நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Tuesday 4 October 2016

விடா முயற்சி



விடா முயற்சி


Image result for கல் 
ஒருமுறை இங்கிலாந்தில் ஒரு பேராசிரியர் உரையை ஒரு வேலைக்காரப் பெண்மணி கேட்டார். அப்பேராசிரியரை மற்றவர்கள் பாராட்டுவதைக் கேட்ட அவள் தயங்கியபடியே அவரிடம் வந்து நீங்கள் கொடுத்து வைத்தவர். உங்களுக்கு பேராசிரியர் பணி கிடைத்திருக்கிறது. அதனால் அனைவரும் பாராட்டுகிறார்கள்என்றாள். 


உடனே பேராசிரியர் உனக்கு வாழ்க்கையில் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லையாஎன்றார். அந்தப் பெண் இல்லைஎன்று கூறினாள். உடனே அவர் நீ என்ன வேலை செய்கிறாய்என்றார். அவள் ஒரு கடையில் வெங்காயம் உரிக்கும் வேலை செய்கிறேன்என்றாள். எத்தனை வருடங்களாகஎன்று அவர் கேட்க, அவள் பத்து வருடமாக வேலை செய்கிறேன்என்றார். ஒரு கல்லின் மீது அமர்ந்து வேலை செய்வேன்என்றாள். உடனே, பேராசிரியர், ‘சரி. அக்கல்லைப் பற்றி விசாரித்து எனக்கு எழுதி அனுப்ப வேண்டும். செய்வாயா என்று கேட்டார்.
அவளும் ஒத்துக் கொண்டாள்.

 அன்றிலிருந்து அந்த கல்லைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினாள். பக்கத்திலிருந்த தொழிற்சாலைக்குச் சென்று அது எவ்வகைக்கல் என்று கேட்டுத் தெரிந்து கொண்டாள். அதனை மட்டும் எழுதினால் போதாதென்று, நூலகத்திற்குச் சென்று குறிப்பெடுத்தாள். மற்ற கற்களிலிருந்து அந்தக்கல் எவ்வாறு வேறுபட்டது எனத் தெரிந்து கொண்டாள். பின் கல் எப்படித் தோன்றுகிறது என அறிய ஆவல் எழவே, கற்களின் வரலாற்றைப் பற்றி அறியத் தொடங்கினாள். இப்படியாக இங்கிலாந்தில் 120 வகை கற்கள் இருக்கின்றன எனத் தெரிந்து கொண்டாள். அவள் சேகரித்த குறிப்பினைக் கொண்டு பேராசிரியருக்கு ஐம்பது பக்கத்திற்கு ஒரு கடிதம் அனுப்பினாள். சில மாதம் கழித்து பேராசிரியரிடமிருந்து ஒரு நூலும், காசோலையும் வந்தது. அவள் எழுதிய கல் பற்றிய கடிதத்தைச் சிறு புத்தகமாக வெளியிட்டு, அதை விற்பனை செய்த பணத்தைக் காசோலையாக அனுப்பியிருந்தார்.

இதைக் கண்ட அப்பெண்ணிற்கு தன் முயற்சியின் மீது நம்பிக்கை பிறந்தது. 

Image result for எறும்புகள்  பின் சமையலறையில் தென்பட்ட எறும்பைப் பார்த்தவுடன் அதைப் பற்றித் தகவல் சேகரிக்க ஆரம்பித்து உலகிலுள்ள எறும்புகளைப் பற்றியெல்லாம் தெரிந்து கொண்டாள். இறுதியாக 350 பக்கங்கள் கொண்ட எறும்பு குறித்த அனைத்துத் தகவல்களும் அடங்கிய நூலை வெளியிட்டு பெரும் பணம் ஈட்டினாள். இப்பெண்தான் முதலில் தனக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை என்று புலம்பியவள். 

நம்மில் சில பேர் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாய்ப்பு வீட்டுக் கதவைத் தட்டும் என்று காத்திராமல், வாய்ப்பினை உருவாக்கிக் கொள்பவர்களே வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள்.

 நாம் எதை தொடர்ந்து செய்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். எனவே திறமை என்பது ஒரு செயல் அல்ல. அது ஒரு பழக்கம்என்பார் அரிஸ்டாடில்.

 நான் மெல்ல நடப்பவன்தான். ஆனால் பின்னோக்கி நடப்பவனல்லஎன்றார் ஆபிரகாம் லிங்கன். 

 இதுவரை வாழ்ந்தது எப்படியிருந்தாலும் இனிமேல் எப்படி வாழப் போகிறோம் என்பதில்தான் ஒவ்வொருவரின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது. வெற்றி பெற்ற ஒருவரின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது 10 சதவீதமாகவும், அதை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பது 90 சதவீதமாகவும் பார்க்கக் கற்றுக்கொண்டால் வாழ்க்கை வசப்பட்டு விடும்.
 
 இவ்வுலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக நீங்களே இருங்கள்என்றார் மகாத்மா காந்தி. 

முடியும் வரை முயற்சி செய்யுங்கள். உங்களால் முடியும் வரை அல்ல. நீங்கள் நினைத்த செயல் முடியும் வரை. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவையல்ல. விடா முயற்சியினால் செய்யப்பட்டவைதான்.

தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்
என்பது வள்ளுவர் வாக்கு.

இந்த உலகினில் தெய்வத்தால் ஆகாத காரியம் என்று ஒன்று இருக்க முடியாது. அப்படிப்பட்ட இறைவனாலே செய்ய முடியாத ஒரு காரியம் இருந்தாலும், அதனை ஒருவர் விடா முயற்சியுடன் செய்தால் அவருடைய உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். தாமஸ் ஆல்வா எடிசன் பேட்டரியைக் கண்டுபிடிக்கும்பொழுது 8000 முறை தோற்றார். செயற்கை ரப்பர் கண்டுபிடிக்கும்போது 17,000 முறை தோற்றார். 

இப்படி ஒவ்வொரு கண்டுபிடிப்பையும் தோற்றுத்தான் விடாமுயற்சியினால் கண்டுபிடித்துள்ளார். சிறுவயதில் இவரை ஆசிரியர், ‘மூளை வளர்ச்சி குறைந்தவன்என்று பள்ளியிலிருந்து விலக்கி வீட்டிற்கு அனுப்பி விட்டார். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், பல தடைகளைத் தாண்டி தனக்கான பாதையை எடிசன் உருவாக்கிக் கொண்டு வெற்றி பெற்றார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?