நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Sunday 28 September 2014

கல்யாண மாலை கொண்டாடும் வேளை...


குறிஞ்சிக்கலி  பாடல்  2

கல்யாண மாலை கொண்டாடும் வேளை......குறிஞ்சி நிலப் பெண்கள்,  அருவிகளில் நீராடவும்

, மலர்களைக் கொய்யவும், தோழியரோடு வெளியில் சென்று விளையாடவும், தினைப்புனக் காவலுக்குச் செல்லவும் உரிமை பெற்றவர்கள்.  குடும்பச் சூழலை உணர்ந்து நடப்பவர்கள். தங்கள் கற்பொழுக்கத்தைக் காத்துக் கொள்ளும் மாண்புடையவர்கள். தினைப்புனக் காவலின் போது பெண்கள், பறவைகளைப் பரண் மீதிருந்து கவ்ண்கல் வீசி விரட்டுவர். இளைஞர்கள் தினையை உண்ண வருகிற மான்களையும், யானைகளையும் அம்பினை எய்து விரட்டுவர். திணையைக் காவல் காக்கும் பணியில் இவர்கள் ஈடுபடும்பொழுது, ஒருவரை ஒருவர் சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.
பறவைகளை விரட்டிக் கொண்டிருக்கும் பெண்களிடம், அவ்வழியாக தன் பிடியிலிருந்து தப்பித்து வந்த மானையும் யானையையும் பற்றி வினவி, அவை சென்ற திசையறிந்து இளைஞர்கள் அவற்றை வேட்டையாடுவார்கள். யானைகள் தப்பித்து வரும் பொழுது, தன் வசமிழந்து வயல்களுக்குள் நுழைந்து விட்டால், அவை தினைப்புனத்திற்கும், அங்கிருக்கும் பெண்களுக்கும் துன்பத்தைத் தந்து விடும்.. எனவே இளைஞர்கள், அவை வயல்களுக்குள் நுழைந்து விடாமல் இருக்க, அவற்றை விரட்டிய படியே இருப்பர்.
இத்தினைப் புனக்காவல் அறுவடைக் காலம் வரை தொடரும். இக்காவலின் போது ஏற்பட்ட சந்திப்பினால், காதல் கொண்ட தலைவியும் தலைவனும் பகல் வேளையில் சந்திக்க இயலாததால், இரவு நேரத்தில் தோழியின் உதவியோடு சந்தித்துக் கொள்வர்.
இப்படி ஒரு தலைவியும், தலைவனும் தனியிடத்தே பல முறை சந்திப்பதற்கு துணை புரிந்த ஒரு தோழி, விரைவில் தலைவன் தலைவியைத் திருமணம் முடித்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறாள்.
அவர்கள் தொடர்ந்து ஊரார் அறியாமல் இரவிலே சந்திப்பது தொடர்ந்தால், தலைவியின் நிலை ஆபத்தாக முடியும் என்பதைத் தலைவனுக்கு உணர்த்தி திருமணத்திற்கு உடனடியாக ஏற்பாடு செய்யுமாறு வற்புறுத்துகிறாள். தலைவியை நிரந்தரமாக பெறுவதற்கு ஒரே வழி திருமணமே என்பதைத் தலைவன் உணருமாறு எடுத்துரைக்கிறாள். இப்பாடலில் வரும் தோழி தலைவனிடம், சுற்றி வளைத்து, இரண்டு நிகழ்ச்சிகளை கூறுகிறாள். பின், தலைவியின் நிலையை எடுத்துரைத்து, அவனைத் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்கிறாள். 

இப்பாடலில் தோழியின் கூரிய அறிவும், சொல்லாற்றலும் தலைவி குறித்த அக்கறையின் வெளிப்பாடும், இனி இரவில் சந்திப்பது நடக்காது என்ற உறுதியும், தலைவன் இனி தாமதிக்க முடியாது என்ற நெருக்கடியும், தலைவனிடமிருந்து பெறும் திருமண உறுதியும், அதை தலைவியிடம் சொல்லி மகிழும் மனநிறைவும் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் தலைவியைச் சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு தலைவன் தோழியிடம் வழக்கம்போல் கேட்டு நிற்கிறான்.
இதோ தோழி தலைவனிடம் கூறும் செய்திகள்:

""தலைவனே நான் இரண்டு நிகழ்ச்சிகளைப் பற்றி கூறுகிறேன் கேள். ஒன்று நீ அறிந்த புராண செய்திதான். அது சொல்லும் உண்மை நம் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள உதவும். ஒருமுறை சிவபெருமான் தன் மனைவி உமாதேவியோடு கயிலை மலையில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த இராவணன், தன் பலத்தைக் காட்ட விரும்பினான். உடனே, கயிலை மலையைப் பெயர்த்து அப்படியே தூக்கிவிட முயன்றான். தன் கைகளை அம்மலைக்கு அடியில் செலுத்தி பெயர்க்க முயன்றான்.  ஆனால், சிவபெருமான் இராவணனின் ஆணவத்தை அடக்க, தன் கால் பெருவிரலால் மலையை அழுத்தினார். இதனால், இராவணனின் கைகள் மலைக்கு அடியில் மாட்டிக் கொண்டது. துன்புற்றான். வருந்தினான்என்று இந்த கதையைக் கூறுகிறாள். தலைவியைத் தலைவன் சந்திப்பதற்கும் இக்கதைக்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் இல்லாமலா தோழி இக்கதையைச் சொல்லியிருப்பாள்? என்ன வாசகர்களே உங்களுக்கு ஏதாவது தோன்றுகிறதா?
இராவணனைப் போல தலைவனும், தலைவியை எப்போதும் எளிதாக பெற்றுவிடலாம் என நினைத்து இறுமாந்திருந்தான். தோழியின் உதவியினால் இரண்டு மூன்று முறை தலைவியை எளிதாகச் சந்தித்திருந்திருக்கிறான். தலைவியைச் சந்திப்பது ஒரு பெரிய செயலல்ல என நினைத்துக் கொண்டிருக்கிறான். . அதனால், இரவுக் சந்திப்பிலேயே தன் வாழ்க்கையைத்  தொடர்ந்திடலாம் என தொடர்ந்து கொண்டிருக்கிறான். 
ஆனால், இனி இது இயலாது. அவன் நினைப்பது போல் நடக்காது. தன் நிலை அறியாது செயல்பட்டுக் கொண்டிருக்கும் அவன் தலைவியின் நிலையையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். உலகைக் காக்கும் சிவபெருமான், கட்டை விரலை அழுத்தி இராவணன் செயலை தடுத்துவிட்டதைப் போல, தலைவியைக் காக்வேண்டிய பொறுப்பிலுள்ள தோழியும், இரவு தொடர்பை மறுத்து தலைவியுடனான சந்திப்பை தடுத்து விட முடியும் என்பதை மறைமுகமாக இக்கதை மூலம் புலப்படுத்துகிறாள். கையை வெளியே எடுக்க முடியாமலும், மலையை பெயர்க்க முடியாமலும் இராவணன் தவித்து துன்புற்று வருந்துவதைப்போல, தலைவியை மறக்க இயலாமல், அவளைச் சந்திக்கவும் இயலாமல் இனி தலைவனும் துன்புற நேரிடும் என்பதை இக்கதை மூலம் நயமாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப்போல் எடுத்துரைக்கிறாள்.
தலைவனுக்கு இது புரியாமல் போனாலும் போகலாம். அல்லது புரிந்தும் புரியாததுபோல் இருக்கலாம். எனவே, தோழி இன்னொரு நிகழ்ச்சியின் மூலமும் நன்றாக புரியுமாறு கூறுகிறாள். தன் கருத்தை புலப்படுத்துவதில் இத்தோழிக்கு மிஞ்சியவர் யாருமில்லை என்றே கூறலாம்.
அவள் கூறும் இன்னொரு நிகழ்ச்சியைக் கேளுங்கள். தலைவனிடம் கூறுகிறாள். ""ஒரு யானை இருந்ததாம் அது மதம் பிடித்த யானை. அதற்கு எப்படி மதம் பிடித்தது? அது அப்போதுதான் ஒரு புலியோடு போரிட்டு வென்றிருந்தது. அப்போர் மிகக் கடுமையான போர். பலத்த பெரிய காயங்களைப் பெற்று அது புலியை வென்றிருந்தது. காயங்கள் தந்த வருத்தத்தோடு, அது தூக்கத்தில் ஆழ்ந்திருந்தது. தூக்கத்தில் புலி வந்து தாக்குவது போல ஒரு கனவு கண்டது. உடனே அது வெகுண்டு எழுந்தது. பெருஞ்சீற்றத்தோடு சுற்றுப்புறத்தை நோக்கியது. தொலைவில் ஒரு வேங்கை மரம் மஞ்சள் நிற பூக்களோடு நிறைந்து நின்றிருந்தது. அந்த வேங்கை மரத்தின் கரிய வண்ணமும், அதில் இருந்த மஞ்சள் வண்ணப் பூக்களும் சேர்ந்து, தூக்க கலக்கத்தில் வெருண்டிருந்த யானைக்கு வேங்கை புலியை நினைவுபடுத்தியது. உடனே, அம்மரத்தை புலியென நினைத்து சீற்றம் கொண்டது. அதனைநோக்கிப் பாய்ந்து சென்றது. தன் வலிய கொம்புகளால், புலியின் வயிற்றைக் குத்திக் கிழிக்க முயன்றது. முடியாத நிலையினால் வலி பொறுக்க முடியாமல் பிளிறியது. அச்சத்தம் மலை முகடுகளெல்லாம் எதிரொலித்து, அக்காட்டையே அதிரச் செய்து கொண்டிருந்தது. நீயும் வேங்கை மரங்களும், மதயானைகளும் நிறைந்த நாட்டைச் சார்ந்தவன் தானே. இதுபோன்ற காட்சியை நீயும் கண்டிருப்பாய் அல்லவா?"" என்று தலைவனைப் பார்த்துத் தோழி கேட்கிறாள்.
இங்கு ""யானை"" தான் தலைவன் அவனுக்கு பிடித்த ""மதம்"" தான் காதல். முன்பு வென்ற புலியை போல் இப்போதும் புலியை வென்று விடலாம் என நினைத்துக் கொண்டிருக்கும் யானையைப் போல, (தலைவியை முன்பு எளிதாக அடைந்தது போல) இப்போதும் அடைந்துவிடலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் இம்முறை அப்படி நடக்காது ஒன்றும் வேலைக்கு ஆகாது. மரத்திலிருந்து கொம்புகளை எடுக்க நினைக்கும் யானையும் துன்புறுவது சிலமணி நேரம்தான். யானை கொம்புகளை மரத்திலிருந்து எடுத்துவிட்டால் சுதந்திரமாகத் திரியும். உண்மையான இன்பத்தைப் பெறும்.  அதுபோல அவர்களாக சென்று மாட்டிக்கொண்ட களவு என்னும் மரத்திலிருந்து விடுபட இருவரும் பிரிவுத் துன்பத்தைச் சந்திக்கத்தான் வேண்டும். களவு மணத்திலிருந்து விடுபட்டுவிட்டால், தலைவி திருமணத்தின் வழி அவனுக்கு உரிமையாகி விடுவாள் உண்மையான இன்பத்தை யானையைப் போல தலைவனும் பெறுவான் என்கிறாள்.
துன்பமும் இன்பமும் தலைவனுக்கு மட்டுமல்ல தலைவிக்கும் உரியது. துன்பநிலை மாறி இன்பநிலை மட்டும் இனி எய்தவேண்டும் என்கிறாள். இத்தோடு விட்டுவிட்டாளா? அவள் தலைவனைச் சிந்திக்கத் தூண்டுகிறாள். களவுக் காலத்தில் இருவரும் சந்தித்த இன்ப துன்பங்களை ஒரு பட்டியலே போட்டுக் காட்டி, தலைவனைத் திருமணத்திற்கு நாள் குறிக்கச் செய்துவிடுகிறாள்.
தலைவனைப் பார்த்து, ""நீ இரவு நேரத்தில் வருகிறாய் கடும் இரவு நேரங்களில் காட்டு வழி எப்படி இருக்கும்? கொடிய நச்சுப்பாம்புகள் நிறைந்திருக்கும். ஆனால் தலைவியின் மீது கொண்ட காதலால், அந்த நச்சுப்பாம்புகளை நினைத்து நீ பயப்படுவது இல்லை. அவற்றை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. துணிவோடு நீ வருகிறாய். ஆனால் தலைவி உன்போல் அஞ்சாமல் இருக்க முடியுமா? நீ வரும் வழியை நினைத்து நினைத்து அவள் பயப்படுகிறாள். நீ வரும் வரை அவள் உயிர் அவளிடம் இருப்பதில்லை. நீ வரும் காட்டு வழிக்கு உன் பாதத்தைத் தாங்கச்  சென்று விடுகிறது. அச்சத்தினால் பொலிவிழந்து போகிறாள். அப்போது அவள் படும் துன்பத்தை காணப் பொறுக்க முடிவதில்லை .அப்போது,""நீரற்ற பாலைவனம் எப்படி இருக்குமோ"". அவள் அப்படி இருக்கிறாள். ஒரு வழியாக உன்னைப் பார்த்தபின் தான் அவள் நிம்மதி அடைகிறாள். அப்போது ""மழை பொழிந்த வயல் எப்படி இருக்குமோ""  அப்படி மகிழ்ச்சியோடு பொலிவு பெற்று விளங்குகிறாள். அழகாகக் காட்சியளிக்கிறாள். அந்த அழகு அவளை விட்டு நீங்காமலிருக்க ஏதாவது ஒரு வழி உண்டா? தெரிந்தால் அதை எனக்குக் கூறு. தன் நிலையைப் பற்றிக் கவலைப்படாமல் அவளோ,உன்னிடம் காட்டுவழி வர வேண்டாம் என இறைஞ்சுகிறாள். நீ வேறு வழியில் வரப்போவதாகக் கூறுகிறாய்.
மீண்டும் நீ விடியற் காலையில் சென்று விடுகிறாய். மறுநாள் இரவு மீண்டும் வேறொரு கொடிய வழியில் வருகிறாய். மலைச்சாரல் நிறைந்த அந்த வழியானது, கொலை செய்வதற்குச் சிறிதும் அஞ்சாத கொடிய கள்வர்கள் நிறைந்த வழி. அவர்களைக் கண்டு நீ பயப்படாமல் இருக்கலாம். ஆனால் உன்மீது காதல் கொண்ட தலைவி பயப்படாமல் இருக்க முடியுமா? கள்வர்களால் உனக்கு ஏதாவது துன்பம் நேருமோ எனப் பயந்து அவள் நிலைத் தடுமாறிப் போகிறாள். பயந்த அவளைப் பார்க்கும் பொழுது ""இளமையிலே வறுமையின் கொடிய தாக்குதலுக்கு ஆளானவன் எப்படி இருப்பானோ"" அப்படி வறட்சியாய் காணப்படுகிறாள். உன்னைப் பார்த்த பின்தான் அவளுக்கு போன உயிர் திரும்ப வருகிறது. அப்போது அவள் “இறைவனின் அருளினால் வளமான வாழ்க்கையைப் பெற்றவனைப் போல“ ஆனந்தத்துடன் தென்படுகிறாள். அந்த ஆனந்த நிலை அவளை விட்டு நீங்காமலிருக்க உனக்கு ஏதாவது வழி தெரிந்தால் அதை எனக்குக் கூறு.
கொடிய மலைச்சாரல் வழியிலும் வரவேண்டாம் என உன்னிடம் தலைவி வேண்டிக் கொள்கிறாள். நீயோ, மறுநாள் கரிய இருள் சூழ்ந்திருக்கும் காட்டுப் பகுதியைக் கடந்து வருகிறாய். நீ வரும்வரை அவள் நிலை எப்படி இருந்தது தெரியுமா? செல்வமிருக்கும்போது பிறருக்கு உதவாதவன் மூப்புக் காலத்தில் யார் உதவியும் இன்றி எப்படி துன்பத்தில் துயருருவானோ அப்படி துயரம் நிறைந்து இருந்தாள். நீ வந்த பின்பு, பிறரது துன்பம் உணர்ந்து பொருளைக் கொடுக்கவல்லவனிடம் செல்வம் சென்று சேர்ந்தால் அவன் வாழ்க்கை எப்படியிருக்குமோ“ அப்படி பொலிவுடன் காணப்பட்டாள்’.
இப்படி இரவு நீ வரும்வரை துயருருவதும், வந்து சென்றபின் பகலில் மகிழ்வதுமாக இருக்கும் இவளைப் பார்த்து ஊரார் என்ன நினைப்பர்? மேலும், இப்படி தலைவன் வரும் வழியை நினைத்து எத்தனை நாள் தலைவி துயர் அடைவாள்? இதற்கு ஒரு முடிவு வேண்டாமா? தலைவியிடம் வாட்டமும் வனப்பும் மாறி மாறி தோன்றுவது அயலாரின் பழிச் சொல்லுக்கு ஆளாக்கி விடும் அல்லவா? இப்படியிருந்தால் எப்படியும் ஊரில் அவர்கள் களவு வெளிப்பட்டு விடும். அதற்கு இடம் கொடுக்கலாமா? அது தலைவனுக்கு அழகா? மற்றவர்கள் புறம் பேசாமலிருக்க, ஏதாவது வழி தெரிந்தால் அதை எனக்குக் கூறு எனத் தலைவனை நோக்கிக் கேட்கிறாள் தோழி.
பின்னர் இப்படியெல்லாம் தலைவனிடம் கேட்டதாகத் தோழி தலைவியிடம் கூறுகிறாள். தலைவன் என்ன பதில் கூறியிருப்பான்? தலைவியின் மனம் படபடக் என அடித்துக் கொள்கிறது. தோழி, தலைவியைக் கள்ளத்தனமாகப் பார்த்துச் சிரிக்கிறாள்.
வேங்கைப்பூ
தோழியின் கேள்விகளில் உள்ள நியாயத்தினை உணர்ந்த தலைவன், ‘வேங்கைப் பூக்கள் மலரும் காலத்தே தலைவியை மணக்க உறுதியாக வருவேன்என்று கூறித் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள சென்றிருக்கிறானாம். இவ்வாறாகத் தோழி தலைவியின் வருத்தத்தைத் தன் நுண்ணறிவினாலும், பேச்சு சாமர்த்தியத்தாலும் போக்குகிறாள்.
இது ஒரு தோழி கூற்றுப் பாடல். பாடியவர் கபிலர்.

இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை
எடுக்கல்செல்லாது உழப்பவன் போல
5
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை
நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய், தன்
கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்:
ஆர் இடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்தக்கால்,
10
நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள், வைகறை,
கார் பெற்ற புலமே போல், கவின் பெறும்; அக் கவின்
தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல், உரைத்தைக்காண்;
இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்தக்கால்,
பொருளில்லான் இளமை போல் புல்லென்றாள், வைகறை,
15
அருள் வல்லான் ஆக்கம் போல் அணி பெறும்; அவ் அணி
தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல், உரைத்தைக்காண்;
மறம் திருந்தார் என்னாய் நீ மலையிடை வந்தக்கால்,
அறம் சாரான் மூப்பே போல் அழிதக்காள், வைகறை,
திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திருத்தகும்; அத் திருப்
20
புறங்கூற்றுத் தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல், உரைத்தைக்காண்;
என ஆங்கு,
நின் உறு விழுமம் கூறக் கேட்டு,
வருமே, தோழி! நல் மலை நாடன்
வேங்கை விரிவு இடம் நோக்கி,
25
வீங்கு இறைப் பணைத் தோள் வரைந்தனன் கொளற்கே.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?