நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday 11 April 2015

மொழியாய்வுக் கட்டுரைகள்



நூல் அறிமுகம் - மொழியாய்வுக் கட்டுரைகள் 

நூலாசிரியர் - பேராசிரியர் தி.முருகரத்தனம்


நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தாரால் 1978ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள இந்நூல் பனிரெண்டு கட்டுரைகளைக் கொண்டுள்ளது.

முதல் கட்டுரை - ‘சாரியை அன்-னும் இடைநிலை இன்-னும் ஆகும். அன்-சாரியை, இன் இடைநிலைகள் அகநானூற்றில் வழங்கப்படும் முறை குறித்து இக்கட்டுரை ஆராய்ந்துள்ளது. தொல்காப்பியர் காலங் காட்டும் இடைநிலைகளைப் பிரித்து ஆராயவில்லை. ஆயினும் நன்னூலார் இன் இடைநிலை இறந்த காலத்திற்குரியது என்று கூறிச் சென்றுள்ளார். இலக்கணிகள் இவை பற்றித் தெளிவாகக் கூறவில்லையெனினும், சங்கத் தமிழில் இவை தெளிவான வரையறையுடன் உள்ளதாக நூலாசிரியர் சான்றுகளுடன் நிறுவுகின்றார். அகநானூற்று வினைச் சொற்கள் துணை கொண்டு அன்-சாரியை குறித்து ஆய்ந்துள்ள நூலாசிரியர் இறந்தகால வினைமுற்றுக்களிலும், பலவின்பாலுக்குரிய எதிர்கால வினையாலணையும் பெயர்களிலும் அன்-சாரியை பயின்று வந்துள்ளது என்கிறார். இன்-இடைநிலையிலுள்ள இகரத்திற்கும் னகரத்திற்கும் தனித்தனிப் பொருள் உண்டு என்றும் குற்றுகர ஈற்று வினைப் பகுதிகளின் இறந்தகாலத்துக்குரிய முற்றுக்களிலும், வினையாலணையும் பெயர்களிலும், பெயரெச்சங்களிலும், வினையெச்சங்களிலும் இகரம் தவறாது வழங்குகிறது. ஆனால் னகரம் பெயரிலும் எச்சங்களிலும் இடம்பெறாமல் உள்ளது என்றும் நிறுவுகின்றார்.
பிற்காலத்தில்
அன்-சாரியையின் பொருளும் பயனும் மறைந்து விட்டன. இக்காரணத்தினால், னகரச் சாரியை காலக் கிளவியாகிய இடைநிலையின் ஒரு பகுதியே எனக் கொள்ளும் நிலை தோன்றியது. இந்நிலை தோன்றிய பின்னரே நன்னூலார் தோன்றியதால், இன்-என்பதே இடைநிலை எனக் கருதி இலக்கணம் வகுத்துள்ளார். இவ்வாறு கருதியது அவர் காலத்துக்குப் பொருத்தமானதே என நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

இரண்டாவது கட்டுரை -‘உம்மை இடைச்சொல் பற்றியது ஆகும். உம்மை இடைச்சொல்லின் பொருள்கள் எட்டு எனத் தொல்காப்பியரும் நன்னூலாரும் கருத்துக்களைக் கூறியுள்ளனர். நூலாசிரியர் எட்டுப் பொருள்கள் இல்லாது குறைவாக இருத்தல் வேண்டும் எனத் தக்க சான்றுகளோடு இக்கட்டுரையில் விளக்கியுள்ளார். உம்மை என்னும் பொருள் உண்மையில் இணைப்பு என்பதேயாகும். அந்த அடிப்படையில் ஆராயும்பொழுது இது வெளிப்படுகிறது. சூழல்களை உம்மையின் பொருளாகக் கருதியதாலேயே இத்தகைய குழப்பத்தை இலக்கண ஆசிரியர்கள் செய்திருக்கிறார்கள் என்கிறார் நூலாசிரியர்.

மூன்றாவது கட்டுரை -சுட்டி நீண்டதோ? என்பதாகும். தமிழில் உள்ள அகர இகர உகரச் சுட்டெழுத்துக்களை அடியாகக் கொண்ட பிற சொற்கள் அங்கு இங்கு முதலாயின. இவை ஆங்கு, ஈங்கு எனவும் நீண்டு வழங்கப்படுகின்றன. இவற்றில் அங்கு இங்கு என்பவை காலத்தால் முந்தியவை என்றும் ஆங்கு ஈங்கு முதலானவை காலத்தால் பிந்தியவை என்றும் கருதப்படுகிறது. ஆனால், நூலாசிரியர் ஆங்கு ஈங்கு முதலிய சொற்களே காலத்தால் முந்தியவை என்றும் அங்கு இங்குச் சொற்கள் காலத்தால் பிந்தியவை என்றும் தகுந்த இலக்கிய ஆதாரங்களுடன் நிறுவுகிறார்.

நான்காவது கட்டுரை -மக்களும் மக்களும் ஆகும். தொல்காப்பிய பொருளதிகாரத்தில் வரும் மாவும் மக்களும் ஐயறிவினவே என்ற நூற்பாவிலுள்ள மாக்கள் என்ற சொல் குறித்த உரையாசிரியர்களின் கருத்துக்களையும், சங்கத்தமிழில் இச்சொல் வழங்கப்பட்ட பொருண்மையையும் இக்கட்டுரை ஆராய்கிறது. மாக்கள் என்னும் சொல் தற்காலத்தில் விலங்குகள் எனப் பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் தொல்காப்பிய காலத்திலும் சங்கத்தமிழ் காலத்திலும் மாக்கள் என்பதும் மக்கள் என்பதும் ஒரே பொருளையே குறித்துள்ளன என்றும் இரண்டும் உயர்திணைச் சொற்களேயாகும், என்றும் விலங்கைக் குறிக்க இச்சொல் சங்க காலத்தில் வழங்கப்படவில்லை என்றும் நூலாசிரியர் நிறுவியுள்ளார்.

ஐந்தாவது கட்டுரை -‘அண்டும் மற்றும் என்பதாகும். பத்திரிக்கைகள் ஆங்கிலச் செய்திகளைத் தமிழில் மொழிபெயர்க்கும்பொழுது ஆங்கிலச் சொல்லான அண்டு என்பதை மற்றும் என மொழிபெயர்க்கின்றன. இவ்விரு சொற்களும் ஒன்றுக்கு ஒன்று நேரான சொற்கள் அல்ல என்றும் அண்டு என்பது உம் என்னும் பொருளையே குறிக்கிறது என்றும் உம் என்பது தொகையாக மறைந்து நின்று பொருள் தரும் வகையில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்கிறார். உதாரணமாக ளஅயடட யனே யீடிடிச
ஹபசiஉரடவரசளைவள
என்பதை சிறிய எளிய உழவர்கள் என மொழிபெயர்ப்பதே தமிழ் இலக்கண மரபு என்கிறார்.

ஆறாவது கட்டுரை -‘கொஞ்சு மொழிகள் என்பதாகும். தொல்காப்பியர் அஃறிணை இளமைப் பெயர்களாகப் பார்ப்பு, பறழ், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மக, மறி, குழவி முதலான ஒன்பது சொற்களைத் தருகிறார். ஆனால் தற்காலத்தில் இவை உயர்திணையில் கொஞ்சு மொழிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன என நூலாசிரியர் எடுத்துக் காட்டுகிறார். குட்டி என்பது நாய், பூனை, புலிக்கு உரிய இளமைப் பெயர்கள் ஆனால் இன்று உயர்திணையில் குழந்தைகளைக் கொஞ்சுவதற்கும், சில சமயம் பெயர்களாகவும் கூட குட்டியப்பன்’, குட்டியம்மாள் வழங்கப்பட்டு வருகிறது என்று கொஞ்சுதலில் தாய் புதுமையை நுழைக்க விரும்பியதன் விளைவே இவ்விரிவு என விளக்கியுள்ளார்.

ஏழாவது கட்டுரை -‘தேவாரம் என்னும் தலைப்பிலானது, தேவாரம் என்னும் சொல் குறித்து அறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வினையும் அதன் உண்மைப் பொருளையும் நூலாசிரியர் ஆய்ந்துள்ளார். கோவில் வழிபாட்டுக் கூடம் என்னும் பொருளில் முதலில் வழங்கப்பட்டுப் பின்னர் வழிபாட்டினையும் வழிபடு கடவுளையும் குறித்து, அதன் பின்னர் இறைவனைப் பற்றிப் பாடப்படும் பாடலுக்கு ஆசி வந்திருப்பதாகத் தக்க சான்றுகள் வழி நூலாசிரியர் நிறுவியுள்ளார்.

எட்டாவது கட்டுரை-இசை விளக்கம் என்பதாகும். இசை என்னும் சொல்லின் பொருள் குறித்து இக்கட்டுரை ஆராய்கிறது. இசை என்னும் சொல்லிற்கு இயைதல், மிகக் கொடுத்தல், ஊதியம், பொன் பல பொருள்கள் உள்ளதாக நூலாசிரியர் இலக்கண உதாரணங்களுடன் விளக்கியுள்ளார்.

ஒன்பதாவது கட்டுரை -‘குப்பையில் குன்றி மணிகள் என்பதாகும். நூலாசிரியர் பேராசிரியராக இருப்பதால், மாணவர் விடைத்தாள்களைத் திருத்தும்பொழுது, மாணவர்கள் செய்த பிழைகளை விளக்கி இக்கட்டுரையை எழுதியுள்ளார். மாணவர்கள் மிக வேகமாக விடைகளை எழுதும் பொழுது ஏற்படும் தடுமாற்ற புதிய சொற்களை உருவாக்கியுள்ளன என்று சுவைபட எடுத்துக்காட்டியுள்ளார். ஒரு மாணவன் பூங்கா-பூம்பொழில் இரண்டில் எதை எழுதுவது எனத் தடுமாறி பூங்கொழில் என எழுதியிருப்பதையும், கேமசரியையும் சுரமஞ்சரியையும் குழப்பிக் கொண்டு கேதுமஞ்சரி எனப் புதிய பெயர் படைத்திருப்பதையும் சான்று காட்டி இவை தடுமாற்றத்தினால் ஏற்படுகின்ற பிழைகள் எனக் கூறுகின்றார்.

பத்தாவது கட்டுரை -‘அரைகுறை என்பதாகும். மாணவர்கள் விடைத்தாள்களில் செய்யும் தவறுகளைப் பற்றிய கட்டுரை இது. அரையும் குறையுமாகக் கற்றுக் கொண்டிருக்கிற மாணவர்கள் பல பெயர்களை கேட்டதால் குழப்பம் மிகுந்து புதிய சொற்களை உருவாக்குவதைக் குறித்து விளக்குகிறார். பொருள்சாத்தானாரை-பெருஞ்சித்திரனார் எனவும், வெள்ளி வீதியாரை-வெள்ளை வீதியார் எனவும் தேவந்தியை-தேவகுந்தி எனவும் விதூசகனை-விசதூகன் எனவும் எழுதியிருப்பது பிழைகளாக இருப்பினும் புதியன கற்கும் மாணவரிடம் இப்பிழைகள் ஏற்படுவது இயல்பே என விளக்குகிறார்.

பதினொன்றாவது கட்டுரை -பெண் அஃறிணையா? என்ற கட்டுரையாகும்.
சேலம்
அரசினர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் ஒரு விழாவில் மாணவி படித்தது, பேசியது, விளக்கியது என்பது போன்ற தொடர்களைப் பயன்படுத்தியது குறித்து பெண் குலத்திற்கு இழிவு நேர்ந்து விட்டது என மறுப்புரைகள் எழுந்தன என்றும், எனினும் இப்படிப் பேசியது மதிப்பைக் காத்தல் பொருட்டே எனக் கூறியிருந்தால், மதிப்புக் குறைவு ஏற்படும் என்றெண்ணியதாலும் படித்தார் என ஆசிரியர் மாணவியைக் கூறுவதும் ஏற்புடையதல்ல என்பதாலும் அது என்ற விகுதி கொடுத்து இடைப்பட்ட உயர்வு கொடுக்க முயன்றுள்ளதால்தான் இவ்வாறு பேசியுள்ளார் என நூலாசிரியர் விளக்கின்றார். அண்ணன் தூங்குகிறது. அப்பா இருக்கிறது எனப் பேச்சு வழக்கில் கூறுவது நடைமுறையில் உள்ளதால் அது என்பது பேச்சுத் தமிழில் அஃறிணைக்குரியதே என நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

பன்னிரெண்டாவது கட்டுரை - ‘ஒலிக் குறிப்புச் சொற்கள் என்பதாகும். இயற்கையில் கேட்கப்படும் ஒலிகளை ஒலிகளாகவே தமிழில் ஆளுதல் உண்டு எனக் கூறும் நூலாசிரியர் பல ஒலிக் குறிப்புச் சொற்களைச் சான்று காட்டி நிறுவுகிறார். ஒரு குறிப்பிட்ட பொருளின் ஒலியே சொல்லாக விளங்கும் வகையிலுள்ள, கம்ம என்றன்று காடே’, குக்கூ என்றது கோழி, குய்ப்புகை, கெக் கொலி’, விக்கு’, முக்கு’, கீழ்க்கை முதலான சொற்களைச் சான்று காட்டியுள்ளார்.