நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Thursday 28 November 2013

இணைய வடிவங்கள்



தமிழில் கருத்துப் பரிமாற்ற இணைய வடிவங்கள்

முன்னுரை

    கருத்துப் பரிமாற்றம் என்பது ஒருவர் தன் கருத்தை மற்றவருக்குத் தெரியப்படுத்துவதாகும். தற்காலத்தில் இணையம் இச்சேவையைத் துரிதமாகவும், மிகச் சிறப்பாகவும் செய்து வருகிறது. இணையம் இல்லாதபொழுது கருத்துப் பரிமாற்றமானது, கடிதப் போக்குவரத்து, தொலைபேசி, கைப்பேசி வழியாக நிகழ்ந்தது. தற்போது இணையத்தின் மூலமாக மின்னஞ்சல், இணையக்குழு, வலைப்திவு என பல வகைகளில் நிகழ்த்தப்படுகிறது. தமிழில் கருத்துப் பரிமாற்றத்திற்கு உதவும் இணைய வடிவங்களைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

மேலும் வாசிக்க.....

தமிழில் கருத்துப் பரிமாற்றம்

    இணையத்தின் வழி தமிழில் கருத்துப் பரிமாற்றம் என்பது ஒரு காலத்தில் இயலாததாக இருந்தது. இணையத்தைப் பயன்படுத்த ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. தம் தாய்மொழியில் கருத்தைப் பரிமாறிக் கொள்ள வாய்ப்பில்லாமல் தமிழர் செயலற்று நின்றிருந்தனர். கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி இணையத்தில் தமிழில் கருத்துப் பரிமாற முடியாமல் தலை குனிந்திருந்தது. தமிழின் வளம் தமிழனுக்கு உதவவில்லை. இந்நிலையில் தமிழரின் மானத்தை மீட்டெடுக்க பலர் முன்வந்தனர். கனடாவைச் சேர்ந்த சீனிவாசன், சிங்கப்பூர் நா. கோவிந்தசாமி, மலேசியா முத்தெழிலன், சுவிஸ் நாட்டு கல்யாண சுந்தரம் போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள். வெளி நாடுகளில் பணி புரியச் சென்ற மென் பொருளாளர்கள் தங்களுடைய குழந்தைகளுக்குத் தமிழ்க் கற்றுக் கொடுக்கும் வகையில் எளிய தமிழில் மென் பொருட்களை உருவாக்கினார்கள். 1986ம் ஆண்டு முதலே இப்பணியில் இவர்கள் ஈடுபட்டதால், இந்திய மொழிகளிலேயே தமிழ்மொழிதான் முதன் முதலில் இணையத்தில் பயன்படுத்தப்பட்டது என்ற பெருமையை பெற்றது. எனினும், தமிழை இணையத்தில் கையாள்வதில் எவரவரும் தத்தம் விருப்பத்திற்கேற்ப எழுத்துக்களை (குடிவே) உருவாக்கியதால், கருத்துப் பரிமாற்றத்திற்கும், கருத்தை வெளியிடுவதற்கும் சிக்கல் ஏற்பட்டது. இதனால், ஆங்கிலம் போல் தமிழ் இணையம் வழி மக்களைச் சென்றடைய முடியவில்லை.

ஒருங்குறி கண்டுபிடிப்பு

    மூன்று தமிழ் இணைய மாநாடுகள் நடத்தப்பட்டு, தமிழ் எழுத்துரு சிக்கல் தொடர்பாக ஆலோசனைகள் பெறப்பட்டது. மென்பொருளாளர்களின் தொடர் முயற்சியால், ஒருங்கு குறி (unicode) வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒருங்கு குறி கண்டுபிடிப்பு இணைய உலகின் மிகப் பெரிய சாதனை எனலாம். உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் எவ்விதத் தடங்கலுமின்றி ஆங்கிலம் போலவே தமிழிலும் உரையாட, தகவல் அறிய, தகவல் அனுப்ப ஒருங்கு குறி உதவுகிறது. ஒருங்கு குறியைக் கட்டுப்பாட்டுத் தளத்தில் control panel) சேமிக்க வேண்டியதில்லை. ஒருங்கு குறியை இறக்குமதி (னுடிறடேடியன) செய்தாலே போதுமானது. இந்த யுனிக்கோடு எனப்படும் ஒருங்கு குறி உருவாக்கத்தில் உமர் அவர்களின் தேனீ எழுத்துரு, நா. கண்ணன் அவர்களின் இ-கலப்பை மென்பொருள் போன்றவை பெரும் பங்காற்றியுள்ளன. ஒருங்கு குறி கண்டுபிடிப்பினால் ‘தமிழ் மெல்ல வாழும் என்கின்ற நிலையிலிருந்து ‘உலகை ஆளும்’ என்ற நிலைக்கு உருவாகியுள்ளது. இந்த ஒருங்கு  குறி தமிழர்களின் கருத்துப் பரிமாற்றத்தில் பெரும் பங்காற்றி வருகிறது. மின்மடல், மின்குழு, இணைய இதழ், வலைப்பூ, சமூக வலைத்தளங்கள் என அனைத்து இணைய வடிவங்களிலும் இந்த ஒருங்கு குறி வழி கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்த வருகிறது. யாஹீ போன்ற சில இணைய நிறுவனங்கள் இந்த ஒருங்கு குறியை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், கூகுள், முகநுhல் நிறுவனங்களால் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதுவே, இவைகளின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டுள்ளது எனலாம். ஒருங்கு குறி மூலம் கருத்துப் பரிமாற்றத்திற்கு உதவும் இணைய வடிவங்களை இனி காண்போம்.

1. மின்னஞ்சல்

    உலகின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் இருவர் மிக விலைவாக எவ்விதக் கட்டணமின்றி, தகவலைப் பரிமாறிக் கொள்ள மின்னஞ்சல் உதவுகிறது. ஒரவர் அனுப்பும் மின்னஞ்சல் மற்றொருவருக்கு அடுத்த விநாடியே சென்று சேர்ந்து விடும். அடுத்த விநாடியே எதிர் தரப்பினர் பதிலை அனுப்பி வைக்கவும் முடியும். ஒரே சமயத்தில் நுhற்றுக்கணக்கான நபர்களுக்கும் அதே தகவலை அனுப்பிடவும் உதவுகிறது. தகவல் யாருக்கெல்லாம் அனுப்பப்பட்டுள்ளது என்பதை மற்றவர் அறியச் செய்யவும் வசதி உண்ட. அறியாமல் மறைக்கச் செய்யவும் மின்னஞ்சலில் வசதி உண்ட. மின்னஞ்சல் சேவையை உலகில் முதன் முதலில் ஹாட் மெயில் நிறுவனம் தான் தொடங்கியது என்றும் இந்தியாவைச் சேர்ந்த சபீர் பாட்டியா (1997) தான் உருவாக்கினார் என்றும் கூறுவார்கள். அதை மறுத்து சிவா ஐயாதுரை தான் முதல் மின்னஞ்சல் உருவாக்கியவர் என்றும் கூறுவார்கள். சிவா ஐயாதுரை உருவாக்கிய மின்னஞ்சல் சேவை நிறுவனத்தை மைக்ரோ சாப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கி விட்டதாக கூறுவார்கள்.
தற்போது மின்னஞ்சல் சேவையைப் பல நிறுவனங்கள் இலவசமாக வழங்குகின்றன.
google -gmail
yahoo- yahoo mail
 போன்றவை சில

2. மின்மடல்

    மின்னஞ்சல் மூலம் மின்மடல் என்ற தகவல் பரிமாற்ற மடல் ஒரு குறிப்பிட்ட குழுவினருக்குள் அனுப்பப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மின் மடல்கள் ஒரு வழிப்பாதையைப் போன்றவை. எதிர்க் கருத்தோ, பாராட்டோ, வாசகரின் பதிவுகளோ இல்லாதவை. மின்மடல் இதழ் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்குள்ளாகவோ, அடுக்குமாடி குடியிருப்பு உறுப்பினர்களுக்காகவோ நடத்தப்படுபவை. ஒருவருடைய கட்டுப்பாட்டில் இம்மடல் நடத்தப்படும். உறுப்பினர் அனைவரின் மின்னஞ்சல் முகவரிக்கும் இவர் தகவல்களை அனுப்பி வைப்பார். தகவலை பெறுபவர்கள் அனுப்பும் கருத்துக்கள், மின்மடலைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் அனுமதித்தால் மட்டுமே பிறர் பெற முடியும். மின்மடல் நடத்துபவரின் மின்னஞ்சல் முகவரிக்கு கருத்துக்களை அனுப்பும் வகையில் இது இருக்கும்.

3. இணைய குழுக்கள்

    இணைய குழுக்கள் என்பவை பலபேர் சேர்ந்து நடத்துகின்ற இணைய கருத்து மேடையாகும். ஒரு கருத்தை ஒருவர் இணையத்தில் பதிய விடுவார். அக்கருத்துத் தொடர்பாக, அக்குழு சார்ந்த நபர்கள் தம் கருத்துக்களைப் பதிய விடுவர். உடன்பாடான கருத்துக்களும், மாறான கருத்துக்களும் தொடர்ந்து வெளியிடப்படுவதால் இது விவாத மேடை போலிருக்கும். இதனால், ஒருவருடைய கருத்து கவனிக்கப்பட வாய்ப்பு ஏற்படுகிறது. உடனுக்குடன் ஒரு கருத்து தொடர்பான பல பேரின் விவாதங்களும், பாராட்டுக்களும், அனுபவங்களும் வெளிப்படுத்தப்படுவதால், பரந்து பட்ட தகவல்களை வெளிப்படுத்தக் கிடைத்த ஒரு சிறந்த களமாக இணைய குழு செயல்பட்டு வருகிறது.
எனினும், இக்குழுவில் சிலர் மற்றவர்களை விடத் தன்னை மிகுந்த அறிவாளியாகக் காட்டிக் கொள்ள முற்படும்பொழுது, தணிக்கை செய்யப்படாததால் கடுமையான விமர்சனங்கள் வரும் சூழலில் பெருஞ் சிக்கலும் சங்கடமும் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனினும், ஆக்கபூர்வமான விவாதங்கள் அறிவார்ந்த சில நபர்களினால் வெளிப்படுத்தப்படும் பொழுது, இச் சிக்கல் தவிர்க்கப்படுகிறது. ஆழ்ந்த செய்திகள் சிறந்த முறையில் கருத்துப் பரிமாற்ற முறையில் மிக இயல்பாக வெளியாவதாகும் மின்குழுக்கள் பெருகி வருகின்றன.
    கூகுள் நிறுவனம் கூகுள்+ என்ற பெயரில் குழுக்களை இலவசமாக நடத்த அனுமதிக்கிறது. இதற்கு கூகுளில் மின்னஞ்சல் முகவரி வைத்திருக்க வேண்டும். யுனிக்கோட்டில் தமிழில் வெளியிடப்பட்ட முதல் இணைய குழு தமிழ்.நெட் ஆகும். பின்னர் யாகூவிலும் தமிழ்க் குழுக்கள் தொடங்கப்பட்டன. எனினும் கூகுள் போல பல வசதிகள் யாகூவில் இல்லை. ஒரு சொல்லைக் கொடுத்துத் தேடும் வசதி கூகுளில் உண்டு. யாகூவில் இவ்வசதி இல்லை.
    தமிழ்க்குழுமங்களாகக் கூகுளிலிருந்து வெளிவரும் இணைய குழுக்கள் அன்புடன், முத்தமிழ், மின்தமிழ், பிரவாசம், பண்புடன், திலீபன் குழுமம், நாமக்கல் போன்றவை சில.
    இவ்விணையக் குழுக்கள் ஒத்த கருத்துடையவர்களால் நடத்தப்படுகிறது. இவர்கள் தங்கள் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ள இதை வாய்ப்பாக்கிக் கொள்கின்றனர். தமிழ் உணர்வுகளையுடைய சிலம் தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ்த் தொன்மை தொடர்பான அரசின் நடவடிக்கைகளைக் கூர்மையாகக் கவனித்து, தம் கருத்துக்களைப் பதிய விடுகின்றனர்.

4. இணைய இதழ்கள்

    (வார, மாத இதழ்கள் போலவே இணையத்திலும் இதழ்கள் வெளிவருகின்றன) தமிழில் வெளிவரும் இணைய இவ்விதழ்களை மின் இதழ்கள் எனலாம். இவையும் கருத்துப் பரிமாற்ற வடிவங்களாகச் செயல்படுகின்றன. இவற்றை மொழி சார்ந்தவை, வணிகம் சார்ந்தவை, கொள்கை சார்ந்தவை, இனம் சார்ந்தவை, கலைகள் சார்ந்தவை, கல்வி ஆய்வு சார்ந்தவை, அயலகத் தமிழ் சார்ந்தவை, பொதுவானவை, செய்தி சார்ந்தவை என பாகுபடுத்தலாம்.
அ. மொழி சார்நதவையாக தமிழ் மொழித் தொடர்பான இதழ்கள் தமிழகம்.நெட், தமிழம், தமிழோவியம், முத்தமிழ், முத்தமிழ் மன்றம், முத்தமிழ்ச் சங்கம், மொழி, தமிழ்த்திணை, தெளிதமிழ், கவிமலர், வார்ப்பு போன்றவை வெளிவருகின்றன. தமிழமுதம், தமிழ் அரங்கம்.
ஆ. வணிகம் சார்ந்தவையாக விருபா, உடுமலை.காம், சென்னை ஆன்லைன், ஒன் இன்டியன் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இ. கொள்கை சார்ந்தவையாக, விடுதலை, முரசொலி, புரட்சி பெரியார் முழக்கம், பெண்ணியம் போன்றவை வெளிவருகின்றன.
ஈ. இனம் சார்ந்தவையாக திராவிடர், தலித் முரசு, செங்குந்தர், ஈழ முரசு, ஈழ நாதம் போன்றவை வெளி வருகின்றன.
உ. கலைகள் சார்ந்தவற்றில் சோதிடக்கலை, சமையல் கலை தொடர்பான ஏராளமான இணைய தளங்கள் உள்ளன. சோதிடம், அறுசுவை, சமைக்கலாம் வாங்க, கமலாவின் சமையல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
ஊ. கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடர்பானவற்றில் கல்விச்சோலை, கணியத்தமிழ், கணியம், சுரதா, தமிழ் ஆர், மதுரைத் திட்டம், தொகுப்புகள், ஆராய்ச்சி, தமிழ் அரங்கம் போன்றவை வெளிவருகின்றன.
எ. அயலகத் தமிழர் தளங்களில் யாழ் இணையம், லங்காசிறீ, மலேசிய நண்பன், வணக்கம் மலேசியா, தமிழ் முரசு, கனடா முரசு, நோர்வே தமிழ், மட்டு ஈழநாதம், அப்பால் தமிழ், தமிழ் ஆசுதிரேலியா, தேனி (இலங்கை), தாயகப் பறவைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
ஏ. பொதுவானவற்றில் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ற இணையதளங்களாக கல்கி, அமுதசுரபி, கலைமகள், திண்ணை, அம்பலம், கீற்று, தமிழ்க் கூடல், தமிழ் மணம், புதினம், கல்கி, பதிவுகள், உயர்மை, அதிர்வு, சங்கதி, விக்கிபீடியா, வரலாறு, அலைகள், தமிழ்விண் காலச்சுவடு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
ஐ. செய்தி சார்ந்த இணைய இதழ்களாக இணையம் வழி நடத்தப்படும் செய்தி இதழ்களாகத் தினத்திந்தி, தினமணி, தினமலர், தினகரன், தினக்குரல், தினபூமி, குமுதம், மாலை மலர், பி.பி.சி. தமிழ், ஒரு பேப்பர், புதிய தலைமுறை, தென் செய்தி, தமிழ் நியூசு டி.கே போன்றவை வெளிவருகின்றன.

5. வலைப்பூக்கள்

    மின்னஞ்சல், மடல், குழுக்கள், இதழ்கள் போன்றவற்றின் அடுத்தகட்ட வளர்ச்சிதான் வலைப்பதிவுகள். இவற்றை வலைப்பூக்கள் என்பர். கூகுள், வேர்ட்பிரஸ் போன்ற நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவு பக்கங்களை இலவசமாகக் கொடுத்து உதவுகின்றன. இவை, தனி நபர் தன் விருப்பத்திற்கேற்பத் தானறிந்த செய்திகளை வெளியிடும் தனிநபர் இதழ் போன்றவை. கவிதை, கட்டுரை, திறனாய்வு, பக்தி, இலக்கியம், சமையல, கோலம், சொந்த அனுபவங்கள், நகைச்சுவை, நையாண்டிகள், பயண புகைப்படங்கள், திருவிழாக்கள், மழலைக் குறும்புகள் முதலான பல தகவல்கள் வலைப்பூக்களில் இடம் பிடித்துள்ளன.  இவ்வலைப்பதிவை நடத்துபவரே இதற்கு முழு பொறுப்பு. நேரம் கிடைக்கும் பொழுது பதிவிடும் வசதி, தம் படைப்புகளைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு, கட்டற்ற கருத்துச் சுதந்திரம் போன்றவை வலைப்பூக்களின் சிறப்பு எனலாம்.
   
to be continued....

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?