் உள்ளம்;
இரவு வில் இடும்; பகல் மீன் விழும்;
இரு - நான்கு திசையும் அதிர்ந்திடும்;
வருவது ஓர் துன்பம் உண்டு;
மன்னவற்கு யாம் உரைத்தும்’ என-

கோப்பெருந்தேவி தான் கண்ட கனவை
அரசவையில் இருந்த மன்னனுக்கு உரைத்தல்

ஆடி ஏந்தினர், கலன் ஏந்தினர்,
அவிர்ந்து விளங்கும் அணி இழையினர்;
கோடி ஏந்தினர், பட்டு ஏந்தினர்,
கொழுந் திரையலின் செப்பு ஏந்தினர்,
வண்ணம் ஏந்தினர், சுண்ணம் ஏந்தினர்,
மான்மதத்தின் சாந்து ஏந்தினர்,                                            15
கண்ணி ஏந்தினர், பிணையல் ஏந்தினர்,
கவரி ஏந்தினர், தூபம் ஏந்தினர்;
கூனும், குறளும், ஊமும், கூடிய
குறுந் தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர;
நரை விரைஇய நறுங் கூந்தலர்,
உரை விரைஇய பலர் வாழ்த்திட;
‘ஈண்டு நீர் வையம் காக்கும்
பாண்டியன் பெருந்தேவி! வாழ்க’ என,
ஆயமும் காவலும் சென்று
அடியீடு பரசி ஏத்த;                                                        20
கோப்பெருந்தேவி சென்று தன்
தீக் கனாத் திறம் உரைப்ப-
அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்தனன்,
திரு வீழ் மார்பின் தென்னவர் கோவே-

கண்ணகி வாயிலோனுக்கு அறிவித்தல்

இப்பால்,
‘வாயிலாயே! வாயிலாயே!
அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து,                                        25
இறை முறை பிழைத்தோன் வாயிலோயே!
""""இணை அரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையன்,
குணவனை இழந்தாள், கடைஅகத்தாள்"""" என்று
அறிவிப்பாயே! அறிவிப்பாயே!’  என-

கண்ணகி வந்ததை வாயிலோன் மன்னனுக்குத் தெரிவித்தல்

வாயிலோன், ‘வாழி! எம் கொற்கை வேந்தே, வாழி!                                30
தென்னம் பொருப்பின் தலைவ, வாழி!
செழிய, வாழி! தென்னவ, வாழி!
பழியொடு படராப் பஞ்சவ, வாழி!
அடர்த்து எழு குருதி அடங்காப் பசுந் துணிப்
பிடர்த் தலைப் பீடம் ஏறிய மடக்கொடி,                                            35
வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை, அல்லள்;
அறுவர்க்கு இளைய நங்கை, இறைவனை
ஆடல் கண்டருளிய அணங்கு, சூழ் உடைக்
கானகம் உகந்த காளி, தாருகன்
பேர் உரம் கிழித்த பெண்ணும், அல்லள்;                                            40
செற்றனள் போலும்; செயிர்த்தனள் போலும்;
பொன் தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்;
கணவனை இழந்தாள் கடைஅகத்தாளே;
கணவனை இழந்தாள் கடைஅகத்தாளே’ என-

மன்னவன் கட்டளைப்படி கண்ணகி அவையை அணுகுதல்

‘வருக, மற்று அவள் தருக, ஈங்கு’ என-                                            45
கோயில் வந்து, கோயில் காட்ட,
கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி-

பாண்டியன் வினா

‘நீர் வார் கண்ணை, எம் முன் வந்தோய்!
யாரையோ, நீ? மடக்கொடியோய்!’என-

கண்ணகியின் மறுமொழி

‘தேரா மன்னா! செப்புவது உடையேன்;                                            50
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும் பெறல் புதல்வனைஆழியின் மடித்தோன்;                                    55
பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கமல் மன்னா! நின் நிகர்ப் புகுந்து, இங்கு                                    60
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே’ என-

மன்னவன் உரைத்த விடை

‘பெண் அணங்கே
கள்வனைக் கோறல் கடுங் கோல் அன்று;
வெள் வேல் கொற்றம் - காண்’ என-

கண்ணகி தன் சிலம்பின் தன்மையை அறிவித்தல்

ஒள்-இழை,                                    65
‘நல் திறம் படராக் கொற்கை வேந்தே!
என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே’ என-


மன்னவன் தேவியின் சிலம்பில் உள்ள அரி முத்து எனக் கூறி,
காவலர் கொணர்ந்த சிலம்பைக் கண்ணகியின் முன் வைத்தல்

‘தேமொழி! ஊரைத்தது செவ்வை நல் மொழி;
யாம் உடைச் சிலம்பு முத்து உடை அரியே;
தருக’ எனத் தந்து, தான் முன் வைப்ப-                                            70

கண்ணகி சிலம்பை உடைக்க, மன்னவன் முகத்தில் மணி தெறித்தல்

கண்ணகி அணி மணிக் கால் சிலம்பு உடைப்ப,
மன்னவன் வாய்முதல் தெறித்தது, மணியே-

மன்னவன் உண்மை உணர்ந்து, உயிர் துறத்தல்

மணி கண்டு,
தாழ்ந்த குடையன், தளர்ந்த செங்கோலன்,
‘பொன் செய் கொல்லன் - தன் சொல் கேட்ட
யானோ அரசன்? யானே கள்வன்;                                                75
மன்பதை காக்கும் தென் புலம் காவல்
என் முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்!’ என
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே-

கோப்பெருந்தேவியும் உடன் மாய்தல்

தென்னவன்
கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி,
‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’ என்று,                                80
இணை அடி தொழுது வீழ்ந்தனளே, மடமொழி.
‘அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் ஆம்’ என்னும்,
பல் அவையோர் சொல்லும் பழுது அன்றே - பொல்லா
வடுவினையே செய்த வய வேந்தன் தேவி!
கடு வினையேன் செய்வதூஉம் காண்.

காவி உகு நீரும், கையில் தனிச் சிலம்பும்,
ஆவி குடிபோன அவ் வடிவும், பாவியேன்!
காடு எல்லாம் சூழ்ந்த கருங் குழலும் - கண்டு, அஞ்சி,
கூடலான் கூடு ஆயினன்.

மெய்யில் பொடியும், விரித்த கருங் குழலும்,
கையில் தனிச் சிலமபும், கண்ணீரும், வையைக் கோன்
கண்டளவே தோற்றான்; அக் காரிகை - தன் சொல் செவியில்
உண்டளவே தோற்றான், உயிர்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?