நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Wednesday 6 May 2015

சங்க காலத்தில் போரும் அமைதியும் 13

நின் பகைவர் புன்செய் நிலமுடையவர்



Image result for புன்செய் நிலம்

பேகன், பாரி, அதியன் உள்ளிட்டவர்களின் நாடுகள் குறிஞ்சி, முல்லை நிலம் சார்ந்தவை. இங்குத் திணை, வரகு போன்றவை போற்றப்பட்டுள்ளன. ஆனால் முல்லை நிலம் அழித்து நாடாக்கப்பட்டநிலையில் மருத மக்கள் அரிசி உணவை சிறப்பாகக் கருதியுள்ளதோடு, திணை, வரகு போன்றவற்றை இழிவாகக் கருதியுள்ளனர். இவற்றை உண்பவர்களையும் இழிவாகக் கருதியுள்ளனர்.


சோழன் நலங்கிள்ளி பற்றிய புறநானூற்றுப்பாடல், ‘நின் பகைவர் புன்செய் நிலமுடையவர், கோழி கூவித் துயில் எழுப்பும் காட்டிடத்தே வாழ்பவர் (28/8-14) எனப் பகைவர்களை இழிவாகக் கூறுகிறது. பதிற்றுப்பத்துப்பாடல்வரகு, கொள் முதலான உணவுகளை உண்ணும் உன் பகைவர் செந்நெல் அரிசியை அறியாதவர்என (75/11-12) முல்லை நில மக்களை இகழ்வாகக் கூறுகிறது.


மருதநில உருவாக்கத்தில் வேந்தர்களின் ஆட்சியில் குறிஞ்சி முல்லை நிலமக்களும், அச்சீறூர் மன்னர்களும், அவர்கள் உண்ணும் வரகு, திணை, கொள் முதலான உணவு வகைகளம் இழிவாகக் கருதப்பட்டுள்ளன. அரிசி உணவு உண்பவர்களே உயர்ந்தவர்கள் என்ற கருத்து சங்க காலத்திலேயே வேரூன்றிவிட்டது. குறிஞ்சி, முல்லை நிலத்தில் உயர்வாகக் கருதப்பட்ட வரகு, திணை, கொள் முதலானவற்றிற்குப் பண்டமாற்றாக மருதநில மக்கள் கள்ளைக் கொடுத்தனர். (பதிற்று-75)

“கள்ளுடை நியமத்து ஒளி விலை கொடுக்கும் 10
வெளி வரகு உழுத கொள்ளுடைக் கரம்பைச்
செந்நெல் வல்சி அறியார், தம்தம்
பாடல் சான்ற வைப்பின்
நாடு உடன் ஆள்தல் யாவணது, அவர்க்கே?

Image result for தினை பயிர்
தினை


ஒரு காலத்தில் உயர்வாகக் கருதப்பட்ட கடவுளுக்குப்படைக்கப்பட்ட (திருமுரு. 218-220) தினை மருத நில உருவாக்கத்தினால் இழிவாகக் கருதப்பட்டது. மேலும் மருதநிலத்தை ஆள்பவனே உயர்வுடையவன் என்ற கருத்தும் மேலோங்கியது. இதனால் குறிஞ்சி, முல்லை நிலத்தை ஆள்பவர்களை இழிவாகக் கருதினார்கள்.

சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊர்ஊர் கொண்ட சீர்கெழு விழவினும்” (218-220)

ஒல்லையூர் பூதப்பாண்டியன் என்னும் ஒரு மன்னன் மருதநில மன்னன். இவன் வஞ்சினம் கூறுவதாக ஒரு பாடல் புறநானூற்றில் உள்ளது.

பகைவரிடம் தோற்றால் நான் புன்செய்நிலக்
காவலனாக மாறுவேனாகஎன்று கூறுகிறான். அதாவது தோற்றால் இழிவான நிலப்பகுதியை ஆளும் இழிவான மன்னனாக மாறுவேன் என்பது பொருள் (புறம். 71/ 17-19)

""""புன்புலச் சீறூர் நெல் விளை யாதே
வரகுள் திணையு முள்ளவையெல்லாம்
இரவன் மாக்களுக் கீயத் தொலைந்தன"""" (புறம். 328. 2-4)

நெல்விளையாத சீறூர் என முல்லைநிலப்பகுதி கூறப்பட்டுள்ளது. (ப-65)

இவ்வாறு சீறூர் மன்னர்களை இழிவாகக் கருதிய வேந்தர்கள் தம் ஆட்சிப் பகுதியைப்பெருக்க முல்லை நிலப்பகுதியின் மீது போர் தொடுத்தனர். அந்நிலமக்களையும், அவர்களின் திணை, வரகு, கொள் விளைந்த வயல்களையும் அழித்து அவற்றை மீண்டும் விதைக்க இயலாதமாறு தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இவ்வாறு பழங்குடி இனமக்களின் மீதான போரை சங்கப்பாடல்கள் பதிவு செய்துள்ளன. அவர்களின் வாழ்க்கைக்கான ஆதாரமாக விளங்கும் நிலத்தையும், உணவையும் அழிப்பதென்பது அவர்களை அங்கிருந்து விரட்டுவதற்கேயாகும்.


இவ்வாறு அழிக்கப்பட்ட ஊரைச் சார்ந்த மக்கள் இருத்தலுக்காகப் போராடுகின்றார்கள். தங்கள் ஊரை விட்டுச் செல்லஇயலாநிலையில், போரின் மூலம் அழிக்கப்பட்ட தங்களின் நிலையைப் போரைக் கொண்டே மீட்டெடுக்க வேண்டிய இழிநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்படி அழிக்கப்பட்ட ஊரிலேயே இருந்து மீண்டும் பழைய நிலை வரும் எனக் காத்திருக்கும் சீறூர் மன்னனின் மனைவியின் நம்பிக்கையைப் பாருங்கள்.


பாழ்பட்ட ஊர்


போர்களினால் பாழ்பட்டு நிற்கிறது ஒரூர். அங்கு வாழ்ந்த மறக்குடிமக்களெல்லாம் வாழ்விடம் தேடி பிற பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்து விட்டனர். வீடுகள் சுறையாடப்பட்டு, வயல்கள் எரியூட்டப்பட்டமையால் சொந்த ஊரைவிட்டு பாதுகாப்பான இடம்தேடி பலர் சென்றுவிட்டனர். போரினால் பாழ்பட்ட இதுபோன்ற வளமான ஊர்களைப் பாலை நில எயினர் வந்து கொள்ளையடித்துச் செல்வர்.

காக்கும் மன்னனும், காவல்வீரர்களும் போரில் அழிந்து, காவலற்ற நிலையில் ஊர்மக்கள் தவித்திருக்கும் பொழுது, தொடுதோலணிந்து கொண்டு, துடியை முழக்கியபடி பாலை நிலத்திலிருந்து வரும் எயினர், மக்கள் இல்லாத வீடுகளைக் கொள்ளையடிக்கின்றனர். மக்கள் சேர்த்து வைத்துள்ள நெற்கூடுகளிலிருந்து நெல்லை கொள்ளையடித்துக் கொண்டு போய் விடுவதால், பல நெற்கூடுகள் கூகைகள் குடியிருக்கும் கூடுகளாய் மாறிவிடும் அவலத்தையும் பட்டினப்பாலை (பட்டின. 265-268) காட்டுகிறது.

பைங்கிளி மிழற்றும் பால் ஆர் செழுநகர்த்
தொடுதோல் அடியர் துடிபடக் குழீஇக்
கொடுவில் எயினர் கொள்ளை உண்ட
உணவுஇல் வறுங்கூட்டு உள்ளகத்து இருந்து
வளைவாய்க் கூகை நன்பகல் குழறவும்
அருங்கடி வரைப்பின் ஊர்கவின் அழிய (261 - 269)

Image result for எரியும் ஊர் 

ஆனால், ஊரின்மீது பற்றுக்கொண்ட சிலர் கொடிய வறுமையையும் தாங்கிக்கொண்டு அங்கேயே தங்கிவிடுகின்றனர். அவ்வாறு தங்கிய ஒரு மறக்குடி தலைவனுடைய மனைவி போரில் இறந்துபோன, வீரர்களுக்காக நடப்பட்ட நடுகல்லை வணங்கி நாள்தோறும் வழிபாடு செய்கின்றாள்.

""""முன்பு திருவிழா கோலம் கொண்டிருந்த அவ்வூர் இப்போது சுடுகாடு போலக்காட்சியளிக்கிறது. இங்கிருந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை கூடுகிறதேயொழிய குறையவில்லை. இந்த ஊரை நாடி யாரும் வருவதுமில்லை. களிறுகள் புகுந்து பாழ்படுத்தியதால் அவ்வூரிலுள்ள சிறுகுளமொன்றில் கலங்கிய நீரே உண்பதற்குக் கிடைக்கிறது. இவ்வாறு பாழ்பட்டு நிற்கும் ஊரினை நாடி விருந்தினர் வர வேண்டும். காட்டு யானைகள் வராமலிருக்கும் பொருட்டுக் கழற்கொடியால் அமைந்த முள்வேலியையுடைய முல்லைநிலப்பகுதியில், மக்கள் இல்லாமையால் காட்டு யானைகள் நீர் வேட்கையால் பாழ்பட்டு நிற்கும் குளங்களை நாடி வருகின்றன. இவ்வூர் பழைய நிலையைப்பெற வேண்டுமாயின் மீண்டும் ஒரு பகை தேவை. பகைவரைப்பெற்ற வழியல்லது, தோல்வியை மீட்டெடுக்க வழியில்லை.

Image result for இடிந்த நகரம்
எனவே, தன்னுடைய அரசன் மீண்டும் ஒரு போரை ஏற்படுத்த வேண்டும். அப்போரில் அம்மன்னனுக்குத் துணையாகத் தன்னுடைய சீறூர் தலைவனாகிய கணவனும் ஈடுபடவேண்டும். போரில் வெற்றிப்பெற்றுப் பெருஞ்செல்வத்துடன் தன் கணவன் ஊர் திரும்ப வேண்டும். பெற்ற பெருஞ்செல்வத்தைக்கொண்டு, இவ்வூரைவிட்டுச் சென்றவர்களையெல்லாம் வரவழைத்து தான் விருந்து தரவேண்டும்"""" என வேண்டிக்கொண்டு நடுக் கல்லை வழிபடுகிறாள். போரில் ஏற்பட்ட இழப்பை, போரைக்கொண்டே சரிசெய்ய வேண்டும் என்ற வைராக்கியம் இப்பெண்ணுக்குள் ஏற்பட்டுள்ளது வியப்பே. எனினும் இம்முறை வெற்றிபெறுவது உறுதி என்ற துணிவுடம் இவளிடம் தென்படுகிறது. (புறம் 306)
களிறு பொரக் கலங்கு, கழல் முள்வேல்,
அரிதுஉண் கூவல், அம் குடிச் சீறூர்
ஒலிமெனக் கூந்தல் ஒள்நுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும், ஒடியாது,
விருந்து எதிர் பெறுகதில் யானே, எனையும்
. . . . . . . . . . . .வேந்தனொடு
நாடு தரு விழுப்பகை எய்துக எனவே.

மூதில்முல்லை அள்ளூர் நன்முல்லையார் பாடியது இது போல ஒரு விருந்தை எதிர்பார்க்கும் மற்றொரு பெண்ணை ஒரு நற்றிணை(221) பாடலும் காட்டுகிறது.
செல்க- பாக!- நின் செய்வினை நெடுந் தேளர்:
விருந்து விருப்புறூஉம் பெருந் தோட் குறுமகள்,
மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க,
நடை நாட் செய்த நவிலாச் சீறடிப்  10
பூங் கட் புதல்வன் உறங்குவயின் ஒல்கி,
வந்தீக, எந்தை! என்னும்
அம் தீம் கிளவி கேட்கம் நாமே.  


இதில் வரும் தலைவனும் முல்லைநிலத்தலைவனே.. இவனும் சீறூர் தலைவனே. போருக்குச் சென்று தேரில் பொருள் பெற்று மீண்டு கொண்டிருக்கிறான். தேரை விரைந்து செலுத்துமாறு தன் தேர்ப்பாகனிடம் கூறும் பொழுது, """"நம்மை எதிர்நோக்கி காத்திருக்கும் தலைவி, வறுமையுற்ற தம் சுற்றத்தாருக்கெல்லாம் விருந்து படைக்க வேண்டும் என்ற பெருவிருப்பத்தோடு என் வருகையை எதிர்நோக்கிக் காத்திருப்பாள். எனவே தேனி விரைந்து செலுத்து"""" எனக் கூறுவதாக இடைக்காடனார் (221) பாடியுள்ளார்.


போரினால் ஏற்பட்ட வறுமையைப் போரினால் பெறும் பொருளைக் கொண்டே தீர்க்க வேண்டிய சுழலில், முல்லைநில மக்கள் இருந்துள்ளனர். ஏனெனில், பாழ்பட்ட மனைகளும், வயல்களும் பராமரிக்க யாருமின்றிச் சுடுகாடாய் மாறிக் கொண்டிருக்கும் சூழலில், எஞ்சிய மக்கள் உயிர் பிழைக்க வேண்டிய நிலையில் புறத்திருந்திருந்து வரும் பொருளைக் கொண்டே வாழவேண்டிய நிலையிலிருந்திருக்கின்றனர். பகை புலத்தை அழிப்பதனால் கிடைக்கும் பொருளே இவர்களின் வாழ்வதாரமாக இருந்தமையால் இப்பெண்கள் வேறுவழியற்ற சூழலில்போரை விரும்பியோ/விரும்பாமலோ எதிர்நோக்கிக் காத்திருந்தனர் எனலாம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?