நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday 27 December 2019

தமிழ் இலக்கிய ஆய்வின் விரிந்த பரப்பும் எதிர்காலப் போக்கும்


தமிழ் இலக்கிய ஆய்வின் விரிந்த பரப்பும், எதிர்காலப் போக்கும்

      தமிழ் இலக்கிய உலகம் பரந்து பட்டது. தொல்காப்பியம் தொடங்கி இன்றைய நவீன இலக்கியங்கள் வரை அதன் வளமை வகைமை சொல்லில் அடங்காது. அதே சமயம் ஆய்வுகளும் பிற துறைகளை விட மிகுதியாக நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் இவ்வளவு விரிந்த பரப்பில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்ற இலக்கியங்களே மிகக்குறைவு. பல்கலைக்கழகத் தன்னாட்சி தகுதி பெற்ற கல்லூரிகளின் பாடத்திட்டங்களும் இதற்கு ஓர் காரணம். நவீனப்படுத்தல் என்பது கட்டிடங்களுக்கு மட்டுமல்ல பாடத்திட்டங்களுக்கும் உரியது. பெரும்பாலும் முனைவர் பட்ட ஆய்வுகள் ஆய்வாளர்கள் தமக்கு முன்பே அறிமுகமான இலக்கியங்களிலிருந்தே தலைப்பைத் தேர்ந்தெடுக்கிறார்கள். எனவே, பாடத்திட்டங்கள் முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு அடித்தளமாக அமைவதால் பாடத்திட்டங்களிலேயே எதிர்கால நோக்குத் தேவைப்படுகிறது

Thursday 26 December 2019

கீதாஞ்சலி



  கீதாஞ்சலி

-ஆங்கில மூலம் கவியோகி இரவீந்தரநாத் தாகூர்

-தமிழாக்கம் சி ஜெயபாரதன், கனடா


கீதாஞ்சலி – திறனாய்வு

கீதாஞ்சலி கவிதை மொழிபெயர்ப்பு என்று படித்துமுடித்த பின், மீண்டும் அட்டைப்படத்திற்கு வரும்போதுதான் தெரிகிறது.  ‘உடையும் பாண்டம்‘ என்ற கவிதை, ‘நந்தவனத்திலோர் ஆண்டி‘ என்ற சித்தர் பாடலை நினைவுப்படுத்துகிறது. பிறவிகள் தொடரும் மாய உலகத்தில் இப்பாண்டத்தின் மீதுதான் எத்தனை விருப்பு? இப்பாண்டத்தின் மீதான நிலையாமை ஒருபுறம். முதுமையில் ஆற்றல்குன்றி இறுதியில் வலிமையின் விளிம்பு தொட்டு, எனது பயணம் முடிந்ததுதான் போனதோ? என்ற ஏக்கம் ஒருபுறம். எனினும், வாழ்வதிலுள்ள ஆசை மறுபுறம். ‘புதிய கீதங்கள் பொங்கி எழுந்தன இதயத்தில்‘ என்ற வரிகள் வாழ்வின் மீதான விருப்பத்தை வெளிப்படுத்தி, ஒவ்வொருகணமும் வாழ்வதின் மீதான  பிடிப்பை வெளிப்படுத்துகிறது
மனிதன் வாழ்வில்தான் எத்தனை சலனங்கள்? ஏக்கங்கள்? எதிர்பார்ப்புகள்? அச்சங்கள்? நம்பிக்கைகள்? அலை எழுந்து கரையைத் தொடமுயன்று முடியாமல் மீண்டும் மீண்டும் தொடர்ந்து முயல்வதைப் போன்று ஒவ்வொரு மனிதனும்தான் வாழ்வில் எவ்வளவு முறை முயன்று தோற்கிறான். மீண்டும் முயல்கிறான். விடுகிறான். ஆனாலும், வாழ்வின் மீதான ஆசை அவனை விடுவதில்லை.  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பருவத்திலும் மாறாமல் தொடரும் எழுதலும் விழுதலுமான தொடர் நிகழ்வை, ஒரு குழந்தையிலிருந்து தொடங்கி மரணம் வரையிலான பதிவுகளை இந்நூலும் குழந்தையிலிருந்து தொடங்கி முதிர்ச்சி நிலை வரை முடித்திருக்கிறது. இதை ஆழ்ந்து படிப்பவர்கள், ஒவ்வொரு கவிதையிலும் தன்னையே காண்பர். ஒவ்வொரு வரிகளும் வாசகனை அவனுக்கே அடையாளம்காட்டுகிறது.

Friday 13 December 2019

பாராட்டு



 Image result for பாராட்டு
பாராட்டு

Image result for பாராட்டு 
பணமிருந்தும் பாராட்டும் குணமிலையேல் உயர்விலை.
பண்பிருந்தும் பாராட்டும் மனமிலையேல் பயனில்லை.
பணம் செய்யாததை செய்துகாட்டும் மாயவித்தை
பார் போற்றும் மானிடராகிட பாராட்டுங்கள்   
பாராட்டிட வழிகளா இல்லை இப்பூவுலகில்
பாராட்டே குணங்களில் மிக உன்னதமானது
முகத்துக்கு நேராகப்  புகழுவதும் பாராட்டே.
இகமறிய  சொல்லால் மெச்சுவதும் பாராட்டே.

ஓசையெழ இருகை கைதட்டுவதும் பாராட்டே.
கைகளைப் பிடித்துக் குலுக்குவதும் பாராட்டே.
பின்முதுகில் தட்டிக் கொடுப்பதும் பாராட்டே.
சின்னஞ் சிறிய புன்னகைகூட பாராட்டே.
Image result for பாராட்டு

வெற்றியாளர்களை உயர்த்தி இருப்பதும் பாராட்டே.
சாதனையாளர்களின் சாதனைக்குப் பின்னிருப்பது பாராட்டே.
சாதனைகள் செய்வதற்கு தூண்டுகோல் இப்பாராட்டே.
தாய்தந்தையர் தந்திடவேண்டிய சொத்து பாராட்டே.

மண்ணை பொன்னாக்கிடும், பாதுகாப்பு உணர்வுதரும்
எண்ணத்தை மனதில் பதியமிடும், மனிதநேயமூட்டும்
நம்பிக்கையை வளர்க்கும்; மனப்பாங்கை மேம்படுத்தும்
நம்பிய நல்லுறவுகளைத் தழைத்தோங்கச் செய்யும்!

மனிதஉறவு வளர்க்கும், மானுடம் தழைத்தோங்கும்
கனிவுஅக்கறை பாராட்டும், உறவுகளில் உறவாடும்
நண்பர்களைச் சேர்க்கும், மாறாத நேசம்தரும்
பண்பானவர் என்றொரு அழகானபேர் கொடுக்கும்

சின்னசின்ன பாராட்டுக்கள் பெரிய சாதனைகளாகும்
பின்னிப் பிணைந்த உறவுகளில் பாராட்டே வேராகும்
சங்கப் புலவர் பாராட்டில் சேரன் வில்பொறித்தான்
மங்கையின் பாராட்டில் மாமலையும் சிறுகடுகானதே
Image result for பாராட்டு

பற்றற்ற மனிதரும் மயங்கிடுவர் பாராட்டில்
சுற்றத்தையும் வீட்டையும் பாராட்டிப் போற்றிடு
அன்புணர்ந்த நெஞ்சுக்கு பாராட்டு கரும்பல்லவா
அன்பான பாராட்டில் அகிலமே கைகளுக்குள்


உன்னை நீ உண்மையாய் காண
உலகில் உனக்கொரு இடம் தேட
பாராட்டு பாராட்டு, பாராட்டு எதிரொலிக்கும்
பார் புகழ உன்னைப் பார்புகழ பாராட்டு.








Monday 23 September 2019

தமிழிலக்கிய ஆய்விற்கு உட்படுத்தப்படும் பிற துறைகள்




தமிழிலக்கிய ஆய்விற்கு உட்படுத்தப்படும் பிற துறைகள்

தமிழில் இலக்கிய ஆய்வுகள் இலக்கிய நயங்கள், சமுதாயச் சிக்கல்கள், வட்டார வழக்குச் சொற்கள், மனிதநேயச் சிந்தனைகள், வர்க்கச் சிந்தனை, வாழ்வியல் அறங்கள், அகப்புறச் செய்திகள், பண்பாட்டுக் கூறுகள், நிலையாமை சிந்தனைகள், இலக்கிய நயம், பிறமொழிச்சொற்கள், மெய்ப்பாடுகள், அணி நலன், உத்திகள், உவமைகள், மொழிநடை, நகைச்சுவை, நிலமும் உணவும், பாடுபொருள் மாற்றம் படைப்பாக்கத் திறன் உள்ளிட்ட பல பொருண்மைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் தமிழிலக்கியம் பிற துறை கூறுகளையும் தன்னுள் கொண்டிருக்கிறது. தமிழர்களுக்கு விண்ணியல், பொறியியல், மண்ணியல், கணிமவியல்,போன்ற பல துறைகளில் ஆழ்ந்த அறிவு இருந்துள்ளது என்று இலக்கியங்கள் வழி ஆய்வுகள் எடுத்தியம்புகின்றன. இவை போல பிற துறைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.