நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Thursday 7 March 2013

திருவாசகத்தில் வினைஉருபன்கள்

 

திருவாசகத்தில் வினைஉருபன்கள்


       தமிழ் மொழிக்கண் தனிச்சிறப்பு வாய்ந்த நூல்களுள் ஒன்று திருவாசம்.ஒரு நூலின் சிறப்பிற்கு அதன் மொழிநடையும் காரணமாகும். ஒரு மொழியில் மக்களின் வாழ்வியல் முறை, செயல்பாடு,அனுபவ அறிவிற்கு ஏற்ப புதுப்  புதுச் சொற்கள் மொழியில் காலப்போக்கில் உருவாகி அல்லது கலக்கப்பெற்று வழக்கில் பயன்படுத்தப்படுகின்றன. இவை இலக்கியத்தில் இடம்பெறுவதற்கு நீண்ட காலம் ஆகின்றன.. சொற்கள் மட்டுமின்றி உருபுகளும் புதியதாக வழக்கில் அவ்வகையி்ல் பயன்படுத்தப்படுகின்றன.
மொழியியலில் சொற்களின் அடிப்படையாகக் கூறப்படும் உருபன்கள் காலப்போக்கில் தமிழில் பெற்ற மாற்றங்களை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்
இக்கட்டுரையில்,தொல்காப்பியத்தில் கூறப்படும் வினைஉருபன்களும் திருவாகத்தில் உள்ள வினைஉருபன்களும் ஆராயப்படுகின்றன.



    

உருபன் 

எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே‘ ..என்கிறார் தொல்காப்பியா். உருபன் என்பது ஒரு மொழியில் உள்ள பொருள் தரும் மிகச் சிறிய கூறாகும். இதனை ‘சொல்‘என்றும் குறிக்கலாம். பெயர் உருபன், வினை உருபன் என உருபன் இருவகைப்படும்.  வினை உருபன்கள் மட்டும் இங்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. வினை என்பது செயல் அல்லது தொழில் எனப்படும். வினை காலத்தைக் காட்டும். ஆனால் வேற்றுமை உருபுகளை ஏற்காது.(தொல்.683) வினை பால் காட்டும் விகுதிளைப் பெற்று வரும்.(படித்தான்) படி– வினை உருபன். ஆன் — ஆண்பால் விகுதி.

பால் காட்டும் வினைவிகுதிகள்


பால் காட்டும் வினைவிகுதிகள் எனப்படுபவை ஆண்பால்,
பெண்பால்,பலர்பால், ஒன்றன்பால்,பலவின்பால்(அ,ஆ,வ)என்ற ஐம்பால்களிலும், தன்மை,முன்னிலை,படர்க்கை என்ற மூவிடங்களிலும் வரும்.

தன்மை ஒருமை வினைமுற்று

பேசுபவன் தன்னைப்பற்றிக் குறிப்பிடுவதே தன்மை எனப்படும். தொல்காப்பியா் கு,டு,து,று,என்,ஏன்,அல்(685)போன்றவை தன்மை ஒருமை விகுதிகள் என்று கூறுகிறார்.பழந்தமிழிலக்கியங்களான சங்க இலக்கியங்களில் கு, ,என், ஏன், அல், அன், ச(இசின்) தன்மை ஒருமை வினைமுற்றுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்கிறார் அகத்தியலிங்கம். (1983.36)

திருவாகத்தில் வினைஉருபன்களாக,
விரைகின்றேன்(5-11)    
புரிந்திலன்(5-5)    
வேண்டேன்(5-12)
அகங்குழையேன்(5-14)
புனைந்தேத்தேன்(5-14)
அழைக்கின்றிலேன்(5-45)
புரிந்திலன்(5-5)
பரவுவனே(5-16)
உரைப்பன்(1-20)
வருத்துவன்(5-13)
கண்டது(6-32)
என்னை ஆண்டாய்க்கு(5-21)
வினையினேற்கு(5-21)
மறுத்தனன்(6-5)
செய்து(6-32)
அஞ்சல்(6-16) போன்றவை வருகின்றன.

இவற்றில் ‘ஏன்‘ விகுதியே பெரிதும் பயின்று வருகிறது.இது மூன்று காலங்களிலும் பயின்று வருகிறது. ‘அன்‘விகுதி அடுத்த நிலையில் வருகிறது. நன்னூலார்  தொல்காப்பியர் குறிப்பிடாத ‘அன்‘ விகுதியோடு சேர்த்து மேலும் எட்டு விகுதிகளைக் குறிப்பிடுகிறார்.(………..) தொல்காப்பியர் தன்மை ஒருமையாகக் குறிப்பிடும் சின் விகுதியைப் பலர்பால் படர்க்கையில் மாணிக்கவாசகர் பயன்படுத்துகிறார்.

தன்மை பன்மை வினைமுற்று

பேசுபவன் பிறரை உள்ளடக்கிப் பேசுவதே தன்மை பன்மை என்கிறோம்.அம்,ஆம்,எம்,ஏம்,கும்,டும்,தும்,றும் (நூ.687)போன்றவை தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பாடினோம்(7-8)
புத்தடியோம்(7-3)
சாற்றிச்சொன்னோம்(36-1)
சொல்லுவோம்(7-4)
பாடும்(7-10)
பாடுதும்(8-1)
வழியடியோம்(20-9)
போக்குகின்றோம்(20-9)
 மாணிக்கவாசகர் ஓம் டும் தும் போன்ற விகுதிகளைப் பயன்படுத்தியுள்ளார். தும் விகுதியை முன்னிலையிலும் படர்க்கையிலும் பயன்படுத்தியுள்ளார்.தொல்காப்பியர் குறிப்பிடாத ஓம் விகுதியை மாணிக்கவாசகர்பயன்படுத்தியிருப்பது பிற்கால வழக்கு ஆகும். நன்னூலார் ஓம் விகுதி (332)பற்றி குறிப்பிடுகிறார்.

முன்னிலை ஒருமை வினைமுற்று

    முன்னிலை ஒருமை வினைமுற்றுகளாக தொல்காப்பியத்தில் இ,ஐ,ஆய்உருபுகள் குறிப்பிடப்படுகிறது(708).திருவாசகத்தில் ஆய் உருபே பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
விட்டிடுதி கண்டாய்(6-9)
திறப்பாய்(7-7)ஆட்கொண்டாய்(5-25)
உணராய்(4-209)
இசைந்தனை(4-210)
மேற்கூறப்பட்ட உதாரணங்களில் ஐ உருபு அருகியே வந்துள்ளது. சங்க இலக்கியத்திலோ ஐ உருபு தான் அதிகம்.(1983.98). தொல்காப்பியர் காலத்தில் மிகுதியாக பயன்படுத்தப்பட்ட ஐ உருபு பிற்காலத்தில் அருகி போய் உள்ளது.

முன்னிலைப் பன்மை வினைமுற்று

   முன்னிலைப் பன்மை வினைமுற்றுகளாக இர்,ஈர்,மின் விகுதிகளை தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
பாடுமின்(9-11) ஆடுமின்(9-11)நேரிழையீர்(7-2)  கண்டீர்(36-1)நெஞ்சங்கொண்டீர்(36-2)

திருவாசகத்தில் மின், ஈர் மிகுதியாகப் பணன்படுத்தப்பட்டுயள்ளது.பழந்தமிழில் இர் ஈர் விகுதியே மிகுதியாகப் பய்படுத்தப்படடிருப்பதாக அகத்தியலிங்கம் (1983-220)கூறுகிறார்.மின் ஏவல் பன்மை வினைமுற்றாகவே திருவாசகத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.


படர்க்கை ஆண்பால் வினைமுற்று

     தொல்காப்பியர் அன்,ஆன் விகுதிகளைக் குறிப்பிட திருவாசகத்தில் இவற்றோடு ஓன் விகுதியும் குறிப்பிடப்படுகிறது.
ஏற்றினன் (3-175) நாட்டான்(1-90) தாழ்சடையோன்(10-14)
செய்தோன் (3-120)நன்னூலார் ஓன் விகுதி பற்றி குறிப்பிடுவதில்லை.  .

படர்க்கை பெண்பால் வினைமுற்று

தொல்காப்பியர் அள்,ஆள் விகுதிகளைக் குறிப்பிட திருவாசகமும் இவற்றையே குறிப்பிடுகிறது.இடந்தாள்(7-1) மடவாள்(5-17)மங்கையாள்

(42-1)வந்தனையாள்(7-15) 

படர்க்கை பலர்பால் வினைமுற்று

தொல்காப்பியர்அர்,ஆர், ப, மார் (691,692)எனக் குறிப்பிடப்படும் விகுதிகளோடு திருவாசகத்தில் ஓர் வகுதியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கற்றிலாதவர்(35-1) விரவார்(7-4) ஒழிந்தார்(20-3) வந்தோர்(5-85) கூடுவார்(5-55) சார்ந்தவர்(36-1) எதி்ர்ந்தவர்(35-3) மியா, இக, மோ,மதி,ஈகும்,சின் இம்மூன்றம் முன்னிலை அசைச்சொல் ஆகும் சின் படர்க்கையிடத்தும் வரும் என்பது தொல்காப்பியர் கூற்று.(759)

   படர்க்கை ஒன்றன் பால் வினைமுற்று

        கு,டு,று என்று தொல்காப்பியம் குறிப்பிடும் விகுதிகளில் து திருவாசகத்தில் உள்ளது.

அத்தி உரித்தது(13-18)

தாயுற்று(10-9)

படர்க்கை பலவின்பால் வினைமுற்று

அஆவ(492)என்ற தொல்காப்பியர் குறிப்பிடும் விகுதிகளே திருவாசகத்திலும் காணமுடிகிறது.

 ஆர்ப்ப(7-12) 

இயம்பின(20-3)

இசைத்தன(3-82)

செப்புவ(19-1)

செல்லா(1-29)

கழலிணைகள் (5-17)

கள் விகுதிபெற்று திருவாகத்தில் படர்க்கை வினைமுற்றுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அகர உருபு பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது.‘ வ‘உருபு வருவதில்லை. நன்னூலிலும் ‘வ‘ உருபு பற்றி குறிப்பு இல்லை.

காலம் காட்டும் உருபன்கள்

வினைச்சொற்கள் காலம் காட்டும் தன்மையுடையன. காலங்களை மூன்றாக வகைப்படுத்தி விகுதிகளையும் இலக்கணிகள் வரையறுத்துள்ளனர்.

கிடந்தாள்(7-1)

உரித்தது(13-19)

விக்கினேன்(24-9)

ஆசைப்பட்டேன்(25-3)

எண்ணிலேன்(26-5)

பெரும்பாலும் -ந்த்-,த்த்,ன்ற் இடைநிலைகள் பயின்ற வருகின்றன. நிகழ்காலத்தில் பெரம்பாலும் கின்று உருபு வருகிறது.கிற்,க் உருபையும் கையாள்கிறார்.

விரைகின்றேன்(5-14)

ஆசைப்படுகின்றேன்(26-5)

வாழ்கின்றாய்(5-20)

கொள்ளுகில்லேன்(5-46) போன்றவற்றில் கிற் உருபு உள்ளது.

தூகேன்,மெழுகேன்(5-14)  -க்-உருபு    

எதிர்கால்த்தில் ப்,வ் உருபன்களைக் கையாள்கிறார்.

சாவேன்(5-18)

திறப்பாய் (7-7)

பெறுவான் (25-1)

பாடும் (7-10)

புகுவிப்பாய் (1-43)

பரவுவார் (26-4)

கரப்பாய் (27-10)

காண்பான் (24-4)

ஏவல் வினை உருபன்கள்


பாடுமின்      - மின் (9-11)
பாடும்         உம் (7-10)
வளருதியோ   ஓ  (7-1)
நல்குதியே     இயே (7-9)
கேளீர்         ஈர் (7-20)
போக்காதே   - ஏ (7-4)

மின.,ஈர்,உம்,ஊ,ஏ,இயே முதலான ஏவல் வினை உருபன்களைக் கையாள்கிறார்.

வியங்கோள் வினைமுற்று

சேரற்க (7-19)
காணற்க(7-19)
அருளுக(7-20)
வாழ்க(1-1)
வெல்க(1-6)
காண்க(3-30)
உன உடன்பாடு எதிர்மறை,ஏவல்,வேண்டல்,வாழ்த்தல் பொருள்களில்
வியங்கோள் வினைஉருபுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

வினையெச்ச உருபன்கள்

வினையெச்சங்களாக திருவாசகத்தில் என்புருக,இறைஞ்சு, பருக, வந்து,நின்று,கருத,செய்ய, உய்ய, மாய, கிடந்து,சலியா முதலானவை பயின்று வருகின்றன.

முடிவுரை


சங்க காலத்தில் மிகுதியாக வழங்கிவந்த ஐ இர் ஈர் விகுதிகளின் பயன்பாடு திருவாசகத்தில் அருகி ஓம் ஓன் ஓர் விகுதிகள் தோன்றி பயன்படுத்தப்பட்டுள்ளன. சின் என்னும் முன்னிலை அசைச்சொல்லை மாணிக்கவாசகர் படர்க்கையில் பயன்படுத்துகிறார்.காலத்திற்கேற்ப வினை உருபளன்களில் சி அருகியும் சில தோன்றியும் வந்துள்ளமையை திருவாசகப்பாடல்கள் உணர்த்தி நிற்கின்றன.

துண நின்ற நூல்கள்

1.அகத்தியலிங்கம்,சங்கத்தமிழ், அனைத்திந்தியத் தமிழ் மொழியியற் கழகம்,அண்யாமலை நகர்,1983.
2.வரதராஜன்.ஜி,.திருவாசகம்-விரிவுரை,பழனியப்பா பிரதர்ஸ்,சென்னை-14. 1971.

 



 


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?