நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Sunday 6 September 2020

காலந்தோறும் இன்னியம்

 

காலந்தோறும் இன்னியம்

முன்னுரை

கூட்டு வாத்திய இசை அமைப்பு முறையைப் பழந்தமிழர் இன்னியம் - பன்னியம் - பல்லியம் என அழைந்தனர். மேலைநாடுகளில் சிறப்பாக நடத்தப்படும் கூட்டு வாத்திய இசையமைப்பு முறை –பேண்டு வாத்திய இசை – ஆர்க்கெஸ்ட்ரா என்று பல சொற்களால் குறிப்பிடப்பட்டாலும், பழந்தமிழர் இசை முறையே ஆகும். இது தொடர்பாக வழங்கப்பட்ட பெயர்களையும், கூட்டு வைத்திய இசைக்குப் பயன்படுத்தப்பட்ட இசைக் கூட்டு வாத்திய இசைக்குப் பயன்படுத்தப்பட்ட இசைக் கருவிகளையும் இக்கட்டுரை ஆராய்கிறது.

இயற்கை பாடம்

இயற்கை எழுப்பும் பலவித ஒலிகளைக் கேட்ட மனிதன், இதைப் போலவே இசைக் கருவிகளைக் கேட்டு இசைக்கத் தொடங்கினான்.

“ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கன்

கோடை யவ்வரி குழலிசையாகப்

பாடின் அருவிப் பனிநீர் இன்னிசைத்

தோடமை முழவின் துதை குரலாகக்

கனக்கலை இகுக்கும் கடுங்குரல் தும்பொடு (அகநா. 82)

என்ற பாடல் மூங்கிலில் வண்டுகள் துளையிட்டு அந்தத் துளைகளில் காற்றுப் புகுந்து வெளியேறும் போது இனிய ஒலி பிறந்தது உடன் அரு. நீரின் ஓசை முழவு போலும், வண்டின் இமியொலி யாழின் இசை போலவும் முழங்கியது என்கிறது.

பரிபாடலில்,

 ஒரு திறம் பாணர் யாழின் தீங்குரல் எழ

  ஒரு திறம் பாணர் வண்டின் இமிரிசை எழ

  ஒரு திறம் கண்ணார் குழலின் கரைபு எழ

  ஒரு திறம் பண்ணார் தும்பி பரந்திசை ஊத

  ஒரு திறம் பண்ணார் முழவின் இசை எழ

  ஒரு திறம் அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப

  ஒரு திறம் பாடல் நல்விறவியல் ஒல்குபு நுடங்க

  ஒரு திறம் வாடை உளவயின் பூங்கொடி நுடங்க

  ஒரு திறம் பாழனி குரலும் பாலையங் குரலின்’’ (பரிபால் 17, 9-17)

 

என்ற பாடல், திருப்பரங்குன்றத்தில் பாணர்கள் இசைக்கும் இனிய யாழின் ஓசை, வண்டுகளின் இமிரிசை, புல்லாங் குழல் இசை, தும்பியின் ஓசை, முழவின் ஓசை, மலையருவி ஓசை, பாடினியின் பாலைப்பண்ணிசை, மயிலின் அகவல் இவையத்தும் சேர்ந்து பேரிசையாகக் கூட்டிசையாக முழுங்கியது என விவரிக்கிறது.

தொடக்கத்தில் யயழ் இசை, பாலைப் பண்ணிசை முதலான செயற்கை கருவிகளால் எழுத்தப்பட்ட இசையை, இயற்கையில் எழும்பும் அருவி ஓசை, மயிலின் அகவல் முதலான இசையோடு இணைத்து இணைந்து இரசித்தனர்.பின்னர், இயற்கையில் எழும் ஓசையை ஒத்த ஓசையெழப்பும் கருவிகளைக் கண்டு பிடித்தனர். இக்கருவிகளைக் கொண்டு டுட்டு வாத்திய இசைகளை எழுப்பினர். பின் கூட்டு வாத்தியக் குழு அமைத்தனால் இவற்றையே கூத்தர்களும், பாணர்களும் தங்கள் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டனர். பத்துப் பாட்டு மலைபடு கடாம் கூத்தர் கொண்டு சென்ற வாத்தியங்களைப் பட்டியலிடுகிறது.

திண்வார் விசித்த முழலோடு ஆகுளி  கலப்பையீர்’’(மலைபடு 1-14)

 ஆற்றுப்படை நூல்கள் இக்கூட்டு வாத்திய இசைக் கலைஞர்களையும், கருவிகளையும் அவர்கள் வாழ்க்கையைப் பற்றியுமே கூறுகின்றன.

பரிபாடல் வையை ( பாடல் 12 ) பாடல் கீழ்க்கண்ட கருவிகளை இணைத்து கூட்டு வாத்திய இசைக்குப் பயன்படுத்தினர் என்பதைப் பட்டியலிடுகிறது.

ஒத்த குழலின் ஒலி எழ முழவிமிழ்’’

இப்பாடல் மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி, முழவு முதலிய இசைக் கருவிகள் சேர்ந்து ஒரே நேரத்தில் இசைக்கப்பட்டன என்றும் ஒருவர் பிற்படார்என்ற வரிகள் யாரும் முற்படவோ, பிற்படவோ இன்றி ஒரே நேரத்தில் இணைந்து வாசத்தனர் என்கிறது.

ஒரு கருவியின் இசை மற்றொரு கருவின் இசையோடு ஒத்திருந்தால் மட்டுமே, அதை இணைக் கருவியாகச்சேர்ந்து இசைப்பர்.

விண்ணதிர் இமிழிசை கடுப்பப் பண்ணiiத்துத்

        திண்வார் விசித்த முழவொ டாகுளி

        நண்ணுருக் குற்ற விளங்கர் பாண்டில்’’(மலை படு 1-4)

என்ற பாடல் வரிகள் முழவு, ஆகுளி, பண்டிரு மூன்றும் சேர்ந்து இசைக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது.

மன்னர்- பள்ளியெழுச்சி

  இரங்குகுரன் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப

  இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி’’(புறநானூறு, 397, 5-6)

பாசறையில் உறங்கும் மன்னளை எழுப்ப பள்ளியெழுச்சி பாடப்படும்பொழுது, முரசும் வலம்புரிச் சங்கும் சேர்ந்து இசைக்கப்பட்டுள்ளள என்கிறது. புறநானூறு

பல்லியம்-இறைவனுக்காக

குறுந்தொகை இறைவனுக்காகப் பல கருவிகளை இணைத்து இசைக்கப்படும் நிலையில் பல்லியம்என்ற சொல்லால் குறிப்பிடுகிறது.

மறிக்குரல் அறுத்துத் தினைப் பிரப்பு இரீஇச்

       செல் ஆற்று கவலை பல் இயல் கறங்க’’(குறு 263, 1-2)

ஓடும் ஆற்றில் கரையில் முருகப் பெருமானுக்காக ஆட்டின் கழுத்தை அறுத்து, தினையாகிய பலியை வைதது வழிபடுமிடத்து, பல்வேறு இசைக் கருவிகளை இணைத்து இசைத்துள்ளார். பல இசைக் கருவிகளின் கூட்டு இசையை பல்லியம்எனவும் அழைத்துள்ளனர். இயம்புணர் தூம்புஎன்ற இசைக் கருவி பற்றி ஜங்குறுநூறு (377) தெரிவிக்கிறது.

வேலனுக்கு வெறியாட்டு நிகர்த்தும் போதொல்லாம் வலிமையான ஒசையெழும்பும் இசைக்கருவிகளை இசைத்துள்ளனர்.

“----- வேலன்

  இன்இயம் கறங்கப் பாடி

  பல் மலர் சிதறிப் பரவுறு பலிக்கே’’( நற் 322, 9-11 )

கூடு கொள் இன்இயம் கறங்க களன்இழைத்து’’( அகம், 98, 14 )

வன் பரணரைத் தலைவராகக் கொண்ட வல்லில் ஓரி மன்னிர்டம் பரிசு பெற்ற பின், பாணர்கள் செல்வ வளத்த்தனால் இசைக்கருவிகளை இசைத்து இன்னியம் எழுப்ப மறந்தனர் என்பதை,

பசியார் ஆகல் மாறுகொல்  விசி பிணிக்

கூடுகொள் இன்னியம் கறங்க

ஆடலும் ஒல்லார் தம்பாலும் மறந்தே“( புறம். 153, 10-12 )

“கூடு கொள் இன்அயட் குரல் குரலாக“( சிறு.229 )

“வீசி வீங்கு இன் இயம் கடுப்பக் கயிறு பிணித்து( பெரு. 56 )

“கருங்கோட்டு இன்இயம் இயக்கிளார் கழிமன்( பெரு. 392 )

“தெரி இமிழ் கொண்ட நும் இயம்போல் இன் இசை( மலை, 296)

அதைப்போல் மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி என்ற நான்கு தாளக் கருவிகளும் தங்களுக்குள் இணைத்து இயக்கப்பட்டன என்கிறது பரிபாடல்.

மத்தரி தடாமரி தண்ணுமை மகுளி

       ஓத்தளந்து சீர்தூக்கி’’ (பரிபாடல் 12, 41-42)

தேரை ஒலியின் மானச் சீரமைத்துச்

 சில்லரி கறங்கும் சிறுபல் லியத்தோடு’’(அகநானூறு, நி, கோ-301, 19-20)

என்ற பாடல் சில்லரி என்ற இசைக்கருவி மற்ற இசைக் கருவிகளுடன் இணைத்து இசைக்கப்படும் என்கிறது. அந்தரப் பல்லியங் கறங்கத் திண்காழ்

       “வயிரெழந் திசைப்ப வால்வளை ஞரல

        உரந்தலை கொண்ட வுருமிடி முரசமொரு

        பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ’’( திருமுருகாற்றுப்படை , 119 -122)

பல்லியம் என்று அழைக்கப்பட்ட கூட்டு இசைக் கருவிகளுடன் வயிர், வளை, முரசம் முதலான கருவிகளும் கோயில்களில் இசைக்கப்பட்டுள்ளன. இத்தனை இசைக் கருவிகளையும் சேர்த்து எழுப்பிய இசை குறிஞ்சியில் கீழ்க்கண்டவாறு ஒலித்ததை,

இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க’’(திருமுரு . 240)

என்று திருமுருகாற்றுப்படை மேலும் கூறுகிறது.  மலைக் கடவுளான முருகப் பெருமானின் வாயிலில் மலையருவி ஓசையை ஒத்து எழுப்பப்பட்ட இசையை இன்னியம்என்ற சொல்லால் குறிப்பிடுவதைக் காணலாம்.

முருகனுக்கு உகந்த இசைக்கருவிகள் முருகியம்எனவும் அழைக்கப்பட்டன.

முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க

முருகு ஆற்றுப் படுத்த உருகெழு வியல் நகர்’’(திருமுருகாற்றுப்படை, 244)

இவ்வாறு பல கருவிகளின் கூட்டிசையை இன்னியம், பல்லியம், முருகியம் எனப் பல சொற்களால் அழைத்து உள்ளனர்.

 

பல்லியம்- சிறு பல்லியம்

ஓரிரு கருவிகள் மட்டும் இணைத்து இசைக்கப்படுவது சிறு பல்லியம்என்று அழைக்கப்பட்டுள்ளது. யாழிசையோடு பிற கருவிகள் இணைத்து இசைக்கப்படும் போது அக்கூட்டு இசையை பல்லியம்என்ற சொல்லால் புறநானூறு குறுப்பிடுகிறது.

வாங்கு மருப் பியாழொடு பல்லியம் கறங்க’’  (புறநானூறு, 28, 2)

யாழின் இசையோடு ஒத்த இசை மணமுழா என்னும் கருவியிலிருந்து வருவதால், அதனை யாழோடு இணைத்து இசைத்துள்ளார்.

மணமுழா வனமமின் பண்டயாழ் நிறுமின்’’(புறநானூறு 103, 1-2)

 பொன்யில் நடுவ ணேங்கும் பூநிறை யசோக நிழல்

  இன்னிய லாலயத்து ளேந்தரி யாசனத்தின்’’( பெருங்கதை, உஞ்சை, 2)

என்ற பாடலில் இன்னியய என்னும் சொல் காண்பதற்கினிய என்ற பொருளில் வருகிறது. இசை குறித்து வருமிடத்து கேட்பதற்கினியஎன்று பொருள்படுகிறது.  நற்றிணை பாடலொன்று ஓர்மகள் பல மலைகளின் ஓசைக் கேற்ப ஆடிய ஆட்டத்தைக் கூறுமிடத்து,

“பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்

அருவி இன்இயத்து அடும் நாடன்  ( நற், 34, 4-5)

பல அருவிகளின் ஓசையை இன்னியம் என்கிறது.

அரிக் கூட்டு இன்னியம்

கழைக் கூத்தாடிகளின் சிறுமி தூக்கி நிறு.திய கழைகளுக்கு இடையே உள்ள கயிற்றில் நடக்கும் பொழுது, மக்களைக் கவர்வதற்காக தேர்ந்தெடுத்த சில இசைக் கருவிகளை கழைக்கூத்தாடிகள் இணைந்து இசைப்பார். இது அரிக்கூட்டு இன்னியம்என அழைக்கப்பட்டுள்ளது. 

அரிக்கூட்டு இன்னியம் கறங்க ஆடுமகள்  கயிறு ஊர் பாணியின்’’(குறி, 193)

 

இன்னியம்  - ஏறுதழுவும் பொழுது

ஏறுதழுவும் பொழுதும் பல இசைக்கருவிகளை இசைத்துள்ளனர்

“இடி உறழ் இசையின் இயம் எழுந்து ஆர்ப்ப (கலி, 104, 54)

“கார் எதிர் கலி ஒளி இடி உருமின் இயம் கறங்க (கலி, 105, 24)

இடி முழக்கம் போன்ற இசைக் கருவிகளின் முழக்கத்தினடியில் ஏறு தழுவும் நிகர்ங்சசி நடைபெற்றுள்ளது. ஏறுதழுவும் இளைஞர்களையும், மக்களையும் உற்சாகப்படுத்தவும் இன்னியம் இசைத்துள்ளனர்.

 

இசைக்கருவிகளை வாசிப்பவர்கள்

பலவித கருவிகளை இசைப்பவர்களை இயவர் என்றும் இன்னியம் எனவும் அழைத்துள்ளனர்.

இம்மென் பெரும்களத்து இயவர் ஊதும்’’( நற், 113, 10-11)

கடிப்பு எண் உறூஉம் தொடிதோள் இயவர்’’(பதி 17-7)

ஊக கொம்பு ஊதி மசையெழப்புவரைக் கோடியர் என்றழைத்தனர். பல்லியக் கோடியர், (சிறுபாணாற்றுப்படை- 125) கடும்பறைக் கோடியர் எனவும் இவர்களை அழைத்துள்ளனர். வயிர் என்னும் கருவி இசைத்தவரை ‘வயிரியர்என்றனர். பாட்டு பாடுபவரை பாட்டியர், யாழிசைப் போரை யாழோர்என்றும் பறை இசைப்பவரை அரிப்பறை வினைஞர்என்றும், கிணை என்றும் கருவிகளை இசைத்தவரை கிணைஞர்’ (புறநா , 375, 388) எனவும் அழைத்துள்ளனர். இவ்வாறு தனித்தனியாக இசைத்தவரை அக்கருவிகளின் பெயரைக் கொண்டு அழைத்தது போல், பலவிதமான இசைக்கருவிகளை இணைத்து இசைத்தவர்களை பல்லியர்என அழைத்துள்ளனர்.

இன்னிசையை விஞ்சிய பேரிசை

ஊரில் ஒலிக்கும் இசைக்கருவிகளின் முழக்கம் கேட்காதவாறு தயிரைக் கடையும் மத்தின் ஒலி மிகுந்து கேட்கும் செல்வச் செழிப்பு மிக்க ஆய்ச்சியர் மனைகள் என்பதைக் குறிக்கும் பாடலடி

மத்து உரறிய மனை னன்இயம் இமிழா ""

ஆலமரத்தின் உள்ள பறவைகளின் ஒலி இசைக் கருவிகள் பலவற்றைக் கூட்டாக ஒலிப்பது போன்று மிகப் பெரியதாகும். அத்தகைய வளம் பொருந்திய ஊர்களை உடையது

கல்லென இயங்கல் ஓம்பி நும் இயங்கள் தொடுமின்"" (மலை, 276-277)

 நன்ன ராணர் கூடுகொள் இன்இயம்

தேர் ஊர் தெருவில் ததும்பும்" (அகம் 139, 13-14)

பன்னிரு திருமுறைகளில் பல்லியம்

முருகனுக்கு இசைக்கப்பட்டதைப் போல பிற்காலத்தில் சிவனுக்கும் இசைக்கப்பட்டது. இதை காரைக்காலம்மையார் பாடலில் விரிவாகக் காணலாம்.

திருவாலங்காட்டில் இனிமையாகப் பாடிக்கொண்டு, இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டு சிவபெருமான் ஆடுகின்றான். திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இதை வருணிக்கிறது.
“துத்தங்கைக் கிளை விளரி தாரம்
உழை இளிஓசைபண் கெழுமப் பாடிச்
சச்சரி கொக்கரை தக்கை யோடு
தகுணிதம் துந்துபி தாளம் வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்றோல்
தமருகம் குடமுழா மொந்தை வாசித்(து)
அத்தனை விரவினோடாடும் எங்கள்
அப்பன் இடம் திருவாலங் காடே

என்ற பாடலில் காணலாம். சச்சரி, கொக்கiரை, தக்கை, தகுணிதம், தந்துபி, தாளம், வீணை, மத்தளம், கரடிகை, தமருகம், குடமுழா முதலான பத்திற்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் இணைத்து இசைக்கப்பட்டதை இப்பாடல் கூறுகிறது.

திருக்கைலாய ஞான உலாவில் இறைவன் புறப்பாட்டிற்கு வாசிக்கப்படும் இசைக்கருவிகள் பட்டியலிடப்படுகின்றன.

சல்லரி தாளம் தகுணிதம் தத்தளகம்
கல்லலகு கல்ல வடமொந்தை - நல்லியத்
தட்டழி சங்கம் சலஞ்சலந் தண்ணுமை
கட்டிழியாப் பேரி கரதாளம் - கொட்டும்
குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ்
இடமாம் தடாரி படகம் _ இடவிய
மத்தளம் துந்துபி வாய்ந்த முரு(டு) இவற்றால்  
எத்திசை தோறும் எழுந்தியம்ப _ ஒத்துடனே
மங்கலம் பாடுவோர் வந்திறைஞ்ச  (44-49)

காரைக்காலம்மையார் குறிப்பிடாத பல இசைக் கருவிகள் சேரமான் பெருமான் நாயனார் குறிப்பிடுவதிலிருந்து பல இசைக்கருவிகளின் வளர்ச்சியைக் காணமுடிகிறது.

‘’பிரசம் திகழும் வரைபுரை யானையின் பீடழித்தார்

முரசம் திகழும் முருகியம் நீங்கும் எவர்க்கு முன்னாம்(திருக்கோவை-மணஞ்சிறப்புரைத்தல், 1)

 

“பல்லியல் பாணிப் பாரிட மேத்தப்( 1.101.3 )

“பண்ணாரப் பல்லியம் பாடினான் காண் ( 6.8.11 )

“ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம்( 10. 2725 )

“பல்லியங்கள் பரந்த ஒலியுடன்( 12.0088)

“மங்கல வாழ்த்து மல்க மருங்க பல்லியங்கள் ஆர்ப்ப( 12.06 89 )

“கோதில் பல்லியமும் கொடியும் பயில்( 12.1181 )

“சொல்லார் மறைகள் துதி செய்யச் சூழ் பல்லியங்கள் எழ (12.1262)

“பொங்கு பல்லிய நாதம் பொலிந்து எழ(12.2101)

“முன் எம்மங்கும் நிரத்த முரசு உடைப் பல்லியம் ஆர்ப்ப(12.2181)

“பல்லிய நாதம் பொங்கப்படர் (12. 2641)

“பன்மணி முரசும் சூழ்ந்த பல்லியம் இயம்ப(12.2709)

“அளவு இறந்த பல்லியங்கள் முழக்கி ஆர்த்து(12.2862)

“பண்மணி மங்கல முரசும் பல்லியங்கள் நிறைந்து ஆர்ப்ப(12.3070)

“பயில்தரும்  பல்லிய முழக்கும் முறை (12.4026)

“கயப் பொருப்பின் முழக்கு ஒலியும் கலந்து எழு பல்லிய ஒலியும் (12.4073)

தேவார பாடல்களில் இடக்கை, உடுக்கை, கத்திரிக்கை, கல்லவடம், கல்லலகு, கிணை, குடமுழா, கொக்கரை. கொடுகொட்டி, சல்லரி, தக்கை, தகுணரிச்சம், தண்ணுமை, பறை பிடவம், முழவு மொந்தை, முரவம் முதலிய தோற்கருவிகளும், வேய்ங்குழல் முதலிய நரம்புக் கருவிகளும், தாளம் முதலிய கஞ்சக்கருவிகள் பயின்று வந்துள்ளன

தேவாரம் உள்ளிட்ட திருமுறைகள் பல்லியம் என்று கூற,

 இன்னியம் எங்கும் நிறைந்தினிதாக இயம்பிடும்

(49-6) என்று திருவாசகம் இசைக்கருவிகளின் கூட்டு இசையை  இன்னியம்என்று கூறுகிறது.

திருப்புகழில் இன்னியம்

“தபலை திமிலைகள் பூரிகை பம்பைக்

கரடி தமருகம் வீணைகள் பொங்கத்

தடிய ழனவுக மாருதச் சண்டச் சமரேறி………

என்று திருப்புகழில் நீண்ட தாளத்துக்குப் பின்

பேரி திமிலை கரடிகை பதலை சலரிதவில்

தமர முரசுகள் குடமுழவொடு துடி

சத்தக் கணப் பறைகள் மெத்தத் தொனித்து அதிர ” (சிதம்பரம் ப-855)

போன்றவை இசைக்கப்படுமென அருணகிரிநாதர் சிதம்பரம் என்னும் ஊர் பற்றி பாடும்பொழுது குறிப்பிடுகிறார்.

இருபதாம் நூற்றாண்டில் இன்னியம்

அரங்கநாதர் ஸ்ரீரங்கம் கோவிலில் 1953ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இசைத்திருந்த கருவிகளாக http://templemusicinstrumentstraditional.blogspot.com/

இணையதளம் இப்பட்டியலைத்தருகிறது.


பெரிய மேளம் – 1  மேளம் (தவில், தாளம், ஒத்து,நாயனம் 4 உருப்படிகள்- 3 ஜதை
   


 அதிக நாயனம்-1
   
கவுரி காளை-2
   
திருச்சின்னம்-1
   
எக்காளை-1
   
வீரவண்டி-1
   
சேமக்கலம்-1
  சங்கு-1
   
மங்களவாத்தியம்-1 நட்டு, முட்டு-2
  சுத்து மத்தளம்-1
   
கொக்கை

  உடுக்கை -1
   
பெரியகைத்தாளம்-1
     
பாரி-1


திருவாரூர் தியாராஜ பெருமாள் ஆலயத்திற்கு 18 இசைக்கருவிகள் உண்டு. அவை:
சர்வ வாத்தியம் என அழைக்கப்பட்டுள்ளன.


1. பாரி நாதசுரம்
2.
பஞ்சமுக வாத்தியம்
3.
கொடுகொட்டி
4.
சுத்த மத்தளம்
5.
நாட்டு தாளம்
6.
ஜல்லரி (பெரிய தாளம்)
7.
எக்காளம்
8.
வாங்கா
9.
கர்ணா
10.
துத்தி
11.
சங்கம்
12.
சேமக்கலம்
13.
டக்கா
14.
பேரிகை
16.
தவண்டை
17.
புல்லாங்குழல்
18.
திருச்சின்னம்


 

இதே போல 74 வகையான கருவிகள் இசைக்கப்பட்டதாக இந்த இணையதளம் குறிப்பிடுகிறது. ஆனால். தற்கால புதிய இசைக்கருவிகள் வயலின், கிளாரினெட் போன்றவை இணைந்துவிட்டதால் பல பழைய இசைக்கருவிகள் வழங்கொழிந்து வருகின்றன.

இலங்கை ' இன்னிய அணி '

தமிழ் இசை வடிவங்களுக்குப் புத்துயிர் அளித்து வரும் வகையில்இலங்கையைச் சார்ந்த பேராசிரியர் சி. மௌனகுரு 'பேண்ட்' வாத்தியக் குழுவுக்கு பதிலீடாக தமிழ் மரபு அடிப்படையில் வாத்தியக் குழுவொன்றை அமைத்துள்ளார்.

தமிழ் 'இன்னிய அணி' எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த இன்னியக் குழுவிலே பெரும்பறை, தப்பட்டை, றபான், உடுக்கு, மத்தளம், வணிக்கை எனும் தோல் வாத்தியங்களும் சிலம்பு, சிறுதாளம், பெருதாளம் போன்ற கஞ்ச வாத்தியங்களும் சங்கு, எக்காளம் போன்ற துளை வாத்தியங்களும் இணைத்து இசைக்கப்படுகின்றன. (http://tamilopera.blogspot.com/2009/09/blog-post_13.html) கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் போது இடம்பெற்ற இந்த வாத்தியக் குழுவின் இன்னியமும், ஆட்டமும் பார்வையாளர்கள் பலரையும் கவர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முடிவுரை

சங்கத்தமிழரின் வாழ்வோடு கலந்துவிட்ட இன்னியம் பல வகைகளில் காலந்தோறும் உயிர்தெழுந்து வருகிறது. பொழுதுபோக்கிற்காக, அரசனுக்காக, இறைவனுக்காக இசைக்கப்பட்ட இன்னியம் இன்று பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் வாசிக்கப்படும் நிலையை எட்டியுள்ளது. இன்னியத்தின் பரிணாம வளர்ச்சியையே இது காட்டுகிறது.

துணைநின்ற நூல்கள்

1.அகளங்கன், பன்னிருதிருமுறை,பாலசுப்ரமணியன்.கு.வெ. மற்றும் பலர்(உ.ஆ) சங்க இலக்கியம்,என்.சி.பி.எச்,சென்னை. மு.ப 2004

2.கிருஷ்ணன்.ந. (ப.ஆ)  திருப்புகழ் குகாநந்தா திருப்புகழ் சபை, காந்திரோடு சேலம் -7

3.சுப்ரமணியன்.ச.வே, (ப.ஆ)  பன்னிருதிருமுறை, மணிவாசகர் பதிப்பகம் சென்னை


4.பத்மதேவன், (ப.ஆ)  திருவாசகம்,கற்பகம் புத்தகாலயம், சென்னை

 

முனைவர் ஜ.பிரேமலதா,

தமிழ் இணைப் பேராசிரியர்,

அரசு கலைக்கல்லூரி(தன்னாட்சி),

                                                 சேலம் -636007.தொலைபேசி 9488417411