நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday 21 August 2020

மாற்றம்

 என்.கணேசன்: ஒரு கேள்வி ஏற்படுத்தும் ... 

 மாற்றம்

நமக்காக  யாருமே இல்லை என்று சாவதைவி்ட

நாம் யாருக்காகவாவது சிறு நம்பிக்கையாக இருந்து

வாழ்வதும்கூட ஒருவகை கருணைதான். 

ஒருவரின் அன்பு.. பொறுமை... சகிப்புத்தன்மை...

அருமை....தெரியாதவர்கள்..

அவர் இருந்தபோது தெரியாததுபோல

இறந்தபோதும் தெரியாதவர்கள்தான்.

யாரும் யாரிடமும் நிருபிக்கத் தேவையில்லை. 

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் நாணயத்தின் இருபக்கங்கள்.

தன்னை நிரூபிக்க முயன்று தோற்று 

நடைப்பிணங்களென வாழ்பவர்கள் எண்ணிலா கோடி.

வைரத்தைப் பற்றித் தெரியாதவர்களுக்கு

 அது வெறும் ஒரு  கல் தான்.....

ஒரு வைரமோ, ஒரு ஊமத்தம்பூவோ கூட

போராடாமல் ஒளிர்வதில்லை...

.சூழல்...காலம்...மாறக் கூடியதே...

நம்பிக்கையுடனான தொடர் இயக்கம்..

ஒவ்வொரு நாளையும் திருப்பும் ... 

ஒரு நாள் திரும்பும்.




இரகசியம்

 சுனை நீரில் தாமரை இலைகள்.... இடம் ... 

     இரகசியம்

சொல்லுக்குள் ஒளிந்திருக்கும் பொருள் போல

புல்லுக்குள் ஒளிந்திருக்கும் குளிர்போல

கண்ணுக்குள் ஒளிந்திருக்கும் கருணை போல

விண்ணுக்குள் ஒளிந்திருக்கும் மழைபோல

மண்ணுக்குள் ஒளிந்திருக்கும் உயிர்ப்புபோல

பண்ணுக்குள் ஒளிந்திருக்கும் இசைபோல

மலைக்குள் ஒளிந்திருக்கும் சுனைபோல

மனதிற்குள் ஒளிந்திருக்கும் இதயம்போல

ஒவ்வொன்றுக்குள்ளும் அரியவொன்று ஒளிந்துள்ளது.

நாமறியாத இரகசியங்கள் நம்மிலும் உண்டு

நம்மில் நம்மை இயக்கும் இரகசியமுமுண்டு.

 ---------------------------------------------------------------

தகுதி

 

புதர் மண்டிக்கிடக்கும் ... 

சிறு மழைக்கே பெரும்புதர்..

 வீட்டுத் தோட்டப் புதர்களென

அவரைப் பக்கம் போனால்...

 பூக்கள் காட்டிச் சிரிக்கிறது.

பூசணி சுரைக்கொடிகள் ...

பிஞ்சுக்காய் காட்டி இறைஞ்சுகிறது.

புற்களின் மேலுள்ள பனித்துளிக்குள்...

அடடா உலகமே கவிழ்ந்து கிடக்கிறது. 

தோட்டக்காரராவதற்குக் கூட...

 மனித உறவுகளை

வெட்டி எறிபவர்களின்...

மனதைரியம் வேண்டும் போலிருக்கிறது.

------------------------------------------

மேகம் வெள்ளை நிறமாக காட்சி ... 

வானம் 

மேகம்

பருவம்

காற்று 

ஆறு

 நேரம்

கடந்து கொண்டே இருக்கிறது.

ஊரடங்கியிருந்தாலும்

உள்ளடங்கியிருந்தாலும்

சாட்டையாக மாறி சுழற்றும்

காலதேவனின் கைகளிலிருந்து மீளமுடியாமல்

பம்பரம்போல் ஓரிடத்தில் குவிந்து

சுழன்று கொண்டிருக்கும்

நினைவுகளால்...தேங்கிப் போகும் நாம்.....

நினைவு முடிவதற்குள் இந்த நிமிடம்...

 நம்மைக் கடந்து திரும்பிப் பார்த்துச் சிரிக்கிறது.

 -------------------------------------



எது கவிதை?


 BIRDS SHADOW: மரங்களின் நிழல் 

எது கவிதை?

கண்ணுக்குள் அடங்கா இயற்கைக் காட்சியா?

சொல்லுக்குள் அடங்கா கவிதைப்  பொருண்மையா?

பல பரிமாணமுடைய மின்னும் வைரமா?

பார்க்கும்போதே வடிவம் மாற்றும் மேகமா? 

படிக்குந்தோறும் பொருள் மாறும் புதுமையா?

படிப்பவருக்கேற்ப பொருள் மாறும் பிரதியா?

நுணுக்கரிய நுண்ணுணர்வைத் தரும் பார்வையா?

நோக்கரிய நோக்குடையாரின் உணர்வு நுட்பமா?

சிறு மழையும், ஒரு மழலையும், ஒரு பார்வையும், 

ஒற்றைச் சிறகும், சிறு தென்றலும், மர நிழலும்,

சில சமயம் “ம்” என்ற ஒற்றை சொல்லும் கவிதைதான்.


-----------------------------------------------------------------------

நீ யார்?

மழை வருவதை முன்பே அறிய வேண்டுமா? இதோ ... 

சாரல் தூறல் ஆலி திவலை

 எத்தனை பெயர்கள் உனக்கு?

பருவம் தவறி வந்தாலும்....

மழை மழைதானே?

மனதையும் மண்ணையும் குளிர்விக்கும் கனமழையா?

உயிரோடு உறைய வைக்கும் பனி மழையா ?

நனையக் காத்திருக்கிறேன் வா.


-------------------------------------------------------------------------

 கொரானா......


நலம், நலமறிய ஆவல் 07: ஏன் வருகிறது ... 

காய்ச்சல்

பிளேக்

கான்சர்

எயிட்ஸ்

பெருநோய்களைப் பின்னுக்குத் தள்ளி

முன்னணியில் உள்ளது தும்மல்.

நன்றாகத்தான் சொன்னார்

பழந்தமிழர்.....

பெரியோரை வியத்தலும் இலமே...

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே......


----------------------------------------------------