நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Monday, 26 April 2021

தடுப்பூசி

தடுப்பூசி 



 " இது என்னம்மா டிபன் பாக்ஸ்? பாரு டேபிள்லாம் ஏதொ வழியுது. எடு முதல்ல" நர்ஸ் கேட்டாள் தடுப்பூசி போட பெயரைப் பதிவு செய்வதற்காக நர்ஸின் டேபிளில் டப்பாவை வைத்துவிட்டு போன் நெம்பரை சொல்லிக் கொண்டிருந்த சங்கீதா எதிர்பாராத கேள்வியால் திரும்பிப் பார்த்தாள். சங்கீதா சொல்லலாமா வேண்டாமா என்ற யோசனையோடு தாமதித்தாள் "கேக்கறேன் இல்லே?" நர்ஸ் சிடுசிடுப்பானாள் " வந்து..வந்து.. கூழ் " தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்னும் பின்னும் நின்ற வரிசையில், இரண்டு சிரிப்பொலிகள். மாமனாருக்காக முதல் முறையாக கேழ்வரகு கூழ் யூடியூப் பார்த்து செய்திருந்தாள். கூழைக்கூட யூட்யூப் பார்த்துச்செய்கிற நிலை அவளுக்கு தன் அம்மாவிற்கு முதன் முறையாகச் செய்த கூழை கொடுத்து அவள் கணினி நிறுவனத்தில் சென்னையில் பணியாற்றுகிறாள். அவளுடைய மாமனார் வீடு சேலத்தில் நெசவாளர் குடியிருப்பில் தான் இருந்தது. ஊரடங்கு தளர்வு என்பதால் கணவனுடன் வந்திருந்தாள். மாமனார் பக்கத்து தெருவிலிருந்த ஆரம்ப சுகாதார நிலையம் பற்றிச் சொல்லி இருவரையும் ஊசி போட்டுக் கொள்ளச் சொன்னார் அவளுடைய அம்மா வீடு இன்னும் இருபது தெருக்கள் தள்ளி இருந்தது. பல பேர் மாஸ்க் போடாமல் வந்திருந்தார்கள். முறைப்படி சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. ஒருத்திக்கு மட்டும் முன்னும் பின்னுமாக பதினைந்தடி சமூக இடைவெளி விட்டிருந்தார்கள், பின் கொசுவம் அணிந்தவள். பெயர் கொடுத்தவர்கள் முன்பின் முறை மாறி முறை மாறிநின்று கொண்டிருந்தார்கள் "ஆமா , தடுப்பூசி போட்டுக்க வாங்க! கூடவே ,கூழு ,கருவாட்டுக்கொழம்பு,முருங்கைக்கீரை மசியல் எல்லாம் எடுத்தாந்துருங்க. இன்பெக்ட் ஆவட்டும். அப்பால தடுப்பூசி போட்டவ தப்பு ன்னு சொல்வீங்க. அந்த டேபிள்ல மேலே வை. ஊசி போட்டு முடிச்சப்புறம் எடுத்துட்டுப்போவே!" சங்கீதா க்யூவை விட்டு நகர்ந்து இருபதடி தள்ளி இருந்த மேஜை மீது வைத்துவிட்டு மீண்டும் தன்னிடத்துக்கு வந்து நின்றாள் “எல்லாம் சாப்பிட்டுட்டீங்களா?” எழுதிக் கொண்டிருந்த நர்ஸ் கேட்டார். இருபதடி இடைவெளியில் நின்றிருந்த பின் கொசுவம் அணிந்தவள் "சாப்பிட்டுட்டு வரணாமா இன்னா?" "இல்லே பட்டினியா வந்துட்டு தடுப்பூசி போட்டு மயக்கம் போட்டு விழு. அப்பறம் இருக்கவே இருக்கறா தடுப்பூசி போடறவ! அவ தலையிலே பழி போடலாம்" சங்கீதாவுக்குப் பின்னால் நின்றிருந்தவள் ரமா. பழைய சினேகிதி சங்கீதா குனிந்து அவள் காதில் கிசுகிசுத்தாள்." இந்தக்கடுப்படிக்கு எதுவும் தடுப்பூசி இல்லியாடீ சங்கூ ?" ரமா எட்டி அவள் காதில் கிசுகிசுத்தாள் ."அது மென்டல் கேஸ்டீ" நர்ஸ் தள்ளி நின்றிருந்த பின் கொசுவம் போட்டவளைப் பார்த்து, " நீ ஏன் அவ்வளவு தள்ளி நிக்கறே? சமூக இடைவெளியா?"என்றாள் "ஆமா.. நான் பட்டிக்காடு! அதான் தள்ளி நிக்கறாங்க." கூட்டம் மௌனமாகியது . நர்ஸ் கூட்டத்தைப்பார்த்துப் பொதுவாகக் கேட்டாள்."மெய்யாவாம்மா?" வரிசையில் மூன்றாவதாக நின்ற ஒருத்தி மட்டும் சொன்னாள் . "அதுக்காக இல்லே. அந்தப் பொம்பளை ஊட்டுக்காரு கொரோனாவிலே பெட்ல படுத்துட்டிருக்காரு" ““ஐயய்யோ, நான் கஞ்சி கூட குடிக்கலையே. பொழுதோடவே வந்தேனே. காசு கூட கொண்டு வரலை. இப்பவே சூரியன் உச்சிக்கு மேல வந்திருச்சி. முதல்லயே சொல்லியிருக்கலாமில்ல நேத்து வந்தேன். மருந்து இல்ல. முந்தா நேத்து வந்தேன். தீர்ந்து போச்சி. சுக்கம்பட்டிலருந்து வரேன். ஆறுக்கு கிளம்பினா நடந்து வாரதுக்கே எட்டு மணியாயிடுது. வந்தா மருந்து வரலேங்கறாங்கன்னு இன்னிக்கு முன்னயே வந்தேன். இன்னிக்கு மருந்து வந்தாலும் வரும்னு உக்கார வைச்சிட்டாங்க. இப்ப மருந்து உச்சிப் பொழுதுல வரும்னு யாரு கண்டாங்க” பின் கொசுவம் அணிந்தவள் “கொஞ்சம் நடந்தியானா ஒரு டீக்கடை இருக்கு. போயி ஏதாவது சாப்பிட்டு வா” என்றார் நர்ஸ். “அம்புட்டு காசு இல்லயே. இருந்திருந்தா அப்பவே போயிருப்பேனே. இந்த ஊசி போட்டுக்க இங்க வந்து போனதுல மூணு நாளு வேலைக்குப் போகல. ஊசி போட்டுட்டு வந்தாதான், அந்தச் சீட்டைக் காட்டினாத்தான் உள்ள விடுவேனு முதலாளி மவன் சொல்லிப்புட்டான்” என்று அங்கலாய்த்தாள் பின் கொசுவம் அணிந்தவள் அதற்குள் இன்னொரு நர்ஸ், “நீ பேரைச் சொல்லிட்டியா. எழுதியாச்சா. இப்ப ஊசி போடப் போறம். நீ சாப்பிட்டுட்டு வந்தாதான் ஊசி. மத்தவங்கள்லாம் வரிசையா இடைவெளி விட்டு நில்லுங்க” என்றபடி மருந்து பெட்டியை திறக்கப் போனார் சாரதா நர்ஸ். “இரு. இரு. ஐம்பது பேர் இருக்காங்களானு முதல்ல பார்த்திடுவோம்” என்றார் மருந்து கொடுக்கும் கம்பவுண்டர் மாணிக்கம். “நான் சாப்பிடலன்னாலும் பரவாயில்லை. எனக்கு முதல்ல போடுங்க. ஆவறது ஆவட்டும்” “அதெப்படி போட முடியும்? ஏதாவது ஆச்சினா யார் யார் ஊசி போட்டதுன்னு கேள்வி வரும் எங்களுக்கே வினையாய் போயிடும். நீ போயி ஏதாவது சாப்பிட்டுட்டு வந்துரு. கடைசி ஊசிய உனக்கு போட்டு விடறேன்” என்றாள் சாரதா நர்ஸ் அவர்கள் வீட்டில் எல்லோரும் போட்டுக் கொண்டாயிற்று. அவள் கணவன் கூட தன் பழைய நண்பர்களுடன் சென்று போட்டுக் கொண்டான். சென்னைக்கும் போய் விட்டான். மல்லிகாவுடன் போய் சங்கீதாவை ஊசி போட்டுக் கொள்ளச் சொல்லி போனில் சொல்லி கொண்டே இருந்தான். சங்கீதாவிற்குத் தன் ஸ்கூட்டரைக் கொடுத்து வழியைச் சொல்லி அனுப்பியிருக்கிறாள் நாத்தனார் மல்லிகா. ‘வரிசையில் இடைவெளியின்றி நின்று கொண்டிருந்த எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அங்கிருந்த பலரும் எவ்வளவு சொல்லியும் ஒரு இடைவெளியைக்குறைத்தது போல் உணர்ந்தாள். சொல்லவில்லை சட்டை செய்யவில்லை. “அடுத்தடுத்து இருங்கறவங்க வாங்க” என்றபடி சாரதா பிளாஸ்டிக் பாக்கெட்டிலிருந்த ஊசியைக் கையால் பிரித்து எடுத்து மருந்து செலுத்தி ஆரம்பித்தார். ஊசி போட ஆரம்பிக்கிறார்கள் என்றதும் வரிசையில் சலசலப்பு. பின் கொசுவம் அணிந்தவளைத் தாண்டி கூட்டம் நகர்ந்து கொண்டிருந்தது. அரைமணி நேரம் கழித்து வரிசை நகரவே பின் கொசுவம் அணிந்தவள் புலம்பல் அதிகரித்து விட்டது. “நான் முதல்லயே வந்தும் எனக்கு ஊசி போடாம மத்தவங்கள்லாம் போட்டுக்கறாங்களே” என்று புலம்ப ஆரம்பித்தாள். நர்ஸிடம் போய் “எனக்கு எதுவும் ஆகாது. எனக்கும் போட்டு விடுங்க. நான் வூட்டுக்குப் போன உடனே சாப்பிட்டு விடறேன்.” என்று கெஞ்சினாள். “அப்படில்லாம் போட முடியாது. ஏதாவது ஆச்சினா எங்களால பதில் சொல்ல முடியாது. நான்தான் சொன்னனில்ல. கடைசி ஊசி உனக்குப் போடறேனு. போய் ஏதாவது சாப்பிட்டு வா” என்றாள் சாரதா. பின் கொசுவம் அணிந்தவள் செய்வதறியாது வரிசையைவிட்டு நகர்ந்து சுவரில் சாய்ந்து, தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டாள். புதியதாக சில பேர் வரவும் பெயர் பதிவு செய்யும் பணியும் நடந்து கொண்டிருந்தது. சங்கீதாவிற்கு முன்பு இன்னும் பத்து பேர் நின்றிருந்தார்கள். தற்செயலாக ஓரத்தில் அமர்ந்திருந்த பின் கொசுவம் அணிந்தவள் பார்த்தாள். தன்னையறியாமல், “ஏம்மா, கூழு இருக்கு சாப்பிடறீங்களா” என்றாள். தலை நிமிர்ந்த பின் கொசுவக்காரி யார் குரல் இது எனத் தேடினாள். சங்கீதா வரிசையை விட்டு வந்து, மேஜையின் மீதிருந்த டிபன் பாக்ஸை எடுத்து வந்து மூடி திறந்து நீட்டினாள். பின் கொசுவக்காரி பின் நம்ப முடியாமல் பார்த்தாள். “இந்தாங்கம்மா. இது நானு செஞ்ச கூழு. எங்கம்மாவுக்காக எடுத்துட்டு வந்தேன். நீங்க குடிக்கறீங்களா” என்று தயங்கியபடி கேட்டாள். பின் கொசுவக்காரி எவ்வித தயக்கமுமின்றி வாங்கிக் கொண்டாள். டிபன் பாக்ஸை திறந்து, மடக் மடக் எனக் குடிக்கத் தொடங்கினாள். சங்கீதா வரிசையில் சென்று நின்று கொண்டாள். சிறிது நேரம் கழித்து பின் கொசுவக்காரி இருந்த இடத்தைப் பார்த்தாள். காணவில்லை. சுற்றிலும் பார்த்தாள். எங்கும் தென்படவில்லை “இங்க தான் இருப்பாங்க” என நினைத்துக் கொண்டாள். பக்கத்தில் திடீரென ஒரு குரல் கேட்டது. “இந்தாம்மா. இப்பத்தான் கண்ணே நல்லா தெரியுது. கூழுக்கு இன்னும் கொஞ்சம் உப்பு போட்டிருக்கலாம்” என்றபடி டிபன்பாக்ஸை நீட்டினாள். சங்கீதா கை நீட்டி வாங்கிக் கொண்டாள். பின் கொசுவக்காரி எதுவும் சொல்லாமல் வரிசைக்கு முன்னே சென்று நர்ஸிடம் “நர்ஸம்மா, பாரு நானு கூழு குடிச்சிட்டேன். எனக்கு இப்ப போட்டு விடு. நான் தான் எல்லாத்துக்கும் முதல்லயே வந்தேன்” என்றாள். சமூக இடைவெளிகள் தற்காலிகமாக மறக்கப்பட்டு " நான் தான் முதல்லே வந்தேன் " என்ற கூச்சல்கள் எழுந்தன. “யார் முதல்ல வந்ததுன்னு எனக்குத் தெரியும். சும்மாருங்க“ என்றாள் நர்ஸ் சங்கீதா ஒரு இடைவெளியைக் குறைத்தது போல் உணர்ந்தாள். சொல்லவில்லை

Monday, 16 November 2020

நீரலைகள்

 கற்பாறை மீது மோதி மோதி நீரலைகள்

நீரத்திவலைகளாக மாறி உடைந்து கொண்டே இருக்கும்

யுகயுகங்களாகத் தொடரும் நீரின் போராட்டம்

யுகங்கள் கடந்தும் கரையாத...

 மனப்பாறைகளின் சதிராட்டம்..

மறக்கவியலா நினைக்கவுமியலா சில பதிவுகள்

கடக்கவியலா தொடரவுமியலா சில நினைவுகள்

மீட்கவியலா நீட்சியாகும் சில கனவுகள்

சொல்லவியலா கொல்லவுமியலா சில உணர்வுகள்

நிழலா வெயிலா கேட்கவியலா நோகங்கள்....

தொண்டைக் குழிக்குள் விசம் போல

விழுங்கவோ உமிழவோ முடியாத சில ஆசைகள்

ஒவ்வொருவர் வாழ்விலும் வந்துபோகுமா

 இந்தத் தருணங்கள்?

பதில்களற்ற கேள்விகள் ...

அறையெங்கும் நிரம்பி வழிகின்றன

Sunday, 15 November 2020

நம்பிக்கை

 பாசமாக நட்பாக அன்பாக வீரமாக நல்லவராக

தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதுதான் 

மனித வாழ்வின் குறிக்கோளா?

யாரோடாவதாது ஒப்பிட்டுப் பார்த்து 

 ஒரு படி மேலே இருக்க வேண்டுமென்பது கட்டாயமா?

அப்போதுதான்  மதிப்பு என ஏமாற்றிக் கொள்கிறோமா? 

நான் என்ற அடையாளம் எதுவரை?

நம் மரணம் வரை. அவ்வளவே.

ஒரு பூ, ஒரு காற்று, ஒரு மேகம், ஒருபுழு, ஒரு புல் 

அதனதன் போராட்டம் வேறு. 

வாழ்க்கைப் பாடு வேறு

மலர்வதற்குள் ஒரு பூவிற்கு எத்தனைப் போராட்டம்?

முளைப்பதற்குள் ஒரு புல்லுக்கு எத்தனை மிதிபடல்? 

சிலர்  வாழ்வில் தான் எத்தனை போலித்தனம்?

எல்லோருக்கும் எத்தனையோ போராட்டம்.

சிலருக்கு நாமே போராட்டம். 

மகிழ்வதற்கு எத்தனையோ காட்சிகள் 

இரசிப்பதற்கு எத்தனையோ நிகழ்ச்சிகள்

இயற்கைத்தரும் போலித்தனமில்லா வாழ்க்கை பெருவரம்

எவ்வளவு முயலுமோ அவ்வளவு முயலுவோம்

இயல்பு நிலை என்பதை நோக்கிய பயணம்பாதுகாப்பானது.

ஆனால் துயரம் நிறைந்தது.

நம்மைத் தெரிந்தவர்களிடம் நிரூபிக்கத் தேவையில்லை

நம்மைத் தெரியாதவர்களிடமும் நிரூபிக்கத் தேவையில்லை

எப்படியும் நம்பப் போவதில்லை என்பதால்...

நம்பிக்கை இருக்கிறதென்றால்

நிரூபிக்கத் தேவையில்லை.

நிரூபிக்கத்தான் வேண்டுமென்றால்

நம்புவதற்கு ஏதுமில்லை.



புத்தா...



 வழியில் ஒரு கடையில் புத்தா நீ...

உன்னை வாங்க தூண்டும் மனம்...

உன் சிலையின் மீதான ஆசை கூட 

உன் கொள்கைக்கு முரணானது...

நீயோ கனத்த மெனளம் காக்கிறாய்...

உன்னை உனக்கு அடையாளம் காட்டிய

போதி மரம் எங்கே தொலைந்தது? 

புடவைகளிலும், ஜாக்கெட்டுகளிலும்,

பைகளிலும்... அழகழகான வண்ணங்களி்ல் நீ.

அரண்மனை விடுத்து, 

அன்னையை விடுத்து, 

அன்பு மனைவியை விடுத்து,

அருமை குழந்தை விடுத்து

உன் தவத்தின் விளைவாய்

கடவுளே இல்லையென்றாய்...

உன்னையே கடவுளாக்கிவிட்டார்கள்

அப்போது கண்களை இழுத்து மூடினாயோ?

இப்போது விற்பனைப் பொருளானாய்...

இறுகிய உதடுகளின் இதழ்களில் 

தென்படும் குறுநகை....

இகழ்ச்சியா....ஞானச் சிரிப்பா?

ஊமையாகி உள்ளுக்குள் குமுறுகின்றன 

சொல்ல முடியா வார்த்தைகள்....

மௌனம் உடைக்கவே மொழிகள் முயல்கின்றன.

அதை மறைக்க சிரித்துப் பேசி நடித்தால்

வாழ்க்கை முழுதும் நடிக்க வேண்டி வரும்...

அது தேவையற்றது....

புத்தா உன் கண் மூடலிலும்

இறுகிய உதடுகளிலும்

நீ இன்னும் எதைப் போதிக்கின்றாய்?

மோன நிலையின் அற்புதத்தையா?

சிலையின் மௌனம் கலையாகும்

கடலின் மௌனம் முத்தாகும்

விதையின் மௌனம் மலராகும்

மௌனமே இங்குச் சிறையானால்?

உன் சிலை எனக்கு வேண்டாம்.

உன் மெளனச் சிறை போதும்.

எப்போதும் நீ போதிதான்.

 



பட்டாம்பூச்சி



 வானில் எத்தனையோ பட்டாம்பூச்சி

என்னைக்  கவர்ந்த ஒன்று

.பார்வை பறித்து மனதை இழுத்து வசமாக்கி,

நினைவு முளையில் என்னைக் கட்டிவிட்டு்ப் போனது. 

விடுபட்டுத் தேடினேன் அதுஅறியாமல்...

பூக்களின் மேல்....மரக்கிளையில்

தோட்டத்துச் சுவற்றில்

கண்ணில் பூச்சி காட்டி பறந்தது...

விண்ணில் மண்ணில் காட்டில்  நீரில்

என்னில்.....கைப்பிடிக்குள் வராமல்....

நானும் சிறகடித்தேன்....விழுந்தேன்..

அழுதேன்...மெல்ல....

பார்வையிலிருந்து மறைந்து போனது...

அமைதி தேடி ஓரிடம் அமர்ந்தேன்

 நினைவெங்கும்  பட்டாம்பூச்சி...

நிழலெல்லாம் பட்டாம்பூச்சி....

தோளில் மௌன சிறகடிப்பு

மனதில் ஒரு குறுகுறுப்பு...

பார்வை பாவை நகர்த்திப் பார்த்தேன்

பட்டாம்பூச்சி...அதே பட்டாம்பூச்சி...

மெல்ல கைவிரலில் எடுத்துப்பார்த்தேன்

அசைவின்றி இசைந்தது...

மெல்ல ஒரு கணம்...மனம்

அதை சொந்தமாக்க நினைத்தது...

அது வனதேவதைக்குச் சொந்தமானது...

விரல் விரித்தேன்....விடுபட்டுப் பறந்தது..

விரல் பார்த்தேன்.....

விரலில் அதன் வண்ணம் 

என்றும் நீங்காத வண்ணம்.

Saturday, 31 October 2020

முயற்சி

சேர்ர்வுகள் வாழ்வைச் சிதைத்தாலும் ஓய்விலும் வெற்றியை நினைத்தே இளைப்பாறிவிடு. தோல்விகள் உன்னிடம் துவளும் வரை முயற்சியால் மட்டுமே பதிலளித்திடு.

வானம்.

கடந்த பாதைகள் எல்லாம் கலைந்த கனவாக வரும்பாதைகள் எல்லாம் முற்றிலும் புதிராக வாழ்க்கை போகிறது ஒரு முடியாத பயணமாய், மௌனமே இதமாக, உடன் வரும் நிலவையும், அழத்தோன்றும் வேளையில்.. ஆறுதலாய் தலைகோதும் தென்றலையும் தேடிக் கொண்டேயிருக்கிறது மனம்.... திசையறியா பறவைக்கு... வானமெங்கும் பாதைகளே! இலக்கில்லா பயணத்தில்... பாதையெங்கும் புத்த போதிகளே! தீராத பாதையின் முன் ஒரு நீண்ட கனவாய்... ஊர்கிறது ஆழ்மனப் பயணம்! கடக்க கடக்க முடியவேயில்லை தூரம். போகப் போகத் தீரவேயில்லை வானம். தேங்கிக் கொண்டேயிருக்கும் நினைவலைகள் விடுபட விடுபட நிரம்பிக்கொண்டேயிருக்கும். எல்லா நதிகளும் கடலுள் சென்று சேருவது போல, கருங்குழிக்குள் எல்லா கோள்களும் ஈர்க்கப்படுவது போல, நினைவலைகள் எல்லாம் ஓர் ஒற்றைப் புள்ளியில். உறுதியானதென நினைத்துக்கொண்டிருந்த வலுவான அடித்தளம் நழுவியது எப்போது? -------------------------------------------