நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Thursday 9 April 2020

திருவாசகத்தில் தொடர்கள்



திருவாசகத்தில் தொடர்கள்

                சொற்கள் தனியாக இருக்கும்பொழுது அவற்றிற்கு முழுப்பொருளையும் உணர்த்தும் ஆற்றல் முழுவதும் இல்லை. அவற்றைத் தக்கவகையில் பயன்படுத்தும் நிலையிலேயே அவை பொருளைச் சரியாக உணர்த்துகின்றன. சொற்கள் இடம் நோக்கியே சரியாகப் பொருளை உணர்த்துகின்றன. சொற்கள் இடம் நோக்கியே சரியான பொருளை உணர்த்தும். சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுப்பதே ஒருவகை ஆற்றலாகும். அவற்றை இடம் நோக்கிச் சிறந்த முறையில் அடுக்கிக் கவிதையில் இடம்பெறச் செய்வதென்பது தேர்ந்தெடுத்தலை விடப் பெரிய ஆற்றலாகும்.
                கவிஞன் சொற்களை ஒரு குறிப்பிட்ட முறையில் அடுக்குவதன்மூலம் அச்சொற்கட்குத் தனிப்பட்ட முறையில் பெருஞ்சிறப்பை வழங்கி விடுகிறான். ஒரு சொல்லின் சிறப்பானது, அது பிற றசாற்களுடன் தொடுக்கும்பொழுதே வெளிப்படுகிறது. எனவே, சொற்தொடர் அமைப்புப் பற்றி அறியவேண்டியது அவசியமாகிறது. சொற்றொடர் பல இணைந்து வாக்கியம் உருவாகிறது.

சொற்றொடர் நயங்கள்
                தாம் கொண்ட கருத்தையும், உணர்ந்த உணர்ச்சியையும் விளக்குவதற்கு மிகச் சிறிய தொடர்களையே கையாளுகிறார். சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் வல்லவராகத் திகழ்கிறார். மணிவாசகரின் அடைமொழித் தொடர்கள் இதற்குச் சான்று பகர்கின்றன.
எ.கா
                                முத்தண்ண வெண்ணகையாய்
                                கேடு படாத்திருவடி
                                மனத்து அமுதாஞ் சங்கரன்
                திருவடி, சங்கரன் முதலான சொற்கள் தனித்திருக்கும் பொழுது மிகச் சாதாரணப் பொருளையேத் தருகின்றன. ஆனால், அவற்றைத் சேரும் அடை மொழிகளால் மிக அழுத்தமான பொருளைத் தந்து நிற்கின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு தொடரை மட்டும் எடுத்துக் கொண்டு ஆரரய்வோம். சட்டோ நினைக்க மனத்து அமுதாம் சங்கரன்என்ற தொடரில் சங்கரன் என்றாலே இன்பத்தை அளிப்பவன்என்று பொருள் கொள்ளப்படும்.
அமுதமும் இனிய சுவையைத் தரக்கூடிய போல மனதிற்குச் சுவை தரக்கூடியவன் அமுதம் போல மனதிற்குச் சுவை தரக்கூடியவன் இறைவன் என்பதை மனத்து அமுதாம் என்ற தொடர் உணர்த்துகிறது. அதாவது, இறைவன் மனதிற்கு அமுதானவன் என்கிறார். எப்பொழுதெல்லாம்? என்ற தொடரை அடையாகப் பெய்கிறார். இறைவனை நினைத்தாலே போதும். நினைக்கும் பொழுதொல்லாம் நம் மனத்திலே அமுதமான இன்ப உணர்வை அளிப்பவன் என்பதை மிக அழகாக சிறிய சொற்களை இணைத்து உணர்த்திவிடுகிறார். இத்தொடரில் உள்ள ஒவ்வொரு சொல்லும் வலிமையான ஆற்றலையும், உணர்ச்சியையும் பெற்று விளங்குகின்றன.
                இதைப்போலவே, திருச்சதச காருணியத்திரங்கல் பகுதியில் இறைவனை ஏத்துமிடத்தும், இரங்குமிடத்தும்,
                                ஓப்பில் ஒருத்தன்
                                ஆட்கொள்ளும் வள்ளல்
                                மங்கையோர் பங்கா
                                மங்கை கூறன்
                                அன்பர்க்கவரிலும் அன்பன்
                போன்ற அடைமொழித் தொடர்களைக் கையாளுகிறார். வள்ளல், அன்பன் போன்ற சொற்களைப் பயன்படுத்துவதன்மூலம் இறைவனின் கருணைத்திறத்தை வியப்பதோடு, தன்னையும் வந்து ஆட்கொள்ள வேண்டும் என்ற விருப்பப்பொருளும் பொதிந்துள்ளது. இறைவனை ஏத்தும் பொழுது இவ்வகைச் சொற்களைப் பெய்கிறார்.
                இறைவனை நோக்கி இரங்கும் நிலையில், மங்கை பங்கா, மங்கைகூறன் உமையாள்பங்கா போன்ற அடைத்தொடர்களைப் பயன்படுத்துகிறார். கருணையுடைய தாயான உமையுடன் இருக்கும் பொழுது, இறைவன் விரைவில் அருள்புரியக்கூடும் என்ற நம்பிக்கை கலந்து இத்தொடர்கள் நயமாக வெளிப்படுத்தப்படுவதைக் காணமுடிகிறது.
சொற்றொடரில் பொருள் நயங்கள்
                இறைவனுடைய பெருமையையும், கருணையையும் வியந்துரைக்கத் தொடர்களில் அடைமொழிகளைப் பயன்படுத்தியுள்ளதைப் போல, தன்னுடைய நிலையை உணர்த்தவும் அடைகளைப் பயன்படுத்தியுள்ளார் ஆசிரியர். இறைவனைக் குறிக்கும் அடைமொழிகள் உயர்ந்த தன்மையைப் புலப்படுத்துவன போல், மணிவாசகரின் நிலையைக் குறிக்கும் அடைமொழிகள் இழிவான தன்மையைப் புலப்படுத்தி நிற்கின்றன. இவ்வாறு, அடைமொழிகளையும் இடம் நோக்கி வெளிப்படுத்தும் நயத்தைத் திருவாசகத்தில் பரக்கக் காணமுடிகிறது.
                                ‘‘நாயடினேன்’’   (5-13)
நாய்ப் பிறப்பு இழிவானது. அனைவரும் வெறுக்கும் அலைக்கழிப்பு நாய்ப்பிறப்பிற்கே உரித்தானது. அத்தகைய நாய்ப்பிறவியாகக் தன்னைக் கூறிக்கொள்கிறார். மணிவாசகர். இறைவனின் பெருமையை நினையாது வாழ்நாளைக் கழித்தமையால் தன்னை இழிவான நாயாகக் கூறுகிறார். இன்னொரு வகையில் நாயானது நன்றியுடையது. நாய் போலத் தானும் சிறுமையுடையவன்ஆனாலும், இறைவன் தனக்களித்த உதவியை நினைத்து உருகும் நன்றியுடைவன் என்னும் பொருளையும் தந்து நிற்கிறது. இருவேறு பொருள் தரும் வகையில் ‘‘நாயடியேன்’’ என்ற தொடர் காணப்படுகிறது.
இறைவன் ஆட்கொண்டு பின்னனர், விட்டுச் சென்ற நிலையில் தான் அடைந்த இன்னல்களை சிறு தொடர்களில் விளக்குகிறார்.
                ‘‘ஆனைவெம் போரிற் குறுந்தூறென’’                (6-21)
                ‘‘இருதலைக் கொள்ளியின் உள்எறும்பு ஒத்து’’            (6-9)
யானைகள் போர் செய்யும் இடத்தில், அதன் கால்களுக்கிடையில் அகப்பட்ட சிறு துறும்பானது அல்லப்பட்டு அழிவதுபோலத் தானும், ஐம்புலன்கள் என்னும் வலிய யானைகளுக்கிடையில் அகப்பட்ட சிறுதுறும்பு போல அழிகிறேன் என்பதைச் சிறு தொடர்களின் வழி ஒரு காட்சியினை உருவாக்கி. காட்டுகிறார்.
இருதலைக் கொள்ளியானது, இருபுறம் பற்றி எரியும் கொள்ளிக் கட்டையாகும். நடுவில் துளையுடைய இத்தகைய கொள்ளிக் கட்டையினுள் நுழைந்த எறும்பானது, எவ்வாறு வெளிவர முடியாமல் தவிக்கின்றதோ அதைப் போலத் தாம் உலக வாழ்க்கை வெறுப்பிற்கும், இறைவனது பிரிவுக்கும் இடையில் செய்வதறியாது தவிக்கின்றேன் என்று தன் செயலற்ற நிலையை விளக்குகிறார்.
இவ்வாறு சிறு சிறு தொடர்களின் மூலம் தன் கருந்தை, ஒரு நிகழ்ச்சியை முழுமையாக வெளிப்படுத்துகிறார்.
வாக்கிய அமைப்பு
‘‘ஓவியனுக்கு வண்ணங்கள் பயன்படுவதைப் போல, சிற்பிக்குக் கல் பயன்படுவதைப் போல எழுத்தாளனுக்குச் சொற்கள் பயன்படுகின்றன’’ என்பார் இரபிசிங் (1980-19)
சொற்களை ஒரு முறைப்படி நயமும் லயமும் இயைய பொருத்தமுடன் இணைத்து, சொற்றொடராக்கி அச்சொற்றொடர்களைக் கொண்டு சொல்ல வந்த கருத்தை முழுமையாக வாக்கியத்தில் அமைத்து ஒரு முழு வடிவத்தை இலக்கியப் படைப்பாகத் தருகிறான் கலைஞன். இந்த வடிவ அமைப்பானது இருவகையில் அமைகிறது.
‘‘வாக்கியத்தைக் கருத்து வகை மற்றும் அமைப்பு வகை என இரு வகைகளாகப் பிரிப்பர். கருத்தைக் கொண்டு செய்தி வாக்கியம் என்றும், வினா வாக்கியம் என்றும், விழைவு வாக்கியம் என்றும், வாக்கியம் என்றும்பிரிப்பது ஒருவகை. அமைப்பை ஒட்டி வாக்கியத்தைத் தனிவாக்கியம் எனவும், தொடர் வாக்கியம் எனவும், கலவை வாக்கியம் எனவும் பிரிப்பது மற்றொரு வகை என்கிறார் பிரந்தாமனார்.
கருத்து வகை வாக்கியம் 
                ஒரு கருத்தை வலியுறுத்தி மக்கள் பதிய வைக்க நீண்ட வாக்கியங்களைப் பயன்படுத்துவர். அவ்வாறு பயன்படுத்தும்பொழுது கேட்பவர்க்கு சலிப்பு  ஏற்படாத வகையில் வருணைகளை இடையிடையே இடம்பெறச் செய்வர். இதுபோல வருணனை, உவமை, உருவகம், தொடர்களில் பழமொழி, திரும்பச் சொல்லுதல் போன்ற அனைத்தையும் பயன்படுத்துவதைக் கருத்து வகை வாக்கியம் என்பர்.
வருணனை வாக்கியம்
                திருவண்டப் பகுதியில் வருணனை வாக்கியத்திற்கான எடுத்துக்காட்டினைக் காண்போம். இறைவனுடைய பேரருள் திறனையும், அண்டங்களையெல்லாம் தன்னுள் அடக்கிய பேராற்றல் திறனை அறிவிக்கும் பொருட்டுத் தொடர்ச்சியாக வருணைகளை அடக்கிச் செல்கிறார்.
எ.கா
                                  ‘‘பரமானந்தப் பழங்கடலதுவே
                                  கருமாமுகிலிற் றோன்றித்
                                  திருவார் பெருந்துறை வரையிலேறித்
                                  திருத்தகு மின்னொளி திசை திசைவிரிய
                                  வைம்புலப் பந்தனை வாரள விரிய
                                  வெந்துயர்க் காடை மாத்தலை கரப்ப’’          (4-66-71)
இயற்கையில் நிகழும் ஒரு நிகழ்ச்சியை வருணனைகளால் அடுக்கிக் காட்டுகிறார்.
                கடல்நீர் ஆவியாகி மேகமாகும். மேகம் குளிர்ந்து மழைபொழிகிறது. அப்போது இடியும் மின்னலும் தோன்றும் இடிச்சத்தத்தைக் கேட்டுப் பாம்புகள் அஞ்சி ஓடும். மழை பெய்தலினால் கொடும்கோடை அகலும். இது இயற்கையில் நிகழும் ஒரு நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியோடு இறைவனுடைய கருணையை ஒப்பிட்டுக் காட்டுகிறார்.
பழங்கடலாக இறைவனை உருவகம் செய்கிறார். அப்பழங்கடலானது மேகமாகியது என்பதை இறைன் குருவடிவாகினான் என்றும், மலையைச் சார்ந்து மேகமாகியது என்பதை இறைவன் குருவடிவாகினான் என்றும், மழை பொழியும் பொழுது தோன்றும் மின்னலை இறைவனின் மெய்ஞ்ஞானம் என்றும் ஒப்பிடுகிறார்.
இடி, மின்னல் ஒலி கேட்டுப் பாம்புகள் அஞ்சி ஓடுவதை ஐம்புலன்களாகிய அரவுகள் அஞ்சி ஓடும் என்றும் கோடை விலகும் என்றது பிறவித்துயர் விலகும் என்றும் வெப்பம் நீங்கி உயிர்கள் பேரின்ப வெள்ளத்துள மூழ்கித் திளைக்கும் என்றும் இயற்கை நிகழ்ச்சியோடு இறைக்காட்சியை ஒப்பிட்டு வர்ணித்துச் செல்கிறார்.
உவமை
                பல்வேறு வகையான பொருள்களோடு தன்னையும், இறைவனை ஒப்பிட்டுக் காட்டுகிறார்.
                                ‘‘மத்துறு தண்தயிர்’’     (6-30)
                                ‘‘தீப்புகுவிட்டிலிற்     (6-5)
இரண்டு உவமைகளுமே ஐம்புலன்களால் அலைப்புண்ட மணிவாசகரின் நிலையைத் தெரிவிக்கின்றன. இங்குத் தன் நிலையை இரண்டு காட்சிகளோடு ஒப்பிட்டுக் காட்டுகிறார். மத்துறு தயிரானது எவ்வாறு அலைபடும் என்பதையும், தீயிற்பட்ட பொருள் எவ்வாறு பொதும்பி அலையுறும் என்பதையும் உலக மக்கள் நன்கு அறிவர். இதைப்போலத் தானும் வெதும்பி ஐம்புலன்களால் ஆட்பட்டு அலையுறுகிறேன் என்று அன்றாடம் உலக வழக்கில் நடக்கும் இரு செயல்களின் மூலம் ஒப்புக்காட்டி உவமித்துள்ளார்.
உருவகம்
                உவமையை விட சிக்கலானதும், ஆழமானதும் உருவகம் ஆகும். உருவகமானது பொருளைச் சிறப்பிப்பதோடு அப்பகுதிக்கு அழகும் கூட்டுகிறது. திருவண்டப்பகுதியில் உள்ள ஒரு உருவகப் பகுதியைக் காண்போம். இப்பகுதியைக் காண்போம். இப்பகுதியில் சிவானந்தத்தைக் கடலாகவும், ஞானாசிரியனை மேகமாகவும், பெருங்கருணையைப் பேரிடியாகவும், புறச்சமயங்களைப் பேய்த்தேராகவும், இருவினைகளை வெள்ளம் தள்ளும் ஆற்றங்கரை மரங்களாகவும் உருவகித்துள்ளார் (5-66-95).
தொடர் மொழி
                மக்கள் அன்றாடம் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் வாக்கியங்களை இலக்கியத்தில் கையாளுவது ஒருவகை உத்தியாகும். மக்கள் தன் அனுபவத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும், இயற்கையில் நிகழும் நிகழ்ச்சிகளையும் குறிப்பிட்டுத் தன் நிலையை விளக்கத் தொடர்மொழிகளைப் பயன்படுத்துவர்.
                                ‘‘கொம்பரில்லாக் கொடி’’           (6-20)
                                ‘‘பலாப்பலத்தீயி னொப்பாய்’’   (6-46)
                இவற்றை அமைத்துள்ளதின் மூலம் சாதாரண மக்களிடம் தனக்கிருந்த தொடர்பைப் புலப்படுத்துகிறார்.
மேற்கோள் தொடர்
                சாதாரண மக்களைக் கவர்வதற்குத் தொடர்மொழியைப் பயன்படுத்தியதைப் போலக், கற்றாரைக் கவரவும் இலக்கியங்களில் வழங்கி வந்த புகழ்மிக்கத் தொடர்களையும் ஆங்காங்கே எடுத்தாளுகிறார்.
எ.கா
                                ‘‘பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏற்றுமின்’’  (மணிமேகலை 1-61)
                                ‘‘பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை’’             (திருவாசகம் 5-49)
                                ‘‘பற்றுக பற்றற்றான். பற்றினை அப்பற்றைப்
                                பற்றுக பற்று விடற்கு’’              (குறள் 350))
                                ‘‘பற்றற நாம்பற்றுவான் பற்றிய பேரானந்தம்’’ (திருவாசகம் 8-20)
 இவ்வாறு கையாண்டுள்ள மேற்கோள் தொடர்கள் வாக்கியத்தின் உயிர்நாடியாக விளங்குகின்றன.
பழமொழி
                மக்களுடைய அனுபவங்கள் பழமொழிகளாக வழங்கி வருகின்றன. மனிவாசகர், பழமொழிகளின் மூலம் தனது எண்ணங்களையும் சொல்ல நினைத்தவற்றையும் முழுமையாக, தெளிவான உணர்த்தி விடுவதோடு, கேட்பவரும் அவ்வுணர்ச்சியை முழுமையாக உணரும் வண்ணம் உணர்த்திப் பழமொழிகளுக்கே பொருட் சிறப்பை உண்டாக்கிவிடுகிறார்.
எ.கா
                                ‘‘ஊரா மிலைக்கக் குருட்டமிலைந்து’’                                (5-87)
                                ‘‘கொடிறும் ம்பதையும் கொண்டதுவிடாது’’    (4-63)
திரும்பச் சொல்லுதல்
                இறைவனைக் கருணையுடையவன் என்பதைத் திரும்பத் திரும்பப் பல அடைமொழிகளையும் சொற்றொடர்களையும் அமைத்து எடுத்துக்காட்டுகிறார்.
                                ‘‘கருணையின் பெருமை கண்டேன்’’   (3-20)
                                ‘‘மாப்பெருங் கருணையன்’’                      (2-107)
                                ‘‘மருவிய கருணைமலையே’’                 (4-194)
                                ‘‘பெருங் கருணையாளன்’’                         (2-45)
                                ‘‘கருணையினால் ஆண்டுகொண்ட’’     (10-11)
                இவ்வாறு கருணையுடைய இறைவனை, வேண்டித்தொழுதால் நிச்சயம் அருள் புருவான் என்ற கருத்தை மக்கள் மமதில் அழப்பதிய வைக்கவே கருணைத்திறனைத் திரும்பத் திரும்பத் போற்றுகிறார்.
அமைப்பு வகை
                வாக்கியங்களை அமைக்கும் நிலையில் பல உத்.கிளைப் பயன்படுத்தியுள்ளார் ஆசிரியர். இலக்கண மரபுப்படி, எழுவாய் முதலிலும் பயனிலை அடுத்தும் இடம்பெறும் வாக்கிய அமைப்பையே பெரும்பாலும் கையாளுகிறார்.
எ.கா
                                ‘‘மலைமகளை ஒருபாகம் வைத்தல்’’                (12-7)
                                ‘‘யானேதும் பிறப்பஞ்சேன்’’                      (5-12)
வினைமுற்றை முதலில் கூறுதல்
                முணிவாசகர் வாக்கிய அமைப்பில் புதுமையைப் புகுத்தியுள்ளார். வினை முற்றாகிய பயனிலையை முன்னரே கூறிஎழுவாயைப் பின்னர் அமைக்கிறார். அவ்வாறு அமைக்கும்பொழுது இரு கலைகளைக் கையாளுகிறார். நான்கடிப் பாடல்களில் ஒரு அடியில் மட்டும் இத்தகைய மற்றத்தைக் கையாளுதல், அடிதோறும் மாற்றத்தைக் கையாளுதல். இவ்வகையில்,
                                ‘‘தரிக்கிலேன் காய வாழ்க்கை’’              (5-61)
என்று ஒரு அடியிலும்,
                                 ‘‘பாட வேண்டும் நான்
                                  ஆட வேண்டும் நான்
                                  கூட வேண்டும் நான்
                                  வீட வேண்டும் நான்
                என்று அடிதோறும் வினைமுற்றை முதலில் கூறுதைக் காணலாம். திரும்மானைப் பாடலொன்றில் (8-17)
ஆறு அடியிலும் வினைமுற்று முதலில் அமைந்து வருகிறது. சொல்ல வந்த கருத்தை அழுத்தமாகச் சொல்ல விரும்பும்பொழுது இவ்வாறு வினைமுற்றை முதலில் அமைத்து, ஒரு இசை  நயத்துடன் வீரஉணர்வு தோன்றும்படி அமைத்துள்ளார்.     
வாக்கியத்தில் எளிமை
                தன் தருத்தை எளிமையாகச் சொல்ல முயலும்போது,
                                ‘‘ஆராத இன்பம் அருளும்மலை போற்றி’’ (1-16)
ஓரே அடியில் கருத்து நிறைவு பெறும் வண்ணமும்,
                                ‘‘ஆஆ அரி அயன் இந்திரன் வானோர்க்கு அரியசிவன்
                                  வாவா என்று என்னையும் பூதலத்தே வலித்து ஆண்டுகொண்டான்’’ (11-17)
என இரண்டு அடிகளில் கரத்து நிறைவு பெறும் வண்ணமும்
                                ‘‘புத்தன் புரந்தரஆதி அயன்மால் போற்றிச் செயும்
                                  புத்தன் பெருந்துறை மேயபிரான் பிறப்புஅறுத்த
                                  அத்தன் அணிதில்லை அம்பலவன் அருள்கழல்கள்’’            (11-16)
என மூன்று அடிகளில் கருத்து நிறைவும் வண்ணமும் அமைத்துள்ளார். மேலும் ஒரே அடியில் இரண்டு கருத்துக்கள் அமையும் வண்ணமும்,
                ‘‘முன்னோன்காண்க முழுதோன் காண்க’’        (3-29)
ஓரே அடியில் பல கருத்துக்கள் அமையும் வண்ணமும்,
                                ‘‘சுற்றுமின், சூழ்மின், தொடர்மின், விடேன் மின்,’’ (3-144)
என வாக்கியங்களில் கருத்துக்களை அமைத்துள்ளார்.
                இவை மட்டுமின்றி நான்கடிப் பாடல்களில், ஒவ்வொரு அடியும் ஒரு கருத்தை உணர்த்தும் வண்ணம் படைத்துள்ளார்.
                                ‘‘யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக்குஎன் கடவேன்
                                  வானேயும் பெறில்வேண்டேன் மண்ஆள்வான் மிதித்தும் இரேன்
                                  தேனேயும் மலர்க்கொன்றைச் சிவனே எம்பெருமான் எம்
                                  மானேஉன் ன்ருள்பெறும்நநாள் என்று என்றே வருந்துவனே’’ (5-12)
                என்ற பாடலில் உள்ள ஒவ்வொரு அடியுமே ஒரு கரத்தை வெளிப்படுத்தி நிற்கிறது. இடையில் உள்ள ஒரு தனித்த அடியை எடுத்துப் படித்தாலும் முழுமையான ஒரு கருத்தைத் தருகிறது.
                கேட்பவர்க்கும் புதுமை ஆர்வமும், விருப்பமும் உண்டாக்க்வே இவ்வாறுறு வாக்கிய அமைப்பில் மாற்றங்களைப் புகுத்தியுள்ளார் மணிவாசகர்,
நீண்ட தொடர் வாக்கியம்
                முதல் அடியில் தொடங்கி, இறுதி அடிவரை வினைமுற்றை அமைக்காமல், தொடர்ந்து பாடல் முழுவதையுமே ஒரே வாக்கியத்தில் அமையும் வண்ணம் எச்சங்களையும், உம்மைத் தொகைகளையும் பயன்படுத்தி, கீர்த்தித்திருவகவல் என்னும் பகுதியை நூற்றி நாற்பத்தியாறு அடிகளில் அமைத்துள்ளார். சில வரிகளை மட்டும் காண்போம்,
எ.கா.
                                ‘‘.....................  ............................ அருளியும்
                                  நந்தம் பாடியின் நான்மறையோனாய்
அடியின் இறுதியில் உம்மைத்தொகை இடம்பெற்று வாக்கியம் தொடர்கிறது.
                                ‘‘அருளியும், கொள்கையும், படிந்தும்,
                                  வினைத்தும், வெய்தியும், சிறப்பும்’’
போன்றவை சில, எச்சங்களும் அடியின் இறுதியில் அமைக்கப்பட்டு வாக்கியத் தொடர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
எ.கா
                                விளங்கி, அருளி, வைத்து,
                                இரப்ப, செல்வனாகி, இயல்பினதாகி போன்றவை.
உணர்ச்சி வாக்கியம்
                தன் கருத்தை உணர்த்தும் அரிய கலையான உணர்த்தும் கலையில் ஒவ்வொருவரும் உணர்ச்சியடிப்படையில் வேறுபடுவர். மணிவாசகரும் வாக்கியங்களை அமைக்கும்பொழுது உணர்ச்சி அடிப்படையில்
                நானேயோ தவஞ்செய்தேன் என்று வினா வாக்கிய அமைப்பிலும்,
                சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க (8-) என்று வியங்கோள் வாக்கிய அமைப்பிலும்,
                ‘‘போனதிசை பகராய் இன்னும் புலர்த்தின்றோ’’
என்று ஏவல் வாக்கிய அமைப்பிலும் அமைத்துள்ளார்.
                இவ்வாறு சொல் நிலையில் தொடரியலை ஆய்வதோடு, பொருள் நிலையிலும் ஆயும்பொழுது மணிவாசகரின் மொழிநடை மேலும் சிறப்பானதாகத் தோன்றுகிறது.
மொழியமைப்பு
1.             மணிவாசகர் ஒலிக்குறிப்புச் சொற்களின் மூலம் மக்களிடம் விருப்பத் தன்மையை ஏற்படத்த முயன்றுள்ளார்.
2.             தன்வினையுருபன்களை அதிகமாகப் பயன்படுத்தி உள்ளார். தன் நிலையை உணர்த்துவதன் மூலம் மக்களைச் செயல்பட வைக்கிறார்.
3.             சிலசொற்கள் திரும்பப் பயின்று வருகின்றன. சிவன், பா.வ்தி, அன்பன், அன்பு, கருணை போன்ற சொற்கள், திரும்பத் திரும்பப் பயின்று வருகின்றன. இச்சொற்களை மக்கள் மனதில் அழப் பதிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இவ்வாறு செய்கிறார். மேலும், இச்சொற்களைக் கணக்கிடும்பொழுது மணிவாசகருக்கு விருப்பமான சொற்களாகவும் இவை விளங்குவதை அறியமுடிகிறது.
4.             இலக்கிய வழக்கு, பேச்சு வழக்கு, விசேடச் சொற்கள், திசைச் சொற்கள் போன்றவை மணிவாசகரின் புலமைப் பயிற்சியை, பரந்ந் அறிவை வெளிப்படுத்தி நிற்கின்றன.
5.             வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தும்பொழுது உச்சரிப்பு மாறாமல் அப்படியே பயன்படுத்தல், தமிழ்ப்படுத்தல், தமிழாக்கம் செய்தல் என்ற மூன்று கொள்கைகளை மொழியமைப்பில் பயன்படுத்தியுள்ளார்.
6.             அடைச்சொற்களைப் பயன்படுத்துவதில் பெருவிருப்பு உடையவராகத் திகழ்கிறார். அடைகளைப் பயன்படுத்துவது அவர்தம் பொது இயல்பாக உள்ளது.
7.             எதிர்ச்சொற்களை இறைவனின் ஆதி அந்தமில்லாத வியாபகத் தன்மையை விளக்கப் பயன்படுத்துகின்றார்.
8.             வினைகளையோ வினாச் சொற்களாக்கியுள்ள தன்மையைக் காண முடிகிறது.
9.             சிறுசிறு தொடர்களைக் கையாள்வதில் மூலம் படிப்பவரைக் கவருகிறார். நீண்ட வாக்கியங்களிலே கரத்தைச் சொல்லும்பொழுது உம்மைகளையும் எச்சங்களையும் பயன்படுத்துகிறார்.
10.           இவர்தம் வாக்கிய அமைப்பில் வினைமுற்றை முதலில் கூறிப் பின் எழுவாயைக் கூறும் புதுமையைக் காணமுடிகிறது.








No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?