நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday 27 December 2013

சிலப்பதிகாரம் 23. கட்டுரை காதை

23. கட்டுரை காதை
மதுராபதி தெய்வம் கண்ணகியின் பின்புறம் தோன்றிப் பேசுதல்

சடையும் பிறையும் தாழ்ந்த சென்னி,
குவளை உண் கண் தவள வாள் மகத்தி;
கடை எயிறு அரும்யிய பவளச்செவ் வாய்த்தி;
இடை நிலா விரிந்த நித்தில நகைத்தி;
இட மருங்கு இருண்ட நீலம் ஆயினும்,                                            5

வல மருங்கு பொன் நிறம் புரையும் மேனியள்;
இடக் கை பொலம் பூந் தாமரை ஏந்தினும்,
கூலக் கை அம் சுடர்க் கொடி வாள் பிடித்தோள்;
கூலக் கால் புனை கழல் கட்டினும், இடக் கால்
துனிச் சிலம்பு அரற்றும் தகைமையள்; பனித் துறைக்                                10
கொற்கைக் கொண்கன், குமரித் துறைவன்,
பொன்கோட்டு வரம்பன், பொதியில் பொருப்பன்,
குல முதல் கிழத்திஆதலின், அலமந்து;
ஒரு முலை குறைத்த திரு மா பத்தினி
அலமரு திருமுகத்து ஆய் இழை நங்கை - தன்                                    15
முன்னிலை ஈயாள் பின்னிலைத் தோன்றி,
‘கேட்டிசின் வாழி, நங்கை! என் குறை’என -

கண்ணகியின் வினா

வாட்டிய திரு முகம் வலவையின் கோட்டி,
‘யாரை நீ, என் பின் வருவோய்? என்னுடை
ஆர் அஞர் எவ்வம் அறிதியோ?’ என -                                            20

மதுராபதி சொல்லிய செய்திகள் தீவினை வந்த வகையைக் கூறுதல்

‘ஆர் அஞர் எவ்வம் அறிந்தேன், அணி - இழாஅய்!
மா பெரும் கூடல் மதுராபதி என்பேன்;
கட்டுரை ஆட்டியேன்; யான் நின் கணவற்குப்
பட்ட கவற்சியேன்; பைந்தொடி! கேட்டி;
பெருந்தகைப் பெண்! ஒன்று கேளாய், என் நெஞ்சம்                                25
வருந்திப் புலம்புறு நோய்.
தோழி! நீ ஈது ஒன்று கேட்டி, எம் கோமகற்கு
ஊழ்வினை வந்தக்கடை.
மாதராய்! ஈது ஒன்று கேள், உன் கணவற்குத்
தீதுற வந்த வினை.

பாண்டியர் குலத்தின் இயல்பு உரைத்தல்

காதின்                                            30
மறை நா ஓசை அல்லது, யாவதும்
மணி நா ஓசை கேட்டதும் இலனே;
அடி தொழுது இறைஞ்சா மன்னர் அல்லது,
குடிப ழி தூற்றும் கோலனும் அல்லன்;
இன்னும் கேட்டி; நல் நுதல் மடந்தையர்                                            35
மடம் கெழு நோக்கின் மத முகம் திறப்புண்டு,
இடங்கழி நெஞ்சத்து இளமை யானை
கல்விப் பாகன் கையகப்படாஅது,
ஒல்கா உள்ளத்து ஓடும் ஆயினும்,
ஒழுக்கொடு புணர்ந்த இவ் விழுக் குடிப் பிறந்தோர்க்கு                                40
இழுக்கம் தாராது.

கை குறைத்த கொற்றவன்

இதுவும் கேட்டி;
புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள்,
""""அரைச வேலி அல்லது யாவதும்
புரை தீர் வேலி இல்"""" என மொழிந்து,                                            45
மன்றத்து இருத்திச் சென்றீர்; அவ்வழி
இன்று அவ் வேலி காவாதோ?, என,
செவிச் சூட்டு ஆணியின், புகை அழல் பொத்தி,
நெஞ்சம் சுடுதலின், அஞ்சி, நடுக்குற்று,
வச்சிரத் தடக் கை அமரர் கோமான்                                            50
உச்சிப் பொன் முடி ஒளி வளை உடைத்த கை
குறைத்த செங்கோல், குறையாக் கொற்றத்து,
இறைக் குடிப் பிறந்தோர்க்கு இழுக்கம் இன்மை;

வார்த்திகனுக்கு நீதி செய்த வரலாறு
பராசரன் சேரனைக் காணச் சென்று, பார்ப்பனவாகை சூடி, மீளுதல்

இன்னும் கேட்டி, நன் வாய் ஆகுதல்;
பெருஞ் சோறு பயந்த திருந்து வேல் தடக் கை                                    55
திரு நிலைபெற்ற பெருநாள்-இருக்கை,
அறன் அறி செங்கோல், மற நெறி நெடு வாள்,
புறவு நிறை புக்கோன், கறவை முறை செய்தோன்,
பூம் புனல் பழனப் புகார் நகர் வேந்தன்,
தாங்கா விளையுள், நல் நாடு - அதனுள்.                                        60
வலவைப் பார்ப்பான், பராசரன் என்போன்,
குலவு வேல் சேரன் கொடைத் திறம் கேட்டு,
""""வண் தமிழ் மறையோற்கு வான் உறைகொடுத்த
திண் திறல் நெடு வேல் சேரலன் காண்கு"""" என,
காடும், நாடும், ஊரும், போகி,                                                    65
நீடு நிலை மலயம் பிற்படச் சென்று, ஆங்கு,
ஒன்று புரி கொள்கை இருபிறப்பாளர்
முத்தீச்செல்வத்து நான்மறை முற்றி,
ஐம் பெரு வேள்வியும் செய் தொழில் ஓம்பும்
அறு தொழில் அந்தணர் பெறு முறை வகுக்க                                        70
நா வலம் கொண்டு, நண்ணுhர் ஓட்டி,
பார்ப்பன வாகை சூடி, ஏற்புற
நன் கலம் கொண்டு தன் பதிப் பெயர்வோன்-
திருத்தங்காலின் பராசரன் தங்கிய காலத்து நிகழ்ந்தவை

செங்கோல் தென்னன் திருந்து தொழில் மறையவர்
தங்கால் என்பது ஊரே; அவ் ஊர்ப்                                                75
பாசிலை பொதுளிய போதி மன்றத்து;
தண்டே, குண்டிகை, வெண்குடை, காட்டம்,
பண்டச் சிறு பொதி, பாதக் காப்பொடு
களைந்தனன் இருப்போன்; """"காவல் வெண்குடை
விளைந்து முதிர் கொற்றத்து விறலோன் வாழி!                                    80
கடல் கடம்பு எறிந்த காவலன் வாழி!
வீடர்ச் சிலை பொறித்த விறலோன் வாழி!
பூந் தண் பொருநைப் பொறையன் வாழி!
மாந்தாஞ்சேரல் மன்னவன் வாழ்க!"""" என;
குழலும், குடுமியும், மழலைச் செவ் வாய்,                                        85
தளர் நடை ஆயத்து, தமர் முதல் நீங்கி,
விளையாடு சிறாஅர் எல்லாம் சூழ்தர;
""""குண்டப் பார்ப்பீர்! ஏன்னோடு ஓதி, என்
பண்டச் சிறு பொதி கொண்டு போமின்"""" என;
சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன்,                                        90
ஆல் அமர் செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோன்,
பால் நாறு செவ் வாய்ப் படியோர் முன்னர்,
தளர் நா ஆயினும், மறைவிளி வழாஅது,
உளம் மலி உவகையோடு ஒப்ப ஓத,
தக்கிணன்-தனனை மிக்கோன் வியந்து,                                        95
முத்தப் பூணுhல், அத்தகு புனை கலம்,
கடகம், தோட்டொடு கையுறை ஈத்து,
தன் பதிப் பெயர்ந்தனனாக-

வார்த்திகனைச் சிறைவிட, ஐயை கோயிலின் கதவர் திறவாமை

நன் கலன்
புனைபவும் பூண்பவும் பொறாஅராகி,
வார்த்திகன்-தன்னைக் காத்தனர் ஓம்பி,                                        100
கோத்தொழில் இளையவர் கோமுறை அன்றி,
""""படுபொருள் வௌவிய பார்ப்பான் இவன்"""" என,
இடு சிறைக் கோட்டத்து இட்டனராக,
வார்த்திகன் மனைவி, கார்த்திகை என்போள்,
அலந்தனள்; ஏங்கி அழுதனள், நிலத்தில்;                                        105
புலந்தனள்; புரண்டனள்; பொங்கினள்; அது கண்டு,
மை அறு சிறப்பின் ஐயை கோயில்
செய்வினைக் கதவம் திறவாது ஆகலின்,


வார்த்திகனைச் சிறை விடுத்து, அவனுக்கு இரண்டு ஊர்களை அளித்தல்

திறவாது அடைத்த திண் நிலைக் கதவம்
மற வேல் மனனவன் கேட்டனன் மயங்கி                                        110
""""கொடுங்கோல் உண்டுகொல்? கொற்றவைக்கு உற்ற
இடும்பை யாவதும் அறிந்தீமின்"""" என,
ஏவல் இளையவர் காவலன் தொழுது,
வார்த்திகற் கொணர்ந்த வாய்மொழி உரைப்ப,
""""நீர்த்து அன்று இது"""" என நெடுமொழி கூறி,                                        115
""""அறியா மாக்களின் முறை நிலை திரிந்த என்
இறை முறை பிழைத்தது;  பொறுத்தல் நும் கடன்"""" என,
தடம் புனல் கழனித் தங்கால் - தன்னுடன்
மடங்கா விளையுள் வயலூர் நல்கி,
கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர்,                                        120
இரு நில மடந்தைக்குத் திரு மார்பு நல்கி, அவள்
துணியா வேட்கையும் சிறிது தணிந்தனனே;
நிலை கெழு கூடல் நீள் நெடு மறுகின்
மலை புரை மாடம் எங்கணும் கேட்ப,
கலை அமர் செல்வி கதவம் திறந்தது;                                            125
""""சிறைப்படு கோட்டம் சீமின், யாவதும்
கறைப்படு மாக்கள் கறை வீடு செய்ம்மின்;
இடு பொருள் ஆயினும், படுபொருள் ஆயினும்,
உற்றவர்க்கு உறுதி, பெற்றவர்க்கு ஆம்"""" என
யானை எருத்தத்து, அணி முரசு இரீஇ,                                            130
கோன்முறை அறைந்த கொற்ற வேந்தன்
தான் முறை பிழைத்த தகுதியும் கேள், நீ;

சோதிட வார்த்தை

""""ஆடித் திங்கள் பேர் இருள் பக்கத்து,
அழல் சேர் குட்டத்து, அட்டமி ஞான்று,
வெள்ளி வாரத்து, ஒள் எரி உண்ண,                                            135
உரைசால் மதுரையோடு அரைசு கேடுறும்"""" எனும்
உரையும் உண்டே. நிரை தொடியோயே!-

பாண்டியன் முறை பிழைத்த காரணம்
கோவலனது முற்பிறப்பு வரலாறு

கடி பொழில் உடுத்த கலிங்க நல் நாட்டு,
வடி வேல் தடக் கை வசுவும், குமரனும்,
தீம் புனல் பழனச் சிங்கபுரத்தினும்,                                                 140
காம்பு எழு கானக் கபிலபுரத்தினும்,
அரைசு ஆள் செல்வத்து, நிரை தார் வேந்தர்-
வீயாத் திருவின் விழுக் குடிப் பிறந்த
துhய வேந்தர் - தம்முள் பகையுற,
இரு - முக் காவதத்து இடைநிலத்து யாங்கணும்,                                    145
செரு வெல் வென்றியின், செல்வோர் இன்மையின்,                               
அரும் பொருள் வேட்கையின் பெரும் கலன் சுமந்து,
கரந்து உறை மாக்களின் காதலி - தன்னொடு,
சிங்கா வண் புகழ்ச் சிங்கபுரத்தின் ஓர்
அங்காடிப் பட்டு அருங்கலன் பகரும்                                            150
சங்கமன் என்னும் வாணிகன் - தன்னை,
முந்தைப் பிறப்பில், பைந்தொடி! கணவன்-
வெந் திறல் வேந்தற்குக் கோத்தொழில் செய்வோன்,
பரதன் என்னும் பெயரன்; அக் கோவலன்
விரதம் நீங்கிய வெறுப்பினன் ஆதலின்-                                        155
""""ஒற்றன் இவன்"""" எனப் பற்றினன் கொண்டு,
வெற்றி வேல் மன்னற்குக் காட்டிக் கொல்வுழி;
கொலைக்களப் பட்ட சங்கமன் மனைவி,
நிலைக்களம் காணாள், நீலி என்போள்,
""""அரசர், முறையோ? பரதர், முறையோ?""""                                        160
ஊரிர், முறையோ? சேரியீர் முறையோ?"""" என,
மன்றினும் மறுகினும் சென்றனள் பூசலிட்டு;
எழு நாள் இரட்டி எல்லை சென்றபின்,
""""தொழு நாள் இது"""" எனத் தோன்ற வாழ்த்தி,
மலைத் தலை ஏறி, ஓர் மால் விசும்பு ஏணியில்                                        165
கொலைத் தலைமகளைக் கூடுபு நின்றோள்,
""""எம் உறு துயரம் செய்தோர் யாவதும்
தம் உறு துயரம் இற்று ஆகுக"""" என்றே
விழுவோள் இட்ட வழு இல் சாபம்
பட்டனிர் ஆதலின், கட்டுரை கேள் நீ;                                            170

மதுராபதியின் கட்டுரை

உம்மை வினை வந்து உருத்தகாலை,
செம்மையிலோர்க்குச் செய் தவம் உதவாது;
வார் ஒலி கூந்தல்! நின் மணமகன்-தன்னை
ஈர்-ஏழ் நாள் அகத்து எல்லை நீங்கி,
வானோர்-தங்கள் வடிவின் அல்லதை,                                            175
ஈனோர் வடிவில் காண்டல் இல்’ என,
மதுரை மா தெய்வம் மா பத்தினிக்கு
விதி முறை சொல்லி, அழல்வீடு கொண்டபின்-

கண்ணகி மதுரையை விட்டு நீங்கி, திருச்செங்கோடு சேர்தல்

‘கருத்து உறு கணவன் கண்டபின் அல்லது,
இருத்தலும் இல்லேன்; நிற்றலும் இலன்’ என,                                        180
கொற்றவை வாயில் பொன் தொடி தகர்த்து,
‘கீழ்த் திசை வாயில் கணவனொடு புகுந்தேன்;
மேல் திசை வாயில் வறியேன் பெயர்கு’ என,
இரவும் பகலும் மயங்கினள் கையற்று,
உரவு நீர் வையை ஒரு கரைக்கொண்டு, ஆங்கு,                                    185
அவல என்னாள், அவலித்து இழிதலின்,
மிசைய என்னாள், மிசை வைத்து ஏறலின்;
கடல் வயிறு கிழித்து, மலை நெஞ்சு பிளந்து, ஆங்கு,
அவுணரைக் கடந்த சுடர் இலை நெடு வேல்
நெடு வேள் குன்றம் அடி வைத்து ஏறி-                                            190


கண்ணகி கோவலனோடு வான ஊர்தியில் செல்லுதல்

பூத்த வேங்கைப் பொங்கர்க்  கீழ், ‘ஓர்
தீத் தொழில் ஆட்டியேன் யான்’ என்று ஏங்கி,
எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின்,
‘தொழு நாள் இது’ எனத்தோன்ற வாழ்த்தி,
பீடு கெழு நங்கை பெரும் பெயர் ஏத்தி,                                            195
வாடா மா மலர் மாரி பெய்து, ஆங்கு,
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஏத்த,
கோநகர் பிழைத்த கோவலன் - தன்னொடு
வான ஊர்தி ஏறினள் - மாதோ-
கான் அமர் புரி குழல் கண்ணகி - தான்-என்.                                    200

வெண்பா

தெய்வம் தொழாஅள், கொழுநன் தொழுவாளைத்
தெய்வம் தொழும் தகைமை திண்ணிதால் - தெய்வம் ஆய்,
மண்ணக மாதர்க்கு அணி ஆய கண்ணகி
விண்ணக மாதர்க்கு விருந்து.

கட்டுரை

முடி கெழு வேந்தர் மூவருள்ளும்
படை விளங்கு தடக் கைப் பாண்டியர் குலத்தோர்
அறனும், மறனும், ஆற்றலும், அவர் - தம்
பழ விறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும்,
விழவு மலி சிறப்பும், விண்ணவர் வரவும்,                                        5
ஒடியா இன்பத்து அவருடை நாட்டுக்
குடியும், கூழின் பெருக்கமும், அவர் - தம்
வையைப் பேரியாறு வளம் சுரந்து ஊட்டலும்,
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிதலும்,
ஆரபடி, சாத்துவதி என்று இரு விருத்தியும்,                                        10
நேரத் தோன்றும் வரியும், குரவையும்,
என்று இவை அனைத்தும் பிற பொருள் வைப்போடு
ஒன்றித் தோன்றும் தனிக் கோள் நிலைமையும்,
வட ஆரியர் படை கடந்து,
தென் தமிழ் நாடு ஒருங்கு காண,                                                15
புரை தீர் கற்பின் தேவி - தன்னுடன்
அரைசுகட்டிலில் துஞ்சிய பாண்டியன்
நெடுஞ்செழியனோடு ஒரு பரிசா
நொக்கிக் கிடந்த
மதுரைக் காண்டம் முற்றிற்று.                                                    20

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?