நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Monday 13 April 2020

ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் கைம்பெண் நிலையும் சமூகமும்



ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் கைம்பெண் நிலையும் சமூகமும்
கைம்பெண்கள் கணவரின் உறவினர் அல்லது தாய் வீட்டாரின் ஆதரவில் வாழ்கிறார்கள். இவ்வாறு வாழும் பெண்களுக்கு இருதரப்பிலும் சொத்துரிமை இல்லை.
மனைவி இறந்தபின் வயதான தாத்தாவும் மறுமணம்
பண்ணிக்கிட்ட உரிமையுண்டு - இளம் மங்கையை முடிப்பதுண்டு
மண்டை வறண்டு தன் கணவனை இழந்தவர் கட்டழகியானாலும்
கடைசியில் சாக மட்டும் உரிமையுண்டு” (பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்,1937:122-123)
என்பதற்கேற்ப, நாகம்மாள் சொத்து குறித்து கெட்டிப்பனுடன் பேசுவதை உண்மையறியாமல் ஊரார் பழிதூற்றுகின்றனர். கணவன் வீட்டாருடன் வாழும் பெண்கள் கணவனின் உழைப்பின் மூலம் கிடைத்த வருமானத்தை, வீட்டை, அனுபவிப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கணவனுடன் பிறந்த சகோதரர்கள் இல்லையெனில் சொத்து குறித்துச் சிக்கல் எழுவதில்லை.

தாய் வீட்டில் வந்து வாழும் பெண்கள் அக்குடும்பத்து உழைப்பில் கலந்து கொண்டு பிறந்த வீட்டினருக்கு உதவியாக இருக்கிறார்கள். இவர்களது குழந்தைகளைப் பற்றிய விஷயங்களில் தாய்வீட்டாரே முடிவெடுக்கக் கூடியவர்கள். விதவை பொண்ணுக்காரியின் மகளுக்கு மாணிக்கத்தை மணமுடிக்க அவளுடைய தமையன் முத்தாமுதலி ஏற்பாடு செய்கிறான். மாணிக்கம் அவன் நூல் வாங்குவதில் பொய் சொல்வதை அறிந்து நூலைக் கொடுக்க மறுத்து விடுகிறான். ஆறுமுகம் கூடுதலாக நூல் கொடுத்தவுடன் முத்தாமுதலி ஒப்புக் கொள்கிறான். (மாயத்தாகம்24) இவ்வாறு தொழில் இலாபங்களைப் பொறுத்து கைம்பெண்கள் மகளின் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. பிறந்த வீட்டில் சென்று வாழும் கைம்பெண்கள் அக்குடும்பத்து நிகழ்ச்சிகளில் ஏதாவது அசம்பாவிதம் நேரிட்டால் காரணமாக்கப்பட்டு தூற்றப்படுகிறார்கள். (அ.கோ.:24)

பெரும்பாலான பெண்கள் மிகச் சிறிய வயதில் கைம்பெண்களாகியுள்ளனர். பதினைந்து பதினாறு வயதில் கைம்பெண் இன பெண்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இளம் வயதில் மணமாகிச் சில மாதங்களுக்குள்ளாகவே கணவனை இழந்த பெண்களின் மன உணர்வைப் பனித்துளி புதினத்தில் சித்திரிக்கிறார். அவளுக்கும் மனமும் உணர்வும் இருப்பதை பெண்களின் நிலையிலிருந்து எழுதுகிறார். எங்கோ கண்காணாத இடத்திலே இழமான ஒரு சுனையிலே இந்த உலகத்தின் தொடர்புகளை எல்லாம் அறுத்துக் கொண்டு விடுதலை பெற விரும்பிற ஜீவன் ஒன்று நீரில் மிதப்பது போலிருந்தது” (பனித்துளி45) இவ்வுலகம் அவர்களைத் தனிமைப்படுத்துவது கணவன் இறப்பை விடக் கொடுமையானது என்கிறார். கருப்பண்ண கவுண்டர் தன் விதவை மகள் தனக்கு ஆதரவு என நினைக்கிறார். அவளுடைய இறுதிக் காலத்தில் அவளுக்கு யார் ஊதவுவார்கள் என நினைப்பதில்லை. (பனித்துளி45)

தாய் வீட்டைக் கவனித்து வரும் முத்தாயாள் திறம்பட நிர்வாகம் செய்வதைப் பொறுக்காத எரார், பொறாமையின் காரணமாக அவள்மீது பழி சுமத்தி திருப்தியடைகின்றனர். பொம்பளை பாத்து எது வேணுமானாலும் செய்யலாம். அவளால் இக்கவும் முடியும். அழிக்கவும் முடியும். தூர ஐம்போவோணும். நம்ம கருப்பண்ண கவுண்டர் மக முத்தாயாளெ எடுத்துக்கிங்க. எப்படி காரியத்தைச் சாதிக்கிறாங்க” (பனித்துளி42) ஊரார் களங்கம் சுமத்துவதைத் தடுக்காமல் பரிதாபப்படும் பெண்களை, இந்த உலகம் இருக்கிறதே உலகம், எடுத்த எடுப்பிலே அனுதாபத்தை முன்னால் வைத்துக் கொண்டிருக்கிறது. அதைத் தவிர்க்க அதைப் போக்க யாராவது முந்துகிறார்களா?” (பனித்துளி76) என்று சமூகத்தைச் சாடுகிறார்.

பவளாக் கவுண்டர் மருமகள் இறந்தபின் மறு மணம் முடிக்க மகனை வற்புறுத்துகிறார். ஆனால், அவள் விதவை மகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. (பூ.பி. 12) நாயகி இறந்தால் என் செய்வது? என்று சிலர் கேட்கின்றனர். நாயகன் இறந்தால் என் செய்வது என்று கேட்பாரில்லை?” (திரு.வி.க, 1998:203) ஆர்.சண்முகசுந்தரம்புதினத்தில் கைம்பெண்கள், மறுமணம் உரிமையின்மை, மங்கல நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமை, வெள்ளை உடை அணிந்து ஒப்பனை தவிர்த்தல், இட்லி சுட்டு விற்றல், கணவன் சொத்தில் உரிமையின்மை, கணவன் அல்லது பிறந்த வீட்டாரை நம்பியிருத்தல் என்ற நிலையில் உள்ளனர்.

மனைவி இறந்தவுடன் தன் தனிமையைப் போக்கிக் கொள்ள இரண்டாவது, மூன்றாவது திருமணம் செய்து கொள்ளும் ஆண் சமுதாயம், பதினைந்து வயதில் ஒரிரு வருடங்களில் வாழ்ந்து விதவையான பெண்களுக்கு மறுமணம் செய்து வைப்பதில்லை. விதவைப் பெண்களுக்கு மறுமணம் என்ற மாற்று வழியைக் காட்டாத சமுதாயம் தங்கள் சுய லாபங்களுக்காக அவர்கள் மீது களங்கம் கற்பித்து வெற்றி பெற நினைக்கிறது.

5.6.3. கணவனால் கைவிடப்பட்டவர்கள்
கைம்பெண்ணாகி பிறந்த வீட்டிற்கு வந்து வாழும் பெண்களை விட கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் நிலை தான் பரிதாபமானது. பிறந்த வீட்டினர் அவளை ஏற்றுக் கொண்டாலும் சமூகம் அவளைச் சுலபத்தில் விட்டுவிடுவதில்லை. ஊள்ளூரில் இரண்டொரு எடுப்புப் பேசுகிறவர்கள் இவபுருசன் தலையிலே மொளகு அறைத்தவ இல்லையா? இவகிட்டே வாய் குடுத்தா மீள முடியாது இத்தா! என்று காது கேட்காமல் பேசுவதுண்டு!” (மாயத்தாகம்107) இப்படி அவதூறு பேசும் பெண்களை வாசல்லே என்ன கௌடக்குது பாத்துக்குங்கோ என்று பாதிக்கப்பட்டவர்கள் சீறுவதன்மூலம் திருப்தியடைகின்றனர். இப்படிப் பாதிக்கப்பட்ட பெண்கள் குடும்பத்தை, குழந்தையை விட்டு ஐன் வெளியேறி விடுகிறார்கள் என்று இச்சமூகம் சிந்தித்துப் பார்ப்பதில்லை. மாறாக, அவர்களைத் துன்புறுத்திப் பார்ப்பதிலே இன்பம் காணுகிறது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?