நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday 15 August 2014

சீதாயணம் – நாடக நூல் அறிமுகம்





  


சீதாயணம் – நூல் அறிமுகம்
திரு. வையவன் நடத்தும் சென்னை தாரிணி பதிப்பகம்திரு. சி. ஜெயபாரதன் அவர்களின் சீதாயணம் நாடகத்தைஒரு நூலாக வெளியிட்டுள்ளது. ஜெயபாரதன் அவர்கள் இணைய தமிழ் வாசகர்களுக்கு மிகவும் அறிமுகமானவர். விண்வெளி ஆய்வுகள், இயற்பியல் விளக்கங்கள் போன்றவற்றைத் தவறாமல் தாங்கி வருபவை அவரது அறிவியல் கட்டுரைகள். சீதாயணம் நாடகமும் முன்பு திண்ணை இணைய இதழில் தொடர்ந்து வெளியானதுதான். 

சீதாயணம் என்னும் நாடகநூல் சீதாதேவியின் வாழ்க்கையை மறுபரிசீலனை செய்துள்ளது. சீதாயணம் சரியான ஆதாரங்களினடிப்படையில் எங்கும் சறுக்கிவிடாமல் மிகவும்  ஜாக்கிரதை உணர்வோடு கூடிய மிகவும் நேர்மையான பதிவு. . ஜெயபாரதன்அவர்கள்  சீதாதேவியின் பாத்திரமாகவே மாறி விட்டிருக்கிறார். மிகவும் துணிவோடு துல்லியமான தகவல்களின் அடிப்படையில் ஊகங்களை எல்லாம் நீக்கி விட்டு உண்மைத்தரவுகளை நம்பகத்தன்மையோடு  வெளியிட்டுள்ளார்.
 
இலக்கிய ஆய்விலும் அறிவியல் அணுகுமுறைதான் கடைப்பிடிக்கப்படவேண்டும் என்று மாணவர்களுக்கு வலியுறுத்துவோம்.  ஜெயபாரதன் அவர்கள்    அடிப்படையில் விஞ்ஞானியாக அமைந்து விட்டதும், அதுவும் இந்திய பெண்மணிகளில் தலைசிறந்தவளாகக் கருதப்படுகிற பெண்மணியான சீதாதேவியின் வாழ்க்கையை ஆராய்ந்து, அறிவியல் ஆய்வினைப்போல் நடுநிலையோடு நின்று உண்மையை வெளியிட்டுள்ளதும், ஆணாதிக்கப்போக்கினால் சீதாதேவியின் கதை இராமனின் கதையாக மாற்றப்பட்டிருப்பதாகக் கூறியிருப்பதும் பெண்ணிய ஆய்வுகளுக்கு வலிமையைக் கூட்டியுள்ளது. பெண்ணிய ஆய்வில் இந்த நாடகம் ஒரு மைல்கல். பெண்ணியலாளர்கள், புராண இதிகாச மாந்தர்களை இதுபோல் மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய தேவையை இந்த நாடகம் சிறப்பாக உணர்த்தியுள்ளது.

  பெண் என்பவள் உருவாவதில்லை,உருவாக்கப்படுகிறாள் என்ற கூற்று எவ்வளவு உண்மை. எல்லா வல்லமையும் உடைய பெண், திருமணம் என்ற பெயரால் வலிமையற்று அன்பிற்காக ஏங்கி இறுதிவரை அந்த அன்பு கிடைக்காத சூழலில் மரணத்தைத் தஞ்சமடையும் இழிநிலை இன்னும் தொடர்வதுதான் வேதனையிலும் வேதனை.

அனுமனை மனிதன்தான் என்று ஜெயபாரதன் அவர்கள்  ஆணித்தரமாகக் கூறியுள்ளார். இராமனின் வெற்றுச் சமாதானங்களை ஏற்றுக்கொள்ளமுடியாது என்பது போன்ற தெளிவும்,மனைவியைக் கைவிட்ட இராமனோடு சீதாவையும் இணைத்து ஆதர்ச தம்பதிகளாக வணங்கிவரும் பக்களின் பேதமையைத் துகிலுரித்துக் காட்டியிருக்கிற பாங்கும்,இந்த இராமனுக்கு கோயில் எழுப்புவதற்காகப் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவிக்கும் அவல நிலையைச் சுட்டிக் காட்டி,அதற்குத் தீர்வும் கூறிச் சென்றுள்ள சமூக அக்கறையும் மிகமிக சிறப்பாக அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 ‘
அன்பில்லாதவரைக் கண்டால் அம்ம நான் அஞ்சுமாறேஎன்ற மாணிக்க
வாசகரின் வரிகளில் ஒலிக்கும் அச்சம் சீதாவின் அவலக்குரலிலும் நாடகம் முழுவதும் ஒலித்து கொண்டேயிருக்கிறது..இந்த உலகில் உள்ள மனிதர்களெல்லாம், வளங்களெல்லாம் பெண்ணின் கொடைகளே. ஆனால், பெண்ணிற்கு எதுவும் சொந்தமில்லை.அவள் வாழ்க்கை கூட அவளுக்குச் சொந்தமில்லை. மனிதப் பிறவியாகக் கூட கருதாத நிலைதான் உள்ளது என்பதை சீதாதேவியின் வாழ்க்கை மூலம் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.  நானும் சீதை தற்கொலைதான் செய்து கொண்டிருப்பாள் என்று எண்ணம் கொண்டிருந்தேன். அதை ஜெயபாரதன் அவர்கள்  படைப்பில்  படித்தபோது வியந்துபோனேன்.

அன்னை சீதைக்கே அந்நிலையென்றால்.............? 
இன்று பெண்ணைக் கருவிலேயே கொன்றுவிடும் மாக்கள் நிறைந்த இந்த  உலகில் பெண்களின் நிலை ? “வால்மீகி, சீதாயணம் என்று தான் பெயர் வைத்து இருப்பார்,, ​இராமனை சாதாரணனாகத்தான் அவர் படைத்திருக்கிறார், பின்னால் வந்தவர்கள்தான் இராமனுக்குக் கடவுள் சாயம் பூசி விட்டார்கள்“ என்ற கசப்பான உண்மையை உண்மையான மனிதராக இருந்து (மதம்கடந்து) வெளியிட்டுள்ளத் ஜெயபாரதன் அவர்களை  வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.
அட்டைப்படமும் உள் படங்களும் மிக அருமை. ஜெயபாரதன் அவர்களின்  நாடகத்திற்கு வலிமை சேர்த்துள்ளன. நல்ல கட்டமைப்பு. எளிதில் படிக்கக் கூடிய கைக்கு அடக்கமான வடிவம். வடிவத்தில் சிறியது என்பதினால் குறளை குறைத்து எடைபோட்டுவிட முடியுமாஅதுபோல்தான் .சீதாயணமும்.

மதச்சார்புத்தன்மைகளைப் பெண்ணியம் கண்டு கொள்வதில்லை. மாறாக புறந்தள்ளி வருகிறது.ஏனெனில் மதமும் பெண்ணடிமைத்தனத்தை மறைமுகமாக வலியுறுத்துகிறது. பெண் மையநோக்கில் மடடுமின்றி தனி மனித நோக்கே பெண்ணியத்தின் மையப் புள்ளியாதலால், ஆணுக்குரிய விதி, பெண்ணுக்குரிய விதி என்று பாகுபடுத்தாமல் பொதுநோக்கிலேயே பெண்ணியக் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.ஒரு விதி அல்லது நியதி ஆணுக்குரியதென்றால் அது பெண்ணுக்கும் உரியதே.
ஆணாதிக்கச்சிந்தனைகள் தாய்ப்பாலோடே கலந்தூட்டப்படும் இச்சமூகத்தில் ஜெயபாரதன் மாற்றிச் சிந்தித்திருப்பது பெரிதும் பாராட்டுக்குரியதே.
jayabarathan.wordpress.com/seethayanam/
puthu.thinnai.com/?p=25398 



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?