நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Wednesday 6 May 2015

சங்க காலத்தில் போரும் அமைதியும் 12




மருதநிலத்தின் சிறப்பு



மக்களின் தேவைகளை நிறைவேற்றுதல்தான் பொருளியலின் நோக்கமாகும். இயற்கை வளம், மக்கள் வளம் செழிப்புற்று, உழவும் தொழிலும் பெருகி, வணிகம் சிறந்து பஞ்சமும் பட்டினியும் இல்லையென்றாகி அனைத்து மக்களும் இன்புற்று வாழும் நாடு, மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் மக்களரசும் இணைந்ததே வளநாடு என்பது வள்ளுவர் கருத்து. வளங்களே சிறந்த ஏமத்தைத் (காவலை) தரக்கூடியவை. வளங்களே மன்னன்-மக்களிடையில் அன்பு உரிமையைத் தரக்கூடியவை. எனவே,சங்கப் புலவர்கள் மருதநில உருவாக்கத்தை விரும்பினார்கள்.

மருத நிலத் தேவையைப் புலவர்கள் வலியுறுத்தும் பாடல்களுள் ஒன்று குடபுலவியனருடைய பாடல்

Image result for நீர் நிலை
Image result for மருதநிலம்
வானுட்கும் வடிநீண்மதில்
மல்லன்மூதூர் வயவேந்தே
செல்லு முலகத்துச் செல்வம் வேண்டினும்
ஞாலங் காவலர் தோள்வலி முருக்கி
ஒருநீ யாகல் வேண்டினுஞ் சிறந்த 15
நல்லிசை நிறுத்தல் வேண்டினு மற்றதன்
தகுதி கேளினி மிகுதி யாள
நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே யுணவின் பிண்டம் 20

உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரு நிலனும் புணரி யோரீண்
டுடம்பு முயிரும் படைத்திசி னோரே
வித்திவா னோக்கும் புன்புலங் கண்ணகன்
வைப்பிற் றாயினு நண்ணி யாளும் 25
இறைவன் றாட்குத வாதே யதனால்
அடுபோர்ச் செழிய விகழாது வல்லே
நிலனெளி மருங்கி னீர்நிலை பெருகத்
தட்டோ ரம்ம விவட்டட் டோரே
தள்ளா தோரிவட் டள்ளா தோரே. 30 ( புறம் -18 )

 

இப்பாட்டில், பாண்டிய நாட்டின் மேற்பகுதியின் நிலை எடுத்துரைக்கப்படுகிறது.அப்பகுதி நீர்நிலையின்றி விளைநலம் குன்றி வாடுவதும், நீர்நிலை பெருக ஆமுற்கொள்ள வேண்டியன குறித்தும் கூறுகிறது. வயவேந்தே! நீ மறுமைப் பேறாகிய சொர்க்க இன்பம் வேண்டினும், இம்மையில் ஒரு பேரரசனாய்ப் புகழெய்த வேண்டினும், நாட்டில் நீர்நிலை பெருக அமைக்க வேண்டும்; வித்தி வானோக்கும் புன்புலம் வேந்தன் முயற்சிக்கு வேண்டுவன உதவாது; ஆகவே நீர்நிலை பெருக அமைப்பாயாகஎன வற்புறுத்துகிறார்.

புன்புலம் அரசுக்குரிய போதிய வருவாயை ஈட்டித் தராது என்கிறார் புலவர். எனவே புன்புலத்தை நன்நிலமாக மாற்ற அரசன்முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்கிறார். பொருட்கொடை பெறும் புலவர் பெருமக்கள், அவனுடைய நாடு, பொருள் வளம் குறையாது மேன்மேலும் பெருகுதற்குரிய செயல்முறைகளை அவர்களுக்கு அறிவுறுத்துவது கடமையாகும். ஆதலால், இப்பாட்டில் குடபுலவியனார் நாடு வளம் மிகுவது குறித்து நீர்நிலை பெருகச் செய்க என இம்மன்னனுக்கு அறிவுறுத்துகிறார்.

மேற்கூறிய வரிகள் அரசனின் கடமைகளை வலியுறுத்துகின்றன.

1. மக்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்து சுவர்க்கப்பேறு அடைதல்.
2.
மன்னர்களையெல்லாம் வென்று தலைவனாக உயர்தல்.
3.
நீர்வளத்தைப் பெருக்குதல், அதன் மூலம் உயிர்களுக்கு உணவைத்தருதல்.


சீறூர் மன்னர்களால் இவற்றை மேற்கொள்ள இயலவில்லை என்பதே பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் போன்ற  பெருவேந்தர்களை நோக்கி இப்பாடல்கள் பாடப்பட்டுள்ளன என்பதற்குச் சான்றாகும். மருதநிலம்தான் பேரூர் என அழைக்கப்பட்டுள்ளது.

  எப்படிப்பட்ட பேரூர்? பசி என்பதையே அறியாத பேரூர். சிறந்த மழை வளம் உடைய பகுதி. மழை நீரைத்தேக்கி வைக்கும் குளங்கள் நிறைந்த பகுதி. எப்போதும் நீரால் நிறைந்திருக்கும் வயல்களைக் கொண்ட பகுதி, கோடை நீட்டித்த காலத்தினும் குறைவுபடாத நீர்வளத்தை உடையமருத நிலத்தின் தேவையை இப்பாடல் வலியுறுத்துகிறது.

மருதநில வயல்வளத்தையும் மக்களின் வாழ்க்கையைப் பற்றியும் பல பாடல்கள் காட்டுகின்றன.

குளங்கள் நிறைந்திருக்கும் காரணத்தினால், கோடைக்காலத்தில்கூட நீர்வளம் குறையாத மருதநிலச் சிறப்பை பல பாடல்கள் காட்டுகின்றன.


கோடை நீடினுங் குறைபட லறியாத்
தோடாழ் குளத்த கோடுகாத் திருக்குங்
கொடுமுடி வலைஞர் குடி( பெரும் 272.274)

வயல்களில் அறுவடை செய்யப்பட்ட விலைபொருட்கள் குவித்து வைத்திருக்கும் காட்சியை மற்றொரு பாடல் சுட்டுகிறது. பொன் மலையையை ஒத்திருக்கும நெற்குவியலை இப்பாடல் சுட்டுகிறது.

குடகாற் றெறிந்த குப்பை வடபாற்
"
குடகாற் றெறிந்த குப்பை வடபாற்,
 செம்பொன் மலையிற் சிறப்பத் தோன்றும்" (பெரும்பாண். 240 - 41)

மேலும் பெரும்பாணாற்றுப்படை நாற்றுவிடுதல், நெல்விளைதல், கடாவிடுதல், கரும்பாறையில் கரும்பு பிழிதல் முதலான உழவர்களின் செயல்களைப் பற்றியும் கூறுகிறது. வயல்களில் விளையும் பொருட்களில் நெல்மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தது.

"""". . . . . . . .
உயர்நெல்லி
னூர் கொண்ட வுயர் கொற்றவ"""" (மது. 87,88)
 
""""
காலி நெல்லின் சிறைகொள் வேலி
ஹாயிரம் விளையுட் டாகக்
காவிரி புரக்கு நாடு கிழவோனே""""(பொரு. 242,245)

""""
நெடுங்கதிர் நெல்லின் வல்லம் கிழவேன்""""(அகம். 356/13)
""""
நெல்விளை கழனி யம்பிர் கிழேவோன்"""" (புறம்-385/9)

"
வேலி யாயிரம் விளைகநின் வயலே" (புறநா. 391 : 21)
“கடுந்தெற்று மூடையி னிடங்கெடக் கிடக்குஞ்
சாலி நெல்லின் சிறைகொள் வேலி
யாயிரம் விளையுட் டாகக்
காவிரி புரக்கு நாடுகிழ வோனே.“ –பொருநராற்றுப்படை(245-248)

நெல்லை விளைக்கும் ஊர்களையும், அதன் தலைவர்களையும் சங்க இலக்கியங்கள் வாழ்த்துகின்றன.
 
ஐங்குறுநுறும், ‘நெல் பல பொலிக’ (ஐங், 1/2) என நெல்லை முன்னிலைப்படுத்தியே மன்னனைப் பாராட்டுகிறது.
 
மன்னன் ஒருவனை வாழ்த்த வந்த பிற்கால ஒளவையார் அவனை வாழ்த்தாது "வரப்புயர" என்று மட்டும் வாழ்த்தினார்.
"வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுரும்
குடியுயரக் கோலுயரும்
கோலுயரக் கோனுயர்வான்"
 
என்பதே இதன் உட்கிடை. உயிர் வாழ்வுக்கு அடிப்படைத் தேவை நெல். நெல் இன்றேல் மன்னவன் நிம்மதியாக அரசாள இயலாது. இவற்றையெல்லாம் கருதியே நெல் மணிகள் நெருக்கமாக எண்ணிக்கையற்றிருப்பது போல் அதைவிடப் பன்மடங்கு காலம் வாழவேண்டும் என வாழ்த்தியுள்ளார்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?