நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Wednesday 29 May 2013

ஆய்வு அனுபவங்கள் -3


  ஆய்வு செய்வது எப்படி?

தொடர்ச்சி.....

3.இயல் பிரிப்பு


           ஆய்விற்குரியத்  தலைப்பைத் தேர்நதெடுத்த பின்னர், இயல்களைத் தலைப்பிற்கு பொருத்தமான வகையில். முதலில் பொது நிலையில் நின்று மேலோட்டமாகப் பிரிக்க வேண்டும். பொதுநிலையில் நின்று பிரிப்பது என்பது தரவுகளைத் திரட்டுவதற்குமுன் மேற்கொள்ள வேண்டிய ஒன்றாகும். பிரித்த இயல்களுக்கேற்ப தரவுகளைத் திரட்டுவதா, தரவுகளுக்கேற்க இயல்களைப் பிரிப்பதா என்கிற யைம் ஏற்படும் கோழியிலிருந்து முட்டையா?முட்டையிலிருந்து கோழியா? என்கிற குழப்பம இங்கு தேவையில்லை.தரவுகளுக்கேற்ற வகையில்தான் இயல்களைப் பிரிக்க வேண்டும்.  பொதுநிலையிலிருந்து மேலோட்டமாகப் பிரிப்பதென்பது சுரைக்குடுவையைக் கொண்டு நீச்சல் பழகுவது போன்றது. 

            பொது நிலையில் நின்று பிரிக்கப்படும் இயல்கள் தரவுகளை எப்படிச் சேகரிப்பது என்ன தரவுகளைச் சேகரிப்பது போன்ற முதல்நிலை தயக்கத்தை நீக்க உதவுகின்றன.இவை அனுமானங்களைக் கொண்டு பிரிக்கப்படுபவை. அவ்வளவே. ஆதாரங்களடிப்படையில் பிரிக்கப்படுபவை அல்ல. அனுமானத்தில் அடிப்படையில் பிரிக்கப்படும் இவ்வியல்கள் தரவுகளைத் தயக்கமின்றி தேட உதவுகின்றன. இதனடிப்படையில் திரட்டப்படும் தரவுகள் இயலுக்குத் தகுந்தாற்போல் மிகுதியாகக்கிடைக்கலாம்;சில குறைவாகக் கிடைக்கலாம்;சில இயலுக்கு எதிர்பார்த்ததைவிட மிகுதியாகக் கிடைக்கலாம்; சில கிடைக்காமலே போகலாம்;மாறாக, நினைத்துப் பார்த்திராத புதிய தரவுகள் மிகுதியாகக் கிடைக்கலாம்.

             தரவுகள் முழுவதும் சேகரிக்கப்பட்ட பின்னர் இத்தரவுகளின் அடிப்படையில்தான் இயல்கள் மீண்டும் ஒரு முறை பிரிக்கப் படவேண்டும்.பொதுநிலையில் பிரித்த சில இயல்கள் நீக்கப்பட்டு, புதிய இயல்கள் உருவாகலாம். எப்படியாயினும் ஆய்வு நோக்கம், தலைப்பு,கருதுகோள் இவற்றினின்றும் மாறாத வகையில் இயல்கள் பிரிக்கப்படவேண்டும். பொது நிலையில் பிரித்த இயல்களையே பற்றிக்கொண்டு எழுதத்தொடங்குவதென்பது இயல்களுக்கேற்ற தரவுகள் கிடைக்காத நிலையில்,தேவையற்ற தரவுகளைக் கொண்டு நிரப்புவதற்கு வழி வகுத்துவிடும். ஆய்வு இரயில் தடம் புரண்டு இலக்கையே மறந்து விடும் நிலை ஏற்படும். எனவே, தரவுகளைக் கொண்டு இயல்களைப் பிரிப்பதே சிறப்பானது.

              ஆய்வு நோக்கம் இலக்கு எனில், ஆய்வுத் தலைப்பு தண்டவாளம், ,இயல்கள் இரயில் பொட்டிகள் ஆகும். இயல்கள் ஒன்றக்கொன்று பொருண்மையடிப்படையில் இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.தரவுகளை உயிருள்ள பயணிகளோடு ஒப்பிடலாம். சென்னை செல்லும் பயணி சென்னை செல்லும் இரயிலில் அமர்ந்தால்தான் இலக்கு நோக்கி பயணிக்க முடியும். அதுபோல,தரவுகளும் ஆய்வு நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் பொருத்தமுடையனவாக இருக்க வேண்டும். பொருத்தமில்லாத தரவுகள் தவறான இலக்கிற்கே சென்றடைய உதவும். ஆய்வாளரை குழப்பிவிடும்.

                பெண்ணியம் என்னும் கோட்பாட்டை ஒரு படைப்பாளரின் படைப்பில் பொருத்திப் பார்க்கும் வகையிலான ஆய்வு எனில்  பெண்ணியம் குறித்து முதலில் அறிந்திருக்கவேண்டும். பெண்ணியக் கோட்பாடு  தோன்றிய வரலாறு, உட்பிரிவுகள், பெண்ணியம் குறித்த மாற்றுப் பார்வைகள்,இந்திய சூழலில் அதன் விளைவுகள் முதலான அடிப்படைப் புரிதல்களைப் பெற்ற பின்னரே ஆய்வினைத் தொடங்கவேண்டும்.

           பெண் பிறப்பு முதல் இறப்பு வரையில் நடத்தப்படும் சூழல் குறித்த படைப்பாளரின் பார்வையைப் பெண்ணிய நோக்கில் அப்போதுதான் அணுகி ஆராய முடியும்.பெண்ணியம் குறித்த ஆய்வகளுக்குப் பெண்ணியக் கோட்பாடு பற்றிய அறிமுகத்தையும் அதன்  பல உட்பிரிவு  வகைகளில் எந்த வகையின் அடிப்படையில் படைப்பாளரின் படைப்புகள் ஆராயப்படுகின்றன என்ற தகவல்களையும்  உடையதாக  இயல் இருக்கவேண்டும். சில ஆய்வேடுகளில்  முன்னுரை,முடிவுரை நீங்கலாக இயல்கள் பிரிக்கப்படுகின்றன.இவ்வாறு பிரிப்பதில் முன்னுரையை முதல் இயலாகச் சேர்ப்பதா என்கிற ஐயம் எழுகிறது. எது முன்னுரை என்ற கேள்வியும் எழுகிறது.
                                                                          ஆய்வுநோக்கம்,ஆய்வுச்சிக்கல்,தலைப்பு,எல்லை,கருதுகோள்,ஆதாரங்கள்,
இயல்பிரிப்பு  முதலான செய்திகளைத் தாங்கியிருக்கும் பகுதி முன்னுரைப் பகுதியா? அல்லது பெண்ணியம் குறித்த ஆய்வுகளில் பெண்ணியக் கோட்பாட்டைக்கூறும்  பகுதி முதல் இயலா?  ஆய்வு நோக்கம் அதன் சிக்கல், அதன் எல்லை, கருதுகோள், தலைப்பிற்கான ஆதாரங்கள், இயல்பிரிப்பு போன்றவை தெரியாமல் ஒரு ஆய்வை படிப்பவர் அணுக முடியாது.  இது ஆய்வு குறி்த்த அறிமுகப் பகுதி.முன்னுரையில்லாமல் எவ்வாறு முடிவுரை பகுதி அமைக்க முடியும்? முன்னுரை,முடிவுரையை நீக்கிவிட்டு எப்படி ஆய்வை ஆய்வாகக் கொள்ளமுடியும்?எனவே தமிழ் ஆய்வுகளில் முன்னுரை முடிவரை நீங்கலாக என்ற சொற்கள் தேவையா என ஆராய்வது அவசியமாகிறது. முன்னுரை,முடிவுரை உட்பட்டு எனப் பிரிப்பது தான் பொருத்தமாக இருக்கும். இவ்வடிப்படையில் .இயல்கள் பொதுவாக ஐந்து  முதல் ஏழு வரை இருக்கலாம்.

உதாரணத்திற்கு, இயல்கள் பிரிக்கப்படும் போது,பெண்ணியத்திற்கு கீழ்க்கண்டவாறு  பிரிக்கலாம். பிரபஞ்சனின் பெண்ணியச் சிந்தனைகள் என்கிற தலைப்பிற்கு,பொது நிலையில் இயல்களை இவ்வாறு பிரிக்கலாம்.

முன்னுரை
பிறந்த வீட்டுச்சூழலில் பெண்கள்
புகுந்த வீட்டுச்சூழலில் பெண்கள்
தனித்து வாழும் பெண்கள்
சமூக சூழலில் பெண்கள்
அரசியல் சூழலில் பெண்கள்
முடிவுரை

முன்னுரை பகுதி ஆய்வு பற்றிய அறிமுகத்தை உடையதாக அமையவேண்டும்.

      பொதுநிலையில் நின்று பிற இயல்களைப் பிரித்த பின்னர்,ஒவ்வொரு இயலிற்குள்ளும் குறிப்பிடத்தக்க உள் சிக்கலை மையப்படுத்தும் வகையில் ஏராளமான தரவுகள் கிடைக்கலாம்.பிறந்த விட்டுச்சூழல் குறித்த இயலுக்கு பெண் பிறப்பு - வளர்ப்பு வேறுபாடு, கல்வி,முதிர்கன்னி,திருமணத்திற்குப் பின்னர் புகுந்த வீட்டில் அவளுடைய உரிமை,மணவாழ்வு முறிந்த நிலையில் புகுந்த வீட்டில் வாழ நேர்ந்தால் சந்திக்கும் சிக்கல்கள் போன்ற தரவுகள் தேடப்படவேண்டும்.

       ஒரு படைப்பாளரின் படைப்பில் பிறப்பு,வளர்ப்பு உள்ளிட்ட  சிக்கல்களுக்கானத் தரவுகள் ஏதுமின்றி பெண் கல்வி பெறும் சூழல் குறித்த பதிவுகள் மட்டும் மிகுதியாக் கிடைக்கும் சூழலில், குடும்ப சூழலில் பெண்கல்வி என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்து அதையே இயல் தலைப்பாகவும் அமைத்துக் கொள்ளலாம்.ஏராளமான தரவுகள் இருக்கும் பொழுதுதான்  ஆராய்வது எளிதாக இருக்கும்.முதிர்கன்னி குறித்த பதிவுகளும் ஏராளமாக காணப்படுமாயின் அதனை அடுத்த இயலாக வைக்கலாம்.
அதுபோல பணிமகளிர் சிக்கல் குறித்த எத்தரவுகளும் படைப்பாளரின் படைப்புகளில் கிடைக்கவில்லையெனில் அந்த இயலை நீக்கிவிடலாம்.தனித்து வாழும் பெண்கள் குறித்த தரவுகளில் திருமணமாகாமல் தனித்து வாழும் பெண்கள்,திருமணமாகி தனித்து வாழும் பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் எனப் பிரித்து தரவுகளைத் தேடலாம்  அரசியல் சூழலில் பெண்களின் மீதான அரசியல் செயல்பாடு,அரசியல் என்னும் அதிகார மையத்தில் வெற்றிகொண்ட பெண்கள் நிலை, ஓட்டுவங்கிகளாக கருதப்பட்டு நடத்தப்படும் பெண்கள் முதலான பிரிவுகளுக்குள் தரவுகளைத் திரட்டலாம் .இதில் ஒரு உள் சிக்கலுக்கு ஏராளமானத் தகவல்கள் கிடைக்கும் நிலையில் அதையே இயல் தலைப்பாக அமைக்கலாம்.

     பொதுவாகக் கோட்பாடுகளைப் பொருத்திப் பார்க்கும் ஆய்வுகளில், அக்கோட்பாடு பற்றிய செய்திகளை விரிவாகவே கூறிவிடுவது நன்று.அதைப் பற்றிய தெளிவானக் கருத்தியலை ஆய்வாளர் நன்கு புரிந்து கொண்ட பின்னரே ஆய்வைத் தொடங்க வேண்டும். கோட்பாடு அடிப்படையில்தான் கருதுகோள் உருவாக்கப்படவேண்டும்.அனைத்து இயல்களும் இக்கோட்பாட்டினடிப்படையில்தான் ஆராயப்படவேண்டும்.புதிய கோட்பாடுகளாகத் தற்காலத்தில் கருதப்படுபவை தலித்தியம்,பெண்ணியம்,சிறாரியம்,அரவாணியம்,முதியோரியல்,சூழலியல்,
தமிழ்க் கணினியியல்போன்றவை.

          இக்கோட்பாடு குறித்த தெளிவினை ஏற்படுத்திக்கொண்ட பின்,அதற்கேற்ப இயல்களை அமைக்க வேண்டும். சில ஆய்வுகளில் பொருத்தமில்லாத வகைகளில் சில இயல்கள் அமைக்கபட்டிருக்கும் எவ்வாறெனில், மேற்குறிப்பிட்ட சமூகச் சிக்கல்கள் சார்ந்த தலைப்புகளைத் தேரந்தெடுத்துவிட்டால் அது தொடர்பான சிக்கல்களை மையப்படுத்தும் இயல்கள் அமைக்கப்பட வேண்டும். 

உதாரணமாக, தமிழ் நாவல்களில் முதியோர் சிக்கல் என்னும் தலைப்பைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால்,முன்னுரை பகுதியில் நோக்கம் சிக்கல்,எல்லை,முதன்மை ஆதாரங்ளைப் பற்றிய செய்திகளைத் தர வேண்டும். 

       இரண்டாம் இயல் முதியோர் என்பதற்கான சொல் விளக்கம். வயது வரையறை,தமிழ் இலக்கியத்தில் அன்று முதல் இன்று பதிவாகியுள்ள முதியோர் குறித்த பார்வைகள், மருத்துவர்களின் பார்வையில்,உடல், உள, உணவு அடிப்படையிலான செய்திகள்,உலக அளவில் முதியோர் நடத்தப்படும் நிலை போன்றவற்றை உள்ளடக்கியதாக அமைவது சிறப்பாக இருக்கும்.

        மூன்றாவது இயல் எடுத்துக்கொண்ட நாவல்கள் பற்றியும், அதில் இடம்பெறும் முதியோர்களின் நிலை குறித்தும்,நாவலாசிரியர்களின் முதியோர் குறித்த பார்வை குறித்தும்,முதியோர்களை  சில வரையறைக்குள் அடக்கி விளக்கும் நிலையிலும் அமைய வேண்டும். 

        நான்காம் இயல் நாவல்களில் முதியோர்க்கு ஏறபடும் சிக்கல் பற்றி வயது,உடல் தளர்ச்சி,ஓய்வு,தலைமுறை இடைவெளி, குடும்ப,சமூக நிலைகளில் அவர்கள் சந்திக்கும் சிக்கல்களை நாவல்களின் வழி ஆராயப்படவேண்டும்.

         ஐந்தாம் இயல் நாவல்களில் வழி நின்று பிடிவாதம்,மரபு மற்றும் சமூக மாற்றத்தை  வெறுத்தல்,பழிவாங்கல், பழம்பெருமை முதலானவற்றால் தனி மனிதர்க்கும், குடும்ப சமூக உறவுகளுக்கும் சிக்கல்களை ஏறபடுத்துதல் முதலான,முதியோரால் ஏற்படும் சிக்கல்களை ஆராய்வதாக அமைவது நன்று. 

   ஆறாவது இயல் முதியோர் வழிகாட்டல் என அமைந்து அனுபவப் பெட்டகங்கள்,உயிருள்ள நூல்கள் என்றடிப்படையில் நாவல்களின் வழி அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை சொல்லும் அறிவுரைகள், வாழ்க்கையில் சந்தித்த சிக்கல்களை அணுகிய விதம் போன்றவற்றை ஆராய்வது நன்று.

     முடிவுரை பகுதி ஆய்வாளரின் நடுநிலையை வெளிப்படுத்தும் வண்ணமும்,சமூகக் கண்ணோட்டத்துடனும், இன்றைய இளைஞர்கள் நாளைய முதியவர்கள் என்ற நடப்பியல் உண்மையைப் புரிந்த நிலையிலும் நாவலாசிரியர்களின் முதியோர் குறித்த தகவல்களைத் தருவதாய் அமையவேண்டும்.மேற்குறித்த இயல்கள் பொது நிலையில் நின்று பிரிக்கப்பட்டவை.எடுத்துக்கொள்ளும் முதன்மை நூல்களுக்குத் தகுந்தாற்போல தரவுகளைப் பொறுத்துஇயல்கள் மாற்றத்திற்கு உள்ளாகலாம்.

        பெரும்பாலும் தற்கால ஆய்வுகளில் இயல்கள் ஒரே மாதிரியாக வருகின்றன.ஒரு படைப்பாளரின் படைப்பில் கதை மாந்தர்,குடும்பம்,சமூகம் என்றளவிலேயே ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. ஒரு ஆய்வைப் பார்த்ததைப் போலவே, வெவ்வேறு படைப்பாளர்களின் படைப்புகளில் இயல்கள் பிரிக்கப்படுகின்றன.இதைத் தவிர்த்து குறிப்பிட்ட படைப்பாளரின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் இயல்கள் அமைக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும்.தரவுகள் அடிப்படையில் பிரிக்கப்படும் இயல்கள் மட்டுமே படைப்பாளரைப் புதிய கோணத்தில் அணுகி புதிய இயல்களைப் பிரிப்பதற்கு உதவும் என்பதை ஆய்வாளர் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இயல்களுக்குள் ஒழுங்கமைப்பு மற்றும் 

தலைப்பிற்கேற்ற பொருத்தப்பாடு


              இயல்கள் பொருண்மையடிப்படையில் இணைக்கப் பட்டிருப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவை முறையாக அமைக்கப்படும் முறை.

        திருவாசகத்தில் தொடரனியல் என்னும் ஆய்விற்குள் மொழியியல் பற்றிய அறிமுக இயல், ஒலியன், உருபன்,தொடரமைப்பு, மொழிநடை,யாப்பமைதி, கருத்துப்புலப்பாடல் உத்திகள் போன்றவற்றில் தரவுகளைப் பொருத்து இயல்களை அமைத்துக் கொள்ளலாம். ஆனால் இவ்வியல்களுக்குள் ஒரு இயலாக  மாணிக்கவாசகரின் பாடல்களில் மகளிர் விளையாட்டுகள் என்பது இடம் பெறக்கூடாது. அது போலப் பெண்ணியம் குறித்த தலைப்பைத் தேர்நதெடுத்து இயல்களைப் பிரிக்கையில் ஒரு இயலாக அப்படைப்பாளரின் இலக்கிய நயம் என்பது இடம் பெறக்கூடாது.

மாலனின் பெண்ணியச் சிந்தனைகள் என்கிற ஆய்வில் ஒரு இயலாக மாலனின் படைப்பில் இலக்கிய நயம் என்பது பொருந்தாது. அது போல ஒரு குறிப்பிட்ட காலத்தில் தோன்றிய நூல்களை ஆராயும் பொழுது,கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் தரவுகள் இடம்பெற வேண்டும். அதற்குப் பொருத்தமில்லாத வகையில் மற்றொரு காலத்தில் தோன்றிய தரவுகளைக் கொண்டு அமைக்கப்பட்ட இயல் இடம் பெறக்கூடாது.










No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?