நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday 19 December 2014

நயமிகு பேச்சாற்றல்



நயமிகு பேச்சாற்றல்


தன் பொருளை பிறர் கவர்ந்து விடுவாரோ என்ற அச்சம், மாற்றரசனின் மிகு வலிமை போன்றவை பகையுணர்ச்சியைத் தோற்றுவிக்கின்றன. மாற்றரசனைக் கண்டளவில் பகை மேலும் வலுப்படுகிறது. ஆனால், மாற்றரசன் அத்தகையவன் அல்ல, அவன் பண்புடையவன்  என்ற உண்மையைப் புலவர்கள் எடுத்துரைத்து நட்பை ஏற்படுத்த முயல்கின்றனர். இதை ஒரு புறப்பாடல் காட்டுகிறது.

.ஒருமுறை உறையூரை ஆண்டுக் கொண்டிருந்த கோப்பெருநற்கிள்ளி யானை மீதமர்ந்து, தன்நாட்டைச் சுற்றிப்பார்த்துக் கொண்டு வந்தான். தன் நாட்டு எல்லைப் பகுதியை அவன் சுற்றி வந்து கொண்டிருந்த போது, அவன் ஏறி வந்த யானையானது மதம்பிடித்து ஓடத் தொடங்கியது. இதனைக் கண்ட சோழனின் படைவீரர்கள் செய்வதறியாது திகைத்து, யானையை நிறுத்துவதற்காகப் பின்னாலே ஓடினர். ஆனால், யானையோ மேலும் மிரண்டு எல்லைப்பகுதியைத்தாண்டி ஓடத் துவங்கியது. சோழ நாட்டின் எல்லையைக் கடந்த யானை, மாற்றரசனின் எல்லைக்குள்ளே பிளிறியபடியே ஓடியது. இதனால், விரைந்து யானை மீது அம்பு எறிந்தாவது, யானையை நிறுத்திவிட வேண்டுமென்ற ஆவேசத்துடன் சோழ வீரர்கள் அம்பையும், வில்லையும், வாளையும் கொண்டு யானையைப் பின் தொடர்ந்தனர். யானை மீது அமர்ந்திருந்த சோழனுக்கு ஏதும் ஆபத்து ஏற்படாத வகையில் யானையைத் தொடர்ந்தனர். யானையானது, மாற்றரசனான சேரமான் அந்துவச்சேரனின் நாட்டிற்குள் நுழைந்து அரண்மனையை நோக்கி ஓடத்தொடங்கியது


தன்னுடைய அரண்மனை மீதிருந்து புலவர் முடமோசியாருடன் பேசிக்கொண்டிருந்த சேரமான், யானை மதம் பிடித்ததை அறியாமல், பகையரசன் ஒருவன் மிகத் துணிவோடு சிறு படைகளுடன் தன் நாட்டின் மீது முன்னறிவிப்பு ஏதுமின்றிப் படையெடுத்து வருவதாக நினைத்து, ஆவேசத்துடன் எழுந்து நின்றான். வாளை உருவினான். யார் இவன் என முழங்கினான்.


நிலைமையைத் தன் கூரிய நுண்ணறிவால் உணர்ந்து கொண்ட முடமோசியார், யானை மீதமர்ந்து வரும் மன்னனை யார் எனக் கூர்ந்து நோக்கினார். அவன் சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி என்றும் சேரநாட்டிற்கு அருகிலுள்ள சோழ நாட்டைச் சேர்ந்தவன் என்றும் புரிந்து கொண்டார். அவனது யானை மதம் பிடித்து ஓடி வருவதையும், அவனைக் காப்பாற்ற வீரர்கள் பதற்றத்துடன் வாளேந்தி ஓடி வருவதையும் கவனிக்கிறார்.
உடனே சேரனிடம், தணிவாகச் சோழனைப் பற்றிக் கூறத்தொடங்குகிறார். மிகச்சிறந்த வளங்கள் நிறைந்த சோழ நாட்டைச் சார்ந்தவன் இவன்.  கொழுத்த மீனும், நீர் நிலையும், நெற் கதிர்களும், மயில்களும் உடைய நாட்டை ஆள்கின்ற சோழ மன்னன் இவன்தான். தன் நாட்டை வளப்படுத்தியதைப் போல வீரத்திலும் நிகரற்றவன். பகைவர் எய்த அம்பினை தன் மார்பில் தாங்கும் வலிமையுடையவன். இப்போது இவன் போரிட வரவில்லை, இவன் ஏறியுள்ள யானை மதம் பிடித்து, கூற்றுவனைப்போல் ஓடி வருகிறது. தன் பாகரும் அறியாதபடி மதங்கொண்ட இந்த யானையின் மீதுள்ள மன்னனைக் காப்பாற்றவே, இவனது படைவீரர்கள் இவன் பின்னே ஓடி வருகின்றனர். உன்னோடு போர் தொடுக்க இங்கு இவன் வரவில்லை. யாருக்கும் தீங்கிழைக்கவும் வரவில்லை. மதம் பிடித்த யானையே அவனை இங்குக் கொண்டு வந்திருக்கிறது. எனவே, மிகச்சிறந்த வீரனான இச்சோழன் எத்தகைய துன்பமும் இல்லாமல் இங்கிருந்து செல்ல அனுமதிப்பாயாக என்று கூறுகிறார்.


இங்குப் பகை தோன்று முன்பே, தன் முன்னறிவால்அதை முளையிலேயே கிள்ளி எறிந்து விடுகிறோர் புலவர். சேரன் அந்துவச் சேரலும் நிலைமையை உணர்ந்து கொண்டு, சோழனுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் பாதுகாப்பாக அனுப்பி வைக்கிறான். இதனால் இரு நாடுகளுக்கும் நல்ல உறவு தோன்றியது. நட்புணர்வு வளர்ந்தது. நடைபெற இருந்த போர் ஆரம்ப நிலையிலேயே தடுக்கப்பட்டது. இதனால் இரு நாட்டு மக்களின் அமைதியும் காப்பாற்றப்பட்டது. சோழனைப் பற்றியும் அவன் செங்கோன்மை, வீரம் பற்றியும், சேரன் உயர்வாகக் கருதுவதற்குப் புலவர் மோசியார் காரணமானார். அதுபோல், தனக்குத் தீங்கு எதுவும் விளைவிக்காமல் பாதுகாப்பாகத் தன் நாட்டிற்கு அனுப்பி வைத்த சேர மன்னன் மீது சோழனுக்கும் பெருமதிப்பு ஏற்பட்டது. புலவர் ஒருவேளை அந்தச் சமயத்தில்அங்கு இல்லாமலிருந்தால், நிலைமை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு மிகப்பெரிய போர் ஏற்பட்டிருக்கும். இதைத் தவிர்த்து இரு பெரு வேந்தர்களான சேரனுக்கும் சோழனுக்கும் இடையில் நட்பு தோன்ற ஏணிச்சேரி முடமோதியாரின் நயமிகு பேச்சாற்றல்தக்க சமயத்தில் உதவியுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?