நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Wednesday 29 May 2013

ஆய்வு அனுபவங்கள் - 5

ஆய்வு செய்வது எப்படி?

 

தொடர்ச்சி...

5.நான்கு உத்திகள்


மேற்கோளை ஆய்வில் கையாளும் முறையில் நான்கு உத்திகள் உள்ளன.

1. அடிக்குறிப்பு முறை


தரவுகளை மேற்கோள்களாகப்  பயன்படுத்திய நிலையில்  மேற்கோள் குறி முடியுமிடத்தில் சற்று மேல் நிலையில் எண்களிடவேண்டும். இந்த எண்கள் மேற்கோள் எண்கள் எனப்படும். 1,2,3, .. என்ற எண்களிட்ட பின் அப்பக்கத்திலேய கீழப்பகுதியில் ஒரு கோட்டை இட்டு அதற்கு கீழ் எண்களுக்குரிய ஆசிரியர்,நூல்,பக்கம் போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும்.

இம்முறையில்  ஆய்வாளர் ஒவ்வொரு முறையம் ஆய்வைத் திருத்தம் செய்ய திரும்ப திரும்ப வரைவினை எழுதும்போது பக்கங்கள் மாற்றமடையும் .இரண்டாம் வரைவில் சில மேற்கோள்கள் இடையில் சேர்க்கப்படலாம்.சில நீக்கப்படலாம் . புதிய கருத்துகள் சேர்க்கப்படலாம். இது போன்ற மாற்றங்களின் போது, பக்கங்கள் மாற்றமடையும். எண்களும் மாற்றமடையும்.  மேற்கோள் எண்ணுக்கேற்ப அடிக்குறிப்புகளை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டி வரலாம்.  

2.சான்றென் விளக்கம்


இம்முறையிலும் தரவுகளை மேற்கோள்களாகப்  பயன்படுத்திய நிலையில்  மேற்கோள் குறி முடியுமிடத்தில் சற்று மேல்நிலையில் எண்களிடப்படவேண்டும். இந்த எண்கள் மேற்கோள் எண்கள் எனப்படும். 1,2,3, .. என்ற எண்களிட்ட பின், இயலின் முடிவில் தனிப் பக்கத்தில் சான்றென் விளக்கம் என்ற பகுதியை உருவாக்கி மேற்கோள் எண்களுக்கேற்ப,எண்களுக்குரிய ஆசிரியர்,நூல்,பக்கம் போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும்.

3. மேற்கோள் எண் இல்லா முறை


இது மேற்கோள்களின் குறி முடியுமிடத்திலேயே  அடைப்புக் குறிக்குள் ஆசிரியர் பெயர்,ஆண்டு,பக்க எண் முதலானவற்றைக் குறிப்பிடும் முறையாகும். 

 பண்டிதமணி  அவர்கள், இம்மூன்று பொருட்களையும் வரிசைப்படுத்தும் பொழுது தேன்-பால்-கரும்பு என்ற வரிசையில் அமைத்துள்ளார்.தேன் புழுக்களின் எச்சில் மயமாகவும், பால் ஊனுடம்பின் சாரமாகவும் உள்ளவை….கரும்பங்கட்டி எச்சில், ஊன் கலப்பு முதலிய குற்றம் இலாதாய், உடலுக்கு நலம் பயப்பதாகும். இம்முறையில் ஆண்டவன் அன்பரை ஆட்கொள்ளுங்கால், தேனைப்போல, வயப்படுத்தும் பாலைப் போலப், பின் பயன் விளைவித்து இனிமை தரும் கரும்பங்கட்டியைப் போலத் தூய இன்பம் அளித்துக் காப்பான்” (கதிரேசஞ்செட்டியார்.மு,1985.285-286)

 ஒரே ஆசிரியரின் இரு நூல்கள் கையாளப்படும் நிலையில் பதிப்பு ஆண்டும் பதிப்பித்த மாதமும் கண்டிப்பாக  மாறுபடும். எனவே குழப்பம் ஏற்படாது.  இம்முறையில் மேற்கோள்கள் இடையில் நீக்கப்பட்டாலும்,சேர்க்கப்பட்டாலும்,புதிய கருத்துக்களை சேர்த்தாலும்  பக்கங்களோ எணகளோ மாற்றப்படவேண்டியதில்லை.

மேலும், ஆய்வினைப் படிப்பவர்கள் அந்த மேற்கோளின் அருகிலேயே அது குறித்த விவரங்கள் இருப்பதால் பக்கங்களைத் தேடி விவரங்களை அறிய வேண்டியதில்லை. இதழ்களிலிருந்து எடுக்கப்படும் தரவுகளுக்கு,  “திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவு பூமிக்குள் ஊடுருவி நிலத்தையும்,நிலத்தடி நீரையும் பாழாக்கிவிட்டது. இனி புல்,பூண்டு முளைக்க முடியாத அளவு காற்றிலும் விசம் பரவியுள்ளது. இதனால் 9000 ஏக்கர் விவசாய நிலம்,185 ஊர் குடிநீர்,3500 கிணறுகள்,பாழ்பட்டு 600000 கால்நடைகள் இறந்து,600போ் மரணமடைந்துள்ளனர்.மண்ணும்,நீரும் மாசாகிவிட்டதால் பாம்புகள்.மண் புழுக்கள் உள்ளிட்ட உயிரினங்கள் காணாமல் போய்விட்டன.”(புதியதலைமுறை,மார்ச் 2013,ப.24)
என்றும் நாட்டுப்புற ஆய்வாயின் ( தங்கவேலு,ம.,2012,செப்20) என்றும் தகவல்கள் தரலாம்.

தொகுப்பு நூல்களிலிருந்து எடுக்கப்படும் மேற்கோள்கள் இவ்வாறு தரப்படவேண்டும். உதாரணமாக இம்மேற்கோளைக் குறிப்பிடலாம். மகாராசன் என்பவர் ஒருநூலில் தொகுத்தளித்த பல கட்டுரைகளிலிருந்து, மு.இராமசாமி என்பவரின் கட்டுரையிலிருந்து கீழ்வரும் மேற்கோள்எடுக்கப்பட்டது.

 “அர்த்தநாரீஸ்வரர் ஆணுக்கு பெண்ணை ஒளிக்க முடியாமல் அம்பலப்பட்டு நிற்கும் அரவாணித் தன்மையின் பருண்மையான மறு உள்ளீடுதான் என்று இத்தோற்றத்தை மு.இராமசாமி குறிப்பிடுகிறார்.(மகாராசன்(தொ.ஆ.,).2007.17)


        மேற்கோள் எண்கள் இடத் தேவையில்லாத இம்முறையில் எத்தனை முறை வரைவுகள் எழுதினாலும்,மேற்கோள் எண்கள் தொடர்பான சிக்கல்கள் இல்லை. திரும்ப திரும்ப எழுத நேரும் பொழுது மேற்கோள்கள் மாற்றப்படவேண்டிவரின் இம்முறை ஆய்வை எளிதாக்கும். ஆய்வு நிறைவடையும் நிலையில் கூட புதிய தரவுகள் கிடைப்பின் அவற்றையும் சிக்கலின்றி மேற்கோளாகச் சேர்த்துக் கொள்ளலாம். இத்தரவுகளுக்கான நூல் விவரங்களைத்  துணைநூற்பட்டியலில் கண்டு கொள்ளலாம்.

ஒரு பட்டத்திற்காக மேற்கொள்ளப்படும்  ஆய்வு என்பது, பக்க வரையறைகளை உடையது. சில பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட ஆய்விற்குரிய ஆய்வேடுகள் 250 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடிக்குறிப்பு மற்றும் சான்றென் விளக்கப்பகுதிகள் இடம் பெறும் ஆய்வுகளில் அவற்றிற்காக குறைந்தது பத்து பக்கங்களாவது  ஒதுக்க வேண்டி உள்ளது. இம்முறையில் அது தவிர்க்கப்படுகிறது.


4. நுட்ப முறை 


இம்முறை நுட்பமாகக் கையாளப்படும் முறையாகும். மேற்கோள் எண்  இடப்படுவதில்தான் நுட்பம் உள்ளது. இது   புதிய முறையாகும். ஆய்வு நிறைவடைந்த நிலையில்தான் எடுக்கப்பட்ட மேற்கோள்களுக்கு எண்களிடப்பட வேண்டும்.கையாளப்பட்ட தரவுகளுக்குரிய நூல்களை அகரவரிசைப்படுத்தி  துணைநூற்பட்டியலைத் தயாரித்துக்கொள்ளவேண்டும். இதில் முதல் நூலிலிருந்து ஆய்வு முழுவதும் கிட்டத்தட்ட பத்து மேற்கோள் கையாளப்பட்டிக்குமாயின் அத்தனை மேற்கோள்களுக்கும் எண் 1 என்ற எண்தான் கொடுக்கப்படவேண்டும். ஒரே இயலில் நான்கு முறை பயன்படுத்தியிருப்பின் அத்தனை மேற்கோள்களுக்கும் 1 என்கிற மேற்கோள் எண்தான் இடம் பெற வேண்டும்.

உதாரணமாக அகிலன் அவர்களின் நூலிலிருந்து இயல் ஒன்றில் மூன்று மேற்கோள்களும் ,இயல் இரண்டில் இரண்டு மேற்கோளும், மூன்றாம் இயலில் ஒரு மேற்கோளும்  எடுக்கப்பட்டிருந்தால் அத்தனை மேற்கோள்களுக்கும் மேற்கோள் எண் 1 தான். மேற்கோள் எண்கள் கொடுக்கப்படும் இடத்திற்கருகிலேயே பக்க எண்கள் இடம்பெறவேண்டும். உதாரணத்திற்கு
மாணிக்கவாசகரின் பாடல்களிலிருந்து ஒரு ஆய்வாளர்  மூன்று மேற்கோளை எடுத்துப் பயன்படுத்தியுள்ளார். துணைநற்பட்டியலில் திருவாசகம் 8ம் இடத்தில் உள்ளது என வைத்துக் கொள்வோம்.

“உருத்தெரியாக் காலத்தே உள்புகந்தென் மாமன்னிக்
கருத்திருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட”8(ப.141)

“ஈண்டிய மாயா இருள்கெட எப்பொருளும் விளங்க” 8 (ப.156)

“பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்”8(.106)

இம்முறையில்  தரவுகளைப்பயன்படுத்திய நூல்களின் பட்டியலைத்தான் தரமுடியும் .எத்தனை நூல்கள் துணைநூற்பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்பதைக்கொண்டு ஆய்வாளரின் ஆய்விற்கான உழைப்பை வெளிப்படுத்தக்கூடியது இம்முறை. துணைநூற்பட்டியலை வளமாகக் காட்ட வேண்டும் என்பதற்காக மேற்கோள்கள் எடுக்கப்படாத நூல்களை இம்முறையில் சேர்க்க இயலாது.

மேற்கோள்குறி


 மேற்கோள் குறிகளைக் ஆய்வில் கையாளும் பொழுது கவனிக்கப் படவேண்டியவை.முதலில் மூல நூலிலிருந்து எடுக்கபட்ட தரவினை எவ்வித மாற்றமின்றி அப்படியே கையாள்வது.  ஒற்றை மேற்கோள், இரட்டை மேறகோள் என இருவகைகள் உள்ளன. அனைவருக்கும் தெரிந்த பொதுச் செய்திகளான பழமொழி உள்ளிட்ட தகவல்களைக் குறிப்பிடுமிடத்தும், தரவுகளைச் சுருக்கித் தரும் நிலையிலும்,மேற்கோளுக்குள் மேற்கோள்கள் இருப்பின் அதற்கும் ஒற்றை மேற்கோள் இடப்படவேண்டும்.


மூலநூல்கள் மற்றம் துணை நூல் தரவுகளை அப்படியே கையாளும் பொழுதும், சேகரித்த நாட்டுப்புறப்பாட்டு முதலானவற்றிற்கும் இரட்டை மேற்கோள் இடப்படவேண்டும். மேற்கோள் குறி என்பதே அதை மேற்கோள் எனத் தனித்துக் காட்டுவதற்காகத்தான்.   தட்டச்சிடும்பொழுது தடித்த எழுத்துகளில் அதை மட்டும் காட்டத் தேவையில்லை.


தொடரும்...







ஆய்வு அனுபவங்கள் -4

 

ஆய்வு செய்வது எப்படி?

தொடர்ச்சி....

4.தரவுகளைத் திரட்டும் முறை  

மூலநூலிலிருந்துத் துணைநூல்களிலிருந்தும் தரவுகளைச் சேகரிக்கும் பொழுது, சேகரிக்கப்படும் தகவல்கள் ஆய்வில் கையாளப்பட்டால், மேற்கோளாகப் பயன்படுகின்றன.மேற்கோள் அட்டை அல்லது ஒருவெள்ளைத்தாளின் கிழித்த பாதிப் பகுதியை தரவுகளைச் சேகரிக்கப் பயன்படுத்தலாம். இதில் மூன்று தகவல்கள் பதிவுசெய்யப்படவேண்டும்.

 1.தரவு  பொருண்மையைப் பார்த்தவுடன் தெரிந்து கொள்ளும் வகையிலான  சிறு தலைப்பு.
2.தரவு பகுதி எடுக்கபட்ட நூலின் பக்கஎண்அல்லது பாடல்எண்
3.நூல் பற்றிய முழுவிவரங்கள்(நூலாசிரியர் அல்லது பதிப்பாசிரியர் அல்லது தொகுப்பாசிரியர் பெயர்(கள்)., நூல்பெயர், முகவரி,பதிப்புஆண்டு மற்றும்  பதிப்பு விவரம்முதலானவை)


     தரவுகளைச் சேகரிக்கும் பொழுது, அனைத்துத்  தரவுகளையும் மேற்கோளாகக் கையாள்கிறோமோ இல்லையோ. சேகரிக்கும் பொழுதே மேற்கூறிய மூன்று தகவல்களைப் பதிவு செய்து கொள்ளவேண்டும்.மேற்கோளாகவும்,சான்றென் விளக்கம் மற்றும் துணைநூற்பட்டியல்  போன்ற பய்னபாட்டிற்காகவும் உதவக்கூடிய வகையில் இவை சேகரிக்கப்படுகின்றன.பதிப்பாசிரியர்கள் நூலாசிரியர்கள் போன்றவர்களை த் தெளிவாகக் குறித்துக்கொள்ளவேண்டும்.

        திருவாசகம் என்கிற நூலை எழுதியவர் மாணிக்கவாசகர் என்றாலும் அவர்  அந்நூலை வெளியிட்டிருக்கமாட்டார். அந்நூலை யாராவது ஒருவர் தற்காலத்தில் உரை எழுதி பதிப்பித்திருக்கலாம். அவ்வகையில் பதிப்பாசிரியர் அல்லது உரையாசிரியர் பெயரைத்தான் குறித்துக் கொள்ளவேண்டும். சிலர் தொகுத்திருக்கலாம். அவர்களைத் தொகுப்பாசிரியர்களாகக் குறித்துக் கொள்ளவேண்டும்.

           ஒவ்வொரு தரவுளும் ஏதோ ஒரு பொருண்மையைக் கொண்டிருக்கும். இவற்றைச்  சேகரிக்கும் பொழுதே அதன் பொருண்மையைச் சிறுதலைப்பாக்கி தரவின்  மேல் பகுதியில்  அடிக்கோடிட்டு சிறு தலைப்பாக எழுதிக்கொள்ளவேண்டும். தரவுகளைப் பகுத்து சிறுசிறு தொகுப்பிற்குள் அடக்க இம்முறை உதவும்.ஒரே தலைப்பிற்குள் மிகுதியான தரவுகள் மூலநூலிலிருந்து கிடைக்கும் பொழுது அதை இயல் தலைப்பாக அமைத்துக்கொள்ளலாம். ஏனையவற்றை கிடைக்கும் தரவுகளைக் கொண்டு இயல்களுக்குள் சிறுசிறு உட்தலைப்புகளாகப் பயன்படுத்தலாம். இவ்வாறு சேகரித்து பகுத்துத் தொகுத்த பின்னரே எழுதத்தொடங்கவேண்டும்.

       ஒரு குறிப்பிட்ட கொள்கையைப் பற்றியோ,ஒரு படைப்பாளரைப் பற்றியோ முன்பே தீர்மானித்த முடிவை வைத்துக்கொண்டு அதன் கோணத்தில் ஆய்வை எழுதக்கூடாது.அவ்வாறு எழுதுவது நின்ற இடத்திலேயே நிறபதற்குச் சமம். ஆய்வு என்னும் படகைச் செலுத்த வேண்டுமெனில், தீர்மானித்த முடிவு என்னும் கட்டிலிருந்து அதை விடுவித்து விட வேண்டும். அப்போதுதான் ஆய்வு சரியான பாதையில் முன்னேறும்.

          காய்த்தல்,உவத்தல் அகற்றி கிடைத்துள்ள தரவுகளடிப்படையில் ஆய்வு அறத்திலிருந்து மாறாமல், ஆய்வு நோக்கத்தையே  நினைந்து, கருதுகோளை உணர்ந்து ஆய்வை எழுதத்தொடங்கவேண்டும். ஒவ்வொரு இயலை எழுதத் தொடங்கும் போதும்,ஆய்வாளர் மனதில் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.


         நெறியாளரிடம் எழுதிய இயலைக்கொண்டு சேர்க்குமுன்னர், இரு முறையாவது எழுதிப்பார்த்துவிட வேண்டும்.   இதனை முதல் வரைவு,இரண்டாம் வரைவு எனக் குறிப்பிடலாம்.

முதல் வரைவு

முதல் வரைவில் மூன்று செய்திகளைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

1.என்ன சொல்லப்போகிறோம் அதை எப்படி சொல்லப்போகிறோம் என்பதில் தெளிவு.
2.எந்த நோக்கத்திற்காக  ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என்பதில் கவனம்.
3.ஆய்வினைப் படிப்பவர்களைக் கருத்தில் கொண்ட மொழிநடை.

முதலில் முதல் இயலைத்தான் எழுதவேண்டும் என்பதில்லை. தரவுகள் மிகுதியாகக் கிடைத்துள்ள இயல்களை முதலில் எழுதலாம்.முதல் வரைவில் என்ன, எப்படி என்பதில் தெளிவு தேவைப்படுவதைப்போல, எவ்வளவு தகவல்களைத் தரப்போகிபோகிறோம் என்பதிலும் தெளிவு தேவை. ஏனெனில் 

            ஒரு இயலுக்கு ஏராளமானத் தகவல்கள் கிடைத்துள்ள நிலையில் கிடைத்த தரவுகள் அனைத்தையும் பயன்படுத்தி விடவேண்டும்மென்ற ஆர்வத்தில் பிற இயல்களைக் கருத்தில் கொள்ளாமல் எழுதினால், ஒரு இயல் மிகப் பெரியதாகவும்,மற்றவை மிகச் சிறியதாகவும் அமைந்து விடும். ஒரு நாற்காலியின் நான்கு கால்களும் எப்படி சீரானதாக அமைந்துள்ளனவோ அதைப்போல இயல்கள் அமைவதுதான் சிறப்பு. எனவே பக்க வரையறைகளைக் கருத்தில் கொண்டு உட்தலைப்பிற்கேற்ற வகையில் தரவுகளை முறைப்படுத்திக்கொண்டு எழுதுவதே சரியாக முறை. தரவுகளை இயலுக்கேற்ப முறைப்படுத்தாமல் மேற்கொள்ளப்படும் ஆய்வு  தலைப்பையே கேள்விக் குறியாக்கி விடும். 

எளிய மொழிநடையில்,தெளிவான முறையில் சொல்ல வந்த கருத்தை முறைப்படுத்தப்பட்ட தரவுகளின் அடிப்படையில் சிறு சிறு தொடர்களில் எடுத்துரைக்கவேண்டும்.முதல் வரைவினை எழுதும் பொழுது தயக்கம் அச்சம் போன்றவை ஏற்படும்.நோக்கத்தை பற்றிக் கொண்டு தரவுகளைக் மனதில் வரிசைப்படுத்தி கொண்டு அச்சமின்றி எழுத வேண்டும். அப்போதுதான் புதிய சிந்தனைகளும் புதிய உத்திகளும் தோன்றும். முதல் வரைவில் நிறுத்தற்குறி, கருத்துப்பிழை,ஒற்றுப்பிழைகளை கருத்தில் கொள்ளத் தேவையில்லை.

எதையும் எழுதுவதற்கு முன் மனதில் ஒரு முறை அதைப் பற்றி சிந்தித்து தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.   எந்த கருத்தை முதலில் கூறுவது, எந்த கருத்தை அடுத்தடுத்து கூறுவது எனத் தெளிவாகத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். எழுதும்பொழுது தடங்கலின்றி சொற்கள் இயல்பாக வந்து ஆய்வு நடையில் அமைய, ஆய்வுப் பொருள் குறித்த தெளிவும், தரவுகளைப் பொருத்தமுற அமைக்கும் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.

            ஆய்வுப்பொருள் குறித்த மூலநூலையும் துணை நூல்களையும் ஆழ்ந்து படிந்திருந்தால்தான், ஆய்வு  சிறப்பாக அமையும். ஆய்வாளர் தான் சொல்ல வந்த கருத்தைப் படிப்பவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளும் வகையில், எடுத்துரைக்கவில்லையெனில் படிப்பவர்கள் தவறாக புரிந்து கொள்ள நேரிடும்.         சொற்களின் பொருண்மை பற்றிய அறிவும், அதைச் சரியான இடத்தில் சரியாகப் பயன்படுத்த வேண்டிய விழிப்புணர்வும் உள்ளவரே சிறந்த ஆய்வாளராக முடியும். நிறைய நூல்களைப் படிப்பதால் மட்டுமே ஒருவர் ஏராளமான சொற்களை அறிய முடியும் அதைச் சரியாகப் பயன்படுத்தவும் முடியும். எனவேதான்,எழுதுவது ஒரு கலை எனப்படுகிறது.

எழுதுவதற்கு முன் மிகுதியான தரவுகளைச் சேகரித்துவிட்டது போலத் தோன்றும்.ஆனால்,எழுதும்போது தான் அவற்றில் சில தேவையில்லாதது என்றும் இன்னும் தேவை என்பதும் தெரியும்.எனினும் தயக்கமின்றி முதல் வரைவை முழுமையாக எழுதிவிட வேண்டும். ஓரளவிற்கு உருவம் கொடுத்த இயலில் உள்ள குறைகளை இரண்டாம் வரைவில் சரிசெய்து விட வேண்டும்.

முதல்  வரைவில் உள்ள கருத்துப்பிழை உள்ளிட்ட பிழைகள்,  உட்தலைப்பில் ஒழுங்கின்மை, சீரற்ற மொழிநடை,   ஒருமை-பன்மை மயக்கம் போன்றவற்றில் கவனம் செலுத்தி தேவைப்படும் மேற்கோளைச் சேகரித்து உரிய இடங்களில் பொருத்தி சரி செய்ய வேண்டும். இவ்வாறு சரி செய்த முதல் வரைவினை வாய்விட்டு ஒருமுறை படித்துப் பார்க்க வேண்டும். கண்கள் கண்டுபிடிக்காததை காதுகள் கண்டுபிடித்துவிடும்.கீழக்கண்ட முறையில் சரிசெய்யலாம். 

^


இரண்டாம் வரைவு


முதல் வரைவில் திருத்தங்களைச் செய்து, அதிலுள்ள குறைகளை நீக்கி,தேவைப்படும் புதிய தரவுகளைச் சேகரித்து உரிய இடத்தில் பொருத்திய பின்னரே  இரண்டாம் வரைவு எழுதப்படவேண்டும். இரண்டாம் வரைவில் கவனிக்கப்படவேண்டிய ஒன்று பத்தியமைப்பு.

ஒரு பத்தி என்பது ஒரு கருத்தைத் தொடங்கி,அக்கருத்து நிறைவுறும் வகையிலும் தொடரக்கூடியது. அக்கருத்து நிறைவடையும்போதுதான் அப்பத்தி நிறைவடையும். கருத்தின் தன்மையைப் பொறுத்து ஒரு பத்தி மூன்று வரிகளிலும் இருக்கலாம். முப்பது வரிகளிலும் இருக்கலாம்.

ஆய்வினைப் பொறுத்தளவில் தேவையற்ற சொற்கள் என ஒரு சொல் கூட இல்லாதவகையில், சொல்ல வந்த செய்தியினைச் செறிவுடன் சுருக்கமாக எடுத்துரைக்க வேண்டும். அடு்த்த கருத்தையோ, அக்கருத்திற்கு மாறான கருத்தையோ,மேற்கோளையோ அடுத்த பத்தியில் அமைக்கவேண்டும்.

தன்மை,முன்னிலை நிலையில் ஆய்வு அமையக்கூடாது. படர்க்கை நிலையிலிருந்தே ஆய்வினை நிகழ்த்த வேண்டும். உணர்ச்சிநடை,பெருமிதநடை,வினாநடை,பிறமொழி கலப்புநடை முதலான நடைகளைத் தவிர்த்து கூடுமான வரையில் தூய தமிழ்ச் சொற்கள் மட்டுமே இடம்பெறும் வகையில் ஆய்வு நிகழ்த்தப்படவேண்டும்.தேவைப்படின் தூய தமிழ்ச்சொற்களுக்கருகில் பிறமொழிச்சொற்களை அடைப்புக்குறிக்குள் தரலாம். ஒவ்வொரு இயலும் அவ்வியலுக்குரிய தலைப்பை ஒட்டி சிறு முன்னுரைப் பகுதியைக் கொண்டிருக்கவேண்டும். அது போல இயலின் முடிவு அந்த இயலில் ஆராயப்பட்டு கண்டறிந்த மெய்மைகளை தொகுத்து கூறுவதாக அமைய வேண்டும்.

மேற்கோள் என்பது இருவகைப்படும்.

 1.படைப்பிலக்கியங்களில் ஆய்வு நிகழ்த்தப்படுமாயின், மூலநூலிலிருந்து எடுக்கப்பட்ட தரவுகள் அல்லது  நாட்டுப்புற ஆய்வு எனின் சேகரிக்கப்பட்ட தரவுகள் 

2. மூலநூல் அல்லாத பிறவற்றிலிருந்து எடுக்கப்பட்ட தரவுகள்..

             இயல் தலைப்பிற்கேற்ற வகையிலும்,ஆய்வு நோக்கத்திற்கேற்ற வகையிலும் இத்தரவுகள் பொருத்தமாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மூலநூல் தரவுகளுக்குத் தொடர்புடைய துணைநூல் தரவுகளைப் பகுத்துத் தொகுக்கும் வகைப்படுத்தும்போது ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். துணை நூல் தரவுகள் மூலநூல் தரவுகளுக்கு அரணானவையாகவும்  இருக்கலாம். முரணானவையாகவும் இருக்கலாம்.

           மூலநூல் கருத்துக்களைச் சரியாக விளங்கிக் கொண்டு அதற்கேற்ற தரவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். முரணான சருத்தாயின் எவ்வாறு,எதனடிப்படையில் முரண்படுகிறது அது குறித்த ஆய்வாளரின் கருத்து யாது, எது ஏற்புடையது என்பதனைத் தெளிவு படுத்திய பின்னரே ஆய்வினை மேற்கொண்டுத் தொடரவேண்டும்.

          உதாரணமாக மாணிக்கவாசகரின் காலம் குறித்து ஒரு தெளிவின்மை உள்ளது. மூலநூலில் உள்ள கருத்துக்களை முறையாகப் பயின்று காலம் குறித்த ஒரு தெளிவை உண்டாக்கிக்கொள்ள வேண்டும். பின் பல்வேறு ஆய்வாளர்களின் மாணிக்கவாசகரின் காலம் குறித்த கருத்துகளைத் தொகுக்கவேண்டும். அதை வரிசைப் படுத்திக் கொள்ள வேண்டும். மறைமலையடிகள், அ.ச.ஞானசம்பந்தன் உள்ளிட்ட பிற அறிஞர்கள் கூறும் கருத்துக்களில் எது ஏற்புடையது என ஆய்வாளர் கருதுகிறாரோ அக்கருத்தை ஆய்வில் அதற்கான காரணத்தோடும் ஆதாரத்தோடும் தெளிவுபடுத்தி விட வேண்டும். எனவே, துணை நூலில் திரட்டப்பட வேண்டிய தரவுகள்  சிக்கலுக்கேற்ப திரட்டப்பட வேண்டும்.

1.மூலநூலிலிருந்து எடுக்கப்படும் தரவுகள், செய்யுள் பகுதியாயின் இவ்வாறு தரலாம்.
"பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி" (புறம் - 264)
                           "ஊர்நனி யிறந்த பார்முதிர் பறந்தலை" (புறம் - 265)

உரைநடையாயின்,  (ஒரு நாவலிலிருந்து எடுக்கப்பட்ட  தரவு  இது.)
 
தகப்பன்கொடி நாவலின் இறுதியில் அம்மாசியின் வாழ்நாள் முடிவுக்கு வரும் நிலையில் அமையும் பகுதி,“தீடிரென்று அவனை ஒரு கை தூக்கிக்கொண்டு பறந்தது. கோழிக்குஞ்சைப் போலத் தான் தூக்கிச் செல்லப்படுவதாய் நினைத்தான் அம்மாசி.  அதன் தொடுகை மிருதுவாக இருந்தது. இறக்கையடிப்புகள் மென்மையாக வீசிவிடுவது போல அருகிலேயே அவனை வருடின. மண்ணில் கால் பரவ விடாமல் சமவெளிகளுக்கும் மலைமுகடுகளுக்கும் நீர்ப்பரப்புகளுக்கும் மேலாய்க் கடந்து பறந்தது அது.  மண் தேலியிருக்கிற திட்டுகளில் காலை ஊன்றி விடலாம் என்று அவன் முயற்சிக்கும் போது அது இன்னும் மேலாய் காற்றில் எழுந்தது” (தகப்பன் கொடி, பக.46) என்றவாறாக அமைகிறது.


2. மூலநூல் அல்லாத பிறவற்றிலிருந்து எடுக்கப்பட்ட தரவுகள்..

உரைநடையாயின்,

""""இன்னும் அவர்கள் உயிரோடு இருக்கப்போவது ஒரு சில ஆண்டுகள் தான். அதுவரை அவர்கள் தங்கள் விருப்பப்பட்டபடி வாழ்ந்து விட்டுத்தான் போகட்டுமே. அவர்களுக்குத்  தேவையானதை வாங்கிக் கொடுத்து அவர்கள் சொல்லைக் கேட்டு நடந்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் பொறுப்பு இளைய தலைமுறையினருக்கு உண்டு. ""  (நடராஜன்.வி.எஸ் ,2008:123) 

மேற்கோள்களை இதழ்களிலிருந்தும் திரட்டலாம். உதாரணமாக,இவ்வாறு தரலாம்.

  ‘தினகரன்’ நாளிதழில் வெளியான செய்தி ‘அளம்’ நாவலுடன் ஒப்புநோக்கத் தக்கதாக இருக்கிறது. """" கல்யாணியின் கணவர் கணபதிக்கு வருமானம் போதாததால் குழந்தைகள் பசியால் வாட வறுமைக்கு வயிறு இரையாகிப் போனதை கல்யாணியால் சகிக்க முடியவில்லை . அதனால் பெண்கள் கடைக்குக் கூட வராத காலத்தில் டயர் பஞ்சர் ஒட்டுகிற கடையில் வேலைக்கு சேர்ந்தார் . கணவர் இறந்ததால் அப்பா , அம்மா இரண்டு பேருக்குமான கடைமையை முடித்துவிட்டார். மூன்று மகள்களுக்கும் , ஒரு மகனுக்கும் திருமணம் செய்து முடித்துவிட்டார். அதற்காக 33 வருடங்களாக பஞ்சர் ஒட்டிக் கொண்டு இருக்கும் கல்யாணிக்கு வயது 60.""  (வசந்தம் - தினகரன் இணைப்பு,    11 .5. 2008 : 3)    
 
தொடரும்......



ஆய்வு அனுபவங்கள் -3


  ஆய்வு செய்வது எப்படி?

தொடர்ச்சி.....

3.இயல் பிரிப்பு


           ஆய்விற்குரியத்  தலைப்பைத் தேர்நதெடுத்த பின்னர், இயல்களைத் தலைப்பிற்கு பொருத்தமான வகையில். முதலில் பொது நிலையில் நின்று மேலோட்டமாகப் பிரிக்க வேண்டும். பொதுநிலையில் நின்று பிரிப்பது என்பது தரவுகளைத் திரட்டுவதற்குமுன் மேற்கொள்ள வேண்டிய ஒன்றாகும். பிரித்த இயல்களுக்கேற்ப தரவுகளைத் திரட்டுவதா, தரவுகளுக்கேற்க இயல்களைப் பிரிப்பதா என்கிற யைம் ஏற்படும் கோழியிலிருந்து முட்டையா?முட்டையிலிருந்து கோழியா? என்கிற குழப்பம இங்கு தேவையில்லை.தரவுகளுக்கேற்ற வகையில்தான் இயல்களைப் பிரிக்க வேண்டும்.  பொதுநிலையிலிருந்து மேலோட்டமாகப் பிரிப்பதென்பது சுரைக்குடுவையைக் கொண்டு நீச்சல் பழகுவது போன்றது. 

            பொது நிலையில் நின்று பிரிக்கப்படும் இயல்கள் தரவுகளை எப்படிச் சேகரிப்பது என்ன தரவுகளைச் சேகரிப்பது போன்ற முதல்நிலை தயக்கத்தை நீக்க உதவுகின்றன.இவை அனுமானங்களைக் கொண்டு பிரிக்கப்படுபவை. அவ்வளவே. ஆதாரங்களடிப்படையில் பிரிக்கப்படுபவை அல்ல. அனுமானத்தில் அடிப்படையில் பிரிக்கப்படும் இவ்வியல்கள் தரவுகளைத் தயக்கமின்றி தேட உதவுகின்றன. இதனடிப்படையில் திரட்டப்படும் தரவுகள் இயலுக்குத் தகுந்தாற்போல் மிகுதியாகக்கிடைக்கலாம்;சில குறைவாகக் கிடைக்கலாம்;சில இயலுக்கு எதிர்பார்த்ததைவிட மிகுதியாகக் கிடைக்கலாம்; சில கிடைக்காமலே போகலாம்;மாறாக, நினைத்துப் பார்த்திராத புதிய தரவுகள் மிகுதியாகக் கிடைக்கலாம்.

             தரவுகள் முழுவதும் சேகரிக்கப்பட்ட பின்னர் இத்தரவுகளின் அடிப்படையில்தான் இயல்கள் மீண்டும் ஒரு முறை பிரிக்கப் படவேண்டும்.பொதுநிலையில் பிரித்த சில இயல்கள் நீக்கப்பட்டு, புதிய இயல்கள் உருவாகலாம். எப்படியாயினும் ஆய்வு நோக்கம், தலைப்பு,கருதுகோள் இவற்றினின்றும் மாறாத வகையில் இயல்கள் பிரிக்கப்படவேண்டும். பொது நிலையில் பிரித்த இயல்களையே பற்றிக்கொண்டு எழுதத்தொடங்குவதென்பது இயல்களுக்கேற்ற தரவுகள் கிடைக்காத நிலையில்,தேவையற்ற தரவுகளைக் கொண்டு நிரப்புவதற்கு வழி வகுத்துவிடும். ஆய்வு இரயில் தடம் புரண்டு இலக்கையே மறந்து விடும் நிலை ஏற்படும். எனவே, தரவுகளைக் கொண்டு இயல்களைப் பிரிப்பதே சிறப்பானது.

              ஆய்வு நோக்கம் இலக்கு எனில், ஆய்வுத் தலைப்பு தண்டவாளம், ,இயல்கள் இரயில் பொட்டிகள் ஆகும். இயல்கள் ஒன்றக்கொன்று பொருண்மையடிப்படையில் இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.தரவுகளை உயிருள்ள பயணிகளோடு ஒப்பிடலாம். சென்னை செல்லும் பயணி சென்னை செல்லும் இரயிலில் அமர்ந்தால்தான் இலக்கு நோக்கி பயணிக்க முடியும். அதுபோல,தரவுகளும் ஆய்வு நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் பொருத்தமுடையனவாக இருக்க வேண்டும். பொருத்தமில்லாத தரவுகள் தவறான இலக்கிற்கே சென்றடைய உதவும். ஆய்வாளரை குழப்பிவிடும்.

                பெண்ணியம் என்னும் கோட்பாட்டை ஒரு படைப்பாளரின் படைப்பில் பொருத்திப் பார்க்கும் வகையிலான ஆய்வு எனில்  பெண்ணியம் குறித்து முதலில் அறிந்திருக்கவேண்டும். பெண்ணியக் கோட்பாடு  தோன்றிய வரலாறு, உட்பிரிவுகள், பெண்ணியம் குறித்த மாற்றுப் பார்வைகள்,இந்திய சூழலில் அதன் விளைவுகள் முதலான அடிப்படைப் புரிதல்களைப் பெற்ற பின்னரே ஆய்வினைத் தொடங்கவேண்டும்.

           பெண் பிறப்பு முதல் இறப்பு வரையில் நடத்தப்படும் சூழல் குறித்த படைப்பாளரின் பார்வையைப் பெண்ணிய நோக்கில் அப்போதுதான் அணுகி ஆராய முடியும்.பெண்ணியம் குறித்த ஆய்வகளுக்குப் பெண்ணியக் கோட்பாடு பற்றிய அறிமுகத்தையும் அதன்  பல உட்பிரிவு  வகைகளில் எந்த வகையின் அடிப்படையில் படைப்பாளரின் படைப்புகள் ஆராயப்படுகின்றன என்ற தகவல்களையும்  உடையதாக  இயல் இருக்கவேண்டும். சில ஆய்வேடுகளில்  முன்னுரை,முடிவுரை நீங்கலாக இயல்கள் பிரிக்கப்படுகின்றன.இவ்வாறு பிரிப்பதில் முன்னுரையை முதல் இயலாகச் சேர்ப்பதா என்கிற ஐயம் எழுகிறது. எது முன்னுரை என்ற கேள்வியும் எழுகிறது.
                                                                          ஆய்வுநோக்கம்,ஆய்வுச்சிக்கல்,தலைப்பு,எல்லை,கருதுகோள்,ஆதாரங்கள்,
இயல்பிரிப்பு  முதலான செய்திகளைத் தாங்கியிருக்கும் பகுதி முன்னுரைப் பகுதியா? அல்லது பெண்ணியம் குறித்த ஆய்வுகளில் பெண்ணியக் கோட்பாட்டைக்கூறும்  பகுதி முதல் இயலா?  ஆய்வு நோக்கம் அதன் சிக்கல், அதன் எல்லை, கருதுகோள், தலைப்பிற்கான ஆதாரங்கள், இயல்பிரிப்பு போன்றவை தெரியாமல் ஒரு ஆய்வை படிப்பவர் அணுக முடியாது.  இது ஆய்வு குறி்த்த அறிமுகப் பகுதி.முன்னுரையில்லாமல் எவ்வாறு முடிவுரை பகுதி அமைக்க முடியும்? முன்னுரை,முடிவுரையை நீக்கிவிட்டு எப்படி ஆய்வை ஆய்வாகக் கொள்ளமுடியும்?எனவே தமிழ் ஆய்வுகளில் முன்னுரை முடிவரை நீங்கலாக என்ற சொற்கள் தேவையா என ஆராய்வது அவசியமாகிறது. முன்னுரை,முடிவுரை உட்பட்டு எனப் பிரிப்பது தான் பொருத்தமாக இருக்கும். இவ்வடிப்படையில் .இயல்கள் பொதுவாக ஐந்து  முதல் ஏழு வரை இருக்கலாம்.

உதாரணத்திற்கு, இயல்கள் பிரிக்கப்படும் போது,பெண்ணியத்திற்கு கீழ்க்கண்டவாறு  பிரிக்கலாம். பிரபஞ்சனின் பெண்ணியச் சிந்தனைகள் என்கிற தலைப்பிற்கு,பொது நிலையில் இயல்களை இவ்வாறு பிரிக்கலாம்.

முன்னுரை
பிறந்த வீட்டுச்சூழலில் பெண்கள்
புகுந்த வீட்டுச்சூழலில் பெண்கள்
தனித்து வாழும் பெண்கள்
சமூக சூழலில் பெண்கள்
அரசியல் சூழலில் பெண்கள்
முடிவுரை

முன்னுரை பகுதி ஆய்வு பற்றிய அறிமுகத்தை உடையதாக அமையவேண்டும்.

      பொதுநிலையில் நின்று பிற இயல்களைப் பிரித்த பின்னர்,ஒவ்வொரு இயலிற்குள்ளும் குறிப்பிடத்தக்க உள் சிக்கலை மையப்படுத்தும் வகையில் ஏராளமான தரவுகள் கிடைக்கலாம்.பிறந்த விட்டுச்சூழல் குறித்த இயலுக்கு பெண் பிறப்பு - வளர்ப்பு வேறுபாடு, கல்வி,முதிர்கன்னி,திருமணத்திற்குப் பின்னர் புகுந்த வீட்டில் அவளுடைய உரிமை,மணவாழ்வு முறிந்த நிலையில் புகுந்த வீட்டில் வாழ நேர்ந்தால் சந்திக்கும் சிக்கல்கள் போன்ற தரவுகள் தேடப்படவேண்டும்.

       ஒரு படைப்பாளரின் படைப்பில் பிறப்பு,வளர்ப்பு உள்ளிட்ட  சிக்கல்களுக்கானத் தரவுகள் ஏதுமின்றி பெண் கல்வி பெறும் சூழல் குறித்த பதிவுகள் மட்டும் மிகுதியாக் கிடைக்கும் சூழலில், குடும்ப சூழலில் பெண்கல்வி என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்து அதையே இயல் தலைப்பாகவும் அமைத்துக் கொள்ளலாம்.ஏராளமான தரவுகள் இருக்கும் பொழுதுதான்  ஆராய்வது எளிதாக இருக்கும்.முதிர்கன்னி குறித்த பதிவுகளும் ஏராளமாக காணப்படுமாயின் அதனை அடுத்த இயலாக வைக்கலாம்.
அதுபோல பணிமகளிர் சிக்கல் குறித்த எத்தரவுகளும் படைப்பாளரின் படைப்புகளில் கிடைக்கவில்லையெனில் அந்த இயலை நீக்கிவிடலாம்.தனித்து வாழும் பெண்கள் குறித்த தரவுகளில் திருமணமாகாமல் தனித்து வாழும் பெண்கள்,திருமணமாகி தனித்து வாழும் பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் எனப் பிரித்து தரவுகளைத் தேடலாம்  அரசியல் சூழலில் பெண்களின் மீதான அரசியல் செயல்பாடு,அரசியல் என்னும் அதிகார மையத்தில் வெற்றிகொண்ட பெண்கள் நிலை, ஓட்டுவங்கிகளாக கருதப்பட்டு நடத்தப்படும் பெண்கள் முதலான பிரிவுகளுக்குள் தரவுகளைத் திரட்டலாம் .இதில் ஒரு உள் சிக்கலுக்கு ஏராளமானத் தகவல்கள் கிடைக்கும் நிலையில் அதையே இயல் தலைப்பாக அமைக்கலாம்.

     பொதுவாகக் கோட்பாடுகளைப் பொருத்திப் பார்க்கும் ஆய்வுகளில், அக்கோட்பாடு பற்றிய செய்திகளை விரிவாகவே கூறிவிடுவது நன்று.அதைப் பற்றிய தெளிவானக் கருத்தியலை ஆய்வாளர் நன்கு புரிந்து கொண்ட பின்னரே ஆய்வைத் தொடங்க வேண்டும். கோட்பாடு அடிப்படையில்தான் கருதுகோள் உருவாக்கப்படவேண்டும்.அனைத்து இயல்களும் இக்கோட்பாட்டினடிப்படையில்தான் ஆராயப்படவேண்டும்.புதிய கோட்பாடுகளாகத் தற்காலத்தில் கருதப்படுபவை தலித்தியம்,பெண்ணியம்,சிறாரியம்,அரவாணியம்,முதியோரியல்,சூழலியல்,
தமிழ்க் கணினியியல்போன்றவை.

          இக்கோட்பாடு குறித்த தெளிவினை ஏற்படுத்திக்கொண்ட பின்,அதற்கேற்ப இயல்களை அமைக்க வேண்டும். சில ஆய்வுகளில் பொருத்தமில்லாத வகைகளில் சில இயல்கள் அமைக்கபட்டிருக்கும் எவ்வாறெனில், மேற்குறிப்பிட்ட சமூகச் சிக்கல்கள் சார்ந்த தலைப்புகளைத் தேரந்தெடுத்துவிட்டால் அது தொடர்பான சிக்கல்களை மையப்படுத்தும் இயல்கள் அமைக்கப்பட வேண்டும். 

உதாரணமாக, தமிழ் நாவல்களில் முதியோர் சிக்கல் என்னும் தலைப்பைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால்,முன்னுரை பகுதியில் நோக்கம் சிக்கல்,எல்லை,முதன்மை ஆதாரங்ளைப் பற்றிய செய்திகளைத் தர வேண்டும். 

       இரண்டாம் இயல் முதியோர் என்பதற்கான சொல் விளக்கம். வயது வரையறை,தமிழ் இலக்கியத்தில் அன்று முதல் இன்று பதிவாகியுள்ள முதியோர் குறித்த பார்வைகள், மருத்துவர்களின் பார்வையில்,உடல், உள, உணவு அடிப்படையிலான செய்திகள்,உலக அளவில் முதியோர் நடத்தப்படும் நிலை போன்றவற்றை உள்ளடக்கியதாக அமைவது சிறப்பாக இருக்கும்.

        மூன்றாவது இயல் எடுத்துக்கொண்ட நாவல்கள் பற்றியும், அதில் இடம்பெறும் முதியோர்களின் நிலை குறித்தும்,நாவலாசிரியர்களின் முதியோர் குறித்த பார்வை குறித்தும்,முதியோர்களை  சில வரையறைக்குள் அடக்கி விளக்கும் நிலையிலும் அமைய வேண்டும். 

        நான்காம் இயல் நாவல்களில் முதியோர்க்கு ஏறபடும் சிக்கல் பற்றி வயது,உடல் தளர்ச்சி,ஓய்வு,தலைமுறை இடைவெளி, குடும்ப,சமூக நிலைகளில் அவர்கள் சந்திக்கும் சிக்கல்களை நாவல்களின் வழி ஆராயப்படவேண்டும்.

         ஐந்தாம் இயல் நாவல்களில் வழி நின்று பிடிவாதம்,மரபு மற்றும் சமூக மாற்றத்தை  வெறுத்தல்,பழிவாங்கல், பழம்பெருமை முதலானவற்றால் தனி மனிதர்க்கும், குடும்ப சமூக உறவுகளுக்கும் சிக்கல்களை ஏறபடுத்துதல் முதலான,முதியோரால் ஏற்படும் சிக்கல்களை ஆராய்வதாக அமைவது நன்று. 

   ஆறாவது இயல் முதியோர் வழிகாட்டல் என அமைந்து அனுபவப் பெட்டகங்கள்,உயிருள்ள நூல்கள் என்றடிப்படையில் நாவல்களின் வழி அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை சொல்லும் அறிவுரைகள், வாழ்க்கையில் சந்தித்த சிக்கல்களை அணுகிய விதம் போன்றவற்றை ஆராய்வது நன்று.

     முடிவுரை பகுதி ஆய்வாளரின் நடுநிலையை வெளிப்படுத்தும் வண்ணமும்,சமூகக் கண்ணோட்டத்துடனும், இன்றைய இளைஞர்கள் நாளைய முதியவர்கள் என்ற நடப்பியல் உண்மையைப் புரிந்த நிலையிலும் நாவலாசிரியர்களின் முதியோர் குறித்த தகவல்களைத் தருவதாய் அமையவேண்டும்.மேற்குறித்த இயல்கள் பொது நிலையில் நின்று பிரிக்கப்பட்டவை.எடுத்துக்கொள்ளும் முதன்மை நூல்களுக்குத் தகுந்தாற்போல தரவுகளைப் பொறுத்துஇயல்கள் மாற்றத்திற்கு உள்ளாகலாம்.

        பெரும்பாலும் தற்கால ஆய்வுகளில் இயல்கள் ஒரே மாதிரியாக வருகின்றன.ஒரு படைப்பாளரின் படைப்பில் கதை மாந்தர்,குடும்பம்,சமூகம் என்றளவிலேயே ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. ஒரு ஆய்வைப் பார்த்ததைப் போலவே, வெவ்வேறு படைப்பாளர்களின் படைப்புகளில் இயல்கள் பிரிக்கப்படுகின்றன.இதைத் தவிர்த்து குறிப்பிட்ட படைப்பாளரின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் இயல்கள் அமைக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும்.தரவுகள் அடிப்படையில் பிரிக்கப்படும் இயல்கள் மட்டுமே படைப்பாளரைப் புதிய கோணத்தில் அணுகி புதிய இயல்களைப் பிரிப்பதற்கு உதவும் என்பதை ஆய்வாளர் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இயல்களுக்குள் ஒழுங்கமைப்பு மற்றும் 

தலைப்பிற்கேற்ற பொருத்தப்பாடு


              இயல்கள் பொருண்மையடிப்படையில் இணைக்கப் பட்டிருப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவை முறையாக அமைக்கப்படும் முறை.

        திருவாசகத்தில் தொடரனியல் என்னும் ஆய்விற்குள் மொழியியல் பற்றிய அறிமுக இயல், ஒலியன், உருபன்,தொடரமைப்பு, மொழிநடை,யாப்பமைதி, கருத்துப்புலப்பாடல் உத்திகள் போன்றவற்றில் தரவுகளைப் பொருத்து இயல்களை அமைத்துக் கொள்ளலாம். ஆனால் இவ்வியல்களுக்குள் ஒரு இயலாக  மாணிக்கவாசகரின் பாடல்களில் மகளிர் விளையாட்டுகள் என்பது இடம் பெறக்கூடாது. அது போலப் பெண்ணியம் குறித்த தலைப்பைத் தேர்நதெடுத்து இயல்களைப் பிரிக்கையில் ஒரு இயலாக அப்படைப்பாளரின் இலக்கிய நயம் என்பது இடம் பெறக்கூடாது.

மாலனின் பெண்ணியச் சிந்தனைகள் என்கிற ஆய்வில் ஒரு இயலாக மாலனின் படைப்பில் இலக்கிய நயம் என்பது பொருந்தாது. அது போல ஒரு குறிப்பிட்ட காலத்தில் தோன்றிய நூல்களை ஆராயும் பொழுது,கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் தரவுகள் இடம்பெற வேண்டும். அதற்குப் பொருத்தமில்லாத வகையில் மற்றொரு காலத்தில் தோன்றிய தரவுகளைக் கொண்டு அமைக்கப்பட்ட இயல் இடம் பெறக்கூடாது.










Sunday 26 May 2013

ஆய்வு அனுபவங்கள் -2

 

ஆய்வு செய்வது எப்படி?

தொடர்ச்சி.....

2.ஆய்வு நெறிகள்

 

ஆய்வு என்பது தேர்ந்தெடுத்த சொற்களைக் கொண்டு,படிப்பவர் புரிந்து கொள்ளும் வகையில் உரிய தரவுகளைப் பொருத்தமுற அமைத்து பிழையற எழுத வேண்டிய ஒன்றாகும்.  கதை எழுதுவது,கடிதம் எழுதுவது,அறிக்கை எழுதுவது என ஒவ்வொன்றிற்கும் ஒரு மொழி நடை உள்ளது. ஆய்விற்குரிய நடையை எழுதி எழுதிப் பார்த்து, பயிற்சி பெறுவதன் மூலமே கைவசப்படுத்த முடியும். எத்தனை முறை எழுதிப் பார்ப்பது என்றால், ஆய்வு நடையை கற்றுக் கொள்ளும் வரை என்பது தான் சரியான பதிலாக இருக்கும்.

 தலைப்புத் தேர்வு

ஒரு ஆய்விற்குரிய தலைப்பைத் தேர்நதெடுப்பது மிக்க சவாலானது.       முதலில் களத்தைத்(field)(உம். பக்தி இலக்கியம்) தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.ஒருவன் விளையாடுவதற்கு திறமைகள் மட்டும் போதாது. விளையாடும் களமும் இன்றியமையாதது.ஆய்வாளர்  முன்பு பெற்ற பயற்சிகள் அவருக்குரிய களத்தை .தேர்வு செய்ய உதவும்.

சங்க இலக்கிய ஆய்வு மேற்கொள்ள விரும்பும் ஒருவர் உரைகளை மட்டும் நம்பி ஆய்வு மேற்கொள்ளக்கூடாது. சங்கப் பாடல் வரிகளை நேரிடையாகப் படித்து அவை கூறும் உண்மைப் பொருளை நுணக்கமாக அறிந்து கொள்பவராக இருக்க வேண்டும். அற இலக்கியம் எனின் உலகிற்குப் பொதுவானதாகிய அறத்தை  மதக் காழ்பின்றி நடுநிலையோடு  எடுத்துரைக்க தெரிந்திருக்க வேண்டும்.

பழைய இலக்கியங்களில்,தற்காலக் கோட்பாடுகளைப் பொருத்திப் பார்ப்பதில் தவறில்லை. ஆனால்,அவ்வக் காலத்திற்கேற்ற நூல்களை அவ்வக்காலத்திற்கேற்ற புரிதலோடு அணுக வேண்டும்.பக்தி இலக்கியத்தில் ஆய்வு மேற்கொள்ள விரும்பும் ஒருவர் அச்சமயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், அச்சமயத்தின் பாற்பட்டு நில்லாமல் நடு நிலையோடு உண்மைப் பொருளை உணர்ந்து, அதை வெளிப்படுத்தக்கூடியவராக இருக்க வேண்டும்.

தற்கால இலக்கியங்களில் ஆய்வு மேற்கொள்ள புதிய புதிய கோட்பாடுகள் கைக் கொடுக்கின்றன.வட்டாரம் அல்லது ஒரு படைப்பாளரின் குறிப்பிட்ட படைப்புகள் என்கிற அளவில் ஆய்வுகள் நிகழ்த்தப்படலாம். ஆனால், ஒரு படைப்பாளரின் படைப்பில் ஆய்வு மேற்கொள்ள நேரும் பொழுது, முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை, அதன் போக்குகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.          

. நெறியாரோடு கலந்து பேசியும், சிறு சிறு கட்டுரைகளை எழுதிப் பயிற்சி பெற்றும் ஒருவர் தனக்குரிய களத்தைத் தீர்மானிக்க முடியும்.ஆய்விற்குரிய களத்தைத் தீர்மானித்த பின்னர் அதில் ஒரு பரப்பினை தேர்வு செய்ய வேண்டும்.

[உம்.பக்தி இலக்கியம்(களம்) -  சைவ சமய இலக்கியம்(பரப்பு)]

பின்னர்,அப்பரப்பினில் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
(உம்.பக்தி இலக்கியம்(களம்) -  சைவ சமய இலக்கியம்(பரப்பு)- பத்தாம் திருமுறை(பகுதி))

 ஆய்வுக்குரிய பகுதியைத் தேரந்தெடுத்தபின்னர், ஆய்வாளர் அந்நூலில் அல்லது தேர்ந்தெடுத்த பகுதியில் இதுவரை நிகழ்த்தப்பட்டுள்ள ஆய்வுகள், அதற்கு கொடுக்கப்பட்ட தலைப்புகள் குறித்த தேடலைத் தொடங்க வேண்டும். அப்பகுதியில் அல்லது அந்நூலில் எத்தலைப்புகளில் ஆய்வு நிகழ்த்தப்பட்டுள்ளது என அறிவது புதிய தலைப்புகளைத் தெரிந்தெடுக்க உதவும்.அல்லது ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் புதிய கோணத்தில் ஆய்வு நிகழ்த்த ஏதுவான தலைப்புகள் கிடைக்கும்.

            ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட ஆய்வு முழுமையான ஆய்வாக இல்லை என்று ஆய்வாளர் கருதினால், அதை இன்னும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்பினால், அதே தலைப்பைக் கொடுப்பது ஏற்புடையது அல்ல. ஒரே தலைப்பில் இரு ஆய்வுகள் என்கிற எண்ணத்தைத் தோற்றுவித்துவிடும். .எனவே, ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வுத் தலைப்பைத் தேரந்தெடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. செய்த ஆய்வுகளையே செய்யாமலிருக்க,  மூலநூலை ஆழ்ந்து படித்து புதிய தலைப்புகளை உருவாக்க முயலலாம்.ஆய்வுத்தலைப்பைத் தேரந்தெடுப்பது சவாலானது மட்டுமல்ல, ஆய்வின் முதுகெலும்பே அதுதான். ஆராய்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வுத் தலைப்பு ஆய்வினை அழகாக முடித்துக் கொடுத்துவிடும்.உம். திருமந்திரத்தில் உடல் குறித்த சிந்தனைகள்

       பத்தாம் திருமுறையாகிய திருமந்திரத்தில் ஆய்வு மேற்கொள்வதாக இருப்பின் ஆய்வாளர், திருமுறை வரலாறு,சைவ சித்தாந்தக்கோட்பாடு,சித்தர் தத்தவம் போன்றவற்றைப் பற்றி ஓரளவு தெரிந்தவராக  இருக்க வேண்டும். இல்லையெனில் குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்தது போலவும், கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலவும் ஆகிவிடும். தெரியாத பகுதியைத் தேரந்தெடுக்காமலிருப்பதே நல்லது.

         ஆய்வுத் தலைப்பு கை விளக்கு ஒளி போன்றது. ஒளி காட்டும் பாதையில்தான் ஆய்வாளர் செல்ல வேண்டும். தலைப்பே இருட்டு போலத் தோன்றினால் ஆய்வு எவ்வாறு நகரும்? ஆய்வாளர் நின்ற இடத்திலேயே நிற்க வேண்டியது தான்.ஆய்வுத் தலைப்பைத் தேர்நதெடுக்கும் பொழுது  ‘ஓர் ஆய்வு‘ என வரும் தலைப்புகளைத் தவிர்த்துவிடவேண்டும். அது என்ன ஓர் ஆய்வு? எல்லா ஆய்வுகளுமே ஓர் ஆய்வு தான்.உம்.திருமந்திரத்தில் ஓர் ஆய்வு. இத்தலைப்பு எதைப்பற்றி ஆராய்கிறது என்பதில் தெளிவில்லாமல் உள்ளது.

ஆய்வுப் பொருள் பற்றிய ஆய்வாளரின் தெளிவின்மையை இத்தலைப்புகள் காட்டுகின்றன.கருதுகோளைத் தேர்ந்தெடுப்பதில், ஆய்வுச் சிக்கலை வரையறுப்பதில் தலைப்பிற்குப் பெரும் பங்கு உண்டு. ஆய்வாளர் ஒரு பொருளில் ஆய்வு செய்ய விரும்பினால் அது தொடர்பான நூல்களை முக்கியமாக மூலநூலை வாசித்துப் பார்க்க வேண்டும். அவ்வாறு வாசிக்கும் பொழுதே கருதுகோள் மனதில் உருவாகிவிடும். ஒரு குறிப்பிட்ட கோணத்தில் ஆய்வு மேற்கொள்ளலாம் அல்லது மாறுபட்ட கோணத்தில் ஆய்வு மேற்கொள்வதற்குரிய தரவுகள் உள்ளன என்பது போன்ற எண்ணங்கள் தோன்றும். மூல நூலிலுள்ள அத்தகவல்கள் ஆய்வாளரின் மனதில் ஒரு தலைப்பை உருவாக்கிக் கொடுக்கும்.

        நெறியாளருடன் இணைந்து ஆய்வுச் சிக்கலை வெளிப்படுத்தக்கூடிய வகையில், படிப்பவர் இந்த கோணத்தில்,இந்த நோக்கத்தில் ஆய்வு இப்பொருளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெளிவாக அறியக்கூடிய வகையில் தலைப்பு உருவாக்கப்படவேண்டும். ஓர் ஆய்வு என்பது போன்ற தலைப்புகள், எந்த நோக்கத்திற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது  என்கிற தெளிவை உடையவை அல்ல. ஒரு குறிப்பிட்ட படைப்பாளரின் படைப்பில் ஆய்வு நிகழ்த்தும் ஒருவர், ‘ஓர் ஆய்வு‘ என்ற தலைப்பை இட்டால் அடுத்து வரும் ஆய்வாளர், முன்பு நிகழ்த்தப்பட்ட ஆய்வு எந்த நோக்கத்தில் நிகழ்த்தப்பட்டது என அறியாமல் தடுமாற நேரிடும். எனவே, ஆய்வு அறம் என்பதே தலைப்பை சரியாக தேர்வு செய்வதில்தான் ஆரம்பிக்கிறது .

             உம். வைரமுத்து கவிதைகளில் ஓர் ஆய்வு என்பதை விட,

வைரமுத்து கவிதைகளில் சமூகச் சிந்தனைகள் ,
வைரமுத்துக் கவிதைகளில் நடப்பியல் ,
வைரமுத்துக் கவிதைகளில் குழந்தைத் தொழிலாளர் சிக்கல் ,
வைரமுத்துக் கவிதைகளில் கல்விச் சிந்தனைகள்
முதலான தலைப்புகள் எந்த நோக்கத்திற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை அழகாக வெளிப்படுத்தி நிற்பதைக் காணலாம்.

ஆய்வு என்பதே அறிவுபூர்வமாகச் சிந்தித்து மேற்கொள்ள வேண்டிய ஒன்று. தலைப்பு என்பது அதில் மிகவும் இன்றியமையாதது. அதிலேயே தெளிவில்லையெனில் ஆய்வு எப்படி சிறப்பாக நிகழ்த்தப்பட்டிருக்கும்? என்ற ஐயம் ஏற்படுத்தும். தலைப்பு முகம் போன்றது. அகத்தின் அழகு முகத்தில் தெரிந்து விடும். அது போல  ஆய்வாளரின் தலைப்பும் ஆய்வின் நோக்கத்தை,சிக்கலை வெளிக்காட்டி நிற்க வேண்டும்.


  தொடரும்..........


Saturday 4 May 2013

ஆய்வு அனுபவங்கள் -1

  1. ஆய்வு செய்வது எப்படி?


                தமிழில் தற்போது இலக்கிய ஆய்வுகள் பெருகி 
வருகின்றன.முதுகலை, ஆய்வியல் நிறைஞர், மற்றும் முனைவர் 
பட்டங்களுக்காகத் தமிழ் இலக்கியத்தில் பெருகி வரும் ஆய்வுகள்  பட்டங்களுக்காகவும் பணிகளுக்காகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் தவறொன்றும் இல்லை. ஆனால், சரியான நெறிமுறைகளோடு மேற்கொள்ளப்பட்டால், அவை ஆய்வாளருக்குப் பல வகைகளில் பயனளிக்கும்.

                 முதலில் மேற்கொள்ளப்படும் முதுநிலை ஆய்வு, பயிற்சி பெறுவதற்காக மேற்கொள்ளப்படுகிறது.அது ஒரு குழந்தை தவழ்வதற்காக செய்யும் முயற்சி போன்றது. ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வு அப்பயிற்சியைச்  சற்றே மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது. இது நடை பயில முயலும் குழந்தையின் நிலையை ஒக்கும்.ஆனால், முனைவர் பட்ட ஆய்வானது அப்பயிற்சியின் விளைவாகக் கிடைத்த பட்டறிவைக் கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய ஒன்று.  தன்னம்பிக்கையுடன்  நன்றாகக் கால் ஊன்றி நடக்கின்ற ஒரு மனிதனின் நடையோடு இதனை ஒப்பிடலாம்.

           ஆய்வாளர் பெற்ற பயிற்சியின் பலனை,முனைவர் பட்ட ஆய்வே காட்டும். ஒருவர் தன் வாழ்நாளில் பெறக்கூடிய இறுதியான உயர்வான பட்டமும் அதுவேயாகும் அதற்கு மேல் டி.லிட்., பட்டம் என்ற ஒரு பட்டம் இருந்தாலும், அதை மேற்கொள்பவர்கள் மிக அரிதாகவே உள்ளனர். எனவே, முனைவர் பட்ட ஆய்வே, ஒருவரது வாழ்வின் மிக உயர்வான பட்டமாக மதிக்கப்படுகிறது.முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு முடித்த நிலையில் தான், ஆய்வாளர் ஆய்வு  பற்றி மட்டுமின்றி வாழ்க்கையையும் தெரிந்து கொள்கிறார்.ஒவ்வொரு ஆய்வாளரும், முனைவர் பட்டஆய்வு முடிந்த நிலையில், முனைவர் பட்டஆய்வுதான்  முடிந்துள்ளது ஆனால்,ஆய்வில்  போக வேண்டிய தூரம்,படிக்கவேண்டிய நூல்கள் ,மேற்கொள்ள வேண்டிய ஆய்வுப் பொருள்கள் ஏராளம் என்பதை உணரமுடியும். எனவே,முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளுமுன் ஆய்வாளர் தன்னை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.அதற்குரிய பயிற்சியைப் பெறவேண்டும்.அதற்கான சில அனுபவப் பகிர்வுகள் இதோ!

 மொழியின் மூன்று நிலைகள்


மொழியை நாம் மூன்று நிலைகளில் கையாள்கிறோம்.

அ.பேசும் மொழி,
ஆ.படிக்கும் மொழி,
இ.எழுதும் மொழி
  என்பவையே அவை.

  அ.பேசும் மொழி

       அன்றாடம் நாம் இயல்பாக நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் உரையாடல்களை நிகழ்த்தியபடியே இருக்கிறோம். நம் கருத்தைக் கூறவும், பிறர் கருத்தை அறியவும் பயன்படுகின்ற மொழி பேசும் மொழியாகும்.இதை வழக்கு மொழி என்றும் கூறலாம்.வட்டாரத்திற்கு வட்டாரம் ஒரே மொழி பலவிதங்களில் பேசப்படும். இப்பேச்சு மொழி, இடத்திற்கு இடம் மாறுபட்டாலும், ஒரு கடிதம் அல்லது கட்டுரை எழுதும் போது, படித்தவர்கள் பேச்சுவழக்கு மொழியை எழுத்தில் அப்படியே கையாள்வதில்லை.

           பேசுவது போலவே எழுதுவதென்பது ஒருவரது மதிப்பைக் குறைத்து விடும் என்பதை ஆய்வினை மேற்கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் உணர வேண்டும். சரி. பேசுவது போலவே எழுதாமலிருக்க என்ன செய்ய வேண்டும்? அல்லது எழுதுவதற்கரிய மொழியை எப்படி கைவசப்படுத்துவது? இதற்கு விடை ஒன்றுதான். நிறைய  படிக்க வேண்டும்.

ஆ.படிக்கும் மொழி 

 

             படிக்கும் மொழி என்பது படிப்பவர்களுக்குத் தகுந்தாற்போல் மாறுபடும். எதைப் படிக்கிறோம்? எதற்காகப் படிக்கிறோம்? ஏன் படிக்கிறோம்? என்ற கேள்விகளுக்கானப் பதில்கள் நபர்களுக்கேற்ப மாறுபடும். ஒரு ஆய்வை மேற்கொள்ள விரும்பும் ஒருவர், இக்கேள்விகளைத் தனக்குள் எழுப்பிக்கொண்டு ஆய்வினை மேற்கொள்ளும் பொழுது அவர் படிக்க வேண்டிய நூல்கள் பற்றிய தெளிவு கிடைக்கும்.

           ஆய்வு தொடர்பாக ஆய்வாளர் பல நூல்களைப் படிக்கும் பொழுது,சொற்களில் கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.அப்போது தான்,பேசும் பொழுது கையாளும் சில சொற்களை நாம் எழுதும்பொழுது கையாள்வதில்லை என்பதை  உணரமுடியும்..ஆய்விற்காகப் படிப்பவற்றில் சில சொற்கள் புதியதாகத் தோன்றும். சிலவற்றின் பொருள் புரியாது. சில புதுமையாக இருக்கும். சில சொற்களை கேள்விப்பட்டே இருக்க மாட்டோம். சில தெரிந்தவையாக இருக்கும் . ஆனால் வேறொரு பொருளில் கையாளப்பட்டிருக்கும். இவற்றைக் கண்டு மிரண்டு விடாமல்,தொடர்ந்து படிக்க வேண்டும்.தொடர்ந்து படிக்கும் போதே. நூலாசிரியர் சொல்ல வந்த கருத்தைப்  புரிந்து கொள்ள முடியும். புரியாத சொற்களைக் கண்டு மிரளாமல் தொடர்ந்து படிப்பதால் புதிய புதிய சொற்களை அவற்றின் பொருளோடு அறிய வாய்ப்பு கிடைக்கும். அச்சொற்களைத் தொடர்ந்து படிப்பதால் அவை ஆய்வாளரின் நடையிலும் இயல்பாகக் கலந்து    விடும்.                                   தன்னையறியாமலேயே ஆய்வில் கையாளத் தொடங்கி விடுவர்.

          நிறைய நூல்களைப் படிப்பதால் மட்டுமே ஒருவர் எழுதுவதற்குரிய சொற்களை அறிய முடியும்.அதைச் சரியாகப் பயன்படுத்தவும் முடியும்.ஆய்வில் ஆய்வாளர் சொல்ல வந்த கருத்தைப் பிறர் நன்கு உணருமாறு குழப்பமில்லாமல் எடுத்துரைக்க வேண்டுமெனில், சொற்களின் பொருண்மை பற்றிய அறிவும், அவற்றைப் பயன்படுத்தும் முறை பற்றிய விழிப்புணர்வும்  தேவை.

                படிக்கும் மொழி அல்லது கற்கும் மொழி என்பது ஆய்வைப் பொருத்தளவில் முதுகெலும்பாகும். முதுகெலும்பு உறுதியாக இருந்தால்தான் ஒரு மனிதனால் உறுதியாக நிற்க முடியும்.அதுபோல் ஓர் ஆய்வு கற்றறிந்தவர் அவையில் நிற்க வேண்டுமெனில்,ஆய்வாளர் நிறைய கற்றிருக்க வேண்டும். ஆய்வுப் பொருள் குறித்த முதிர்ந்த அறிவைப் பெற்றிருக்கவேண்டும். இல்லையெனில் என்பிலதனை வெயில் போலக் காயுமே என்ற குறளுக்கு ஏற்ப ஆய்வாளரின் நிலை ஆகிவிடும். எலும்பில்லாத உயிர்கள் வெயிலில் துன்புறுவதுபோல, எடுத்துக்கொண்ட ஆய்வுப் பொருள் குறித்த பயிற்சியில்லாதவர்கள் ஆன்றோர் அவையில் துன்புற நேரிடும். ஒரு ஆய்வாளர் ஆறு வகையான நூல்களைப்  படிக்க வேண்டும்.

  •  ஆய்வியல் நெறிமுறைகள் குறித்த நூல்கள்
  •  மூல நூல்
  •  துணை நூல்கள்
  •  ஆய்வேடுகள் அல்லது நூலாக்கம் செய்யப்பட்ட ஆய்வேடுகள்.
  •  அகராதிகள்.
  •  ஆய்விற்கு ஏற்ற தகவல் தருபவை   

  •        1. ஆய்வியல் நெறிமுறைகள் குறித்த நூல்கள்

 ஒரு ஆய்வினை நிகழ்த்த விரும்பும் ஒருவர் முதலில் படிக்க வேண்டியவை   ஆய்வு செய்வதற்கான நெறிமுறைகள் தொடர்பான நூல்களைத்தான். தமிழில் ஆய்வியல நெறிமுறைகள் குறித்த ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. ஒரு பத்திரிகையைப் போலவோ,ஒரு இலக்கிய நூலை வாசிப்பது போலவோ,கடிதம் படிப்பது போலவோ இவற்றை வாசிக்கக் கூடாது. விதிமுறைகளை நெறிமுறைகளோடு கூறுகின்ற இந்நூல்களை இலக்கண நூல்களைப் படிப்பது போலப் படிக்கவேண்டும். இலக்கண விதிகளை நாம் உதாரணங்களில் பொருத்திப் பார்த்து தெரிந்து கொள்வோம். அதைப் போல விதிகள் கூறுகின்ற உதாரணங்களை உன்னிப்பாக ஆழ்ந்து கவனித்துப் படிக்கவெண்டும். மேற்கோள் எடுக்கும் முறை, அடிக்குறிப்புகளைப் பயன்படுத்தும் முறை, ஆய்வுப் பொருள் தேர்வு குறித்த தகவல்கள், ஆய்வு நடை, ஆய்வு தலைப்பு அமையவேண்டிய முறை,இயல்பிரிப்பு உத்திகள், அக கட்டமைப்பு, புறகட்டமைப்பு,ஆய்வு அறம் போன்ற செய்திகள இந்நூல்களில் இடம் பெற்றிருக்கும். ஆய்வினைத் தொடங்குவதற்கு முன் ஆய்விற்குரிய விதிமுறைகளை ஒருவர்  கண்டிப்பாக படிக்க வேண்டும்.
  • 2.மூலநூல் 

 

மேற்குறிப்பிடப்பட்டுள்ள நூல்களில் மூலநூல்தான்  மிகமிக இன்றியமையாதது.அதைத்தான் ஆய்விற்கு உட்படுத்தப்போகிறோம் என்பதால்,ஆய்வுத் தலைப்பைத் தேர்ந்தெடுத்த பின் எழுதுவதற்கு முன்  மூல நூலை குறைந்தது மூன்று முறையாவது படிக்க வேண்டும்.
முதல் முறை படிப்பதென்பது பொதுவாகப் படிப்பது. நூலில் கூறப்பட்டுள்ள கருத்தைத் தெரிந்து கொள்வதற்காகப் படிப்பதாகும். 
இரண்டாம் முறை படிப்பதென்பது ஆய்வுத் தலைப்பை கருத்தில் கொண்டு, தரவுகளைக் கண்டுபிடிப்பதற்காகப் படிப்பதாகும்.கையில்  பென்சிலுடன் தான் படிக்கத்தொடங்க வேண்டும். தரவுகள் ஆய்வுத் தலைப்பை ஒட்டி தென்படும்போது அதைக் குறித்துக் கொள்ளவேண்டும். சொந்தநூலாக இருந்தால் நல்லது. இல்லையெனில் தனித்தனித் தாளில் தரவுகளைப் பக்க எண் அல்லது பாடல் எண், என்ன பொருள் என்பதைக் குறித்துக் கொள்ள வேண்டும்.உதாரணமாக தொடரியல் தொடர்பான தலைப்பாக இருப்பின் தரவுகள் உருபன், ஒலியன்,தொடரமைப்பு, பொருளமைதி என்ற வகையில் இருக்கலாம். இவற்றை முறையாகக் குறித்துக் கொள்ளவேண்டும்.
மூன்றாம் முறை படிக்கும்போது முன்பெடுத்த குறிப்புகளினடிப்படையில்,  கவனத்திலிருந்து எதுவும் தப்பிவிடாதபடி, மீண்டும் ஒரு முறை முழுமையாகப் படித்துப்பார்த்து, மேற்கோள் அட்டைகளில் எழுதி முறையாக தரவுகளைத் திரட்ட வேண்டும்.

  • 3.துணை நூல்கள்  


இவ்வாறு மூலநூலில் தரவுகளைத் திரட்டிய பின்னர்,இரண்டாம் நிலைத்தரவுகளுக்காக மூலநூலில் சேகரித்த தரவுகளுக்கேற்ப, துணைநூல்களைத் தேடிப்படிக்கவேண்டும். உதாரணமாக,
தலைப்பு பெண்ணியம் சார்ந்ததெனின் பெண்ணியம் தொடர்பான கோட்பாடு,அதன் வளர்ச்சிநிலை,வகைகள்,அதைப் பற்றிய புரிதலைப் பெற உதவும் நூல்கள் இவற்றோடு பெண்பிறப்பு-                             வளர்ப்பு,பெண்கல்வி,பெண்உரிமை,திருமணம்,வரதட்சணை,குடும்பம்,சாதிச்சிக்கல்,பெண் தொடர்பான சமூக சிக்கல்களை வெளிப்படுத்தும் நூல்களையும்தேடிப்படிக்கவேண்டும். பலஅறிஞர்களின் கருத்துகளையும்,தற்போதைய சூழலையும் அறிய வேண்டும். துணை நூல்களைத் தேடிப் படிக்கும் போதே மூல தரவுகளுக்கு ஏற்றதாகவோ, மாற்றாகவோ கிடைக்கும் செய்திகளை மேற்கோள் அட்டையில் பதிவு செய்து கொண்டே வரவேண்டும்.

  •   4.ஆய்வேடுகள்  


       பிறகு ஆய்வாளரின் ஆய்வுத் தொடர்பாக வெளிவந்துள்ள ஆய்வேடுகளையோ, நூலாக்கம் செய்யப்பட்ட ஆய்வேடுகளையோ தேடிப் படிக்க வேண்டும். ஆய்வாளரின் ஆய்வுத் தலைப்பில் ஆய்வேடுகள்இல்லாமலிருந்தால், வேறு தலைப்பில் வெளிவந்துள்ள ஆய்வேடுகளையும் படித்துப் பார்ப்பது நலம். அப்பொழுதுதான் ஆய்வு எழுதும் முறை பற்றிநன்கறிய முடியம்.உதாரணமாக சிலப்பதிகாரத்தில் ஆய்வு மேற்கொள்ளும் ஒருவர், காப்பியம் தொடர்பாக வெளிவந்துள்ள ஆய்வுகளைத்தான் படிக்க வேண்டுமென்பதில்லை.சங்க இலக்கிய ஆய்வுகளையோ, தற்கால இலக்கிய ஆய்வகளையோ கூட படிக்கலாம். ஒரு ஆய்வுப் பொருளில் ஆய்வு எவ்வாறு நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதை அறிவதற்கு இது உதவும்.சேகரிக்கும் தரவுகளைக் கொண்டு உட்தலைப்புகள் எவ்வாறு இடப்பட்டுள்ளன, ஆய்வு நடை எவ்வாறு அமைந்துள்ளது, ஒரு செய்தியைத் தொடங்கி அதை எவ்வாறு முடிப்பது என்பன போன்ற பல அரிய செய்திகளை இதனால் அறிந்து கொள்ள முடியும்.

         ஆய்வேடுகளைப் படிப்பதென்பதே ஒரு பயிற்சிக்காகத்தான் என்பதால் பிற தலைப்புகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வேடுகளை ஆய்வாளர் ஒருமுறையாவது படிப்பது நல்லது.

  • 5.அகராதிகள்  


ஆய்வு என்று தொடங்கும் பொழுதே அங்கே ஐயம் என்பதும் தோன்றத் தொடங்கிவிட வேண்டும். காலத்திற்கேற்ப சொற்களில் பொருண்மை மாறிக் கொண்டே வருகிறது. ஒரு காலத்தில் நாற்றம் எனப்பட்டது மணம் என்ற பொருளில் வழங்கப்பட்டு, பூவினில் நாற்றம் நீ என்று கடவுளை நாற்றமுடையவன் என வழங்கும்  முறை இருந்தது.ஆனால் இன்று? அது போல் சான்றோர் மெய்ம்மறை என்று போர்க்களத்தில் வீரத்துடன் போரிட்ட ஒரு மன்னனை ஒரு  புலவர் பாடியுள்ளார். பதிற்றுப்பத்து காலத்தி்ல் சான்றோர் என்றால்  வீரர்கள் எனப்பொருள். தனக்காகப் போரிடும் வீரர்களை எதிரிகள் தாக்க வரும்பொழுது, தன் வீரர்களுக்கு  முன்பாக  நின்று அவர்களுக்குத் தானே கவசமாகி அம்மன்னன் தன் உயிரையும்  பொருட்படுத்தாது போரிட்டு அவர்களைக் காப்பான் என்னும் பொருளில்தான் சான்றோர் மெய்ம்மறை என்ற தொடர் கையாளப்பட்டுள்ளது. ஆனால் தற்காலத்தில் சான்றோர் என்னும் சொல் வீரர்களைக் குறிப்பதில்லை.கற்றவர்களையே குறிக்கிறது.        சங்ககாலத்தில் நகர் என்னும் சொல் அரண்மனையையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தற்கால இலக்கியத்தில் புதிய புதிய சொற்கள் பெருகி வருகின்றன. சிறாரியம்,பெண்ணியம்,தலித்தியம்,அரவாணியம்,புலம் பெயர்ந்தோர், விளிம்பு நிலை மனிதர்,கதைசொல்லி போன்றவை சில. இவற்றிற்கான சரியான பொருளை அறிந்தபின்னர் தான் ஆய்வினை நாட வேண்டும்.இல்லையெனில் படித்தவன் பாட்டைக் கெடுத்தான் என்பதுபோல் ஆய்வாளன் ஆய்வைக் கெடுத்தான் என்ற புதுமொழி உருவாகிவிடும்.


  • 6.ஆய்விற்கு ஏற்ற தகவல் தருபவை 


 ஆய்வின் தலைப்பிற்கும் கருதுகோளுக்கும் ஏற்ப இவை மாறுபடும். ஆய்வாளரின் நுண்ணறிவைப் பொறுத்தும்,கடின உழைப்பைப் பொறுத்தும் இவை அமையும்.  ஆங்கில நூல்கள், கல்வெட்டுகள்,நாளிதழ்கள், இதழ்கள், இணையம், ஆவணங்கள், தகவலாளர்கள் முதலானவை இப்பிரிவிற்குள் அடங்கும்.

எனவே, ஒரு பொருள் குறித்து ஆய்வு மேற்கொள்ள விரும்பும் ஆய்வாளர் ஆய்வு தொடங்கிய நாளிலிருந்தே இடைவிடாது தேவையான நூல்களைப் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.நூலறிவே ஆகுமாம் நூலாம்பல் என்பது ஆய்விற்கும் பொருந்தும். இவ்வாறு தொடர்ச்சியாகப் படிப்பதன் மூலம், ஆய்வாளரின் பேச்சு மொழியிலும் முன்னேற்றம் நிகழ்ந்துவிடும். . ஆய்வைத் தொடங்கி பல நூற்களைப் படித்தபின் அவர் பேசும் பேச்சுமொழிக்கும், முன்பு அவர் பேசிய பேச்சுமொழிக்கும் இடையிலான மாற்றத்தை ஆய்வாளர் உணர முயும். உறுதியாக தெளிவாக தன் ஆய்வுப்பொருள் குறித்த சொற்களைக் கையாளத் தொடங்கியிருப்பார். இவ்வாறு தான் மேற்கொள்ள உள்ள ஆய்வுத் தொடர்பானத் தகவல்களை ஒருவர் பேசத் தொடங்கி,  ஒரு தெளிவிற்கு வந்த நிலையில்தான்  எழுதுவதற்குத் தகுதி பெற்றவராகிறார்.ஆய்வுப் பொருள் குறித்து கற்றும்,நெறியாளரிடம் எடுத்துரைத்தும் எழுதுவதற்குரிய தகுதியைப் பெற்ற பின்னர்தான் எழுதத்தொடங்க வேண்டும்.

இ.எழுதும் மொழி



          எழுதுவது என்ன? எதற்காக? யார் படிப்பதற்காக? என்ற மூன்று கேள்விகளுக்கான பதில்களை ஆய்வாளர் சிந்தித்த பிறகே அதற்கேற்ப எழுத வேண்டும். உதாரணமாக கதை எழுதுவது, கடிதம் எழுதுவது,பத்திரிகைகளுக்கு எழுதுவது என்று எடுத்துக்கொண்டால் அவற்றிற்கேற்ப வடிவம், நடை, பயன்படுத்தும் சொற்கள் போன்றவை மாறுபடும். ஆய்விற்காக எழுதும் பொழுது  அதற்குரிய விதிமுறைகள் அனைத்தும் அறிந்து எழுத வேண்டும்.. வாக்கியப்பிழை, கருத்துப் பிழை, எழுத்துப் பிழை, ஒருமை - பன்மை மயக்கம், குழப்ப நடை,வெற்றுச் சொற்கள்  உள்ளிட்ட பிழைகளின்றி இலக்கிய இலக்கண விதிகளுக்குட்பட்டு எழுத வேண்டும்.

          பிழையற எழுதுவதே எழுத்து எனப்படும்.ஆய்வு எழுதுவது என்பது விளையாட்டு  அல்ல. தேர்வு நோக்கில் மட்டுமே எழுதிப் பழகியவர்கள் எழுத்துப்பிழை,கருத்துப்பிழை,இலக்கணப்பிழை, ஒருமை-பன்மை மயக்கம் போன்றவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் எழுதியிருப்பார்கள். கூடுதலாக மதிப்பெண் பெற வேண்டும் என்கிற நோக்கம் மட்டுமே இருக்கும். ஒற்றுப் பிழைகளைப் பற்றிப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், பொருள் மயக்கம் பற்றி அக்கறையின்றி எழுதியிருப்பார்கள். ஆனால்,ஆய்வில் இவையெல்லாம் அறவே தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும். ஆய்வாளராக ஆவதற்கு அடிப்படைத் தகுதிகள் சில உண்டு. அவற்றை அறிந்து  அவற்றை நீக்க பயிற்சி பெற வேண்டும். அவை,

1.எழுத்துப்பிழை அறவே வரக் கூடாது 

ஒரு மொழியின் இயல்பான முறைக்கு மாறாக எழுதும்பொழுது ஏற்படும் பிழைகளை பிழை என்கிறோம். எழுத்துப்பிழை,சந்திப்பிழை,மரபுப் பிழை,
( ழ,ல,ள,ர,ற,ன,ண போன்றவை மாறினால் பொருள் மாறுபடும் என்கிற அறிவு தேவை.(உம்.கலி-துன்பம்,களி- உணவு,கழி-நீக்கு,கோல், இலை-தாவர இலை,இளை-மெலிதல்,இழை-நூல் இழை)

2.ஒற்றுப்பிழை அறவே வரக் கூடாது.

(ஒற்று வந்தால் என்ன பொருள்,வராவிட்டால் என்ன பொருள் என்பதில் தெளிவு தேவை.(கடை பிடி-பின்பற்று, கடைப்பிடி- கடையைப்பிடி,தமிழ்ப்பள்ளி-தமிழைக் கற்பிக்கும் பள்ளி, தமிழ் பள்ளி-தமிழ் என்பவர் நடத்தும் பள்ளி)சொல்லப்படும் பொருளில் மாற்றங்கள் ஏற்படாமலிருக்க ஒற்று மிகுதல்,ஒற்று மிகாதல் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. தமிழில் உள்ள தரமான நூல்களைப் படித்தல்,அடிக்கடி எதையாவது எழுதிப் பார்த்தல்,எழுதியதில் பிழைகள் உள்ளனவா என படித்துப் பார்த்தல் ஆகிய முறைகளைப் பின் பற்றினால் எழுதும்போது பிழைகள் ஏற்படாது.

  3.வாக்கியப்பிழை   அறவே வரக் கூடாது.


திணை-பால்-எண்-இடம்,  ஒருமை-பன்மை மயக்கம் போன்றவற்றில் பிழைகள் ஏற்படாமல் வாக்கியங்களை அமைக்க வேண்டும்.கருத்துப்பிழை வரவே கூடாது.என்னசொல்லப்போகிறோம் என்பதில் தெளிவில்லையெனில் கருத்துப்பிழை ஏற்படும்.அப்படியுமிருக்கலாம்,இப்படியுமிருக்கலாம் என்பது போன்ற குழப்ப நடைஆய்வேட்டில் இடம்பெறக்கூடாது.


திணை-பால்-எண்-இடம்: 


பெயர்ச்சொற்கள் எந்தவிதமான திணை-பால்-எண்-இடம் முதலியவற்றைக் கொண்டு வருகின்றனவோ, அவற்றிற்கு ஏற்றவாறே வினைச்சொற்களும் திணை-பால்-எண்- இடம் ஆகியவற்றைக் கொண்டு முடிய வேண்டும். இல்லையெனில் தொடர் பிழையானதாகவே அமையும்.


ஒருமை-பன்மை மயக்கம் :


 ஒரு தொடர் ஒருமையில் ஆரம்பிக்கப்பட்டால், ஒருமையில்தான் முடிக்கப்படவேண்டும். அது போல ஒரு தொடர் பன்மையில் ஆரம்பிக்கப்பட்டால்,  பன்மையில்தான் முடிக்கப்படவேண்டும்.

கணினி தொழில்நுட்ப வளர்ச்சியின்(எழுவாய்-ஒருமை) காரணமாகப் பெண்கள், வீட்டில் இருந்தவாறே வருவாய் ஈட்ட இயலும் என்னும் நிலை உருவாகியுள்ளது.(ஒருமை) -சரி. ஒருமையில் ஆரம்பித்து ஒருமையில் இத்தொடர் முடிவு பெற்றுள்ளது

அமெரிக்கா,இரஷ்யா முதலான நாடுகள்,(எழுவாய்-பன்மை) விண்ணியல் துறையில் பெருமளவில் கவனம் செலுத்தி வருகின்றன.(பன்மை)-சரி. பன்மையில் ஆரம்பித்து பன்மையில் இத்தொடர் முடிவு பெற்றுள்ளது.

மகளிர் இதழ்கள்,(எழுவாய்-பன்மை)பெண்கள் கல்வி கற்று இதழியல் துறையில் தங்கள் பங்களிப்பைச் செய்ததன் விளைவாக,  வளர்ச்சி பெற்றது.(ஒருமை) -தவறு பன்மையில் ஆரம்பித்து ஒருமையில் இத்தொடர் முடிவு பெற்றுள்ளது.

தினபூமி இதழ்,(எழுவாய்-ஒருமை)வணிக நுட்பங்களையும் பணம் ஈட்டும் வழிமுறைகளையும் அக்கறையுடன் எடுத்துக் கூறுகின்றன.-தவறு  ஒருமையில் ஆரம்பித்து பன்மையில் இத்தொடர் முடிவு பெற்றுள்ளது.

4.நிறுத்தற்குறிகளை இடுவதில் குழப்பம் கூடாது

(,)காற்புள்ளி(comma)

 சொற்களைத் தனித்தனியாகப் பிரித்துக் கூறும் பொழுது மற்றும் தொடர்கள் இணைக்கப்படும் போதும், இக்குறியினை இட வேண்டும்.மேலும், எனவே,எனினும்,ஆகையால்,ஆகவே,என்றாலும்,அதனால்,இதனால்,
இருப்பினும்,ஆகையினால்,போன்றவற்றிற்குப் பின்னர் காற்புள்ளி இடவேண்டும்.மேற்கோள் குறிக்கு முன்னரும், விளிச்சொற்களுக்குப் பின்னரும் இக்குறிஇடுதல் வேண்டும்.பொருளில் குழப்பம் ஏற்படாமலிருக்க, உரிய இடங்களில் இக்குறியை இட வேண்டியது இன்றியமையாததாகும்.

;அரைப்புள்ளி,(semicolan)  


ஒரு தொடரில் சிறு வாக்கியங்கள் ஒவ்வொன்றும், முழுமையானக் கருத்தைத் தனித்தனியாகக் கொண்டிருந்தால் அவ்வாக்கியங்களுக்கிடையில் அரைப்புள்ளி இடவேண்டும். உம். அவர் பல்கலை வித்தகர்;கல்விக் களஞ்சியம்;குணக் குன்று.இதைப்போல் ஒன்றுக்கொன்று முரணான கருத்துகளைக் கொண்டு தனித் தனித் தொடர்கள் தொடர்ந்துவரின் அவற்றிற்கிடையிலும் இப்புள்ளியை இடவேண்டும். உம்.அவன் புரிந்து கொள்வான்; செய்யமாட்டான்.

(:) முக்காற்புள்ளி (colan) 


ஒரு தொடரில் கூறிய ஒரு செய்தியினை மேலும் விரிவாக கூறும் போது முக்காற்புள்ளி இடவேண்டும்.உம்., இராமன் பதாகையைப் பரதனிடம் கொடுத்தான். பதாகை: பதாகை என்பது காலில் அணியப்படும் தோலிலான செருப்பு ஆகும்.மேலும், ஒரு தொடரில் ஒரு கருத்தினை விளக்குவதற்காக மட்டுமின்றி,அதனை ஆதரிக்கும் விதமாக,வேறு ஒரு கருத்தினை கூறும்போதும், ஒரு கருத்து முடியுமிடத்தில் இப்புள்ளியை இடவேண்டும். மனிதர்கள் இரண்டுவகை. ஒருசாரார் நல்லவர் : மறுசாரார் வல்லவர்.

(.)முற்றுப்புள்ளி(full stop) 

 

ஒரு தொடர் முடியும் பொழுது, செல்ல வந்த கருத்து முடிந்து விட்டது என்பதை தெரிவிக்கும் விதமாக முற்றுப்புள்ளி இடவேண்டும்.சொற்களைச் சுருக்கி எழுதும் போது, சுருக்கம் என்பதைப் படிப்பவர் அறியம் வண்ணம் சுருக்கிய சொல் ஒவ்வொன்றிற்கும்   பின்னர் முற்றுப் புள்ளி இடவேண்டும். இறுதி சுருக்க எழுத்திற்குப் பின்னர் சுருக்கம் முடிந்து விட்டது என்பதைக் குறிக்க காற்புள்ளி இடவேண்டும்.உம்., திரு.வி.க., மு.வ., கி.வா.ஜ., கி.மு.,

(!)உணர்ச்சிக்குறி,(exclamatory mark) 


வாழ்த்து, வரவேற்பு, மகிழ்ச்சி, இழப்பு முதலான உணர்ச்சிகளை வெளிப்படுத்துமிடங்களில் இக்குறி பயன்படுத்தப் படவேண்டும்.
 ஆஹா! எத்தனைப் பெரியவர் அவர்!     என்னே! உலக இயல்பு!
ஆய்வாளர் ஆய்வு நடையில் உணர்ச்சி நடையைப் பயன்படுத்தக்கூடாது. எனினும், மேற்கோள்களில் இவை இருப்பின் அப்படியே எடுத்தாள வேண்டும்.

( ` )ஒற்றைமேற்கோள்(single quatation)  

 

ஆய்வுப் போக்கில் பழமொழிகளைக் கையாளும் பொழுதும்,மேற்கோளுக்குள்  மேற்கோள்கள் வரும் போதும், ஒற்றை மேற்கோள் பயன்படுத்தப்பட வேண்டும்.

(" ")இரட்டை மேற்காள்(double quatation)  


ஒரு நூலிலுள்ள செய்திகளை அப்படியே எடுத்து பயன்படுத்தும் பொழுது, இரட்டை மேற்கோளை இடவேண்டும். அது மற்றொருவருடைய கருத்து என்பதை அறிந்து கொள்ள இரட்டை மேற்கோள் உதவுகிறது.ஆய்வில் நிறைய பயன்படுத்தக்கூடிய ஒன்று இரட்டை மேற்கோள் ஆகும். இரட்டை மேற்கோளில் இரண்டு விதமான குறிகள் உள்ளன. ஒன்று தொடங்கும் குறி;மற்றொன்று முடிக்கும் குறி. இரண்டையும் ஏற்ற இடங்களில் முறையாகப் பயன்படுத்த வேண்டும்.

- -இணைப்புக்கோடு,(hypen)  


ஒரு வாக்கியத்தினை மற்றொரு வாக்கியத்தோடு இணைப்பதற்கு உதவுவது இணைப்புக் கோடு ஆகும்.

( )பிறைக்குறி,(round bracket) 


 ஒரு சொல்லினை தெளிவாக விளக்குவதற்கு அதன் அருகில் அடைப்புக்குறிக்குள் அதைப் பற்றி விளக்கும் வேறொரு விளக்கச்சொல்லை கொடுக்கிறோம். அப்போது இடப்படும் அடைப்புக்குறியே பிறைக்குறி ஆகும்

[ ]பகர அடைப்புக்குறி,(squre bracket)  


பிறைக்குறியினை ஒரு அடைப்புக்குறிக்குள்  இடும்போது பகர அடைப்புக்குறியை பயன்படுத்த வேண்டும்.

..........தொடர் விடுபாட்டுக்குறி,(dots mark)  


ஒரு செய்யுளிலோ, ஒரு மேற்கோள் வாக்கியத்திலோ, தேவையில்லாதவற்றை வி்ட்டுவிடும்போது, அதைக் குறிக்க தொடர் விடுபாட்டுக்குறியினை இடவேண்டும்.

_...._  இடைப்பிறவரல்குறி (dash)  


ஒவ்வொரு சொல்லும் ஒரு வகையில் இன்றிமையாதவை;  ஏதோ ஒரு கருத்தினை விளங்கிக் கொள்ள உதவுபவை என்ற நிலையில், அத்தொடர்பற்ற சொற்களை இணைப்பதற்கு இக்குறி இடப்பட வேண்டும். கல்லூரி-முதல்வர்கள்-மாநாடு

*நட்சத்திரக்குறி(star mark)  


ஒரு புதிய சொல் குறித்தோ,ஒரு புதிய நிகழ்வைக் குறிப்பிடும்  நிலையிலோ அந்த இடத்திலேயே அது பற்றிய விவரத்தைக் குறிப்பிடமுடியாத நிலையில், அதன் அருகில் ஒரு நட்சத்திரக்குறியை இட வேண்டும். பின்னர், அப்பக்கத்தின் இறுதியில் நட்சத்திரக்குறியை இட்டு அதற்கான விளக்கத்தைத் தரவேண்டும்.அடிக்குறிப்பினைக் காட்டும் குறி என்றும் இதனைக் கூறலாம்.ஒரு ஆய்வினை மேற்கொள்ள விரும்பும் ஆய்வாளர், நிறுத்தற் குறிகள் இடுவதில் தெளிவுடன் இருக்க வேண்டும்.

மேற்கூறிய பயிற்சிகளைப் பெறவதற்கு ஆய்வாளர் ஏதாவது ஒரு ஆய்வுப் பொருளில் சிறு சிறு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.  சில கருத்தரங்குகளில் கட்டுரை எழுதி,  பங்கு பெறலாம்;தமிழ் இலக்கிய இதழ்களுக்கு கட்டுரைகளை எழுதி அனுப்பலாம். ஏதாவது ஒரு சிறு ஆய்வுப் பொருள் குறித்து கற்றும்,எடுத்துரைத்தும், எழுதியும்  பயிற்சி பெற்ற பின்னரே  பட்டத்திற்குரிய ஆய்வினைத் தொடங்க வேண்டும்.

தொடரும்.......