நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Tuesday 1 March 2016

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே… கண்ட போதே சென்றன அங்கே...



Image result for மலைநாடன்கண்கள் எங்கே......... நெஞ்சமும் எங்கே…... கண்ட போதே சென்றன அங்கே.....


         குறிஞ்சிப்பாட்டின் ஏழாவது பாட்டு தோழி தனக்குத்தானே தனியாக பேசிக்கொள்வது போன்ற உத்தி முறையில் அமைக்கப்பட்டுள்ளது. நாடகங்களில் இது போல ஒரு பாத்திரம் தனிமையில் பேசிக்கொள்ளும் காட்சிகள் இருக்கும். ஆனால் ஆயிரம் பேர் இதைக் கேட்பர். தனக்குள் பேசிக் கொள்பவனும் உரக்கவே தன் போக்கில் பேசிக்செல்வான். இங்கு தோழியும் அது போலவே உரக்க பேசிக்கொண்டிருக்கிறாள். ஆனால் அவளுக்குத் தெரியும் கேட்க வேண்டிய தலைவனின் காதில் தன் பேச்சு சென்று விழுமென்று. மறைவில் நிற்கும் தலைவன் தலைவியைச் சந்திக்க வந்திருக்கிறான் என்பதை அறிந்திருக்கும் தோழி அவனுக்கும் நன்கு கேட்குமாறு தனக்குத்தானே பேசிக்கொள்கிறாள். மலர் கொய்வது போலவா, இலை பறிப்பது போலவா, நீருற்றுவது போலவா தோழி ஏதாவது வேலை செய்து கொண்டே பேசுகிறாள்....... இதே தோழியின் தனிப்பேச்சு.

இந்த தலைவியிருக்கிறாளே, அவன் தலைவன் மீது காதல் கொண்டு விட்டாள். தலைவனோ தொடர்ந்து தலைவியை யாரும் அறியாத பொழுது சந்திப்பதில் தான் விருப்பமுடையவனாக இருக்கிறான். தவிர, அவர்களுடைய திருமணம் குறித்து எதுவுமே பேசவதில்iலை. தலைவியோ தன் பெற்றோரை நினைத்துப் பயப்படுகிறாள். தலைவனைச் சந்திப்பதை ஊரார் அறிந்து விட்டால் என்ன ஆகும் என்ற அச்சத்தினாலே அவள் மேனி வாடிவிட்டது. தன் காதலை யாரிடமும் சொல்லவும் முடியவில்லை. மறைக்கவும் முடியவில்லை.எப்போதும் தனிமையை நாடுகிறாள். அவள் முகத்தில் தாளாத துயரம். அவளை எப்படி அமைதிப்படுத்துவது என்று எனக்கு தெரியவில்லை. என்னிடமும் மனம் திறந்து எதுவும் சொல்ல மறுக்கிறாள். யாரிடமாவது வாய் திறந்து எதாவது சொன்னால் தானே துயரம் நீங்கும். மனபாரம் குறையும். என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அவளுக்கு நல்ல குரல் வளம் அவளை பாட வைத்து அவளுடைய மனச் சுமையை குறைக்கலாம் என முடிவெடுத்தேன். 

தினையும், நெல்லும் ஏராளமாக குவிந்து கிடந்தன. சரி வேலையில் ஈடுபட்டபடியே அவளைப் பாட வைக்கலாம் என்று முடிவெடுத்தேன். அவளுக்கு சந்தன உலக்கையும் , எனக்கு யானை தந்தத்தினால் ஆன உலக்கையையும் கொண்டு வந்தேன். பாறையிலே குடைந்த பெரிய உரலிலே நெல்லைக் கொட்டி தீட்டத் தொடங்கினோம். நேரம் நகர்ந்தது வேலை செய்யும் பொழுது உற்சாகமாக இருப்பதற்கு அவளிடம் ஒரு பாட்டைப் பாடு என்றேன். அவளோ நான் யாரைப்பாடுவது? எதைப்பாடுவது? என்றாள்.

நீ காதல் கொண்ட தலைவனைப் பற்றிப் பாடலாமேஎன்றேன்.

அவளோ பதறிப்போனால். ஐயோ முடியாது. யாராவது கேட்டாள் என் கதி அதா கதிதான்என்றாள்.

அப்படியானால் மாற்றிப் பாடுவோம். உன் தலைவனும் மலைநாடன். அந்த முருகப்பெருமானும் மலைநாடன். முருகனைப் பாடுவது போல நீ உன் தலைவனைப் பாடு. மனதிற்குள் உன் தலைவனை நினைத்துக் கொள். இரகசியம் எனக்கு மட்டும் தானே தெரியும். எப்படியாவது நீ மகிழ்ச்சியோடிருந்தால் அதுபோதும்“ என்றேன்.

அவளோ தயங்கியபடியே, ‘நீயே பாடுஎன்று கூறிவிட்டாள்.

நானும் பாடத் தொடங்கினேன். அதில் தலைவன் மீது நம்பிக்கை ஏற்படும் வகையில் சில கருத்துக்களை உள்பொருளாகக் கூறினேன். அதோ அந்த மலையைப் பார்என்றேன். அது ஒரு வீரன் வீற்றிருக்கும் மலை அவன் எமனே வந்தாலும் பயந்து ஓடாதவன். சண்டையிட்டு வெற்றி கொள்வான். அம்மலையில் காந்தள் மொட்டுக்கள் அரும்பியிருக்கிறது. அம்மலையிலுள்ள வண்டுகளோ அந்த மொட்டுக்களைச் சுற்றியபடியே பறந்த வண்ணம் இருக்கின்றன. மொட்டு அவிழ்ந்தவுடன் தேனைக் குடிக்கலாம் என்ற எண்ணத்துடன் பறந்து கொண்டிருக்கும் வண்டு உன் நீலக்கல் மோதிரம்போல இருக்கிறதுஎன்றேன்.

Image result for மலைநாடன் 
அதாவது தலைவன் வீரமிக்கவன். எமனே எதிர்த்து வந்தாலும் தன் கருத்தில் உறுதியோடிருந்து வெற்றி கொள்ளக் கூடியவன். காந்தள் மலர்கள் போன்ற தன் சுற்றத்தினரின் மனம் திறக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறான். எனவே தலைவியை மணக்க விரும்பும் அவன் தன் சுற்றத்தினரின் சம்மதத்திற்காகக் காத்திருக்கிறான். கைவிடமாட்டான். தலைவியை உறுதியாக மணந்து கொள்வான் என்பது பொருள்.

Image result for மான்Image result for குரங்கு
அதே மலைச் சாரலிலே குரங்குகள் இருக்கின்றன. அந்த குரங்குகளைப் பார்த்து மான் குட்டிகள் மருண்டு ஓடுகின்ற காட்சியைக் காணலாம். நீயும் அந்த மான்போல மருண்டு காணப்படுகிறாய். குரங்குகளைப் பார்த்து அச்சப்படத் தேவையில்லை. அது போல நீயும் திருமணத்தை நினைத்து அச்சப்படாதே.  உன் தலைவனை நினைத்து வேதனைப் பாடுவதைப் போல பாடுஎன்றேன்.

அவளும் ஒரு பாடலைப் பாடினாள். மலை நாடனாகிய முருகனின் மலையில் நல்ல மூங்கில் வளர்ந்திருக்கிறது. அம் மூங்கிலின் கணுக்கள் தோறும் பாளை கழன்றிருக்கிறது. அது மானின் காதைப் போல இருக்கிறது. தலைவன் இதனைக் கண்டால் மானின் கண்ணும் அதன் காதும் நினைவிற்கு வரும். மானை நினைக்கும் பொழுது என் நினைவு வரும். உடனே தலைவன் வருவான்என்று பாடினாள்.

தலைவனைப் புகழ்ந்து பாடியது போதும். உன்னை வருத்திக் கொண்டிருக்கும் அவனை நீ இகழ்ந்து பாடு என்றேன்.

மேலும், மலைநாட்டில் யானைகள் இருக்கின்றன. அவை ஆணும் பெண்ணுமாக இணைந்து செல்லும். அவை தழைகளைத் தின்று அழகாக நடந்து செல்லும். தன் காட்டு விலங்குகள் இவ்வாறு இணையாக இருப்பதைக் கண்டும்கூட தலைவன் உன்னைக் காண வரவில்லையாதலால், அவன் இகழ்ச்சிக்கே உரியவன். எனவே, அவனை இகழ்ந்து பாடுஎன்றேன்.

தலைவியோ தலைவன் மீது மிகுந்த அன்புடையவள் என்பதால் தலைவனை இகழ்ந்து பாடாமல் புகழ்ந்தே பாடுகிறாள்.

Image result for புலிநகம்
புலிநகம்

தலைவியோ இவ்வாறு பாடினாள்..தலைவனுடைய மலைநாட்டில் ஏராளமான வாழை மரங்கள் உள்ளன. அவை குலை தள்ளுகின்றன. சிறிய அந்த வாழைச் சீப்புகள் புலியின் கால்கள் போலத் தோன்றுகின்றன என்பதற்காக யாரும் அதை வெட்டி எறிவதில்லை. மாறாக அவை தானே முற்றி முற்றிப் பழுக்கும் என்றெண்ணி காத்திருப்பர். விரைவில் அவையும் பழுத்து விடும்

(காத்திருந்தால் வாழைச் சீப்பு பழுத்து கனிந்து பழமாகி சுவை தருவதுபோல, தலைவனுக்கான என் காத்திருப்பும் இனியவற்றையே தரும் எனப் பொருள்பட தலைவி இங்கு பாடுகிறாள்)

இவ்விதம் தலைவி தலைவன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதைத் தோழி தன் போக்கில் சொல்வது போல சொல்கிறாள். இவ்விதம் உலக்கைப் பாட்டு பாடி தலைவி தலைவன் நினைவைப் போற்றி மகிழ்ந்ததையும், அதனால் அவள் துயர் நீங்கியதையும், அவளுடைய வாடிய தோள்கள் மகிழ்ச்சியால் பூத்த தன்மையையும், தலைவன் துன்பம் தந்தாலும் அவனை மேன்மையாகக் கருதி தலைவி வாழ்ந்த சிறப்பையும் தோழி தலைவன் அறியுமாறு தன்போக்கில் உரக்கச் சொல்கிறாள்.

தலைவனும் இதனைக் கேட்டு விரைவில் வந்து தலைவியை மணமுடிக்கக் கருதியிருப்பான் எனப் புரிந்து கொள்ள வேண்டும்.
நெஞ்மும் அதன் நினைவுகளும்... குறித்த அப்பாடல் ...
வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து
ஏந்து மருப்பின், இன வண்டு இமிர்பு ஊதும்
சாந்த மரத்தின், இயன்ற உலக்கையால்,
ஐவன வெண் நெல் அறை உரலுள் பெய்து, இருவாம்,
ஐயனை ஏத்துவாம் போல, அணிபெற்ற
5
மை படு சென்னிப் பய மலை நாடனை,
தையலாய்! பாடுவாம், நாம்;
தகையவர் கைச் செறித்த தாள்போல, காந்தள்
முகையின்மேல் தும்பி இருக்கும் பகை எனின்,
கூற்றம் வரினும் தொலையான், தன் நட்டார்க்குத்
10
தோற்றலை நாணாதோன் குன்று;
வெருள்பு உடன் நோக்கி, வியல் அறை யூகம்,
இருள் தூங்கு இறு வரை ஊர்பு இழிபு ஆடும்
வருடைமான் குழவிய வள மலை நாடனைத்
தெருள தெரியிழாய்! நீ ஒன்று பாடித்தை;
15
நுண் பொறி மான் செவி போல, வெதிர் முளைக்
கண் பொதி பாளை கழன்று உகும் பண்பிற்றே
மாறு கொண்டு ஆற்றார்எனினும், பிறர் குற்றம்
கூறுதல் தேற்றாதோன் குன்று;
புணர் நிலை வளகின் குளகு அமர்ந்து உண்ட
20
புணர் மருப்பு எழில் கொண்ட வரை புரை செலவின்
வயங்கு எழில் யானைப் பய மலை நாடனை
மணம் நாறு கதுப்பினாய்! மறுத்து ஒன்று பாடித்தை;
கடுங் கண் உழுவை அடி போல வாழைக்
கொடுங் காய் குலைதொறூஉம் தூங்கும் இடும்பையால்
25
இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றாக்கால்,
தன் மெய் துறப்பான் மலை;
என ஆங்கு,
கூடி அவர் திறம் பாட, என் தோழிக்கு
வாடிய மென் தோளும் வீங்கின
30
ஆடு அமை வெற்பன் அளித்தக்கால் போன்றே.



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?