நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Tuesday 31 December 2013

சிலப்பதிகாரம் 30. வரம் தரு காதை

30. வரம் தரு காதை
செங்குட்டுவன் தேவந்தியிடம் மணிமேகலையின் துறவு பற்றி வினவுதல்

வட திசை வணக்கிய வானவர் பெருந்தகை
கடவுள் கோலம் கண்-புலம் புக்க மின்,
தேவந்திகையைச் செவ்விதின் நோக்கி,
‘வாய் எடுத்து அரற்றிய மணிமேகலை யார்?
யாது அவள் துறத்தற்கு ஏது? ஈங்கு, உரை’ என-                            5

புத்தாண்டு வாழ்த்துகள்

          

Friday 27 December 2013

சிலப்பதிகாரம் 29. வாழ்த்துக் காதை

29. வாழ்த்துக் காதை
உரைப்பாட்டு மடை

குமரியொடு வட இமயத்து
ஒருமொழி வைத்து உலகு ஆண்ட
சேரலாதற்குத் திகழ் ஒளி ஞாயிற்றுச்
சோழன் மகள் ஈன்ற மைந்தன்,
கொங்கர் செங் களம் வேட்டு,
கங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய
செங்குட்டுவன், சினம் செருக்கி
வஞ்சியுள் வந்து இருந்தகாலை;
வட ஆரிய மன்னர், ஆங்கு ஓர்
மடவரலை மாலை சூட்டி
உடன் உறைந்த இருக்கை-தன்னில்,
ஒன்று மொழி நகையினராய்,
‘தென் தமிழ் நாடு ஆளும் வேந்தர்
செரு வேட்டு, புகன்று எழுந்து,
மின் தவழும் இமய நெற்றியில்
விளங்கு வில், புலி, கயல், பொறித்த நாள்,
எம் போலும் முடி மன்னர்
ஈங்கு இல்லை போலும்’ என்ற வார்த்தை,

சிலப்பதிகாரம் 27. நீர்ப்படைக் காதை 28. நடுகல் காதை

27. நீர்ப்படைக் காதை

கனக விசயர் தலைமேல் பத்தினிக் கல்லை ஏற்றி, கங்கையில் நீர்ப்படை செய்தல்

வட பேர் இமயத்து வான் தரு சிறப்பின்
கடவுள் பத்தினிக் கல் கால்கொண்ட பின்,
சின வேல் முன்பின் செரு வெங் கோலத்துக்
கனக-விசயர்-தம் கதிர் முடி ஏற்றி,
செறி கழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல்                                    5
அறியாது மலைந்த ஆரிய மன்னரை,
செயிர்த் தோழில் முதியோன் செய் தொழில் பெருக
உயிர்த் தொகை உண்ட ஒன்பதிற்று இரட்டி என்று,
யாண்டும், மதியும், நாளும், கடிகையும்,
ஈண்டு நீர் ஞாலம் கூட்டி எண்கொள;                                        10
வரு பெரும் தானை மறக்கள மருங்கின்,
ஒரு பகல் எல்லை, உயிர்த் தொகை உண்ட
செங்குட்டுவன் தன் சின வேல் தானையொடு
கங்கைப் பேர் யாற்றுக் கரை அகம் புகுந்து;
பால் படு மரபின் பத்தினிக் கடவுளை                                        15

சிலப்பதிகாரம் 25. காட்சிக் கதை

25. காட்சிக் கதை

இலவந்தி வெள்ளி மாடத்தில் தன் தேவி இளங்கோவேண்மாளுடன்
இருந்த செங்குட்டுவன் மலைவளம் காணச் சுற்றத்தோடு பெயர்தல்

மாநீர் வெலிக் கடம்பு எறிந்து, இமயத்து,
வானவர் மருள, மலை வில் பூட்டிய
வானவர் தோன்றல், வாய் வாள் கோதை,
விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து,
இளங்கோவேண்மாளுடன் இருந்தருளி,                                            5
‘துஞ்சா முழவின், அருவி ஒலிக்கும்
மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம்’ என,
பைந் தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு ஈண்டி,
வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன்.

சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம் 24. குன்றக் குரவை

மூன்றாவது
வஞ்சிக் காண்டம்
24. குன்றக் குரவை
உரைப் பாட்டு மடை

குறவர் கண்ணகியை வினவுதல்

குருவி ஓப்பியும் கிளி கடிந்தும்
குன்றத்துச் சென்று வைகி,
அருவி ஆடியும் சுனை குடைந்தும்
அலவுற்று வருவேம் முன்,
மலை வேங்கை நறு நிழலின்,
வள்ளி போல்வீர்! மனம் நடுங்க,
முலை இழந்து வந்து நின்றீர்;
யாவிரோ?’ என-

சிலப்பதிகாரம் 23. கட்டுரை காதை

23. கட்டுரை காதை
மதுராபதி தெய்வம் கண்ணகியின் பின்புறம் தோன்றிப் பேசுதல்

சடையும் பிறையும் தாழ்ந்த சென்னி,
குவளை உண் கண் தவள வாள் மகத்தி;
கடை எயிறு அரும்யிய பவளச்செவ் வாய்த்தி;
இடை நிலா விரிந்த நித்தில நகைத்தி;
இட மருங்கு இருண்ட நீலம் ஆயினும்,                                            5

சிலப்பதிகாரம் 21. வஞ்சின மாலை

21. வஞ்சின மாலை
கோப்பெருந்தேவியை நோக்கிக் கண்ணகி கூறுதல்

‘கோவேந்தன் தேவி! கொடுவினை ஆட்டியேன்
யாவும் தெரியா இயல்பினேன் ஆயினும்,
முற்பகல் செய்தான் பிறன் கேடு தன் கேடு
பிற்பகல் காண்குறுhஉம் பெற்றிய - காண்;

கற்புடை மங்கையர் எழுவர் வரலாறு

சிலப்பதிகாரம்19. ஊர் சூழ் வரி

19. ஊர் சூழ் வரி

கதிவரனது சொல்லைக் கேட்ட கண்ணகி, எஞ்சிய ஒற்றைச் சிலம்பை ஏந்தி,
நகரினுள் புக்கு, நகர மாந்தரை நோக்கி முறையிட்டு, அழுதல்

என்றனன் வேய்யோன்: இலங்கு ஈர் வளைத் தோளி
நின்றிலள்- நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி;
‘முறை இல் அரசன்-தன் ஊர் இருந்து வாழும்
பிறை உடைப் பத்தினிப் பெண்டிர்காள்! ஈது ஒன்று;
பட்டேன், படாத துயரம், படுகாலை;                                                5

சிலப்பதிகாரம் - 13.புறஞ்சேரி இறுத்த காதை

13. புறஞ்சேரி இறுத்த காதை
‘இரவில் வழிச் செல்லுதல் நன்று’ என்று கோவலன் கவுந்தி அடிகளிடம் கூறுதல்

பெண் அணி கோலம் பெயர்ந்த பிற்பாடு,
புண்ணிய முதல்வி திருந்துஅடி பொருந்தி,
‘கடுங் கதிர் வேனில் இக் காரிகை பொறஅள்;
படிந்தில சீறடி பரல் வெங் கானத்து;
""""கோள் வல் உளியமும் கொடும் புற்று அகழா;                                         5

சிலப்பதிகாரம் மதுரைக்காண்டம் 11. காடு காண் காதை

இரண்டாவது

மதுரைக்காண்டம்

11. காடு காண் காதை

உறையூரில் தங்கிய கவுந்தி முதலிய மூவரும் வைகறையில் புறப்பட்டத்
தென் திசை நோக்கிச் செல்லுகின்ற வழியில்
உதயகாலத்தில் ஓர் இள மரக் காவில் புகுதல்

திங்கள் மூன்று அடுக்கிய திரு முக் குடைக் கீழ்,
செங் கதிர் ஞாயிற்றுத் திகழ் ஒளி சிறந்து,
கோதை தாழ் பிண்டிக் கொழு நிழல் இருந்த,
ஆதி இல் தோற்றத்து அறிவனை வணங்கி,
கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம்                                            5

சிலப்பதிகாரம் 8. வேனில் காதை

8. வேனில் காதை
இளவேனிலின் வருகை

""""நெடியோன குன்றமும், தொடியோள் பௌவமும்,
துமிழ் வரம்பு அறுத்த தண் புனல் நல் நாட்டு,
மாட மதுரையும், பீடு ஆர் உறந்தையும்,
கலி கெழு வஞ்சியும், ஒலி புனல் புகாரும்,
அரைசு வீற்றிருந்த, உரைசால் சிறப்பின்,                                     5

சிலப்பதிகாரம் 7.கானல்வரி

7. கானல் வரி

வயத்தமாலை கையிலிருந்த நல் வாழை மாதவி தொழுது வாங்கி,
திருத்தி, கோவலனிடம் நீட்ட, அவன் அதை வாங்கி,
கானல் வரி பாடத் தொடங்குதல்
கட்டுரை

சித்திரப் படத்துள் புக்கு, செழுங் கோட்டின் மலர் புனைந்து,
மைத் தடங் கண் மண மகளிர் கோலம் போல் வனப்பு எய்தி;
பத்தரும், கோடும், ஆணியும், நரம்பும் என்று
இத் திறத்துக் குற்றம் நீங்கிய யாழ் கையில் தொழுது வாங்கி-
பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல்,                        5

சிலப்பதிகாரம் 6.கடல் ஆடு காதை



6.கடல் ஆடு காதை
விஞ்சை வீரன் காமக் கடவுளுக்கு விழா எடுத்தல்

வெள்ளி மால் வரை, வியன் பெரும் சேடி,
கள் அவிழ் பூம் பொழில் காமக் கடவுட்கு,
கருங் கயல் நெடுங் கண் காதலி - தன்னொடு
விருந் தாட்டு அயரும் ஓர் விஞ்சை வீரன் -

Thursday 12 December 2013

சிலப்பதிகாரம் -பதிகம்-1.மங்கல வாழ்த்துப் பாடல் முதல் 5.இந்திரவிழவு ஊர் எடுத்த காதை


seeko passport size
பேராசிரியர் சி.கோவிந்தராசனார்
kannaki broken icon
கண்ணகி சிலை

சிலப்பதிகாரம்

Kannagi main temple
சேரன் செங்குட்டுவன் கட்டிய கண்ணகிகோயில்
Kannagi idol
சிதைந்த சிலையின் பகுதிகள்
Kannagi temple entrance
கண்ணகிகோயில் முகப்பு

kannaki root map
சுருளி மலைதான் நெடுவேள் குன்றம்



வழக்குரைத்தல்






 

 


 

 

 

 

 

kannaki rootKannagi complex

நெடுவேள் குன்றம் வரையிலான பாதை

      

சிலப்பதிகாரம்

 

பதிகம்

குணவாயில் கோட்டத்தில் இளங்கோ
குணவாயில் கோட்டத்து, அரசு துறந்து இருந்த,
குடக் கோச் சேரல் இளங்கோ அடிகட்கு-
குறவர் கூறிய விந்தை நிகழ்ச்சி
குன்றக் குறவர் ஒருங்குடன் கூடி,
‘பொலம் பூ வேங்கை நலம் கிளர் கொழு நிழல்,
ஒரு முலை இழந்தாள் ஓர் திரு மா பத்தினிக்கு,
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி, அவள்
காதல் கொழுநனைக் காட்டி, அவளொடுஇ எம்

பெண்கள் அறிவியலின் கண்கள்





பெண்கள் அறிவியலின் கண்கள்


முன்னுரை



         அனைத்துத் துறைகளிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகரான அறிவாற்றலையே பெற்றுள்ளனர். எனினும், பெண், கல்வி கற்கப் பலவிதமாகத் தடுக்கப்படுகிறாள். விரும்பியதைப் படிக்கவோ, வேலைக்குச் செல்லவோ இயலாத நிலை உள்ளது. அது மட்டுமின்றி வீட்டில் அதிகமான வேலை சுமை சுமத்தப்படுவதால், தனக்கான நேரமோ, தனது திறன்களை வளர்க்கப் போதுமான வாய்ப்போ இல்லாமல் ஆக்கப்படுகிறாள். எனினும் தனக்குரிய ஆற்றலை பல்வேறு வேலைகளிலும் அவள் வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறாள். அவை பெரிதாகப் பேசப்படாமலும், வெளிப்படாமலுமே இருந்து வருகிறது. மேலும் பெண் குறித்த ஆண்களின் பார்வை ‘பெண் ஒரு அறிவற்ற பலவீனமான இனம்’ என்பதாகவே உள்ளது. ஏனவேதான் புதிய இயந்திரங்களையும், தொழில்நுட்பங்களையும் ஆண்களே கையாள வல்லவர் என்று கருதப்பட்டு, ஆண்களுக்கே பெரிதும் அறிவியல் தொழில்நுட்பத் திறன்களைக் கற்கும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. எனவே, பெண்களுக்கும் அறிவியலுக்கும் இடையில் பெரிய இடைவெளி இருப்பதாக கருத்தியலே உலவி வருகிறது.

ஆனந்தாயி காட்டும் குடும்ப உறவுகளில் பெண் நிலை









 ஆனந்தாயி காட்டும் குடும்ப உறவுகளில் பெண் நிலை


 

முன்னுரை


 

 குடும்ப அமைப்பில் குழந்தை வளர்ப்பு, திருமணம், வாழ்க்கை, தாய்மை என்று பலதரப்பிலும் பெண் அடக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறாள். குடும்ப அமைப்பின், மரபுக் கண்ணோட்டத்தாலும், சமுதாய நெருக்கடியாலும், பொருளாதார நிலையினாலும், பெண் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கின்றாள்.
பெண்ணியக் கருத்துக்கள் உலகெங்கும் பேசப்பட்டு வரும் இந்நாளில், குடும்ப உறவுகளில் பெண் நிலையைப் பற்றி அறிய வேண்டியது அவசியமாகிறது. ஆனந்தாயி நாவல் காட்டும் குடும்பமானது, இன்று பல இடங்களில் நாம் காணும் ஒரு குடும்ப அமைப்பே ஆகும். ஆசிரியர் காட்டும் அத்தனை குணாம்சங்களும் பொருந்திய குடும்பங்கள் சில தான் என்றாலும், அவர் குறிப்பிடும் பல அம்சங்கள் பெரும்பாலான குடும்பங்களில் நிலவி வருகிறது என்பதை யாரும் மறுக்கவியலாது.

குடும்பம்

ஒரே கூரையால் பாதுகாக்கப்பட்ட இதயங்களின் இணைப்பு ஒரு குடும்பமாகும். அன்பு, பரிவு, பாதுகாப்புணர்வு, ஒன்றுபட்டு வாழ்வது, சகிப்புத் தன்மை ஆகியவற்றின் உறைவிடம் குடும்பம் என்பது குடும்பததைப் பற்றிய பொதுவான கணிப்பாகும்.
ஆனால், தந்தை வழிச் சமுதாயத்தில் சொத்துரிமை பெற்ற ஆண் ஆதிக்கம் செலுத்துபவனாகவும், தலைமை சார்ந்தவனாகவும், விளங்குகிறான். சொத்துக்களைத் தனியுடைமையாக்கப், பெண்ணிற்குக் கற்புக் கோடடை விதித்து வீட்டிற்குள் பூட்டினான், அடக்கி தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டான்.

மேலும் வாசிக்க...

Monday 9 December 2013

சங்க இலக்கியத்தில் பஞ்சு முதல் பட்டு வரை


 சங்க இலக்கியத்தில் பஞ்சு முதல் பட்டு வரை



முன்னுரை


        ஒருவன் உணவின்றிச் சில வேளைகள் வாழலாம்; ஆனால் உடையின்றி அரைக் கணமும் வாழ இயலாது. அரசரின் மானத்தையும், ஆண்டியின் மானத்தையும் காக்கக் கூடியது உடை. துறவிகளும் துறக்காத சிறப்புடையது உடை. தீ மூட்டி வேள்வி செய்யும் அந்தணரின் தொழிலைவிட, தீ மூட்டி உணவு சமைக்கும் சமையல் தொழிலைவிட உயர்ந்தது நெசவுத் தொழில் என்பதால்தான் வள்ளுவரும், கம்பரும் நெசவுத் தொழில் மேற்கொண்டனர் என்பது வரலாறு கூறும் உண்மை.

Thursday 28 November 2013

தமிழ் வலைப்பூக்களில் பெண்களின் பங்கு


தமிழ் வலைப்பூக்களில் பெண்களின் பங்கு



வேதகாலம் தொடங்கி இன்றுவரை பெண்களின் பங்களிப்புகள் இலக்கிய உலகிலும், தகவல் பரிமாற்ற தளங்களிலும் முக்கிய இடத்தைப் பெற்று வருகின்றன. இக்கட்டுரை இணையத்தின் வழி வெளியாகும் வலைப்பூக்களில் பெண்களின் பங்களிப்பைப் பற்றி ஆராய்கிறது.

இணைய வடிவங்கள்



தமிழில் கருத்துப் பரிமாற்ற இணைய வடிவங்கள்

முன்னுரை

    கருத்துப் பரிமாற்றம் என்பது ஒருவர் தன் கருத்தை மற்றவருக்குத் தெரியப்படுத்துவதாகும். தற்காலத்தில் இணையம் இச்சேவையைத் துரிதமாகவும், மிகச் சிறப்பாகவும் செய்து வருகிறது. இணையம் இல்லாதபொழுது கருத்துப் பரிமாற்றமானது, கடிதப் போக்குவரத்து, தொலைபேசி, கைப்பேசி வழியாக நிகழ்ந்தது. தற்போது இணையத்தின் மூலமாக மின்னஞ்சல், இணையக்குழு, வலைப்திவு என பல வகைகளில் நிகழ்த்தப்படுகிறது. தமிழில் கருத்துப் பரிமாற்றத்திற்கு உதவும் இணைய வடிவங்களைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

Tuesday 22 October 2013

கவிஞர் கு.கணேசன் கவிதைகளில் கல்விச் சிந்தனைகள்


                                                                                                            


கவிஞர் கு.கணேசன் கவிதைகளில் கல்விச்

சிந்தனைகள்




            கவிஞன் என்பவன் சமகால வாழ்வினை நாடிப் பிடித்துச் சொல்லும் மருத்துவன். கவிஞன் கற்பனையில் மிதந்தாலும், பொய் கலந்து கவிதைகளை உருவாக்கினாலும், நிகழ்கால வாழ்வின் உண்மைகள் ஏதோ ஒரு வகையில் அவன் படைப்புகளில் அடிநாதமாய் ஓடிக் கொண்டிருக்கும். சமூக வாழ்வில் நிகழும் நிகழ்கால அவலங்களே ஒருவனை எழுதத்தூண்டுகின்றன. சமூக அக்கறை கொண்ட மனிதன், வாழ்வின் முரண்பாடுகளைப் பற்றிச் சிந்திக்கும் பொழுது அவனுள் ஏற்படுகின்ற உந்துதல்களே படைப்பாகத் தோற்றம் பெறுகின்றன. படிப்பவர்களுக்கு படைப்புகளினாலும், படைப்புகளின் வழி வெளிப்படுத்தப்படுகின்ற வாழ்க்கைப் போக்குகளினாலும் ஏதோ ஒரு வகையில் தான் உணர்த்த வந்ததை கவிஞன் உணர்த்தி விடுகிறான்.

காரைக்கால் பேய்



                          காரைக்கால் பேய்

  பரமதத்தன்-புனிதவதி 

            புனிதவதி, குழம்பு கொதிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தாள். கொதிக்கும் குழம்பில் மேலும் கீழும் போய்க்கொண்டிருக்கும் காய்களைப்போல, சில நினைவுகள் உள்ளக் கொதிப்பில் முன்பின்னாய் உழன்று கொண்டிருந்தன. பரமதத்தன் குளித்துவிட்டு வந்தான். கறி அமுதும் தயாராகிவிட்டது. இப்போதெல்லாம் அவன் முன்போல் இல்லை என்ற எண்ணம் அவளைச் செயலிழக்கச் செய்து கொண்டிருந்தது. இப்போது கூட குளித்து முடித்து வந்தபின் திருநீற்றுப் பொடியைக் கையில் எடுத்தபடி, நெற்றியில் பூசத் தடுமாறியபடி நின்று கொண்டிருந்தான். பின் ஏதோ நினைத்தவனாய், நெற்றியிலும், கைகளிலும், மார்பிலும் பூசிக் கொண்டு கிளம்பிவிட்டான்.

Wednesday 29 May 2013

ஆய்வு அனுபவங்கள் - 5

ஆய்வு செய்வது எப்படி?

 

தொடர்ச்சி...

5.நான்கு உத்திகள்


மேற்கோளை ஆய்வில் கையாளும் முறையில் நான்கு உத்திகள் உள்ளன.

1. அடிக்குறிப்பு முறை


தரவுகளை மேற்கோள்களாகப்  பயன்படுத்திய நிலையில்  மேற்கோள் குறி முடியுமிடத்தில் சற்று மேல் நிலையில் எண்களிடவேண்டும். இந்த எண்கள் மேற்கோள் எண்கள் எனப்படும். 1,2,3, .. என்ற எண்களிட்ட பின் அப்பக்கத்திலேய கீழப்பகுதியில் ஒரு கோட்டை இட்டு அதற்கு கீழ் எண்களுக்குரிய ஆசிரியர்,நூல்,பக்கம் போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும்.

இம்முறையில்  ஆய்வாளர் ஒவ்வொரு முறையம் ஆய்வைத் திருத்தம் செய்ய திரும்ப திரும்ப வரைவினை எழுதும்போது பக்கங்கள் மாற்றமடையும் .இரண்டாம் வரைவில் சில மேற்கோள்கள் இடையில் சேர்க்கப்படலாம்.சில நீக்கப்படலாம் . புதிய கருத்துகள் சேர்க்கப்படலாம். இது போன்ற மாற்றங்களின் போது, பக்கங்கள் மாற்றமடையும். எண்களும் மாற்றமடையும்.  மேற்கோள் எண்ணுக்கேற்ப அடிக்குறிப்புகளை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டி வரலாம்.  

2.சான்றென் விளக்கம்


இம்முறையிலும் தரவுகளை மேற்கோள்களாகப்  பயன்படுத்திய நிலையில்  மேற்கோள் குறி முடியுமிடத்தில் சற்று மேல்நிலையில் எண்களிடப்படவேண்டும். இந்த எண்கள் மேற்கோள் எண்கள் எனப்படும். 1,2,3, .. என்ற எண்களிட்ட பின், இயலின் முடிவில் தனிப் பக்கத்தில் சான்றென் விளக்கம் என்ற பகுதியை உருவாக்கி மேற்கோள் எண்களுக்கேற்ப,எண்களுக்குரிய ஆசிரியர்,நூல்,பக்கம் போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும்.

3. மேற்கோள் எண் இல்லா முறை


இது மேற்கோள்களின் குறி முடியுமிடத்திலேயே  அடைப்புக் குறிக்குள் ஆசிரியர் பெயர்,ஆண்டு,பக்க எண் முதலானவற்றைக் குறிப்பிடும் முறையாகும். 

 பண்டிதமணி  அவர்கள், இம்மூன்று பொருட்களையும் வரிசைப்படுத்தும் பொழுது தேன்-பால்-கரும்பு என்ற வரிசையில் அமைத்துள்ளார்.தேன் புழுக்களின் எச்சில் மயமாகவும், பால் ஊனுடம்பின் சாரமாகவும் உள்ளவை….கரும்பங்கட்டி எச்சில், ஊன் கலப்பு முதலிய குற்றம் இலாதாய், உடலுக்கு நலம் பயப்பதாகும். இம்முறையில் ஆண்டவன் அன்பரை ஆட்கொள்ளுங்கால், தேனைப்போல, வயப்படுத்தும் பாலைப் போலப், பின் பயன் விளைவித்து இனிமை தரும் கரும்பங்கட்டியைப் போலத் தூய இன்பம் அளித்துக் காப்பான்” (கதிரேசஞ்செட்டியார்.மு,1985.285-286)

 ஒரே ஆசிரியரின் இரு நூல்கள் கையாளப்படும் நிலையில் பதிப்பு ஆண்டும் பதிப்பித்த மாதமும் கண்டிப்பாக  மாறுபடும். எனவே குழப்பம் ஏற்படாது.  இம்முறையில் மேற்கோள்கள் இடையில் நீக்கப்பட்டாலும்,சேர்க்கப்பட்டாலும்,புதிய கருத்துக்களை சேர்த்தாலும்  பக்கங்களோ எணகளோ மாற்றப்படவேண்டியதில்லை.

மேலும், ஆய்வினைப் படிப்பவர்கள் அந்த மேற்கோளின் அருகிலேயே அது குறித்த விவரங்கள் இருப்பதால் பக்கங்களைத் தேடி விவரங்களை அறிய வேண்டியதில்லை. இதழ்களிலிருந்து எடுக்கப்படும் தரவுகளுக்கு,  “திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவு பூமிக்குள் ஊடுருவி நிலத்தையும்,நிலத்தடி நீரையும் பாழாக்கிவிட்டது. இனி புல்,பூண்டு முளைக்க முடியாத அளவு காற்றிலும் விசம் பரவியுள்ளது. இதனால் 9000 ஏக்கர் விவசாய நிலம்,185 ஊர் குடிநீர்,3500 கிணறுகள்,பாழ்பட்டு 600000 கால்நடைகள் இறந்து,600போ் மரணமடைந்துள்ளனர்.மண்ணும்,நீரும் மாசாகிவிட்டதால் பாம்புகள்.மண் புழுக்கள் உள்ளிட்ட உயிரினங்கள் காணாமல் போய்விட்டன.”(புதியதலைமுறை,மார்ச் 2013,ப.24)
என்றும் நாட்டுப்புற ஆய்வாயின் ( தங்கவேலு,ம.,2012,செப்20) என்றும் தகவல்கள் தரலாம்.

தொகுப்பு நூல்களிலிருந்து எடுக்கப்படும் மேற்கோள்கள் இவ்வாறு தரப்படவேண்டும். உதாரணமாக இம்மேற்கோளைக் குறிப்பிடலாம். மகாராசன் என்பவர் ஒருநூலில் தொகுத்தளித்த பல கட்டுரைகளிலிருந்து, மு.இராமசாமி என்பவரின் கட்டுரையிலிருந்து கீழ்வரும் மேற்கோள்எடுக்கப்பட்டது.

 “அர்த்தநாரீஸ்வரர் ஆணுக்கு பெண்ணை ஒளிக்க முடியாமல் அம்பலப்பட்டு நிற்கும் அரவாணித் தன்மையின் பருண்மையான மறு உள்ளீடுதான் என்று இத்தோற்றத்தை மு.இராமசாமி குறிப்பிடுகிறார்.(மகாராசன்(தொ.ஆ.,).2007.17)


        மேற்கோள் எண்கள் இடத் தேவையில்லாத இம்முறையில் எத்தனை முறை வரைவுகள் எழுதினாலும்,மேற்கோள் எண்கள் தொடர்பான சிக்கல்கள் இல்லை. திரும்ப திரும்ப எழுத நேரும் பொழுது மேற்கோள்கள் மாற்றப்படவேண்டிவரின் இம்முறை ஆய்வை எளிதாக்கும். ஆய்வு நிறைவடையும் நிலையில் கூட புதிய தரவுகள் கிடைப்பின் அவற்றையும் சிக்கலின்றி மேற்கோளாகச் சேர்த்துக் கொள்ளலாம். இத்தரவுகளுக்கான நூல் விவரங்களைத்  துணைநூற்பட்டியலில் கண்டு கொள்ளலாம்.

ஒரு பட்டத்திற்காக மேற்கொள்ளப்படும்  ஆய்வு என்பது, பக்க வரையறைகளை உடையது. சில பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட ஆய்விற்குரிய ஆய்வேடுகள் 250 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடிக்குறிப்பு மற்றும் சான்றென் விளக்கப்பகுதிகள் இடம் பெறும் ஆய்வுகளில் அவற்றிற்காக குறைந்தது பத்து பக்கங்களாவது  ஒதுக்க வேண்டி உள்ளது. இம்முறையில் அது தவிர்க்கப்படுகிறது.


4. நுட்ப முறை 


இம்முறை நுட்பமாகக் கையாளப்படும் முறையாகும். மேற்கோள் எண்  இடப்படுவதில்தான் நுட்பம் உள்ளது. இது   புதிய முறையாகும். ஆய்வு நிறைவடைந்த நிலையில்தான் எடுக்கப்பட்ட மேற்கோள்களுக்கு எண்களிடப்பட வேண்டும்.கையாளப்பட்ட தரவுகளுக்குரிய நூல்களை அகரவரிசைப்படுத்தி  துணைநூற்பட்டியலைத் தயாரித்துக்கொள்ளவேண்டும். இதில் முதல் நூலிலிருந்து ஆய்வு முழுவதும் கிட்டத்தட்ட பத்து மேற்கோள் கையாளப்பட்டிக்குமாயின் அத்தனை மேற்கோள்களுக்கும் எண் 1 என்ற எண்தான் கொடுக்கப்படவேண்டும். ஒரே இயலில் நான்கு முறை பயன்படுத்தியிருப்பின் அத்தனை மேற்கோள்களுக்கும் 1 என்கிற மேற்கோள் எண்தான் இடம் பெற வேண்டும்.

உதாரணமாக அகிலன் அவர்களின் நூலிலிருந்து இயல் ஒன்றில் மூன்று மேற்கோள்களும் ,இயல் இரண்டில் இரண்டு மேற்கோளும், மூன்றாம் இயலில் ஒரு மேற்கோளும்  எடுக்கப்பட்டிருந்தால் அத்தனை மேற்கோள்களுக்கும் மேற்கோள் எண் 1 தான். மேற்கோள் எண்கள் கொடுக்கப்படும் இடத்திற்கருகிலேயே பக்க எண்கள் இடம்பெறவேண்டும். உதாரணத்திற்கு
மாணிக்கவாசகரின் பாடல்களிலிருந்து ஒரு ஆய்வாளர்  மூன்று மேற்கோளை எடுத்துப் பயன்படுத்தியுள்ளார். துணைநற்பட்டியலில் திருவாசகம் 8ம் இடத்தில் உள்ளது என வைத்துக் கொள்வோம்.

“உருத்தெரியாக் காலத்தே உள்புகந்தென் மாமன்னிக்
கருத்திருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட”8(ப.141)

“ஈண்டிய மாயா இருள்கெட எப்பொருளும் விளங்க” 8 (ப.156)

“பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்”8(.106)

இம்முறையில்  தரவுகளைப்பயன்படுத்திய நூல்களின் பட்டியலைத்தான் தரமுடியும் .எத்தனை நூல்கள் துணைநூற்பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்பதைக்கொண்டு ஆய்வாளரின் ஆய்விற்கான உழைப்பை வெளிப்படுத்தக்கூடியது இம்முறை. துணைநூற்பட்டியலை வளமாகக் காட்ட வேண்டும் என்பதற்காக மேற்கோள்கள் எடுக்கப்படாத நூல்களை இம்முறையில் சேர்க்க இயலாது.

மேற்கோள்குறி


 மேற்கோள் குறிகளைக் ஆய்வில் கையாளும் பொழுது கவனிக்கப் படவேண்டியவை.முதலில் மூல நூலிலிருந்து எடுக்கபட்ட தரவினை எவ்வித மாற்றமின்றி அப்படியே கையாள்வது.  ஒற்றை மேற்கோள், இரட்டை மேறகோள் என இருவகைகள் உள்ளன. அனைவருக்கும் தெரிந்த பொதுச் செய்திகளான பழமொழி உள்ளிட்ட தகவல்களைக் குறிப்பிடுமிடத்தும், தரவுகளைச் சுருக்கித் தரும் நிலையிலும்,மேற்கோளுக்குள் மேற்கோள்கள் இருப்பின் அதற்கும் ஒற்றை மேற்கோள் இடப்படவேண்டும்.


மூலநூல்கள் மற்றம் துணை நூல் தரவுகளை அப்படியே கையாளும் பொழுதும், சேகரித்த நாட்டுப்புறப்பாட்டு முதலானவற்றிற்கும் இரட்டை மேற்கோள் இடப்படவேண்டும். மேற்கோள் குறி என்பதே அதை மேற்கோள் எனத் தனித்துக் காட்டுவதற்காகத்தான்.   தட்டச்சிடும்பொழுது தடித்த எழுத்துகளில் அதை மட்டும் காட்டத் தேவையில்லை.


தொடரும்...







ஆய்வு அனுபவங்கள் -4

 

ஆய்வு செய்வது எப்படி?

தொடர்ச்சி....

4.தரவுகளைத் திரட்டும் முறை  

மூலநூலிலிருந்துத் துணைநூல்களிலிருந்தும் தரவுகளைச் சேகரிக்கும் பொழுது, சேகரிக்கப்படும் தகவல்கள் ஆய்வில் கையாளப்பட்டால், மேற்கோளாகப் பயன்படுகின்றன.மேற்கோள் அட்டை அல்லது ஒருவெள்ளைத்தாளின் கிழித்த பாதிப் பகுதியை தரவுகளைச் சேகரிக்கப் பயன்படுத்தலாம். இதில் மூன்று தகவல்கள் பதிவுசெய்யப்படவேண்டும்.

 1.தரவு  பொருண்மையைப் பார்த்தவுடன் தெரிந்து கொள்ளும் வகையிலான  சிறு தலைப்பு.
2.தரவு பகுதி எடுக்கபட்ட நூலின் பக்கஎண்அல்லது பாடல்எண்
3.நூல் பற்றிய முழுவிவரங்கள்(நூலாசிரியர் அல்லது பதிப்பாசிரியர் அல்லது தொகுப்பாசிரியர் பெயர்(கள்)., நூல்பெயர், முகவரி,பதிப்புஆண்டு மற்றும்  பதிப்பு விவரம்முதலானவை)


     தரவுகளைச் சேகரிக்கும் பொழுது, அனைத்துத்  தரவுகளையும் மேற்கோளாகக் கையாள்கிறோமோ இல்லையோ. சேகரிக்கும் பொழுதே மேற்கூறிய மூன்று தகவல்களைப் பதிவு செய்து கொள்ளவேண்டும்.மேற்கோளாகவும்,சான்றென் விளக்கம் மற்றும் துணைநூற்பட்டியல்  போன்ற பய்னபாட்டிற்காகவும் உதவக்கூடிய வகையில் இவை சேகரிக்கப்படுகின்றன.பதிப்பாசிரியர்கள் நூலாசிரியர்கள் போன்றவர்களை த் தெளிவாகக் குறித்துக்கொள்ளவேண்டும்.

        திருவாசகம் என்கிற நூலை எழுதியவர் மாணிக்கவாசகர் என்றாலும் அவர்  அந்நூலை வெளியிட்டிருக்கமாட்டார். அந்நூலை யாராவது ஒருவர் தற்காலத்தில் உரை எழுதி பதிப்பித்திருக்கலாம். அவ்வகையில் பதிப்பாசிரியர் அல்லது உரையாசிரியர் பெயரைத்தான் குறித்துக் கொள்ளவேண்டும். சிலர் தொகுத்திருக்கலாம். அவர்களைத் தொகுப்பாசிரியர்களாகக் குறித்துக் கொள்ளவேண்டும்.

           ஒவ்வொரு தரவுளும் ஏதோ ஒரு பொருண்மையைக் கொண்டிருக்கும். இவற்றைச்  சேகரிக்கும் பொழுதே அதன் பொருண்மையைச் சிறுதலைப்பாக்கி தரவின்  மேல் பகுதியில்  அடிக்கோடிட்டு சிறு தலைப்பாக எழுதிக்கொள்ளவேண்டும். தரவுகளைப் பகுத்து சிறுசிறு தொகுப்பிற்குள் அடக்க இம்முறை உதவும்.ஒரே தலைப்பிற்குள் மிகுதியான தரவுகள் மூலநூலிலிருந்து கிடைக்கும் பொழுது அதை இயல் தலைப்பாக அமைத்துக்கொள்ளலாம். ஏனையவற்றை கிடைக்கும் தரவுகளைக் கொண்டு இயல்களுக்குள் சிறுசிறு உட்தலைப்புகளாகப் பயன்படுத்தலாம். இவ்வாறு சேகரித்து பகுத்துத் தொகுத்த பின்னரே எழுதத்தொடங்கவேண்டும்.

       ஒரு குறிப்பிட்ட கொள்கையைப் பற்றியோ,ஒரு படைப்பாளரைப் பற்றியோ முன்பே தீர்மானித்த முடிவை வைத்துக்கொண்டு அதன் கோணத்தில் ஆய்வை எழுதக்கூடாது.அவ்வாறு எழுதுவது நின்ற இடத்திலேயே நிறபதற்குச் சமம். ஆய்வு என்னும் படகைச் செலுத்த வேண்டுமெனில், தீர்மானித்த முடிவு என்னும் கட்டிலிருந்து அதை விடுவித்து விட வேண்டும். அப்போதுதான் ஆய்வு சரியான பாதையில் முன்னேறும்.

          காய்த்தல்,உவத்தல் அகற்றி கிடைத்துள்ள தரவுகளடிப்படையில் ஆய்வு அறத்திலிருந்து மாறாமல், ஆய்வு நோக்கத்தையே  நினைந்து, கருதுகோளை உணர்ந்து ஆய்வை எழுதத்தொடங்கவேண்டும். ஒவ்வொரு இயலை எழுதத் தொடங்கும் போதும்,ஆய்வாளர் மனதில் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.


         நெறியாளரிடம் எழுதிய இயலைக்கொண்டு சேர்க்குமுன்னர், இரு முறையாவது எழுதிப்பார்த்துவிட வேண்டும்.   இதனை முதல் வரைவு,இரண்டாம் வரைவு எனக் குறிப்பிடலாம்.

முதல் வரைவு

முதல் வரைவில் மூன்று செய்திகளைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

1.என்ன சொல்லப்போகிறோம் அதை எப்படி சொல்லப்போகிறோம் என்பதில் தெளிவு.
2.எந்த நோக்கத்திற்காக  ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என்பதில் கவனம்.
3.ஆய்வினைப் படிப்பவர்களைக் கருத்தில் கொண்ட மொழிநடை.

முதலில் முதல் இயலைத்தான் எழுதவேண்டும் என்பதில்லை. தரவுகள் மிகுதியாகக் கிடைத்துள்ள இயல்களை முதலில் எழுதலாம்.முதல் வரைவில் என்ன, எப்படி என்பதில் தெளிவு தேவைப்படுவதைப்போல, எவ்வளவு தகவல்களைத் தரப்போகிபோகிறோம் என்பதிலும் தெளிவு தேவை. ஏனெனில் 

            ஒரு இயலுக்கு ஏராளமானத் தகவல்கள் கிடைத்துள்ள நிலையில் கிடைத்த தரவுகள் அனைத்தையும் பயன்படுத்தி விடவேண்டும்மென்ற ஆர்வத்தில் பிற இயல்களைக் கருத்தில் கொள்ளாமல் எழுதினால், ஒரு இயல் மிகப் பெரியதாகவும்,மற்றவை மிகச் சிறியதாகவும் அமைந்து விடும். ஒரு நாற்காலியின் நான்கு கால்களும் எப்படி சீரானதாக அமைந்துள்ளனவோ அதைப்போல இயல்கள் அமைவதுதான் சிறப்பு. எனவே பக்க வரையறைகளைக் கருத்தில் கொண்டு உட்தலைப்பிற்கேற்ற வகையில் தரவுகளை முறைப்படுத்திக்கொண்டு எழுதுவதே சரியாக முறை. தரவுகளை இயலுக்கேற்ப முறைப்படுத்தாமல் மேற்கொள்ளப்படும் ஆய்வு  தலைப்பையே கேள்விக் குறியாக்கி விடும். 

எளிய மொழிநடையில்,தெளிவான முறையில் சொல்ல வந்த கருத்தை முறைப்படுத்தப்பட்ட தரவுகளின் அடிப்படையில் சிறு சிறு தொடர்களில் எடுத்துரைக்கவேண்டும்.முதல் வரைவினை எழுதும் பொழுது தயக்கம் அச்சம் போன்றவை ஏற்படும்.நோக்கத்தை பற்றிக் கொண்டு தரவுகளைக் மனதில் வரிசைப்படுத்தி கொண்டு அச்சமின்றி எழுத வேண்டும். அப்போதுதான் புதிய சிந்தனைகளும் புதிய உத்திகளும் தோன்றும். முதல் வரைவில் நிறுத்தற்குறி, கருத்துப்பிழை,ஒற்றுப்பிழைகளை கருத்தில் கொள்ளத் தேவையில்லை.

எதையும் எழுதுவதற்கு முன் மனதில் ஒரு முறை அதைப் பற்றி சிந்தித்து தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.   எந்த கருத்தை முதலில் கூறுவது, எந்த கருத்தை அடுத்தடுத்து கூறுவது எனத் தெளிவாகத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். எழுதும்பொழுது தடங்கலின்றி சொற்கள் இயல்பாக வந்து ஆய்வு நடையில் அமைய, ஆய்வுப் பொருள் குறித்த தெளிவும், தரவுகளைப் பொருத்தமுற அமைக்கும் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.

            ஆய்வுப்பொருள் குறித்த மூலநூலையும் துணை நூல்களையும் ஆழ்ந்து படிந்திருந்தால்தான், ஆய்வு  சிறப்பாக அமையும். ஆய்வாளர் தான் சொல்ல வந்த கருத்தைப் படிப்பவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளும் வகையில், எடுத்துரைக்கவில்லையெனில் படிப்பவர்கள் தவறாக புரிந்து கொள்ள நேரிடும்.         சொற்களின் பொருண்மை பற்றிய அறிவும், அதைச் சரியான இடத்தில் சரியாகப் பயன்படுத்த வேண்டிய விழிப்புணர்வும் உள்ளவரே சிறந்த ஆய்வாளராக முடியும். நிறைய நூல்களைப் படிப்பதால் மட்டுமே ஒருவர் ஏராளமான சொற்களை அறிய முடியும் அதைச் சரியாகப் பயன்படுத்தவும் முடியும். எனவேதான்,எழுதுவது ஒரு கலை எனப்படுகிறது.

எழுதுவதற்கு முன் மிகுதியான தரவுகளைச் சேகரித்துவிட்டது போலத் தோன்றும்.ஆனால்,எழுதும்போது தான் அவற்றில் சில தேவையில்லாதது என்றும் இன்னும் தேவை என்பதும் தெரியும்.எனினும் தயக்கமின்றி முதல் வரைவை முழுமையாக எழுதிவிட வேண்டும். ஓரளவிற்கு உருவம் கொடுத்த இயலில் உள்ள குறைகளை இரண்டாம் வரைவில் சரிசெய்து விட வேண்டும்.

முதல்  வரைவில் உள்ள கருத்துப்பிழை உள்ளிட்ட பிழைகள்,  உட்தலைப்பில் ஒழுங்கின்மை, சீரற்ற மொழிநடை,   ஒருமை-பன்மை மயக்கம் போன்றவற்றில் கவனம் செலுத்தி தேவைப்படும் மேற்கோளைச் சேகரித்து உரிய இடங்களில் பொருத்தி சரி செய்ய வேண்டும். இவ்வாறு சரி செய்த முதல் வரைவினை வாய்விட்டு ஒருமுறை படித்துப் பார்க்க வேண்டும். கண்கள் கண்டுபிடிக்காததை காதுகள் கண்டுபிடித்துவிடும்.கீழக்கண்ட முறையில் சரிசெய்யலாம். 

^


இரண்டாம் வரைவு


முதல் வரைவில் திருத்தங்களைச் செய்து, அதிலுள்ள குறைகளை நீக்கி,தேவைப்படும் புதிய தரவுகளைச் சேகரித்து உரிய இடத்தில் பொருத்திய பின்னரே  இரண்டாம் வரைவு எழுதப்படவேண்டும். இரண்டாம் வரைவில் கவனிக்கப்படவேண்டிய ஒன்று பத்தியமைப்பு.

ஒரு பத்தி என்பது ஒரு கருத்தைத் தொடங்கி,அக்கருத்து நிறைவுறும் வகையிலும் தொடரக்கூடியது. அக்கருத்து நிறைவடையும்போதுதான் அப்பத்தி நிறைவடையும். கருத்தின் தன்மையைப் பொறுத்து ஒரு பத்தி மூன்று வரிகளிலும் இருக்கலாம். முப்பது வரிகளிலும் இருக்கலாம்.

ஆய்வினைப் பொறுத்தளவில் தேவையற்ற சொற்கள் என ஒரு சொல் கூட இல்லாதவகையில், சொல்ல வந்த செய்தியினைச் செறிவுடன் சுருக்கமாக எடுத்துரைக்க வேண்டும். அடு்த்த கருத்தையோ, அக்கருத்திற்கு மாறான கருத்தையோ,மேற்கோளையோ அடுத்த பத்தியில் அமைக்கவேண்டும்.

தன்மை,முன்னிலை நிலையில் ஆய்வு அமையக்கூடாது. படர்க்கை நிலையிலிருந்தே ஆய்வினை நிகழ்த்த வேண்டும். உணர்ச்சிநடை,பெருமிதநடை,வினாநடை,பிறமொழி கலப்புநடை முதலான நடைகளைத் தவிர்த்து கூடுமான வரையில் தூய தமிழ்ச் சொற்கள் மட்டுமே இடம்பெறும் வகையில் ஆய்வு நிகழ்த்தப்படவேண்டும்.தேவைப்படின் தூய தமிழ்ச்சொற்களுக்கருகில் பிறமொழிச்சொற்களை அடைப்புக்குறிக்குள் தரலாம். ஒவ்வொரு இயலும் அவ்வியலுக்குரிய தலைப்பை ஒட்டி சிறு முன்னுரைப் பகுதியைக் கொண்டிருக்கவேண்டும். அது போல இயலின் முடிவு அந்த இயலில் ஆராயப்பட்டு கண்டறிந்த மெய்மைகளை தொகுத்து கூறுவதாக அமைய வேண்டும்.

மேற்கோள் என்பது இருவகைப்படும்.

 1.படைப்பிலக்கியங்களில் ஆய்வு நிகழ்த்தப்படுமாயின், மூலநூலிலிருந்து எடுக்கப்பட்ட தரவுகள் அல்லது  நாட்டுப்புற ஆய்வு எனின் சேகரிக்கப்பட்ட தரவுகள் 

2. மூலநூல் அல்லாத பிறவற்றிலிருந்து எடுக்கப்பட்ட தரவுகள்..

             இயல் தலைப்பிற்கேற்ற வகையிலும்,ஆய்வு நோக்கத்திற்கேற்ற வகையிலும் இத்தரவுகள் பொருத்தமாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மூலநூல் தரவுகளுக்குத் தொடர்புடைய துணைநூல் தரவுகளைப் பகுத்துத் தொகுக்கும் வகைப்படுத்தும்போது ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். துணை நூல் தரவுகள் மூலநூல் தரவுகளுக்கு அரணானவையாகவும்  இருக்கலாம். முரணானவையாகவும் இருக்கலாம்.

           மூலநூல் கருத்துக்களைச் சரியாக விளங்கிக் கொண்டு அதற்கேற்ற தரவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். முரணான சருத்தாயின் எவ்வாறு,எதனடிப்படையில் முரண்படுகிறது அது குறித்த ஆய்வாளரின் கருத்து யாது, எது ஏற்புடையது என்பதனைத் தெளிவு படுத்திய பின்னரே ஆய்வினை மேற்கொண்டுத் தொடரவேண்டும்.

          உதாரணமாக மாணிக்கவாசகரின் காலம் குறித்து ஒரு தெளிவின்மை உள்ளது. மூலநூலில் உள்ள கருத்துக்களை முறையாகப் பயின்று காலம் குறித்த ஒரு தெளிவை உண்டாக்கிக்கொள்ள வேண்டும். பின் பல்வேறு ஆய்வாளர்களின் மாணிக்கவாசகரின் காலம் குறித்த கருத்துகளைத் தொகுக்கவேண்டும். அதை வரிசைப் படுத்திக் கொள்ள வேண்டும். மறைமலையடிகள், அ.ச.ஞானசம்பந்தன் உள்ளிட்ட பிற அறிஞர்கள் கூறும் கருத்துக்களில் எது ஏற்புடையது என ஆய்வாளர் கருதுகிறாரோ அக்கருத்தை ஆய்வில் அதற்கான காரணத்தோடும் ஆதாரத்தோடும் தெளிவுபடுத்தி விட வேண்டும். எனவே, துணை நூலில் திரட்டப்பட வேண்டிய தரவுகள்  சிக்கலுக்கேற்ப திரட்டப்பட வேண்டும்.

1.மூலநூலிலிருந்து எடுக்கப்படும் தரவுகள், செய்யுள் பகுதியாயின் இவ்வாறு தரலாம்.
"பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி" (புறம் - 264)
                           "ஊர்நனி யிறந்த பார்முதிர் பறந்தலை" (புறம் - 265)

உரைநடையாயின்,  (ஒரு நாவலிலிருந்து எடுக்கப்பட்ட  தரவு  இது.)
 
தகப்பன்கொடி நாவலின் இறுதியில் அம்மாசியின் வாழ்நாள் முடிவுக்கு வரும் நிலையில் அமையும் பகுதி,“தீடிரென்று அவனை ஒரு கை தூக்கிக்கொண்டு பறந்தது. கோழிக்குஞ்சைப் போலத் தான் தூக்கிச் செல்லப்படுவதாய் நினைத்தான் அம்மாசி.  அதன் தொடுகை மிருதுவாக இருந்தது. இறக்கையடிப்புகள் மென்மையாக வீசிவிடுவது போல அருகிலேயே அவனை வருடின. மண்ணில் கால் பரவ விடாமல் சமவெளிகளுக்கும் மலைமுகடுகளுக்கும் நீர்ப்பரப்புகளுக்கும் மேலாய்க் கடந்து பறந்தது அது.  மண் தேலியிருக்கிற திட்டுகளில் காலை ஊன்றி விடலாம் என்று அவன் முயற்சிக்கும் போது அது இன்னும் மேலாய் காற்றில் எழுந்தது” (தகப்பன் கொடி, பக.46) என்றவாறாக அமைகிறது.


2. மூலநூல் அல்லாத பிறவற்றிலிருந்து எடுக்கப்பட்ட தரவுகள்..

உரைநடையாயின்,

""""இன்னும் அவர்கள் உயிரோடு இருக்கப்போவது ஒரு சில ஆண்டுகள் தான். அதுவரை அவர்கள் தங்கள் விருப்பப்பட்டபடி வாழ்ந்து விட்டுத்தான் போகட்டுமே. அவர்களுக்குத்  தேவையானதை வாங்கிக் கொடுத்து அவர்கள் சொல்லைக் கேட்டு நடந்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் பொறுப்பு இளைய தலைமுறையினருக்கு உண்டு. ""  (நடராஜன்.வி.எஸ் ,2008:123) 

மேற்கோள்களை இதழ்களிலிருந்தும் திரட்டலாம். உதாரணமாக,இவ்வாறு தரலாம்.

  ‘தினகரன்’ நாளிதழில் வெளியான செய்தி ‘அளம்’ நாவலுடன் ஒப்புநோக்கத் தக்கதாக இருக்கிறது. """" கல்யாணியின் கணவர் கணபதிக்கு வருமானம் போதாததால் குழந்தைகள் பசியால் வாட வறுமைக்கு வயிறு இரையாகிப் போனதை கல்யாணியால் சகிக்க முடியவில்லை . அதனால் பெண்கள் கடைக்குக் கூட வராத காலத்தில் டயர் பஞ்சர் ஒட்டுகிற கடையில் வேலைக்கு சேர்ந்தார் . கணவர் இறந்ததால் அப்பா , அம்மா இரண்டு பேருக்குமான கடைமையை முடித்துவிட்டார். மூன்று மகள்களுக்கும் , ஒரு மகனுக்கும் திருமணம் செய்து முடித்துவிட்டார். அதற்காக 33 வருடங்களாக பஞ்சர் ஒட்டிக் கொண்டு இருக்கும் கல்யாணிக்கு வயது 60.""  (வசந்தம் - தினகரன் இணைப்பு,    11 .5. 2008 : 3)    
 
தொடரும்......