நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Wednesday 29 May 2013

ஆய்வு அனுபவங்கள் - 5

ஆய்வு செய்வது எப்படி?

 

தொடர்ச்சி...

5.நான்கு உத்திகள்


மேற்கோளை ஆய்வில் கையாளும் முறையில் நான்கு உத்திகள் உள்ளன.

1. அடிக்குறிப்பு முறை


தரவுகளை மேற்கோள்களாகப்  பயன்படுத்திய நிலையில்  மேற்கோள் குறி முடியுமிடத்தில் சற்று மேல் நிலையில் எண்களிடவேண்டும். இந்த எண்கள் மேற்கோள் எண்கள் எனப்படும். 1,2,3, .. என்ற எண்களிட்ட பின் அப்பக்கத்திலேய கீழப்பகுதியில் ஒரு கோட்டை இட்டு அதற்கு கீழ் எண்களுக்குரிய ஆசிரியர்,நூல்,பக்கம் போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும்.

இம்முறையில்  ஆய்வாளர் ஒவ்வொரு முறையம் ஆய்வைத் திருத்தம் செய்ய திரும்ப திரும்ப வரைவினை எழுதும்போது பக்கங்கள் மாற்றமடையும் .இரண்டாம் வரைவில் சில மேற்கோள்கள் இடையில் சேர்க்கப்படலாம்.சில நீக்கப்படலாம் . புதிய கருத்துகள் சேர்க்கப்படலாம். இது போன்ற மாற்றங்களின் போது, பக்கங்கள் மாற்றமடையும். எண்களும் மாற்றமடையும்.  மேற்கோள் எண்ணுக்கேற்ப அடிக்குறிப்புகளை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டி வரலாம்.  

2.சான்றென் விளக்கம்


இம்முறையிலும் தரவுகளை மேற்கோள்களாகப்  பயன்படுத்திய நிலையில்  மேற்கோள் குறி முடியுமிடத்தில் சற்று மேல்நிலையில் எண்களிடப்படவேண்டும். இந்த எண்கள் மேற்கோள் எண்கள் எனப்படும். 1,2,3, .. என்ற எண்களிட்ட பின், இயலின் முடிவில் தனிப் பக்கத்தில் சான்றென் விளக்கம் என்ற பகுதியை உருவாக்கி மேற்கோள் எண்களுக்கேற்ப,எண்களுக்குரிய ஆசிரியர்,நூல்,பக்கம் போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும்.

3. மேற்கோள் எண் இல்லா முறை


இது மேற்கோள்களின் குறி முடியுமிடத்திலேயே  அடைப்புக் குறிக்குள் ஆசிரியர் பெயர்,ஆண்டு,பக்க எண் முதலானவற்றைக் குறிப்பிடும் முறையாகும். 

 பண்டிதமணி  அவர்கள், இம்மூன்று பொருட்களையும் வரிசைப்படுத்தும் பொழுது தேன்-பால்-கரும்பு என்ற வரிசையில் அமைத்துள்ளார்.தேன் புழுக்களின் எச்சில் மயமாகவும், பால் ஊனுடம்பின் சாரமாகவும் உள்ளவை….கரும்பங்கட்டி எச்சில், ஊன் கலப்பு முதலிய குற்றம் இலாதாய், உடலுக்கு நலம் பயப்பதாகும். இம்முறையில் ஆண்டவன் அன்பரை ஆட்கொள்ளுங்கால், தேனைப்போல, வயப்படுத்தும் பாலைப் போலப், பின் பயன் விளைவித்து இனிமை தரும் கரும்பங்கட்டியைப் போலத் தூய இன்பம் அளித்துக் காப்பான்” (கதிரேசஞ்செட்டியார்.மு,1985.285-286)

 ஒரே ஆசிரியரின் இரு நூல்கள் கையாளப்படும் நிலையில் பதிப்பு ஆண்டும் பதிப்பித்த மாதமும் கண்டிப்பாக  மாறுபடும். எனவே குழப்பம் ஏற்படாது.  இம்முறையில் மேற்கோள்கள் இடையில் நீக்கப்பட்டாலும்,சேர்க்கப்பட்டாலும்,புதிய கருத்துக்களை சேர்த்தாலும்  பக்கங்களோ எணகளோ மாற்றப்படவேண்டியதில்லை.

மேலும், ஆய்வினைப் படிப்பவர்கள் அந்த மேற்கோளின் அருகிலேயே அது குறித்த விவரங்கள் இருப்பதால் பக்கங்களைத் தேடி விவரங்களை அறிய வேண்டியதில்லை. இதழ்களிலிருந்து எடுக்கப்படும் தரவுகளுக்கு,  “திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவு பூமிக்குள் ஊடுருவி நிலத்தையும்,நிலத்தடி நீரையும் பாழாக்கிவிட்டது. இனி புல்,பூண்டு முளைக்க முடியாத அளவு காற்றிலும் விசம் பரவியுள்ளது. இதனால் 9000 ஏக்கர் விவசாய நிலம்,185 ஊர் குடிநீர்,3500 கிணறுகள்,பாழ்பட்டு 600000 கால்நடைகள் இறந்து,600போ் மரணமடைந்துள்ளனர்.மண்ணும்,நீரும் மாசாகிவிட்டதால் பாம்புகள்.மண் புழுக்கள் உள்ளிட்ட உயிரினங்கள் காணாமல் போய்விட்டன.”(புதியதலைமுறை,மார்ச் 2013,ப.24)
என்றும் நாட்டுப்புற ஆய்வாயின் ( தங்கவேலு,ம.,2012,செப்20) என்றும் தகவல்கள் தரலாம்.

தொகுப்பு நூல்களிலிருந்து எடுக்கப்படும் மேற்கோள்கள் இவ்வாறு தரப்படவேண்டும். உதாரணமாக இம்மேற்கோளைக் குறிப்பிடலாம். மகாராசன் என்பவர் ஒருநூலில் தொகுத்தளித்த பல கட்டுரைகளிலிருந்து, மு.இராமசாமி என்பவரின் கட்டுரையிலிருந்து கீழ்வரும் மேற்கோள்எடுக்கப்பட்டது.

 “அர்த்தநாரீஸ்வரர் ஆணுக்கு பெண்ணை ஒளிக்க முடியாமல் அம்பலப்பட்டு நிற்கும் அரவாணித் தன்மையின் பருண்மையான மறு உள்ளீடுதான் என்று இத்தோற்றத்தை மு.இராமசாமி குறிப்பிடுகிறார்.(மகாராசன்(தொ.ஆ.,).2007.17)


        மேற்கோள் எண்கள் இடத் தேவையில்லாத இம்முறையில் எத்தனை முறை வரைவுகள் எழுதினாலும்,மேற்கோள் எண்கள் தொடர்பான சிக்கல்கள் இல்லை. திரும்ப திரும்ப எழுத நேரும் பொழுது மேற்கோள்கள் மாற்றப்படவேண்டிவரின் இம்முறை ஆய்வை எளிதாக்கும். ஆய்வு நிறைவடையும் நிலையில் கூட புதிய தரவுகள் கிடைப்பின் அவற்றையும் சிக்கலின்றி மேற்கோளாகச் சேர்த்துக் கொள்ளலாம். இத்தரவுகளுக்கான நூல் விவரங்களைத்  துணைநூற்பட்டியலில் கண்டு கொள்ளலாம்.

ஒரு பட்டத்திற்காக மேற்கொள்ளப்படும்  ஆய்வு என்பது, பக்க வரையறைகளை உடையது. சில பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட ஆய்விற்குரிய ஆய்வேடுகள் 250 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடிக்குறிப்பு மற்றும் சான்றென் விளக்கப்பகுதிகள் இடம் பெறும் ஆய்வுகளில் அவற்றிற்காக குறைந்தது பத்து பக்கங்களாவது  ஒதுக்க வேண்டி உள்ளது. இம்முறையில் அது தவிர்க்கப்படுகிறது.


4. நுட்ப முறை 


இம்முறை நுட்பமாகக் கையாளப்படும் முறையாகும். மேற்கோள் எண்  இடப்படுவதில்தான் நுட்பம் உள்ளது. இது   புதிய முறையாகும். ஆய்வு நிறைவடைந்த நிலையில்தான் எடுக்கப்பட்ட மேற்கோள்களுக்கு எண்களிடப்பட வேண்டும்.கையாளப்பட்ட தரவுகளுக்குரிய நூல்களை அகரவரிசைப்படுத்தி  துணைநூற்பட்டியலைத் தயாரித்துக்கொள்ளவேண்டும். இதில் முதல் நூலிலிருந்து ஆய்வு முழுவதும் கிட்டத்தட்ட பத்து மேற்கோள் கையாளப்பட்டிக்குமாயின் அத்தனை மேற்கோள்களுக்கும் எண் 1 என்ற எண்தான் கொடுக்கப்படவேண்டும். ஒரே இயலில் நான்கு முறை பயன்படுத்தியிருப்பின் அத்தனை மேற்கோள்களுக்கும் 1 என்கிற மேற்கோள் எண்தான் இடம் பெற வேண்டும்.

உதாரணமாக அகிலன் அவர்களின் நூலிலிருந்து இயல் ஒன்றில் மூன்று மேற்கோள்களும் ,இயல் இரண்டில் இரண்டு மேற்கோளும், மூன்றாம் இயலில் ஒரு மேற்கோளும்  எடுக்கப்பட்டிருந்தால் அத்தனை மேற்கோள்களுக்கும் மேற்கோள் எண் 1 தான். மேற்கோள் எண்கள் கொடுக்கப்படும் இடத்திற்கருகிலேயே பக்க எண்கள் இடம்பெறவேண்டும். உதாரணத்திற்கு
மாணிக்கவாசகரின் பாடல்களிலிருந்து ஒரு ஆய்வாளர்  மூன்று மேற்கோளை எடுத்துப் பயன்படுத்தியுள்ளார். துணைநற்பட்டியலில் திருவாசகம் 8ம் இடத்தில் உள்ளது என வைத்துக் கொள்வோம்.

“உருத்தெரியாக் காலத்தே உள்புகந்தென் மாமன்னிக்
கருத்திருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட”8(ப.141)

“ஈண்டிய மாயா இருள்கெட எப்பொருளும் விளங்க” 8 (ப.156)

“பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்”8(.106)

இம்முறையில்  தரவுகளைப்பயன்படுத்திய நூல்களின் பட்டியலைத்தான் தரமுடியும் .எத்தனை நூல்கள் துணைநூற்பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்பதைக்கொண்டு ஆய்வாளரின் ஆய்விற்கான உழைப்பை வெளிப்படுத்தக்கூடியது இம்முறை. துணைநூற்பட்டியலை வளமாகக் காட்ட வேண்டும் என்பதற்காக மேற்கோள்கள் எடுக்கப்படாத நூல்களை இம்முறையில் சேர்க்க இயலாது.

மேற்கோள்குறி


 மேற்கோள் குறிகளைக் ஆய்வில் கையாளும் பொழுது கவனிக்கப் படவேண்டியவை.முதலில் மூல நூலிலிருந்து எடுக்கபட்ட தரவினை எவ்வித மாற்றமின்றி அப்படியே கையாள்வது.  ஒற்றை மேற்கோள், இரட்டை மேறகோள் என இருவகைகள் உள்ளன. அனைவருக்கும் தெரிந்த பொதுச் செய்திகளான பழமொழி உள்ளிட்ட தகவல்களைக் குறிப்பிடுமிடத்தும், தரவுகளைச் சுருக்கித் தரும் நிலையிலும்,மேற்கோளுக்குள் மேற்கோள்கள் இருப்பின் அதற்கும் ஒற்றை மேற்கோள் இடப்படவேண்டும்.


மூலநூல்கள் மற்றம் துணை நூல் தரவுகளை அப்படியே கையாளும் பொழுதும், சேகரித்த நாட்டுப்புறப்பாட்டு முதலானவற்றிற்கும் இரட்டை மேற்கோள் இடப்படவேண்டும். மேற்கோள் குறி என்பதே அதை மேற்கோள் எனத் தனித்துக் காட்டுவதற்காகத்தான்.   தட்டச்சிடும்பொழுது தடித்த எழுத்துகளில் அதை மட்டும் காட்டத் தேவையில்லை.


தொடரும்...







No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?