நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday 31 October 2020

முயற்சி

சேர்ர்வுகள் வாழ்வைச் சிதைத்தாலும் ஓய்விலும் வெற்றியை நினைத்தே இளைப்பாறிவிடு. தோல்விகள் உன்னிடம் துவளும் வரை முயற்சியால் மட்டுமே பதிலளித்திடு.

வானம்.

கடந்த பாதைகள் எல்லாம் கலைந்த கனவாக வரும்பாதைகள் எல்லாம் முற்றிலும் புதிராக வாழ்க்கை போகிறது ஒரு முடியாத பயணமாய், மௌனமே இதமாக, உடன் வரும் நிலவையும், அழத்தோன்றும் வேளையில்.. ஆறுதலாய் தலைகோதும் தென்றலையும் தேடிக் கொண்டேயிருக்கிறது மனம்.... திசையறியா பறவைக்கு... வானமெங்கும் பாதைகளே! இலக்கில்லா பயணத்தில்... பாதையெங்கும் புத்த போதிகளே! தீராத பாதையின் முன் ஒரு நீண்ட கனவாய்... ஊர்கிறது ஆழ்மனப் பயணம்! கடக்க கடக்க முடியவேயில்லை தூரம். போகப் போகத் தீரவேயில்லை வானம். தேங்கிக் கொண்டேயிருக்கும் நினைவலைகள் விடுபட விடுபட நிரம்பிக்கொண்டேயிருக்கும். எல்லா நதிகளும் கடலுள் சென்று சேருவது போல, கருங்குழிக்குள் எல்லா கோள்களும் ஈர்க்கப்படுவது போல, நினைவலைகள் எல்லாம் ஓர் ஒற்றைப் புள்ளியில். உறுதியானதென நினைத்துக்கொண்டிருந்த வலுவான அடித்தளம் நழுவியது எப்போது? -------------------------------------------

நந்தவன நாட்கள்

நகர்ந்து போன நந்தவன நாட்களை

 சாட்டையால் அடித்தது யாருடைய கைகள்?

 நம் வீட்டுத் தெருக்களில் 

பாம்புகளை நெளிய விட்டது யாருடைய கைகள்?

  தென்றலைத் திசை மாற்றித் திருப்பியது யாருடைய கைகள்? 

 வசந்தங்களை விசமாக்கியது யாருடைய

 நச்சுக் கைகள்? 

 எப்போதாவது உண்ணும் கால்வயிற்றுக் கஞ்சியை 

பறித்தது யாருடைய  கைகள்?

மனிதம் மறைவதற்குக் காரணமாக இருந்தவை 

எந்த அரக்கனுடைய மாயக் கைகள்?

 சக மனிதனைச் சாவின் தூதுவனாகப் 

பார்க்கத் தூண்டியவை யாருடைய மரணக் கைகள்? 

 மகத்துவமெல்லாம் வெறும் மண்ணாகிப் போகக் 

காரணமாக இருந்தவை யாருடைய கைகள்? 

இந்தக் கைகளாக இருக்கலாமோ? 

வியர்வை வழிய வேலை செய்பவனை 

இழிவாகப் பார்க்கும் சோம்பேறிக் கைகள்! 

மூத்த தலைமுறையைச் சுமையாகக் கருதி

 தன் போக்கில் வாழ நினைக்கும் அல்ல கைகள்!

 உழைப்பை மறுத்து உறிஞ்சிக் கொளுத்து

 தலைமுறைகளைக் காக்கும் பெருங்கைகள்

 பூமிப் பந்தினைத் தன் காலத்திலேயே

 பூக்காத பந்தாகப் பாலைவனமாக்கும் நம்கைகள்!

 --------------------------------------------------- 



சாதி சடங்குகள் எங்குப் போயின? 

அட சாதிக்கொரு சுடுகாடுதான் எங்குப் போயின?

செய்த புண்ணியங்கள் மௌனித்துவிட்டன.

சேவை செய்த கோயில் மூடிப் பல நாளாயின

கடவுள்களும் முகக் கசவமிட்டு விளம்பரம் செய்கின்றன

பொட்டலங்களாய்க கட்டப்படுவதற்கா

அறிவியலை வளர்த்தெடுத்தோம்?

அச்நம்தான் கடவுள் நம்பிக்கைக்குக் காரணமென்ற மானிடவியல் கோட்பாடுகள் சலசலக்கின்றன

எல்லாம் படவுள் பா்த்துக் கொள்வார்...

 இக்குரல்கள் கேலிக்குள்ளாக்கப்படுகின்றன

ஆன்மீகமும் அறிவியலும் தலை கவிழ்ந்து கிடக்கின்றன

உடல்தான் உண்மையான கடவுள்.... 

 திருமூலரின் குரல் உறங்கியே கிடக்கிறது

மழை

  

 சிப்பியின் வயிற்றில் நீ முத்துத் துளி

உழவனின் பார்வையில் நீ வைரத்துளி , 

இலையின் நுனியில் நீ ஒளியின் துளி, 

கவிஞனின் பார்வையில் நீ அமுதத்துளி.  

மலர்களில் பூகம்பம் உன்னால்.  

விண்ணில் இருந்து வந்த நீ கண்ணீர் துளியா,

 பூமிக்கு வானம் கொடுத்த முத்தத்துளியா?

 விண்ணிலிருந்து மண்ணில் வந்த தேவதை நீயோ?

 வானுக்கும் மண்ணுக்கும் பாலம் நீயோ? 

உன் கரங்களைப் பற்ற கைநீட்டுகிறேன்.

 நீயோ ஏன் துளியாய்ச் சிதறிப் போகிறாய்? 

கைக்குள் பிடிக்கப் போகிறேன் காணாமல் போகிறாய். 

நான் பாராதிருக்கும் போது வந்து போகிறாய். 

பார்த்திருக்கும் போதோ...

 மேகத்திற்குள் நீ ஒளிந்து கொள்கிறாய்.  

கவிழ்ந்து கிடந்து நகர்ந்து போகிறாய்.

மழைத்துளியோ நினைவுத்துளியோ

சிறு பூகம்பத்தை ஏற்படுத்தி மனதில் 

நீங்காத பள்ளத்தை ஏற்படுத்தி விடுகிறது

 -------------------------------------

 

 வாசம்

மழையின் போது மண் வாசம்

முத்தமிடும் போது மழலை வாசம்

மலரும் போது பூ வாசம்

அரைக்கும் போது சந்தனம் வாசம். 

சிலரை நினைக்கும் போது நேரமே வாசம்

 

-------------------------------------------------------

 

பார்வை பார்த்துப் பூத்திருக்க

சொல்லாமலே வந்து விட்டுப் போய்விடுகிறது.

குழந்தை போல் செல்லச் சிணுங்கல்

சில்லென்று வீசும் சாரல்...

இலைகளின் நுனியிலும் மரங்களின் கிளைகளிலும்

மட்டுமா சாலம் காட்டுகிறாய்?

புவியின் உள்ளடுக்குகளில் உள் நுழைந்து

வற்றாத ஜீவநதியாகி....

சிலரின் நினைவுகளைப் போல்...

ஓடிக் கொண்டேயிருக்கிறாய். 

மழையின் ஓசையும் புவியின் வைரங்களும்

பேசிக் கொள்கின்றன

 சிலர்....

என்னோடு பேசாத வார்த்தைகளையும் சேர்த்து.....

--------------------------


எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் 

மழை மழையாகவே இருக்கிறது.

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்

ஈர்ப்பும் அப்படியே இருக்கிறது.

கொஞ்சம் அக்கறையும் நிறைய அன்பும்

விண்ணிலிருந்து மழை இறங்கி வர காரணங்கள் 

சிலருக்கு மழையும் தனிமையும் போதும் 

மழை காட்டும் ஜாலம் போதும்

மண்ணைச் சுத்தப்படுத்தும்  மழை

ஏனோ மனதைச் சுத்தப்படுத்தத் தவறிவிடுகிறது.

மழை தனக்குள் கவிதையை ஒளித்து வைத்திருக்கிறது

அதைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும் 

மழை எங்கிருந்து வருகிறது? 

மேகமாவதற்கு முன் என்னவாக இருந்தது?

விண்ணுக்கும் மண்ணுக்கும் இது போடும் கோடுகள்

வரிசை மாறாமல்...

இடைவெளி மாறாமல்...

இசையோடு தன் வருகையை வெளிப்படுத்தும் ஆரவாரங்கள்..

காற்றுக் காதலனோடு இது நடத்தும் நடனங்கள்...

இலைகளின் மீது மழை வைக்கும் செல்லக் குட்டுகள் 

மண்ணில்மழை வைக்கும் தொடர் புள்ளிக் கோலங்கள்

மழை விட்டாலும் விடாத தூவாணம் போல 

சிலரது நினைவுகள்....

நாணேற்றிய வானவில்லில் அம்பாக உன்னை

சரம் சரமாக விட்டது யாரோ?

 மழை வரைவது நெடிய கோடுகள்

வானவில் வரைவது வளைந்த கோடுகள்

நீர்த்தாரைகள் வரைவது நீண்ட கோடுகள்

பெண்களுக்கும் கோடுகளுக்கும் கூட

நெருங்கிய தொடர்புண்டு....

பெண்களைச் சுற்றும் லட்சுமணக் கோடுகள்...

உணர்ச்சிப் பிரவாகத்தில் சில சமயம் 

மழையைப் போல கொட்டித் தீர்த்துவிடுகிறோம்... 

சிலசமயம் மேகம் போல் ...

கலைந்து காணாமல் போய் விடுகிறோம்.

சிலசமயம் சொல்லாமல் வரும் மழையைப் போல 

யாரும் காணாமல் அழுது தீர்த்துவிடுகிறோம்

இறுகிய பனிக்கட்டியாக முயற்சித்து ...

முடியாமல் கரைந்து கொண்டே இருக்கிறோம் 

ஆவியாகி காற்றில் கலந்தாலும் மீண்டும்

மேகமாகி மழையாகி விடுகிறோம்

மழையின் வருகை சிலருக்கு இதமாகவும்

சிலருக்கு வெறுப்பாகவும் இருக்கிறது

மழையே உள்னோடு பழகுவதால் உள்ளுக்குள் குளிரெடுத்து

நரம்புகள் சிலிர்ப்தென்னவோ உண்மைதான்

ஆனால் மழையே உன்னோடு பழகுவதில்

ஆபத்தும் இருக்கிறது....

-----------------------------------------------